For Read Your Language click Translate

26 June 2014

குத்து வர்மம் – Kuthu Varmam



வேறு பெயர்கள் :
1. குத்து வர்மம் (வர்ம லாட சூத்திரம்-300)
2. எழுத்து வர்மம் (வர்ம விரலளவு நூல்)
3. கைக்குழி வர்மம் 2-ல் ஒன்று (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
இடம் :
கமுக்கூட்டில் பிறதாரையின் கீழ் குத்து வர்மம்
இருப்பிடம் :
1. ‘எடுத்த கமுக்கூடதிலே குத்து வர்மம்
நின்றதின் ஓர் இறை கீழ் வசவு வர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)
2. ‘பிறமான கீழ்கை கூட்டின் மீதே
பேசு பிறதாரையின் கீழ் குத்துவர்மம்’ (வர்ம திறவு கோல்-225)
3. ‘கூறியதோர் கீழ் கமுக்கூட்டின் மீதே
கொடிய பிறதாரை கீழ் குத்துவர்மம்’ (வர்ம பீரங்கி-100)
4. ‘காரையே பிறதாரை காணதன் கீழே ரண்டு வர்மம்
பூரைய குத்துவர்மம் புகன்ற உள்புற்றும் ஒன்றாம்’ (வர்ம லாட சூத்திரம்-300)
5. ‘கைக்குழியில் அக்குளில் எழுத்துவர்மம் இது தொடுவர்மம்’
(வர்ம விரலளவு நூல்)
6. ‘கூறியதோர் கீழ் கமுக்கூட்டின் மீதே
கொடிய பிறதாரையின் கீழ் எழுத்துவர்மம்’ (வர்ம பீரங்கி-100)
7. ‘காக்கட்டைக் காலம் முதல் குளிப்பூட்டு தள்ளெலும்புவரை ஒரு நூலால் அளவெடுத்து (36 விரலளவு) அதை நான்காக மடக்கி (9 விரலளவு) சிப்பி தூங்கு சதையிலிருந்துமேல் பக்கவாட்டில் கைக்குழியில் பிடித்தால் கைக்குழி வர்மம்அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)
8. ‘பொக்கமாய் சொன்ன சித்திர காலத்துக்கும்
புகழ் நாலு விரல் பக்கம் வலமிடமும்’
‘வலமிடமும் கைக்குழி காலம் நாலு’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
விளக்கம் :
சித்திரக்காலம் என்ற வர்மத்துக்கு நான்கு விரலளவுக்கு புறப்பக்கவாட்டில் (Lateral) கைக்குழியில் காணப்படும் வர்மம் பிறதாரை ஆகும். இப்பிறதாரையின் கீழே ஒன்றன் கீழ் ஒன்றாக இருவர்மங்கள் உள்ளதாக ‘வர்ம லாட சூத்திரம்-300’ என்ற நூல் குறிப்பிடுகிறது. அவ்வர்மங்களாவன
(1) குத்து வர்மம், (2) உள்புற்று வர்மம் இவை இரண்டுமே கைக்குழிப் பகுதியில் காணப்படுவதால் ‘கைக்குழி வர்மங்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. ‘வர்ம ஒடிவு முறிவு சரசூத்திரம்-1200’ என்ற நூலானது கைக்குழி காலம் 4 (வலது இரண்டு + இடது இரண்டு) என்று குறிப்பிடுகிறது. சில வர்ம நூற்கள் இக்குத்து வர்மத்தை ’எழுத்து வர்மம்’ என்றும் குறிப்பிடுகிறது. குத்து வர்மத்துக்கும், எழுத்து வர்மத்துக்கும் இருப்பிடமும், குறிகுணங்களும் ஒன்றேயாகும்.
குறிகுணம் :
குத்து வர்மம் (9)
தானேதான் குத்து வர்மம் கொண்ட பேர்க்கு
தகுதியாய் உறுப்புகளில் குத்தி நோவாம்
தேனேதான் கொண்ட வசம் கைகள் வாடும்
தினம் தினமும் பனி குளிரும் காணுமய்யா
மானேதான் வாத நோய் வாராவண்ணம்
மகத்தான பதங்கமுறை பார்த்து செய்து
கோனேதான் அவுசதத்தால் தீரும் அல்லால்
கொடிய பிணி தீர்த்திடுவது அரிது பாரே. (அடிவர்ம சூட்சம்-500)
குத்து வர்மம் எந்த பக்கத்தில் தாக்குதலுக்கு உள்ளானதோ அப்பக்கத்து கைகள் வாடும். தினம் தினம் சுரம் குளிர் வரும். பின்னாளில் வாத நோய் வராமல் பாதுகாக்க பதங்க மருந்துகளை கையாள்வது சிறந்தது.
வர்ம பீரங்கி-100 : (எழுத்து) குத்து வர்மம் கொண்டால் அதிசாரம் வரும். உடல் கிடுகிடுக்கும், நாகபாம்பைப் போல் முகம் சீறும்.
வர்மலாட சூத்திரம்-300 : குத்து வர்மம் கொண்டால் நா உளையும் (பிரதான குறிகுணம்) உடல் நடுங்கும், ஆட்டம் காணும். பத்து நாட்கள் சென்றால் உடலில் நீர் கட்டும். குணமாகுமென நம்பவேண்டாம்.
வர்ம திறவுகோல்-225 :உடல் நடுங்கும், ஆட்டம் காணும். நாகம் போல காறித்துப்பும். பத்து நாட்களுக்குள் குணமாக வில்லையென்றால் நம்ப வேண்டாம்.
மருத்துவம் :
மார்பு-வயிறு வர்மங்களுக்கான சிறப்பு வர்ம மருத்துவமும், இளக்குமுறையும் செய்ய வேண்டும்.
மருத்துவப்பயன் :
(1) கைக்குழி வர்மங்கள் அனாகத வர்மங்களாகும். இவ்வர்மங்களைக் கொண்டு அனாகத ஆதாரத்தைத் தூண்டலாம். இதன் மூலம் தேயு பூதக் குறைபாடுகளை சீர்செய்யலாம்.
(2) மார்பு-வயிறு மற்றும் கை வர்ம தடவு முறைகளில் பயன்படுகிறது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி

No comments:

Post a Comment