For Read Your Language click Translate

10 July 2014

ஜோதிடம் 1



ஜோதிடம் என்பது வான் வெளியில் உள்ள கோள்களின் நகர்வுகளும் அவைகளின் கதிவீச்சுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் பல விழைவுகளை உண்டு பண்ணி பலன்களை பிரதிபலிக்கின்றன. இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும் உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்

ஜோதிடம்

அண்டத்தில் உள்ள கோள்களின் இயக்கத்தை ஞான அறிவால் உணர்ந்த ஞானிகள் அந்தந்த கோள்களின் கதிர்வீச்சுகளின் பலம், நகர்வுகளின் வேகம் அடிப்படையில் பூமியில் வாழும் உயிர்களுக்கு ஏற்படும் பலாபலன்களை கணித முறையில் கணக்கிட்டு ஜோதிட சாஸ்திர மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அவற்றை கற்று பலன் பெறுவதே எமது நோக்கம்.

ஜோதிடத்துக்கான வானியல் அடிப்படை:

அண்டவெளியில் பல ஆயிரகணக்கான விண்மீன் குடும்பங்கள் உள்ளன. அவற்றுள் எம்மைச் சூழ்ந்துள்ள சூரிய குடும்பமும் ஒன்றாகும். நமது சூரிய குடும்பத்தில் பல கிரகங்கள் உள்ளன. அவை யாவும் சூரியனை மையமாக கொண்டு சுற்றி வருகின்றன. அவற்றுள் நாம் இருக்கும் பூமியும் ஒன்றாகும். சந்திரன்; பூமியின் உப-கிரகமாகும். இவையாவும் தம்மிடையே உள்ள ஈர்ற்ப்பு விசையால் இணைக்கப்பட்டு ஒரு குடும்பம் போல் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

விண்மீன்கள் தானாகவே (மின்னி மின்னி) மிளிர்வன. ஆனால் கிரகங்கள் தானாக ஒளிர்வதில்லை. கிரகங்களும், உப-கிரகங்களும் விண்மீன்களின் ஒளியைப் பெற்று பிரகாசிக்கின்றன.

நாம் ஆலயத்தை சுற்றி அங்கப் பிரதிஷ்டை செய்வது போல் பூமியும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வலம் வருகின்றது. பூமியின் உப-கிரகமான சந்திரனும் பூமியைச் சுற்றி வலம் வருவதுடன் (பூமியை ஒரேபக்கப் பார்வையுடன் இணைந்து) சூரியனையும் சுற்றி வருகின்றது.

அத்துடன் பூமியின் உடன் பிறப்புகளான மற்றைய 8-கிரகங்களும, சூரியனை மையமாக கொண்டு பூமி சுற்றும் அதே சுற்றுப் பாதையில் வித்தியாசமான வேகத்துடன் சூரியனை சுற்றி வருகின்றன என்பதுவும் விஞ்ஞானிகளின் முடிபு.

இதன் அடிப்படையில் புவியில் ஏற்படும் எல்லா (நிகழ்வுகளையும்) மாற்றங்களையும் உணர்ந்து கொள்வதற்கும், சோதிடப்படி கணக்கிடுவதற்கும், கோள்களின் நிலைகளையும், நகர்வுகளையும் பூமிக்கு சார்பாக கணித்துக் கொள்வதற்கும் சோதிட சாஸ்திரம் புவியை மையமாகக் கொண்ட ஒரு முறைமையை பயன்படுத்துகின்றது.

விளக்கமாக கூறுவதாயின் சூரியனும் மற்றைய 8-கிரகங்களும் பூமியை மையமாக வைத்து சுற்றி வருவதாக சோதிட சாஸ்திரம் கணிக்கின்றது. இம் முறை மூலம் கிரகங்களும், நட்சத்திரங்களும் பூமியில் வாழும் உயிரினங்களிற்க்கு ஏற்படுத்தும் பலாபலன்களை (நன்மை, தீமைகளை) கணிக்க முடிகின்றது.

பூமியை மையமாக கொண்டு கணிக்கப்படும் இராசிச் சக்கரம் Zodiac என்றழைக்கப்படும். இது கண்ணிற்கு புலப்படாத ஒரு கற்பனை வடிவமாகும். Zodiac எனப்படும் இராசிச் சக்கரம்; சூரியனை மையமாக கொண்டுள்ள Ecliptic எனப்படும் ஞாயிற்றின் தோற்றுப் பாதைக்கு இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும்.

பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்றுவதற்கு 24 மனித்தியாலங்கள் (1-நாள்) எடுக்கின்றது. ஆனால் சூரியனை (சூரியன் பூமியச் சுற்றி வருவதாக சோதிடம் கணிக்கிறது.) பூமி (Zodiac எனப்படும் இராசிச் சக்கரம்) ஒருமுறை சுற்றிவர ஒரு ஆண்டு 365 1/4 நாட்கள் ஆகின்றன. பூமி தன்னைத் தானே சுற்றுவதால் பகல், இரவு தோன்றுகின்றது. பூமி சூரியனைச் சுற்றுவதால் பருவ காலங்கள் பூமியில் தோன்றுகின்றன.

சந்திரன் பூமியைச் சுற்றுவதற்கு 27.32 நாட்கள் எடுக்கின்றது. அதன் பயனாக பூமியில் பூரணை, அமாவாசை, போன்ற 30 திதிதிகள் பூமியில் உண்டாகின்றன (விபரமாக பஞ்சாங்கம் பகுதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது).

சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், அந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்கின்றன. இந்த 9 கிரஹங்களில் சந்திரனுக்கு ஜோதிட உலகம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தினத்தன்று எந்த நட்சத்திரத்தின் மேல் சந்திரன் சஞ்சாரம் செய்கிறாரோ அதுவே அன்றைய நட்சத்திரம் ஆகும்

சூரியன் சித்திரை மாதத்தில் மேஷத்தில் உதயமாவர். வைகாசி மாதத்தில் ரிஷபத்தில் உதயமாவர். இப்படியே மாதம் ஒரு ராசியில் சஞ்சரித்து திரும்பத் திரும்ப 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார் (சூரியன் சுற்றுவதில்லை ராசிகள் தான் சூரியனை சுற்றி வருகின்றன எனக்கொள்க). இவ்வாறாக சூரியன் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் உதயம் ஆகிறார்

ஒவ்வொரு மனிதனின் ஜாதக-குறிப்பும் அவன் பிறந்த நேரத்தின் கோள் அமைப்பை 360 பாகை கொண்ட (Zodiac எனப்படும் இராசிச் சக்கரம்) நீள் வட்டத்தின் அமைப்பை குறிப்பதாகும். (நீள்வட்டம் வரைதல் காலப்போக்கில் திரிபுற்று நீள் சதுரமாக தற்போது வரையப்படுகிறது.) இவ்வாறு அமைக்கப்பட்ட கட்டங்கள் பன்னிரண்டும்; பன்னிரண்டு இராசிகள் எனப்படும்.

இராசிச்-சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இராசிகள் 12:
1. மேடம் (மேஷம்)
2. இடபம் (ரிஷபம்)
3. மிதுனம்
4. கர்க்கடகம் (கடகம்)
5. சிங்கம் (சிம்மம்)
6. கன்னி
7. துலாம்
8. விருச்சிகம்
9. தனு (தனுசு)
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்

ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் உதய-லக்கினம் என்பது பிறந்தோரின் அண்ட இருப்பு நிலையைக் குறிக்கும். அதாவது இந்தப் பேரண்டம் 360 பாகைகளில் பிரிக்கப் படும் போது இந்த உயிர் பிறந்த இடம் மற்றும் கோள அமைவு அமைந்த இடம் எத்தனையாவது பாகையில் அமைந்தது என்பதைக் குறிக்கும்.

மேலும் பார்க்கையில், ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறம், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களுண்டு. ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும் ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும்.

சனிக் கோள் கருநீல நிறத்துக்கும், செவ்வாய்க் கோள் செந்துவர் நிறத்துக்கும் உரியன ஆகுதல் இதற்கு உதாரணங்களாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை உமிழ்ந்து (வெளிப்படுத்திக்) கொண்ட வண்ணம் உள்ளன. அவை முறையே அமைந்த இடத்தால் பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.

பண்டைக்காலச் சோதிட நூல்கள் பூமியில் ஆதிக்கம் செலுத்தும் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக் கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன.

அக்கோள்கள் பின்வருமாறு:

1. சூரியன் (ஞாயிறு Sun)
2. சந்திரன் (திங்கள் Moon)
3. செவ்வாய் (Mars)
4. புதன் (Mercury)
5. குரு (வியாழன் Jupiter)
6. சுக்கிரன் (வெள்ளி Venus)
7. சனி (Saturn)
8. இராகு (நிழற்கோள்)
9. கேது (நிழற்கோள்)



மேலும், கோள்களின் அளவு, அவற்றின் தட்ப-வெட்பநிலை, அவற்றில் அடங்கியுள்ள தாதுக்களின் அடைப்படையில் தான் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படும். அதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுக்கள் அந்த கதிர்வீச்சை எந்த அளவு கிரகிக்கிறதோ அதற்கேற்றாற்போல் நன்மை, தீமைகளை அடையும் நிலை உள்ளதாக ஜோதிடம் பொதுவாகக் கூறுகிறது.

இக் குறைகளைப் போக்குவதற்காக "அதிஸ்டக் கற்களை" பாவிக்கும்படி சோதிடர்கள் சிபார்சு செய்கின்றனர். இவற்றின் மூலம் நன்மை தரக்க்கூடிய கதிர்களை உள்கிரகிக்க முடியும். அதன் பயனாக வாழ்க்கையில் நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அதிஸ்டக்கற்களை பாவிப்பதில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். தவறான கற்களை பாவித்தால் தீமைகள் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. (நன்மை தரக்கூடிய அதிஸ்டக் கற்கள் பற்றிய விபரங்கள் இவ் இணையத் தளத்தில் "அதிஸ்டக் கற்கள்" என்னும் பகுதியில் பதியப்பட்டுள்ளன.)

பல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் தொகு பயனாகப் புதிய விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக்கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் உச்சம் பெற்றதாக உரைக்கப்படும். இதைத்தான் "கிரக வலிமை" என்பர்.

ஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையொன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும்.

இனி சோதிடம் என்பது எவ்வாறு ஒரு மனிதனை ஆட்சி செய்யும் எனக் காண்போம். ஒவ்வொரு மனிதனுக்கும் தலை வட துருவமாகவும், கால்கள் தென் துருவமாகவும் அமைகின்றன. (எனவேதான் தலையை வடக்குப் பக்கம் வைத்துப் படுக்கக் கூடாதெனப் பெரியோர் கூறுவர். ஏனெனில், ஒத்த தன்மையுடைய காந்தத் துருவங்கள் விலகும். இதனால் ஏற்படும் விலக்கு விசை மூளையில் மென்மையான அழற்சி மற்றும் தகைவின்மையை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் "உயிர்க் காந்தம்" (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் பிறக்கும் போதே அவனுக்கு நிலைப் படுத்தப்படுகிறது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. நாம் பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீசல்கள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து என்ன வலிமையுடன் பெறப் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.

வேறு விதமாக கூறுவதாயின் ஒருவருடைய பூர்வ-ஜன்ம புண்ணிய-பாபங்களை அனுசரித்து, அவைகளின் வினைப் பயன்களை அனுபவிக்க கூடியதான கிரகங்களின் நிலை ஏற்படும் போழுது ஒரு சிசு பிறக்கின்றது. அப்பொழுது அதற்கேற்ற உயிர்க் காந்தப் புலம் சிசுவில் உருவாகின்றது என்று கூறலாம்.

எவ்வாறெனில் ஒரு புகைப்பட வீழ்த்தியில் (காமிரா) படச்சுருளில் பதியும் முதல் ஒளி (எக்ஸ்போசிங்) யின் வடிவமே அதில் நிலைப்படுத்தப்படுதல் போல் நாம் பிறந்த வேளையின் கோளமைப்பு, அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள் நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மந்தமாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நமது பிறக்கும் காலத்தின் உயிர்க் காந்தப் புலமும் கோள் நிலைகளால் அமைக்கப்படுவது இதனால் தெளிவாகும்.

இனி வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும்.

அது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனைக் கணித்துக் கூறுவதே சோதிட சாஸ்திரமாகும்.

இலக்கினம்
புவி தன்னைத்தானே ஒரு நாளில் சுற்றுவதால், அதன் பரப்பிலுள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு நாளில் அதனைச் சுற்றியுள்ள 12 இராசிகளையும் கடந்து செல்கின்றது. ஜோதிடம் சார்பாகப் பார்க்கும் போது இந்த இராசி மண்டலம் ஒரு நாளில் ஒரு முறை பூமியை முழுவதுமாகச் சுற்றிவருகிறது எனலாம்.

எனவே குறிப்பிட்ட ஒரு நேரத்தில், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே, அக் குறிப்பிட்ட இடத்திற்கு அந் நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப் படுகின்றது.

மனிதர்களின் பிறந்த நேரத்துக்குக் கணிக்கப்படும் சாதகக் குறிப்பில், அப் பிறந்த நேரத்தில் அடி வானத்தில் தோன்றிய இராசியின் புள்ளி அச் சாதகத்துக்குரிய இலக்கினமாக "//ல" குறிக்கப்பட்டிருக்கும். பொதுவாக இலக்கினம் என்னும் போது அப் புள்ளி இருக்கும் இராசியின் பெயரையே கூறுவது வழக்கம். சோதிடத்தில் அச்சொட்டான கணிப்புகள் தேவைப்படும்போது, இலக்கினத்தைக் குறிக்கும் துல்லியமான கோண அளவு பயன்படுகின்றது.

இராசிச் சக்கரத்தின் அமைப்பைப் பற்றி அறிவோம்.
சூரியனினின் தோற்றப்பாதை (முழுவதுமாக 360 பாகை ) ஒவ்வொன்றும் 30 பாகைகள் கொண்ட பன்னிரண்டு இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வான் வெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் இருந்தாலும் அவற்றுள் சிலவே பூமியின் சுற்றுப்பாதைக்குள் அமைந்து பூமியில் விழைவுகளை உண்டுபண்ண கூடியனவாக உள்ளன.

அவைகள் 27 நட்சத்திரங்கள்(கூட்டங்கள்) என கணக்கிடப்பட்டு ஒவ்வொன்றும் 3 பாகை 20 கலைகள் கொண்ட நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. எனவே 27 நட்சத்திரங்களும் 108 பாதங்களை கொண்டன எனலாம். ஒவ்வொரு இராசியும் நட்சத்திரங்களின் ஒன்பது பாதங்களை கொண்டனவாக கணிக்கப்படுகின்றது.

இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வித்தியாசமான வேகத்தினைக் கொண்டன. சந்திரன் பூமியைச் சுற்றி வர 27.32 நாட்கள் ஆகின்றது. சூரியனுக்கு ஒரு வருடம் (அதாவது பூமி சூரியனை சுற்ற எடுக்கும் காலம்); செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள்; ராகு, கேதுவிற்கு 18 ஆண்டுகள்; சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.

"அசுவினி" நட்சத்திரம் ஞாயிற்றின் தோற்றப் பாதையில் முதற் இராசியிலும் "ரேவதி" நட்சத்திரம் கடைசி இராசியிலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நில-நிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம். "மேடம்" இராசி சக்கரத்தில் முதற் கூறு ஆகும், "மீனம்" கடைசிக் கூறு ஆகும்.

ஒரு ஆண்டு என்பது 365 1/4 நாட்கள் கொண்டவை என்பது எல்லோருக்கும் தெரியும். அதாவது பூமி இந்த வான மண்டலத்தை (சூரியனை) ஒருமுறை சுற்றி வரும் காலம் ஆகும். பூமி ஒருமுறை வானமண்டலத்தைச் சுற்றிவிட்டால் ஒர் ஆண்டு முடிந்து விடுகிறது. இந்த வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது எனக் கூறுகின்றோம். அதாவது வான மண்டலத்தின் ராசிச்சக்கரத்தில் உள்ள மேஷ ராசியில் சூரிய பகவான் மீண்டும் உதயமாகும் காலமே தமிழ் புத்தாண்டு தினமாகும்.

மேட ராசியில் இருந்துதான் சூரியன் சுற்ற ஆரம்பிக்கின்றது என ஜோதிடம் கணிக்கின்றது. (சூரியன் ராசி சக்கரத்தைச் சுற்றுவதில்லை; ராசிச் சக்கரம் தான் சூரியனை சுற்றுவதாக கொள்வோம்). இந்த ஏப்ரல் 14ம் தேதி ஆரம்பித்தால் அடுத்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி முடிய ஒரு சுற்று முடியும். இந்த காலம் தான் ஒராண்டாகும்.

இந்த ஆண்டுக்கும் பெயர் வைத்து இருக்கிறோம். வருகின்ற ஆண்டின் பெயர் "சர்வதாரி" ஆண்டாகும். இது தமிழ் ஆண்டு. இதே போன்று ஒவ்வொரு ஆண்டிற்கும் பெயர் உண்டு. 60 ஆண்டுகள் முடிந்த பின்பு திரும்ப முதலிருந்து ஆரம்பிக்கின்றன.

ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிரகங்கள் அதிபதிகளாக இருக்கிறார்கள். சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஒவ்வொரு ராசிக்குதான் அதிபதி (உரிமைக்காரன்). ஆனால் மற்றைய கிரகங்கள் 5ம் இரண்டு இரண்டு ராசிகளுக்கு அதிபதியாகின்றனர். ராகு கேதுக்களுக்கு சொந்த ராசிகள் இல்லை. அவர்கள் எந்தவீட்டில் நிற்கிறார்களோ அந்த ராசிக்கு அவர்கள் அதிபதியாகின்றனர்.

சூரியன் விண்மீன்: சிங்க-ராசிக்கும் அதிபதியாவார்.

சதிரன் கிரகம்: கடகம்-ராசிக்கும் அதிபதியாவார்.

செவ்வாய் கிரகம்: மேஷ-ராசிக்கும், விருட்சிக-ராசிக்கும் அதிபதியாவார்.

புதன் கிரகம்: மிதுன-ராசிக்கும், கன்னி-ராசிக்கும் அதிபதியாவார்.

குரு கிரகம்: மீன-ராசிக்கும், தன-ராசிக்கும் அதிபதியாவார்.

சுக்கிரன் கிரகம்: இடப-ரசிக்கும், துலாம்-ராசிக்கும் அதிபதியாவார்.

சனி கிரகம்: மகர-ராசிக்கும், கும்ப-ராசிக்கும் அதிபதியாவார்.


ஒருவருடைய ஜாதக-குறிப்பில்; அவர் பிறந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த ராசிகளில் நின்றதோ அதனை குறித்திருப்பார்கள். அவைகள் தங்கள் தங்கள் சொந்த ராசிகளில் இருந்து விலகி வேறு ராசிகளிலும், சில சமயங்களில் சொந்த ராசிகளிலும் இருக்கலாம். அவை சிசு பிறந்த நேரத்தின் கோசரநிலையாகும்.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைக் கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள் அசைவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.

பஞ்சாங்க விளக்கம்:
பஞ்ச அங்கங்களைப் (ஐந்து-அங்கங்களைப்) பற்றிய விபரங்களை கூறுவது பங்சாங்கம். ஐந்து அங்கங்களாவன: 1. திதி, 2.வாரம், 3.நக்ஷ்த்திரம், 4.யோகம், 5.கரணம் என்பனவாம்.

தற்பொழுது இரு வகையான பஞ்சாங்கங்கள் பாவனையில் உள்ளன. ஒன்று திருகணித பஞ்சாங்கம், மற்றையது வாக்கிய பஞ்சாங்கம்.

கி.மு. 1200 முதல் கி.மு.400 முடிய உள்ள காலத்தை "சித்தாந்த ஜோதிஷ காலம்" என அழைக்கப்படுகிறது. அக்காலத்தில் 18 விதமான சித்தாந்தங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த 18 வகையான சித்தாந்தங்களை ஆதாரமாக வைத்தே பஞ்சாங்கங்கள் கணிக்கப் பட்டன.

கிரகங்களின் வேகம், ராசிகளில் தங்கும் காலம் இவற்றை எல்லாம் கணிப்பதற்கு ஒரு முறையைக் கண்டு பிடித்தனர். இது "வாக்கிய முறை" எனப்பட்டது. இன்றும் இந்த முறையில் பஞ்சாங்கங்கள் வெளி வருகின்றன. இந்தப் பஞ்சாங்கங்கள் "வாக்கிய பஞ்சங்கம்" எனப்படும்.

காலப்போக்கில் வாக்கியப் பஞ்சாங்கங்கக் கணித முறையில் சில பிழைகளைக் கண்டறிந்தனர். அதனால் அவைகளை திருத்திப் புதிய முறையில் கணித்துக் கொண்டனர். திருத்திய திருகணித முறையை ஒட்டிய பஞ்சாங்கங்கள் "திருகணித பஞ்சாங்கம்" எனப்படும்.

இந்த 20-ம் நூற்றாண்டில் கிரகங்களைப் பார்ப்பதற்கு "ரெலஸ் கோப்புகள்" வந்துவிட்டன. இக்காலத்தில் கிரகங்களின் வேகம், அவற்றின் பாதையைக் கண்டறியும் அளவிற்குக் விஞ்ஞானம்-கணிதம் வளர்ந்து விட்டது. தற்போதுள்ள விஞ்ஞான-கணித முறையும், திருகணித-பஞ்சாங்க முறையும் எந்த வித மாறுதலும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது. அதனால் திருகணித முறை தான் சரியான முறை என முடிவுக்கு வந்துள்ளார்கள். ஆனாலும் சிலர் வாக்கிய முறைதான் பழமை வாய்ந்தது என்று கருதுவோரும் உளர்.

காளிதாஸனுடைய "உத்திர காலாம்ருது" மந்த்ரேஸ்வருடைய "பல தீபிகை" என்னும் சோதிட நூல்கள் திருகணித முறைதான் சரியான முறை எனக் கூறுகிறது.

திதி:

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்படுகின்ற விரிசலினால் சந்திரனில் விழும் சூரிய கதிர்களின் பிரதிபலிப்பு சந்திரனின் தோற்றத்தில் உண்டாகும் மாற்றங்களாகும். அமாவாசை தினம் சூரியனும் சந்திரனும் "0" டிகிரியில் காணப்படுவார்கள். அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனைப் பார்க்கமுடியாது. அதற்குப்பின் சந்திரன் தினமும் சுமார் 12 டிகிரி சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பார். 15 ஆவது தினமான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருப்பார்.அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் இருப்பார்.

அம்மாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார் அன்றைக்குப் பெயர் பிரதமை. மறு நாள் இன்னும் ஒரு 12டிகிரி விலகியிருப்பார் அன்றைக்குப் பெயர் துதியை. மூன்றாம் நாள் திருதியை, 4-ம் நாள் சதுர்த்தி, 5-ம் நாள் பஞ்சமி, 6-ம் நாள் சஷ்டி,7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பெர்ணமி. சந்திரன் அம்மாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் ஆகும். இந்தப் 15 நாட்களை சுக்கில பக்ஷ்க்ஷம் என்பார்கள்.

அதே போல் பெர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்கிறார் அல்லவா? முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி,பஞ்சமி,சஷ்டி, .........அம்மாவாசை
முடிய வரும். இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இதை கிருஷ்ணபக்ஷ்ம் என்பார்கள். தமிழில்கூறினால் தேய்பிறைத் திதிகள் எனக் கூறுவார்கள். இவைகள் எல்லாம் நாள் பார்க்க உதவும். பொதுவாக அஷ்டமி, நவமித் திதிகளில் நல்ல காரியங்கள் செய்வதை எல்லோரும் தவிர்த்துக் கொள்கின்றனர் (அட்டமி, நவமி தொட்டது நாசம் - என்பது பழமொழி).

வாரம்:
வாரத்தைப் பற்றி நாம் அதிகம் கூற வேண்டியது இல்லை. திங்கள், செவ்வாய், புதன் என்கிற கிழமைகள்தான் வாரம் என்பது. இன்றைக்கு என்ன கிழமை என்கிற விபரமும் பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். பஞ்சாங்கத்தைப் பார்க்காமலேயே எல்லோருக்கும் என்ன கிழமை என்று தெரியும்.

நக்ஷ்த்திரம்:

1. அஸ்வினி, 2. பரணி,
3. கார்த்திகை, 4. ரோகினி,
5. மிருகசீரிஷம், 6. திருவாதரை,
7. புனர்ப்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம்,
10. மகம், 11. பூரம்,
12. உத்திரம், 13. ஹஸ்தம்,
14. சித்திரை, 15. ஸ்வாதி,
16. விசாகம், 17. அனுஷம்,
18. கேட்டை, 19. மூலம்,
20. பூராடம், 21. உத்திராடம்,
22. திருவோணம், 23. அவிட்டம்,
24. சதயம், 25. பூரட்டாதி,
26. உத்திரட்டாதி, 27. ரேவதி என்பனவாம்.

கரணம்:
கரணம் என்பது திதியில் பாதியாகம். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன:1. பவ, 2. பாலவ, 3. கெலவ, 4. தைதூலை, 5. கரசை, 6. வணிசை, 7. பத்தரை, 8. சகுனி, 9. சதுஷ்பாதம், 10. நாகவம், 11. கிம்ஸ்துக்னம்.

இன்றைக்கு என்ன திதி என்று பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். அதை எப்படிக் கணக்கிடுவது, அதன் உபயோகம் என்ன என்பது பற்றியும் அறிய வேண்டிய காலம் வரும் போது எழுதுகிறோம்.

யோகம்:
இதில் இரண்டு வகைப்படும். முதலாவது சூரியனும், சந்திரனும் சம்பந்தப்பட்டது. அதாவது வானமண்டலதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரம் ஆகும். இன்னும் சற்று விளக்கமாகக் கூறப்போனால் சூரியன், சந்திரனின் ஸ்புடங்களையும் கூட்டினால் வருவதே இந்த யோகம் ஆகும். இந்த யோகங்கள் மொத்தம் 27-ஆகும். இதனை " நாம யோகம்" என்பார்கள். அவையாவன:

1.விஷ்கம்பம், 2.ப்ரீதி,
3.ஆயுஷ்மான், 4.சௌபாக்யம்,
5.சோபனம், 6.அதிகண்டம்,
7. சுகர்மம், 8. திருதி,
9.சூலம், 10.கண்டம்,
11.விருதி, 12.துருவம்,
13. வியாகாதம், 14. ஹர்ஷணம்,
15. வஜ்ரம், 16. சித்தி,
17.வியதிபாதம், 18. வரீயான்,
19.பரீகம், 20. சிவம்,
21. சித்தம், 22. சாத்தீயம்,
23. சுபம், 24.சுப்ரம்,
25.பிராம்யம், 26.ஐந்திரம், 27. வைதிருதி.

மற்றொறு யோகம் தினமும், சந்திரனும் சம்மந்தப்பட்டது. நக்ஷ்த்திராத்தையும், கிழமையையும் வைத்தே யோகம் கணக்கிடப்படுகிறது. இன்ன இன்ன கிழமைகளில் இந்த இந்த நக்ஷ்த்திரங்கள் வந்தால் இன்ன யோகம் என வகுத்து அதன்படி கணக்கிடப்படுகிறது.

உதாரணமாக திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நக்ஷ்த்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும்.

ரோகிணி மிருகசீரிஷம்,புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நக்ஷ்த்திரங்கள் வந்தால் அமிர்த யோகம் வரும்.

மீதியுள்ள நக்ஷ்த்திரங்களான கார்த்திகை, சித்திரை, மகம், விசாகம்,
பூராடம், உத்திராடம், பூரட்டாட்தி ஆகிய 7 நக்ஷ்க்ஷத்திரகள் வந்தால் மரணயோகம் ஆகும்.
சித்தயோகத்திலும், அமிர்தயோகத்திலும் நல்ல காரியங்கள் எல்லாம் செய்யலாம்.
மரண யோகத்தில் எல்லா நற்காரியங்களும் விலக்கப்படவேண்டும்.
பஞ்ச அங்கங்களான திதி,வாரம்,நக்ஷ்த்திரம், யோகம், கரணம் ஆகியவைகளைத் தெரிந்து கொண்டீர்கள்.

ஜோதிட காலவாய்பாடு


60 தற்பரை = 1 வினாடி
60 வினாடி = 1 நாளிகை
60 நாளிகை = 1 நாள்
365 நாள் + 15 நாளிகை + 31 விநாடி + 15 தற்பரை = 1 சௌர வருஷம்

60 வினாழிகை = 1 நாழிகை
60 நாழிகை = 1 நாள்
2 1/2 நாழிகை = 1 மணி
2 1/2 வினாழிகை 1 நிமிஷம்


நாள் என்றால் என்ன?
இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இரவு 12.01 மணியில் இருந்து மறுநாள் இரவு 12.00 மணி முடிய ஒரு நாள் என்பது ஆங்கிலேயரின் முறை. நமது பண்டைய (சோதிட) முறை சூரியோதயம் முதல் மறு நாள் சூரியோதயம் வரை ஒரு நாள். உதாரணமாக இன்றைக்கு காலை 6.40க்கு சூரியோதயம் எனக் கொள்ளுங்கள். நாளைக் காலை 6.39க்கு சூரியோதயம் எனவும் கொள்ளுங்கள். இந்த இடைப்பட்ட காலம் தான் ஒரு நாள் எனப்படும். அதாவது ஒரு சூரிய உதயம் முதல் மறு சூரிய உதயம் உள்ள காலமே ஒரு நாள் எனப்படும்.

ஜோதிடத்தில் விண்மீன் குழுக்கள்:

"அசுவினி" ஞாயிற்றின் தோற்றப்பாதையில் முதற் இராசியிலும் "ரேவதி" கடைசி இராசியிலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நிலநிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம். "மேடம்" இராசி சக்கரத்தில் முதற் கூறு ஆகும், "மீனம்" கடைசிக் கூறு ஆகும்.

இராசி சக்கரத்தில் உள்ள 12 இராசிகளையும், 27 விண்மீன் குழுக்களையும், ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் பாகைகளையும் பின்வருமாறு இணைத்து பட்டியலிடலாம்:

இராசிகளும் அவற்றிற்குரிய நட்சத்திரங்களும்:

மேக்ஷம்: (0 பாகை தொடக்கம் - 30 பாகை வரை)
அஸ்வனி 1, 2, 3, 4 பாதங்கள்; பரணி 1, 2, 3, 4 பாதங்கள்; கார்த்திகை 1ம் பாதம்.

ரிஷபம்: (30 பாகை தொடக்கம் - 60 பாகை வரை)
கார்த்திகை 2, 3, 4, பாதங்கள்; ரோகிணி 1, 2, 3, 4 பாதங்கள்; மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள்.

மிதுனம்: (60 பாகை தொடக்கம் - 90 பாகை வரை)
மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள்; திருவாதிரை 1, 2, 3, 4 பாதங்கள்; புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்.

கடகம்: (90 பாகை தொடக்கம் - 120 பாகை வரை)
புனர்ப்பூசம் 4ம் பாதம்; பூசம் 1, 2, 3, 4 பாதங்கள்; ஆயில்யம் 1, 2, 3, 4 பாதங்கள்

சிம்மம்: (120 பாகை தொடக்கம் - 150 பாகை வரை)
மகம் 1, 2, 3, 4 பாதங்கள்; பூரம் 1, 2, 3, 4 பாதங்கள்; உத்திரம் 1ம் பாதம்.

கன்னி: (150 பாகை தொடக்கம் - 180பாகை வரை)
உத்திரம் 2, 3 ,4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்

துலாம்: (180 பாகை தொடக்கம் - 210 பாகை வரை)
சித்திரை 2, 3 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3, பாதங்கள்

விருச்சிகம்: (210 பாகை தொடக்கம் - 240 பாகை வரை)
விசாகம் 4-ம் பாதம், அனுஷம் 1, 2, 3, 4 பாதங்கள்; கேட்டை 1, 2, 3, 4 பாதங்கள்

தனுசு: (240 பாகை தொடக்கம் - 270 பாகை வரை)
மூலம் 1, 2, 3, 4 பாதங்கள்; பூராடம் 1, 2, 3, 4 பாதங்கள்; உத்திராட்டம் 1-ம் பாதம்.

மகரம்: (270 பாகை தொடக்கம் - 300 பாகை வரை)
உத்திராடம் - 2, 3, 4 பாதங்கள், திருவோணம் - 1, 2, 3, 4 பாதங்கள்; அவிட்டம் - 1, 2 பாதங்கள்

கும்பம்: (300 பாகை தொடக்கம் - 330 பாகை வரை)
அவிட்டம் - 3, 4 பாதங்கள்; சதயம்- 1, 2, 3, 4 பாதங்கள்; பூரட்டதி- 1, 2, 3 பாதங்கள்

மீனம்: (330 தொடக்கம் - 360 பாகை வரை)
பூரட்டாதி- 4 ம் பாதம், உத்திரட்டாதி- 1, 2, 3, 4 பாதங்கள்; ரேவதி- 1, 2, 3, 4 பாதங்கள்



2 comments: