For Read Your Language click Translate

23 June 2014

குண்டலினி வாங்கலையோ குண்டலினி....!



ஆன்மீகம் வியாபாரமாக மாறி கடைவீதிக்கு வந்ததும் முதன் முதலில் வியாபார பொருளான விஷயமும் அதிகம் விற்கும் பொருளின் பெயர் என்ன தெரியுமா? - குண்டலினி.

ஹேமாமாலினியையும், ஜெயமாலினியையும் தெரியாதவர்கள் கூட நம் ஊரில் இருப்பார்கள். ஆனால் குண்டலினியை பற்றி தெரியாதவர்கள் மிகக்குறைவு.

நம் கலாச்சாரத்தில் ஆறுவிதமான ஆன்மீகப்பாதைகள் உண்டு. அதில் ஒன்று யோக பாதை. யோகத்தின் பாதையில் பல்வேறு உள் பிரிவுகள் உண்டு. ஞான யோகம், பக்தி யோகம், ஜப யோகம், கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம் என ஐம்பெரும் பிரிவுகளாக இப்பிரிவுகள் வகைப்படுத்தப்படுகிறது.

ராஜ யோகம் என்ற யோக பாதையின் உட்பிரிவில் குண்டலினி மற்றும் ஏழு சக்கரங்கள் இருக்கிறது அதன் செயலால் ஞானம் ஏற்படும் என்பதை விவரிக்கிறது.


குண்டலினி என்ற சக்தி மூலாதாரம் என்ற இடத்தில் முக்கோண பெட்டகத்தில் இருக்கிறது. பாம்பின் வடிவில் மூன்று சுற்று சுற்றி மூலாதாரத்தில் இருக்கும் சக்தியை தலையின் உச்சியில் இருக்கும் சகஸ்ராரம் என்ற சக்ரத்திற்கு உயர்த்தினால் ஞானம் பிறக்கும் என்பது குண்டலினி யோகத்தின் அடிப்படை.
பதஞ்சலியின் யோக சூத்திரம் என்ற நூல் ராஜ யோகத்திற்கு ஆதாரமாக கொள்ளப்படுகிறது. குண்டலினியை பற்றி பேசுபவர்கள் பெரும்பாலும் பதஞ்சலியை துணைக்கு கூப்பிடுவார்கள். அவரின் சிலையை வைத்து வழிபடுவார்கள். இதில் வேடிக்கையான விஷயம் பதஞ்சலி விக்ரஹத்தை பாம்பு வடிவில் சித்தரித்து இருப்பார்கள். குண்டலினி பாம்பு வடிவில் இருப்பதாக நம்புவதால் அச்சக்தியை குறிக்கும் வகையில் பதஞ்சலி பாம்பாகிவிட்டார். உண்மையில் பதஞ்சலி நேரடியாக குண்டலினியை பற்றியோ ஆதார சக்ரங்களை பற்றியோ கூறவில்லை...!

முன்பு ராஜயோகத்தை பயில்பவர்கள் குருவை நாடி தங்கள் முயற்சியை ரகசியமாக மேற்கொள்வார்கள். யோகத்திற்கெல்லாம் முதன்மையானது தலையானது என்பதால் இதற்கு ராஜயோகம் என பெயர். மேலும் ரகசியமாக பயிற்றுவிக்கப் பட்டதாலும் இது ராஜயோகம் என பெயர் பெற்றது. அரசாங்க (ராஜாங்க) விஷயங்கள் எப்படி அனைவருக்கும் தெரியக்கூடாதோ அதுபோல ராஜ யோக விஷயங்கள் தெரிய வேண்டியவர்களுக்கு தெரிந்தால் போதுமானது. ஆனால் தற்சமயம் ராஜயோகம் நடைபாதையில் விற்கும் மலிவு சரக்காகிவிட்டது.

எல்லோரும் கற்றுக்கொள்ளக் கூடாதா? இதுக்கும் ரகசியமா? ஏதாவது ஜாதி சார்ந்த கட்டுப்பாடுகள் உண்டா என நினைத்தால் அது தவறு..!

குண்டலினி யோகம் என்பது ஒருவர் மற்றொருவருக்கு கற்று தரும் விஷயமல்ல. இது குரு சிஷ்யன் என்ற இருவருக்கும் ஏற்படும் அனுபவம். அதனால் அவர்களால் அதை விவரிக்க முடியாது. அனுபவிக்க மட்டுமே முடியும்.

ஆனால் தற்சமயம் குண்டலினி யோகத்தை ஒருவர் பல நூறு நபர்களுக்கு ஒரே வகுப்பாக எடுப்பது வியாபாரத்தின் அடையாளம் எனலாம்.

பல்வேறு ராஜயோகிகள் குண்டலினி அனுபவத்தை கலவி இன்பத்துடன் ஒப்பிட்டு சொல்லுவார்கள். கணவன் மனைவி இருவருக்கும் ஏற்படும் தாம்பத்திய உறவு இயல்பானது இதற்கு கடினமான பயிற்சிகள் தேவையில்லை. இருவருக்கும் என்ன நிகழ்ந்தது என நமக்கு தெரிந்தாலும் , அவர்களிடம் உங்களுக்குள் நடந்த விஷயத்தை படிப்படியாக கூறுங்கள் என கேட்பது எப்படி அபத்தமான விஷயமோ அது போன்றது குண்டலினி அனுபவத்தை விவரிக்க சொல்வதும் என்பது என் கருத்து.

மேலும் கணவனோ மனைவியோ பொது இடத்தில் தங்களுக்குள் நிகழ்ந்ததை ஒவ்வொன்றாக விளக்கினால் நாம் முகம் சுளிப்போம் அல்லவா? அதனால் தான் சொல்லுகிறேன், இது நிகழவேண்டியது அல்ல அனுபவமாக உணர வேண்டியது.

தற்சமயம் ஒரு எழுத்தாளர் கூட தன் குரு தனக்கு கொடுத்த குண்டலினி அனுபவத்தை மேடைக்கு மேடை விளக்குகிறார். இவரை பார்த்து பிற ஆன்மீகவாதிகள் நெளிவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?

குண்டலினி சக்தி என்பது உண்மை, அதனால் ஏற்படும் அனுபவங்கள் உண்மை. ஆனால் அதற்காக தற்சமயம் கொடுக்கும் பயிற்சிகளே போலியானது. உண்மையான குண்டலினி அனுபவங்கள் பெற நீங்கள் உங்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மற்றும் மன நிலையில் மாற்றம் செய்ய வேண்டும். இம்மாற்றம் நிகழாமல் குண்டலினி அல்ல வேறு எதுவுமே நிகழாது.

சில யோக கழகங்கள் கார்ப்பரேட் மேனேஜர்களுக்கான குண்டலினி யோகம், குடும்ப பெண்களுக்கான குண்டலினி யோகம் என நடத்துகிறார்கள். இன்னர் மெடிக்கல், எஞ்சினியரிங் , லா என்றல்லாம் பயிற்சிகள் குண்டலினியின் பெயரால் நடக்கிறது. இதில் கலந்துகொள்பவர்கள் யார் தெரியுமா?

தினமும் வீட்டிலும், வாரம் ஒரு முறை கம்பெனியின் பார்டியில் மது அருந்துபவர்களும், தினமும் புகைப்பிடிப்பவர்களுக்கும், தங்களின் உடலை சிறு அசைவு கூட செய்யாமல் ஏஸி அறையில் வைத்திருக்கும் கார்ப்பிரேட் அதிகாரிகள். இவர்களுக்கு ஏழு நாளில் குண்டலினி உயர்த்திகாட்டுகிறார்களாம் இந்த யோக கழகங்கள்.

இது போன்ற குண்டலினி பயிற்சி பெறும் எவரும் தங்களுக்கு அவ்வனுபவம் ஏற்படவில்லை என கூற மாட்டார்கள். பயிற்சியில் என் சக்கரங்கள் அப்படி ஆனது இப்படி ஆனது என கூறுவார்கள். இது எப்படி நிகழ முடியும்?

ஒரு ஏமாற்று பேர்வழி பலரிடம் பணம் பறிக்க கடவுளை காட்டுகிறேன் என அனைவரிடமும் பணம் வசூலித்து மலை உச்சிக்கு கூட்டு சென்றானாம். அங்கே கடவுள் தெரிகிறார். அவர் பத்தினி கணவனின் கண்களுக்கே தெரிவார் என சொன்ன கதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது போன்றதே இந்த குண்டலினி அனுபவமும். ஆயிரக்கணக்கான ரூபாய் செலுத்தி பயிற்சிக்கு வந்தாகிவிட்டது. தன் அருகில் இருப்பவனோ பாம்பு போல நெளிகிறான். நாம் சும்மா இருந்தால் நம்மை ஏளனமாக பார்ப்பார்களோ என தங்களை தாங்களே பலர் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

ராஜ யோகிகள் குண்டலினி அனுபவத்தை கலவியோடு ஒப்பிட்டார்கள் என்றேன் அல்லவா? ஒரு ஐந்து வயது சிறுவனுக்கு கலவி பற்றி கற்றுக்கொடுத்தால் அவனால் அதற்குரிய அனுபவம் ஏற்படுமா என சிந்திக்க வேண்டும். அவனுக்கு உடலாலும், மனதாலும் வளர்ச்சி ஏற்பட்டால் ஒழிய கற்றது பயன்படாது. அது போன்றதே ராஜ யோகம் என்பதை உணருங்கள்.
திரு பட்டரை பாண்டி,

ஆறு தரிசனங்கள் என அழைக்கப்படும் இந்திய கலாச்சாரத்தில் ஆறு பாதைகளை பற்றி விவரிக்க இடம் போதாது.

சில நாட்களுக்கு முன் நான் எழுதிய சாங்கிய தத்துவம் இதில் ஒன்று.

இணையத்தில் பல தகவல்கள் இதை பற்றி உண்டு.

விக்கியின் குறிப்பு இதோ http://en.wikipedia.org/wiki/Hindu_philosophy
ராஜயோகம் பயிலும் பொழுது பல்வேறு உடல் மற்றும் மன உபாதைகள் வரும். அதை சரியான குருவின் வழிகாட்டுதலால் மட்டுமே களைய முடியும். அப்படி என்ன உபாதைகள் வரும் என கேட்கிறீர்களா?
குண்டலினி வாங்கலையோ குண்டலினி....! பகுதி 2
குண்டலினி பயிற்சியில் சில மாற்றங்கள் உடல் அளவிலும், மன அளவிலும் நடக்கும் என்றேன் அல்லவா?

ஜப யோகம் எடுத்துக்கொண்டால் நீங்கள் குரு கொடுக்கும் மந்திரங்களை தொடர்ந்து ஜபம் செய்ய வேண்டும். ஒரு வேளை நீங்கள் சரியாக ஜபம் செய்யாவிட்டால் ஒன்றும் நிகழப்போவது இல்லை. கால விரயம் மட்டுமே ஏற்படும். சரியாக ஜபம் செய்தால் ஆன்மீக அற்றலில் மேம்பட்டு இறைநிலையுடன் இணைவீர்கள்.

பிற யோக முறைகளை விட குண்டலினி பயிற்சி குருவின் நேரடி கண்காணிப்பில் மட்டுமே பயில வேண்டும் என கூறுவார்கள். காரணம் இதை சரியாக பயிற்சி செய்தாலும், செய்யாவிட்டாலும் பின்விளைவுகள் உண்டு..!

இவ்விளைவுகளை தீர்க்கும் ஆற்றல் குருவுக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவருடன் வாழ்ந்து அவரின் முன் இருந்து பயிற்சி செய்வது அவசியம். ஆனால் நடை முறையில் இவ்வாறு இருக்கிறதா என்றால் பெரும்பான்மையாக இல்லை என்றே பதில் கூற முடியும்.

ராஜ யோக சதனா செய்யும் பொழுது உடலின் வலிமை முதலில் முற்றிலும் இழந்து பிறகு பெற வேண்டி இருக்கும். உடல் தன் இயல்பை தொலைத்து புது வடிவம் பெற துவங்கும் பொழுது உடலின் வெப்பம் மிக அதிக அளவில் உருவாகும். அல்லது கடுமையான குளிர் உணர நேரும்.

சராசரி மனிதன் 105 டிகிரி உடல் வெப்பம் கண்டாலே உடனடியாக மருத்துவரை நோக்கி ஓடுவான். அப்படி இருக்க இத்தகைய பயிற்சியில் 116 முதல் 122 வரை உடல் வெப்பம் உயருவது சாதாரணமாக நடக்கும்.

இது மனித உணர்வால் நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத வெப்பம். அதே போல குளிரும் மிகவும் கற்பனைக்கு எட்டாத நிலையில் இருக்கும்.

தமிழகத்தில் சித்திரை மாதத்தில் -5 டிகிரி குளிர் என ஒருவர் சொன்னால் அவரை நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அனேகமாக முன் தெளிவு இல்லாமல் இப்பயிற்சி செய்பவர்களுக்கு நிகழ்வது இதுதான்.

அதிக உடல் வெப்பத்தால் மூல நோய் மற்றும் ரத்த வாந்தி ஏற்பட்டு தொடர் ரத்த இழப்பு ஏற்படும் அல்லது அதிக குளிரால் உடல் இரத்தம் உறைந்து இருதய துடிப்பு நிற்கும் அபாயம் உண்டு.

மஹா ஞானியான ராமகிருஷ்ண பரமஹம்சர் அனைத்து யோக முறைகளையும் முயற்சித்து அதன் உச்சியை அடைந்தவர். அவர் குண்டலினி யோகம் பயிற்சி செய்து அவரின் பற்களில் தொடர்ந்து ரத்தம் கசிய துவங்கியது. இடைவிடாமல் இரத்தம் வாய்வழியே வந்து கொண்டே இருந்தது. ராம கிருஷ்ணரின் குரு அச்சமயம் வந்து அவரை சரியாக்கி மேம்படுத்தினார். இச்சம்பவத்தை அவரின் சரிதத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். ராம கிருஷ்ண பரமஹம்ஸரின் நிலையை யோசித்து நாமும் முயற்சி செய்வது நல்லது..!

நடைமுறையில் குண்டலினி பயிற்சி அளிப்பவர்கள் ஏழு சக்கரங்களின் படங்களை பெரிதாக காண்பித்து இன்ன சக்கரம் இது செய்யும் என விளக்கி பிறகு பயிற்சி கொடுக்கிறார்கள். இதனால் மனித மனம் தன் நிலையிலிருந்து மேம்படாமல் கற்பனை எனும் பாழும் கிணற்றில் விழுகிறது. மந்திரம் சொல்லும் பொழுது குரங்கை நினைக்காதே கதையாகி விடும் அல்லவா?

அப்படியானால் இதை எவ்வாறு பயிற்சி கொடுப்பது?

எனக்கு தெரிந்த ஒரு யோகி தன் சீடனுக்கு பயிற்சி கொடுக்கிறார். அவர் சொல்லுகிறார் குண்டலினி என்பதில் இது எல்லாம் ஏற்படும் என்கிறார். சிஷ்யன் சரி நீங்கள் பல மணி நேரம் விளக்கியதை பார்த்தால் இதற்கு பல நாட்கள் அனுபவம் மேற்கொண்டால் மட்டுமே உணர முடியும் போல இருக்கிறது என்கிறார். அதை மறுத்த குரு தன் சிஷ்யனுக்கு முழு அனுபவத்தையும் ஆறு நிமிடத்தில் உணர்த்துகிறார்.

அனுபவம் கிடைத்ததும் சிஷ்யன் சொல்லுகிறான், குருவே நீங்கள் கூறியவிஷயம் எல்லாம் நான் அனுபவித்தேன் ஆனால் ஒரு குறிப்பிட்ட சக்கரத்தில் நீங்கள் கூறியது போல இல்லையே...அதில் சில விஷயங்கள் கூட இருந்தனவே என்கிறான். அதற்கு குரு கூறுகிறார், “நீ உண்மையாகவே அனுபவம் கொள்கிறாயா அல்லது கற்பனை செய்கிறாயா என காணவே அவ்வாறு முக்கிய சில கூறுகளை விட்டு விட்டேன். மேலும் நீ அதில் கண்ட காட்சி இப்படி இருந்ததா..” என நீள்கிறது அவர்களின் சம்பாஷணை. இவ்வாறு குரு சிஷ்யனும் ஒன்றிணைந்து அனுபவிக்க வேண்டியதே ராஜயோகம்.

நம் உபயோகப்படுத்த ஒரு பொருளை கடைகளில் வாங்குகிறோம் என்றால் அது நமக்கு உபயோகப்படுமா? அல்லது நம் வாழ்க்கை முறைக்கு தொந்தரவு கொடுக்குமா என பார்ப்போம். இது தானே நடை முறை? ஆனால் குண்டலினி பயிற்சி பெறும் பலருக்கு இதன் அவசியம் தெரியாது. சிலர் எனக்கு முதுகு வலி உண்டு அதனால் இப்பயிற்சி செய்கிறேன் என்கிறார்கள். இது உடல் வலிக்கு யானையை அழைத்து மசாஜ் செய்வதை போன்றது.

சில யோக பயிற்சி கழகங்கள் முழுமையான அதிக சிக்கல்கள் கொண்ட பயிற்சியை சராசரி மனிதனுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். அவர்கள் ராஜயோக பயிற்சியை உணர்ந்தார்களா என தெரியாது. ஆனால் முழு பயிற்சியையும் வருபவர்களுக்கு சுண்டல் வழங்குவதை போல வழங்கிவிடுகிறார்கள். ஏழு நாட்களில், மூன்று மணிநேர பயிற்சிக்கு பிறகு பயின்றவரும் வீட்டுக்கு வந்து கடுமையாக பயிற்சி செய்வார். இது எப்படி இருக்கிறது தெரியுமா? ஒருவருக்கு தியரி முறையில் விமானத்தை பற்றி கூறிவிட்டு வீட்டுக்கு சென்றதும் விமானத்தில் கயிரால் உடலை கட்டிக்கொண்டு வானில் பறக்க முயல்வதற்கு சமம்.

குண்டலினி யோகத்தை பற்றி விரிவாக புத்தக வடிவில் எழுதி அதில் உண்ணும் உணவு முறை முதல் நாம் வாழும் வாழ்க்கை முறை பற்றி கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் எழுதி இருக்கிறார். வேதாந்த ரகசியம் என்ற அந்த நூலையே குருவாக கொண்டு பயிற்சி செய்யவும் கூறுகிறார். இவ்வாறு பலர் முயற்சிக்கிறார்கள். அதில் தவறு அல்ல. காரணம் அந்த புத்தகம் ஓர் அனுபவ வடிவம். இல்லையேல் குருவினை நாடி பயிற்சி செய்யுங்கள்.

குண்டலினி பயிற்சி செய்வதாலும் தவறாக செய்வதாலும் கீழ்கண்ட உடல் மற்றும் மன ஏற்றத்தாழ்வுகள் நிகழும்.
  • கடுமையான மூல நோய்
  • எதிர்பாராத நிலையில் தன் நினைவு இழத்தல்
  • உடல் வெப்பம் அதிகரித்தல்
  • சுவாச கோளாருகள்
  • பக்க வாதம் போன்று ஒரு பக்க உடல் செயல்படாமல் இருத்தல்
  • கண்பார்வையில் ஏற்றத்தாழ்வுகள்
  • மன நிலையில் ஏற்படும் மாற்றத்தால் உங்களின் இயல்பு குணம் சென்று குழந்தை தன்மையோ அல்லது ஆழ்ந்த அமைதியோ ஏற்படுதல்.

மேற்சொன்ன விஷயங்களை நீங்கள் எதிர்கொள்ள தயாராக இருந்தால் குண்டலினி யோகம் பயிலலாம்.

இக்கட்டுரையின் முதல் பாகத்தை படித்து ஒருவருவர் என்னிடம் தனி மடலில் பின்வருமாறு கேட்டிருந்தார்.

“நான் ஒருவரிடம் எளிய முறை குண்டலினி பயிற்சி கற்றேன். அதில் எனக்கு நீங்கள் கூறுவது போல எதுவும் நடக்கவில்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறேன்..இதை நீங்கள் ஏன் தவறாக காண்கிறீர்கள்” என்கிறார். இவர்களை போன்று கேட்பவர்களுக்கு என் பதில் இதோ..

“ஐயா.. குண்டலினி என்ற பெயரில் நடப்பதெல்லாம் குண்டலினி பயிற்சி அல்ல. அப்பெயரை கொண்டு சாதாரண யோக ஆசனங்களை கொண்ட பயிற்சியே பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பயிற்சியை கற்று எனக்கு குண்டலினி ஒரு நாள் எழும் என கற்பனை வேண்டுமானால் செய்துகொள்ளலாம். அல்லது தினமும் பயிற்சி செய்யும் பொழுது என் குண்டலினி என் ஆக்னா சக்ரத்திற்கு ஏற்றி இறக்கினேன் என நீங்களே நினைக்கலாம்.

குழந்தைகள் ஓடத்துவங்கும் காலத்தில் கால்களை தரையில் உதைத்து வாயில் சப்தம் எழுப்பி பைக் ஓட்டுவார்கள். அவர்களுக்கு லைசன்ஸ் தேவையில்லை, ஹெல்மெட் தேவையில்லை. காரணம் அவர்களுக்கு விபத்து ஏற்படாது. அவ்வாறு அவர்கள் கீழே விழுந்தாலும் சிராய்ப்பு ஏற்படும் அவ்வளவே.. நீங்கள் பெற்ற குண்டலினி பயிற்சியும் அத்தகையதே என்பதால் உங்களுக்கு எதுவும் நிகழவில்லை. பயிற்சியில் உங்கள் உடல் மற்றும் மனம் மாற்றம் ஏற்பட்டால் நம்மால் உணரமுடியாமல் இருக்கமுடியாது. அவ்வாறு ஏற்பட்டமல் போனால் அது எவ்விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று பொருள்.”

உங்களுக்கு ஏன் இந்த வேலை? யாரோ யாருக்கோ குண்டலினி பயிற்சி கொடுக்கிறார்கள் உங்களுக்கு என்ன இழப்பு என சிலர் என்னிடம் கேட்கிறார்கள். கோவையில் தவறான பயிற்சியாலும், தவறாக பயின்றதாலும் பலருக்கு உடலில் மற்றும் மனதில் ஏற்படும் நோய்களை யோக முறையிலேயே சரியாக்க என்னைத்தான் அழைக்கிறார்கள். இதை நான் பெருமையாக சொல்லவில்லை. வருத்தத்துடன் சொல்லுகிறேன்.

பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் அதிகமாகிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களை கண்டு அவர்களுக்கு குணமளித்துவிட்டு சும்மா இருக்க என்னால் இயலவில்லை. பலருக்கு முன் தெளிவு கொடுக்கவே இந்த கட்டுரை எழுத தேவை ஏற்பட்டது.

இதையும் மீறி நான் முறையற்ற பயிற்சி செய்வேன்.. அந்தரத்தில் பறப்பேன், போன ஜென்மத்தை உணர்வேன் என நீங்கள் கிளம்பினால்.....

நம் முள்ளந்தண்டில் 18 படிகள்!

முதலில் சரியை, கிரியை நெறியில் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் :-

காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.

மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இது சரியை, கிரியை நெறியில் உள்ள விளக்கமாகும்.

ஆனால் யோகநெறியும் தாண்டிய ஞானநெறியில் உடலையே ஆலயமாகப் பாவித்து, இறையுடன் இரண்டறக் கலந்து முற்றுப்பெற்ற ஞானி / சித்தராவர். நமது முள்ளந்தட்டில் 18 கோர்வைகள் உண்டு. விந்தானது முள்ளந்தட்டிலுள்ள பதினெட்டுப் படிகள் தாண்டி கழுத்தைத் தாண்டும்போது அமிர்தமாக மாறி அன்னாக்கில் சிந்தும்போது நம் பொய்யுடல் ஜோதிவடிவான மெய்யுடலாகும். இதைப் பற்றி விரிவாகப் பிரிதொரு பதிவிற் காண்போம்.
1395366_633036086754843_389345231_n.jpg



                               


உங்களுக்கு என் மனமார்ந்த ப்ரார்த்தனைகள்...!


--சக்தி சஹஸ்ராரத்தை அடைந்தது--

1 comment:

  1. ஐயா, தங்களிடம் குண்டலினி Uயிற்சி பெற விரும்புகிறேன். குருவாய் இருந்து வழிகாட்ட விழைகிறேன்

    ReplyDelete