For Read Your Language click Translate

22 June 2014

பாம்பு



உலகில் உள்ள சுமார் 3,000 வகையான பாம்புகளில் இந்தியாவில் இதுவரை கணக்கில் வந்தவை சுமார் 270.  இவற்றில் மிகக் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் சில பாம்புகளே.
 
ஆன்மீக விசாரத்தில் உன்னத நால்வர் என்றழைக்கப் படும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என்பது போல பாம்புகள் விசாரத்தில் பெரிய நால்வர் என அழைக்கப் படும் நல்ல பாம்பு (The Indian Cobra), கட்டு விரியன் (Krait), கண்ணாடி விரியன் (Russell’s Viper), ரம்பச் செதிள் கொண்ட விரியன் (Saw-scaled Viper) மற்றும்இவற்றுடன் ராஜ நாகம் (King Cobra), பவழப் பாம்பு (Coral snake) என்பவையே இந்தியப் பாம்புகளில் மிகக் கொடிய விஷப் பாம்புகள்.  இவை மனிதனைக் கடித்தால் உடனே சரியான வைத்தியம் செய்யப்படா விட்டால் ஓரிரு மணி நேரத்திற்குள்  கடிபட்டவர் இறப்பது நிச்சயம்.
 
பாம்புக் கடிக்கான வைத்தியம் பற்றிப் பார்க்குமுன் இந்தப் பாம்புகளைப் பார்க்கலாமா?
 
நல்ல பாம்பு :  விஞ்ஞான ரீதியாக இந்தப் பாம்பிற்கு அளிக்கப் பட்ட பெயர் நஜா நஜா’ என்பதாகும்.  நஜாஎன்பது ஒரு போர்ச்சுகீசியச் சொல். நல்ல பாம்பிற்கு போர்சுகீசியப் பெயரா? எப்படி வந்திருக்கும்?  பல நூற்றாண்டுகளுக்கு முன் போர்ச்சுகீசிய மாலுமிகளும் அவர்களுடன் சென்றவர்களும் உலகெங்கிலும் அவர்கள் கண்ட தாவரங்கள், விலங்குகள், பறவைகள் பற்றிக் குறிப்பெடுத்துக் கொண்டு சென்றனர்.  நாகா நாகா என்று நம் மக்கள் கூறியதை நஜா நஜா என்று எழுதிக் கொண்டனரோ அல்லது ஹிந்தி பேசுபவர்கள், அது மிகக் கொடிய விஷப் பாம்பு.  அதன் அருகே போகாதே என ஜா ஜா” (Don’t go…don’t go) எனத் தடுத்ததை அவர்கள் அந்தப் பாம்பின் பெயர் நஜா நஜா என எடுத்துக் கொண்டனரோ தெரியாது.
 
 
நல்ல பாம்பு மற்ற பாம்புகளைப் போலவே நல்ல பாம்புதான்.  தானாக வந்து மனிதனை கடிக்காது, அதனை மிதித்தாலோ அல்லது கொல்ல முயற்சித்தாலோ தான் தன் விஷப் பற்கள் கொண்டு மனிதனை அது தீண்டும்.
 
Inline image 1                             
 
நல்ல பாம்பின் தலை - முன்னும் பின்னும்
 
நல்ல பாம்பு அதன் உயிருக்கு ஆபத்து வருகிறது என்று எண்ணினாலோ, அல்லது அதை நாம் சீண்டினாலோ, படமெடுக்கும்.  தன் உடலின் மூன்றில் ஒரு பகுதியை செங்குத்தாகத் தூக்கி நிறுத்திக் கொண்டுகழுத்தின் தசைகளைப் பக்க வாட்டில் பட்டையாக விரித்துப் பெரு மூச்சு விட்டு எதிரிகளை, கிட்டெ வராதே.  வந்தால் கொன்று விடுவேன் என முன் எச்சரிக்கை செய்யும் ஒரு செய்கையாகும் படமெடுப்பது என்பது.
 
நல்ல பாம்பு படமெடுக்கும் போது அதன் விரித்த படத்தின் பின் புறம் மூக்குக் கண்ணாடி போன்ற ஒரு குறியீடு தெரியும்.  இந்த மாதிரி குறியீடு கொண்ட நல்ல பாம்பினை ஆங்கிலத்தில் மூக்குக் கண்ணாடி அணிந்த நல்லபாம்பு (Spectacled cobra) என்பார்கள்.
 
ஒரு வகை நல்ல பாம்பின் தலையில் இது ஒற்றைக் கண்ணாடி வடிவில் இருக்கும்.  இந்த வகை நல்ல பாம்பினை ஒற்றைக் கண்ணாடி அணிந்த நல்ல பாம்பு (Monocled cobra) என்பார்கள்.
 
கட்டு விரியன்:  நல்ல பாம்பினும் கொடிய விஷம் கொண்ட பாம்பு இது.  நல்ல வேளையாக பகலில் படுத்துறங்கி இரவில் மட்டும் வெளி வரும் பாம்பு இது.  இதன் குறுக்கு வெட்டுத் தோற்றம் வட்டமாயில்லாமல் ஒரு முக்கோண வடிவில் இருக்கும்.  உடலில் பட்டை அடித்தது போன்ற வண்ணம் கொண்டிருக்கும்.
 
 
கண்ணாடி விரியன்:  இந்த வகைப் பாம்புகளுக்கு இப்பெயர் வரக் காரணம் இதன் உடல் பூராவுமே மூக்குக் கண்ணடிகள் போட்டாற் போன்ற வண்ணத் திட்டுகள் இருப்பது தான்.  கண்ணடி விரியன் களில் பல வகை உண்டு.  அவற்றில் இரண்டு ரஸ்ஸல்ஸ் விரியன்  (Russell’s viper), ரம்பச் செதிள் கொண்ட விரியன்  (Saw-scaled viper) என்பவை ஆகும்.
   Inline image 5
http://en.wikipedia.org/wiki/File:Daboia_head.jpg                      http://en.wikipedia.org/wiki/File:Echis_carinatus_sal.jpg
கண்ணாடி விரியன் பாம்பு                                                      ரஸ்ஸல் கண்ணாடி விரியன்

1972ல் விஜயவாடாவில் ஒரு நாள் எனது கிருஸ்துவ சக அதிகாரி ஒருவருடன் எங்கள் வீட்டு வாசல் வராந்தாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.  வாசலில் இருந்த முசுக்கொட்டை செடியருகே (Mulberry tree)பத்துப் பதினைந்து கட்டெறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்வது போல என் கண்ணில் பட்டது.  சற்று கூர்ந்து கவனித்ததில் எனக்குப் புரிந்து விட்டது அது என்னவென்பது. அப்போது விஜயவாடாவில் நாகபஞ்சமி என்ற சினிமா ஓடிக் கொண்டிருந்தது.  நண்பர் திடீரெனக் கேட்டார், உங்கள் மதத்தில் நல்ல பாம்பினை தெய்வமாகக் கொண்டாடுகிறீர்கள்.  இது உண்மையா? அல்லது கட்டுக் கதைகளா?” என்று.  அது உண்மையோ இல்லையோ எனக்குத் தெரியாது.  இப்போது உங்களுக்கு ஒரு உண்மையான பாம்பினைக் காட்டவா?” என்றேன். எங்கே? எங்கே காட்டு என்றார் அவர்.  நண்பர் மேத்யூ குட்டியை முசுக் கொட்டை செடியருகே அழைத்துச் சென்று அங்கு வளைந்து வளைந்து செல்லாமல் கிட்டத் தட்ட நேர் கொட்டில் சென்று கொண்டிருந்த ஒரு சின்ன பாம்பினைக் காட்டினேன்.  அதன் முன்னே ஒரு குச்சியை நீட்டினேன்.  குட்டிப் பாம்பு தன் உடலை விருட்டென வளைவுகளாக இழுத்துக் கொண்டு குச்சியினை பக்க வட்டாகத் தாக்கியது. பாம்புகளைப் பற்றி சிறிதளவு படித்திருந்த எனக்குப் புரிந்து விட்டது அந்தப் பாம்பு கண்ணாடி விரியனின் குட்டி என்று.  அடுத்த வினாடி ஒரு பெரிய கல்லை அதன் மேல் தூக்கிப் போட்டுப் பரலோகம் அனுப்பி விட்டார் மேத்யூ குட்டி.  ஏன் அவருக்கு நான்பாம்பைக் காட்டினேன் என வருந்தினேன் அன்று.
 
ராஜ நாகம்:  (King cobra)  ராஜ நாகம் நல்ல பாம்பில் ஒரு வகை.  ஆனால் இரண்டு வித்தியாசங்கள்.  ஒன்றுஇதன் உணவுகளில் மிக முக்கியமானது மற்ற  பாம்புகள்  (அதனால் தான் ராஜ நாகம் என்ற பெயரோ?)  மற்றொன்று இது சிறு குச்சிகள் சரகுகளைத் தன் உடலால் நகர்த்தி நகர்த்தி இரண்டடுக்கு வீடு (கூடு) கட்டி கீழ் தளத்தில் முட்டைகள் இட்டு, மேல் தளத்தில் படுத்துறங்கும்.  ராஜ நாகம் தன் வீட்டினை மிகுந்த ஆக்ரோஷத்துடன் பாது காக்கும்.
Inline image 6

உலகில் உள்ள கொடிய விஷப் பாம்புகளில் மிகப் பெரிய பாம்பு ராஜ நாகம்.  இது சுமார் 18.5 அடி வரை வளரக் கூடும். நல்ல பாம்பினைப் போலவே இந்தப் பாம்பும் படமெடுக்கும்.
 
இதன் கண் பார்வை மிக மிகக் கூர்மையானது. சுமார் 300 அடி தூரத்தில் நகரும் ஒரு இரையினை இது கண்டறியும் சக்தி படைத்தது என்கின்றனர் வல்லுனர்கள்.
 

பவளப் பாம்பு : (Coral snake). பவளம் என்றதும் பலதேசப் பெண்களுக்கு ஆபரணமாக அணிய ஆசை வரும்.  மஞ்சள், சிவப்பு, கருப்பு வர்ணப் பட்டைகளைக் கொண்ட இந்தப் பாம்பு பார்க்க மிக அழகாக இருக்கும்.
Inline image 7

http://www.team-bhp.com/forum/attachments/4×4-off-roading/91469d1232383511-snakes-coral.jpg 

அழகாக இருக்கிறதே எடுத்து அணியலாமோ என்று எண்ண வேண்டாம்.  மிகக் கொடிய விஷம் கொண்டபாம்புகளில் இதுவும் ஒன்று.
 
சில விஷமற்ற பம்புகள்:  விஷமற்ற பாம்புகள் என்றவுடன் இவற்றுக்கு முற்றிலுமாக விஷம் இராது என எண்ணி விட வேண்டாம்,  இந்த வகையில் சிலவற்றிற்கு விஷம் இருந்தாலும் அது மிக மிகக் குறைந்த வீரியமுடையதாகத் தான் இருக்கும்.  இவ்வகைப் பாம்புகளில் மூன்றினைப் பற்றிப் பார்க்கலாம்.
 
1. கொடி அல்லது சாட்டைப் பாம்பு (Vine or Whip snake):  நீண்டு மெலிந்து கொடி அல்லது சாட்டை போல் இருக்கும் இப் பாம்பில் பச்சை நிறத்தில் இருப்பவற்றை பச்சைப் பாம்பு என்றும், பழுப்பு நிறத்தில் உள்ளதை கொம்பேரி மூக்கன் என்றும் நிறத்தினை வைத்து அழைப்பார்கள் நம் தமிழ் நாட்டில்.  இதனை கண் கொத்திப்பாம்பு என்று அழைப்பவர்களும் உண்டு.
 
இந்த இரு வகைப் பாம்புகளுமே மிக மிகக் குறைந்த வீரியம் கொண்ட விஷம் உள்ள பாம்புகளே.  அவை கடித்தால் கடித்த இடத்தினைச் சுற்றி சிறிதளவு வீக்கமும், வலியும் இருக்கும்.  மூன்று நாட்களில் வலி குறைந்து அல்லது மறைந்து விடும்.
 
இந்தப் பாம்புகள் தாழ்வான மரக் கிளைகள் அல்லது செடிகளில் இருந்து கொக்கி போலத் தொங்கிக் கொண்டு இருக்கும்.  அவ்வாறு தொங்குவது தரையில் ஓடும் தன் இரையான ஓணான், பல்லி, சுண்டெலி இவற்றினைக் கண்டறிந்து தாக்கிப் பிடிப்பதற்கே.
 
கொம்பேரி மூக்கனின் தலை மேலிருந்து பார்த்தாலும் சரி, பக்க வாட்டில் இருந்து பார்த்தாலும் சரி ஒரு நீண்ட முக்கோண வடிவில் காணப்படும்.                            

 Inline image 8
http://en.wikipedia.org/wiki/Ahaetulla_nasuta
பச்சைப் பாம்பில் இரு வகை
.
கொம்பேரி மூக்கன் பற்றி நம் நாட்டில் இரு செய்திகள் பரவலாக உலவி வரும்.
 
1.  கொம்பேரி மூக்கன் மனிதனின் கண்களைக் குத்துவதற்காகத் தான் மரக் கிளைகளில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும்.
 
2.  கொம்பேரி மூக்கனை ஒருவர் கொல்ல நினைத்து அடித்தால் அது அவரைத் தீண்டி விட்டு அவர் இறந்தாரா, இறந்தவரின் உடலை எரித்தார்களா இல்லையா எனப் பார்ப்பதற்காக அருகிலேயே தொங்கிக் கொண்டிருக்கும்.  புகை கண்ட பின்னர்தான் அது அங்கிருந்து மறையும்.
 
இந்த இரண்டில் முன்னதில் ஓரளவு உண்மை இருக்கலாம்.  காரணம் இதுதான்.  மரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாம்பினை நாம் அணுகும் போது அது நம் கண்கள் அசைவதைத் தப்பாக தனது இரை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றெண்ணி நம்மைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது.
 
இரண்டாவது முற்றிலும் கட்டுக் கதையே.
 
நான்கு வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த இருவர் அடித்துப் பிடித்து உள்ளே ஓடி வந்து, சார் ஒரு கழி கொடுங்க.  பாம்பு ஒண்ணு வந்துருக்கு என்றனர்.  கழியைக் கொடுக்காமல் நான் வெளியெ வந்து பார்த்தேன்.  பாம்பு எங்கே?” என்றேன்.  அவர்கள் ஒரு மல்லிகைச் செடியியைக் காட்டினர்.  அதில் ஒரு பச்சைப் பாம்பு.  அதன் வாலைப் பிடித்து மெல்ல வெளியே இழுத்துத் தூக்கிப் பிடித்தேன். அவர்கள், சார் அது கண்ணெக் கொத்தீடும் என அலற நான் சிறிதும் பதட்டப் படவில்லை.  அந்தப் பாம்பினை புதர் மண்டி இருந்த பக்கத்து காலி மனையில் கொண்டு விட்டேன்.  கண் இமைக்குமுன் தன்னுடலை சற்றும் அசைவின்றி புதருக்குள் இழுத்துச் சென்றது அது.  என்ன கொள்ளை அழகு தெரியுமா பச்சைப் பாம்பு?
 
 
ஓலைப் பாம்பு :  ஓலைப் பாம்பு நம் தோட்டங்களில் சாதாரணமாகக் காணப்படும் ஒரு வகைப் பாம்பு.  ஓலைப்பாம்பு ஒன்றினை அடித்தால் ஒன்பது வரும்”, என்பார்கள்.  இது ஓரளவு உண்மையே.  சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்.
 
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பது, நாற்பதுகளில் திருச்சி, பொன்மலையில் நான் வசித்து வந்தபோது எங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு நிறைய பாம்புகள் வரும்.  அடிக்கடி அடிப்போம். ஒரு முறை புதராக மண்டிக் கிடந்த கொடி சம்பங்கியில் ஒரு பாம்பினை அடிக்கப் போய் அங்கிருந்து நாலா பக்கமும் பல பாம்புகள் சிதறி ஓடின.  எங்களுக்கு ஒரே ஆச்சரியம், திகில்.  அப்படி நடக்கக் காரணம் ஓலைப் பாம்புகள் கூட்டமாக வாழும் இயல்புடையவை என்பதுதான் எனப் பின் நாட்களில் அறிந்தேன்.
சாரைப் பாம்பு :  இதன் ஆங்கிலப் பெயர் ‘Rat snake’.  இப் பெயர் ஒரு காரணப் பெயர்.  இந்தப் பாம்பின் பிரதான உணவு எலிகள்.

Inline image 9
http://en.wikipedia.org/wiki/File:Yellowratsnake-1-.jpg
 
சாரைப் பாம்புகளில் சுமார் 32 வகையான பாம்புகள் உள்ளனவாம்.
 
இப்பாம்பு பற்றிப் பரவலாக நிலவி வரும் எண்ணம் இது நல்ல பாம்பின் காதலன் என்பது.  தவறான ஒரு கருத்து இது.  இப்படி ஒரு தவறான எண்ணம் வரக் காரணம் இதன் உருவமும் நிறமும் நல்ல பாம்பினைப் போல இருப்பதுதான்.
 
பாம்புகளைப் பற்றிப் பார்த்தோம்.  அடுத்த கடடுரையில் பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைப் பார்ப்போம்.
 
(தொடரும்)  

நடராஜன் கல்பட்டு


பாம்பு …!

இந்தப் பதிவு நான் எழுதியது அல்ல. வல்லமை குழும நண்பர் திரு கல்பட்டு நடராஜன் அவர்கள் எழுதியது. அவரது முன் அனுமதியுடன் அவரது பதிவுகளை வாங்கி இங்கு பதிகிறேன்.
நன்றி நடராஜன் ஸார்!
இதை எனது ஐம்பதாவது பதிவாக பதிவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

பாம்பு – 1
பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது, “கருடா சௌக்யமா? என்று
“அவரவர் இடத்தில் இருந்தால் எல்லோரும் சௌக்யமே”, என்றே கருடன் சொன்னது.

சரி பாம்பின் இடம், அதான் வீடு, எது என்றால் புற்றென்றுதான் எல்லோரும் சொல்வார்கள்.  “அது என்ன பாம்பு தானாகக் கட்டிகொண்ட வீடா?அல்லது வாடகை வீடா?” என்றால் இரண்டும் இல்லை.  பலவந்தமாக ஆக்கிரமித்துக் கொண்ட வீடு அது.

புற்று என்பது கறையான்கள் தாம் வாழக்கட்டிக்கொண்ட வீடு.  அந்தப் புற்றுகளுக்குள்ளோ அல்லது எலி வளைகளுக்குள்ளோ புகும் பாம்புகள் வீட்டு சொந்தக் காரர்களைத் தன் உணவாக்கிக் கொண்டு மிக மிக சௌகரியமாகக் குடும்பம் நடத்தும்.வீட்டைக் கட்டியது நாங்கள். குடி வந்தவரோ கூசாமல் தின்கிறார் எங்களை என்கின்றனவோ இந்தக் கரையான்கள்?
பாம்பு-1-புற்று
எலிகளின் கதையும் இதேதான்.  பாம்புகளுக்கு மிகவும் பிடித்த உணவு எலிகளும் தவளைகளும்.
நம் நாட்டில் உற்பத்தியாகும் தானியங்களில் சுமார் 20 முதல் 25 சத விகித வரையான தானியங்களைத் தின்று தீர்ப்பது எலிகள் என்கின்றனர் நிபுணர்கள்.  அந்த எலிகளின் வளைகளைத் தங்கள் வீடுகளாக்கிக் கொண்டு, எலிகளை உணவாக்கிக் கொண்டு, அவற்றின் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது பாம்புகள்.  இப்போது சொல்லுங்கள் பாம்புகள் நம் நண்பர்களா இல்லையா என்று.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள்.  ஆனால் எல்லாப் பாம்புகளுமே உயிர் கொல்லும் விஷம் கொண்டவை அல்ல.  ஆனால் எவை கடித்தால் உயிருக்கு ஆபத்து, எவை கடித்தால் ஆபத்து இல்லை என்று எப்படித் தெரியும்?  அதனால் தான் பாம்பைக் கண்டவுடன் அதை அடித்துக் கொன்று விடுகிறார்கள் பலரும்.

பாம்பு தானாகச் சென்று யாரையும் கடிப்பதில்லை.  நாம் அதைத் துன்புறுத்தினாலோ அல்லது தப்பிப் போய் மிதித்து விட்டாலோ தான் அது நம்மைக் கடிக்கும்.

அன்டார்டிகா கண்டத்தைத் தவிற மற்ற எல்லாக் கண்டங்களிலும் பாம்புகள் உள்ளன. பாம்புகளில் கிட்டத்தட்ட சுமார் 3000 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றுள் சுமார் 534 வகைப் பாம்புகளே மிகக் கொடிய விஷம் கொண்டவை.

இந்த மூவாயிரம் வகையான பாம்புகளில் பத்தே சென்டி மீடர் நீளத்தில் மண் புழு போன்றிருக்கும் செய்யான் பாம்பிலிருந்து (Leptotyphlops carlae)  அனகொண்டா என்ற 7.5 மீடர் பாம்பு, மற்றும் 9.0 மீடர் நீளமுள்ள மலைப் பாம்பு வரை உள்ளன.  பல ஆண்டுகளுக்கு முன் 15 மீடர் நீளம் வரை உள்ள பாம்புகள் (Titanoboa cerrejonensis) கூட இருந்தனவாம்.செய்யான் பாம்பிற்குக் கண் பார்வை கிடையாதாம்.
பாம்பு-1-செய்யான் பாம்பு
இந்த செய்யான் பாம்பு மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான பார்படாஸில் மட்டுமே காணப்படுகிறது எனச் சொல்கின்றனர் பாம்பு பற்றி அறிந்தோர்.  ஆனால் இந்தப் பாம்பை நான் பல முறை பார்த்திருக்கிறேன் நம் ஊர்களிலும்.  இது எந்த அளவுக்கு நாம் நம்மைச் சுற்றி உள்ளவை பற்றிக் குறிப்புகள் எடுத்து வைக்கிறோம்,  அவற்றைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

மிகச் சிறிய பாம்பினைப் பார்த்தோம்.  மிகப் பெரிய பாம்பைப் பார்க்க வேண்டாம்?  அதுதான் மலைப் பாம்பு,  சுமார் 9 மீடர் நீளம் வரை வளரக் கூடியது.

மலைப் பாம்பின் உணவு பறவைகள் மற்றும் சிறிய மிருகங்கள் ஆகும்.  வாயினால் கவ்விப் பிடித்த இரையினை தன் உடலால் சுற்றி வளைத்துப் பின்னர் தனது தசைகளை இறுக்கிக் கொண்டே போய் அவற்றின் உயிரை எடுத்து விடும்.  அந்த இறுக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும்.
பாம்பு-1-மலைப் பாம்பு
மலைப்பாம்பு அதன் உயிருக்கு ஆபத்து என்று வந்தாலொழிய தரையில் மெதுவாகத்தான் ஊர்ந்து செல்லும்.  மரத்தின் மீதும் ஏறும்.  தண்ணீரில் நன்றாக நீந்திச் செல்லும்.வயிறு புடைக்க உண்ட பின் சில நாட்கள் பட்டினி கிடக்கும் உண்ட இரையின் உடல் அளவு பொருத்து.  ஒரு பாம்பு இரண்டு வருடம் வரை பட்டினி கிடந்ததாகக் கூடக் குறிப்பில் உள்ளது.

கட்டுரை என எழுதும்போது “நான்” வருவது தவிற்கப் பட வேண்டிய ஒன்று.  ஆனால் இது படித்துப் பட்டம் பெருவதற்காக எழுதும் கட்டுரை அல்ல.  பாம்பைப் பற்றி ஒரு நிபுணர் எழுதப் போகும் கட்டுரையும் அல்ல.  பாம்பைப் பற்றி ஒரு பாமரன் எழுதப் போகும் கட்டுரை.  ஆகவே நடுவில் “நான்” நுழைவதை நீங்கள் மன்னித்துக் கொள்ளத் தான் வேண்டும்.

திருச்சியில் சிங்காரத்தோப்பு என்று ஒரு இடம்.  அதில் உள்ள வீடுகள் எல்லாம் கிருஸ்துவர்களாக மாறிய முன்னாள் அந்தணர்கள் வீடுகள்.  அவர்கள் வீட்டில் பேசுவது  அக்ரகாரத் தமிழில்.  ஆடிக்கழைப்பது, தீபாவளி கொண்டாடுவது, தாலி கட்டிக் கொள்வது என எல்லாம் உண்டு.  ஆனால் பொட்டு வைத்துக் கொள்ள மாட்டார்கள்.  சர்ச்சுக்குப் போவார்கள். அவர்களில் ஒருவர் கலஞ்சென்ற தம்பு ஐயர்.

தம்பு ஐயர் ஒரு பிராணிகள் விரும்பி.  அவர் வீட்டில் ஒரு நரி, ஒரு குரங்கு, ஒரு முதலை, கீரிப் பிள்ளைகள், சில முயல்கள், சில பாம்புகள், கிளி, காடை, கௌதாரி என்று பறவைகள் என ஒரு குட்டி மிருகச் சாலையே  வைத்திருந்தார். குறவர்கள் அவரது நண்பர்கள்.  தங்கு தடையின்றி விலங்குகளுக்கு ஆகாரம் வர வேண்டுமே அதற்காகத்தான்.

அவரது பொக்கிஷங்களை பார்த்துக் கொண்டு வரும்பு போது பாம்புகள் வைத்திருக்கும் இடத்திற்கு வந்தேன்.  “பாம்பிற்கு என்ன உணவளிப்பீர்கள்? எப்படி அளிப்பீர்கள்?” என்று நான் கேட்க அவர், “இதோ பார்”, எனச் சொல்லி பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூண்டிலிருந்து ஒரு கௌதாரியை எடுத்து பாம்பு ஒன்று இருந்த கண்ணாடிப் பெட்டிக்குள் போட்டர்.  அவர் போட்ட அதே கணம் மின்னல் வேகத்தில் மேலெழும்பி அந்தப் பாம்பு கௌதாரியைக் கவ்விப் பிடித்தது.  பின் தன் உடலால் கௌதாரியைச் சுற்றிக் கொண்டு அதனை இறுக்க ஆரம்பித்தது.  ஓரிரு நிமிஷங்களுக்குள் கௌதாரியின் மடங்கி இருந்த கால்களும் விரல்களும் நீண்டு விரிந்தன.  அதன் உயிர் பிரிந்தது.  ஆனால் பாம்பு அதன் பிடியை விடவில்லை.  சில மணி நேரங்கள் வரை அப்படியே இறுக்கிப் பிடித்து வைத்திருக்குமாம் அது..  அவரை ஏன் நான் பாம்பின் இரை பற்றிக் கேட்டடேன் என வருந்தினேன்.

பின் அவர் வேறு ஒரு கண்ணாடித் தொட்டியில் இருந்த ஒரு குட்டி மலைப் பாம்பின் முதுகில் ரெண்டு தட்டுத் தட்டிக் கையில் எடுத்து அதை என் முன் கையில் வைத்தார்.  அது மெல்ல நகர்ந்து என் கையைச் சுற்றி கொண்டது.  பின் மெதுவாக என் கையை இறுக்குவதை உண்ர்ந்தேன்.  சில வினாடிகளில் அதன் இறுக்கம் அதிகமாகிக் கொண்டே போனது.  என் கையில் ரத்த ஒட்டம் நின்று போனதோ என்னவோ விரல்கள் மறத்துப் போக ஆரம்பித்தன.  நான், “அதை எடுத்து விடுங்கள்”, எனக் கத்தினேன்.  “நீயே எடு” என்றார்.  நான் வாலைப் பிடித்து எடுக்கப் போனேன்.  தம்பு ஐயர் என்னைத் தடுத்து நிறுத்தி முதலில் அதன் முதுகில் மெதுவாக ரெண்டு தட்டுத் தட்டி விட்டு எடு.  இல்லை என்றால் அது உன்னை கடிக்கலாம்.  பின் அதன் வாய்க்குள் இருந்து உன் கையை எடுப்பது கடினம்”, என்றார்.   அவர் சொன்னபடி செய்து மெல்ல அதன் வாலைப் பிடித்து சுற்றிச் சுற்றி பாம்பை என் கையிலிருந்து கழற்றினேன்.  அன்று அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் பாம்பு எப்படி இறுக்கிப் பிடித்துத் தன் இரையைக் கொல்கிறது என்று.  உடும்புப் பிடி என்பார்களே அதை விடப் பல மடங்கு கெட்டியானது தான் பாம்புப் பிடி.

அன்று இரவு உணவு உண்ணப் பிடிக்கவில்லை.  காரணம் ஓரு கொலை நடக்கத் துணை போன குற்ற உணர்வுதான். சரி என் கதையை விட்டு பாம்பின் கதைக்கே திரும்புவோம்.

நகர்தல் : பாம்பின் கால் பாம்பறியும் என்பர்.  ஏனெனில்  பிறர் கண்களுக்குத் தெரியும் படியான புறக் கால்கள் இல்லை பாம்பிற்கு.  அதன் ஒவ்வொரு செதிளுமே இரு கால்கள்தான்.  அதன் உடலில் சாட்டை போல் நீளமான முதுகெலும்பில் இருந்து முளைத்துள்ள விலா எலும்புகள் தசைகள் உதவி கொண்டு செதிள் களை இயக்க பாம்பு இடம் விட்டு இடம் நகர்கிறது. மரம் ஏறுகிறது.  நீந்துகிறது.

மெதுவாகச் செல்லும் போதும், மணல் பாங்கான இடங்களில் செல்லும்போதும் வளைந்து வளைந்து செல்லும் பாம்பு வேகமாக ஓட நினைத்தால் நேர் கோட்டிலே வெகு வேகமாகப் பறக்கும், வானில் அல்ல தரையில்தான்.  அப்படி நேர் கோட்டில் போகும்போது அதன் முதுகில் அலைகளென எழும்பி இறங்கும் அசைவுகள் முன்னிருந்து பின் செல்வதைக் காணலாம்.

நுகர்தல் :  பாம்பிற்கு மிக நல்ல நுகரும் சக்தி உண்டு.  எலி போன்ற தன் இரை சென்ற பாதையினைக் கண்டறிவது இந்த மிகத் துல்லியமான நுகர் சக்தியால் தான்.  ஆனால் நம்மைப் போல் நாசிகளால் நுகர்வதில்லை பாம்புகள்.  பின் எப்படி நுகர்கின்றன அவை?
 
ஒவ்வொரு வினாடியும் தன் இரண்டாகப் பிளந்த நாக்கினை வெளியே நீட்டி இப்படியும் அப்படியுமாக பல திசையிலும் திருப்புகிறதே அது ஏன் தெரியுமா?  நுகர்வதற்காகத் தான்.

ஒலி கேட்டல் :   “மகுடியின் இசையில் மயங்கியது நாகம்” என்கிறார்களே அது உண்மையா என்றால் இல்லை.  பிடாரனின் கை அசைவுகளை கண் வாங்காது பார்ப்பது, பிடாரன் நம்மைத் தாக்க வருகின்றானா அல்லது நாம் அவனைத் தாக்க வேண்டுமானால் அதற்குத் தக்க தருணம் எது என்ற சிந்தனையில்தான்.

“இடியேருண்ட நாகம் போல்….” இது எந்த அளவு உண்மை?  உண்மை.  நூற்றுக்கு நூறு உண்மை.  பாம்புகளுக்கு இடியின் ஒலியைக் கேட்கவும் முடியும்.  மற்ற ஒலிகளையும் கேட்கவும் முடியும்.  ஆனால் அவ்வாறு கேட்பதற்கு  நம்மைப் போன்று புறச் செவிகள் கிடையாது.  அகச் செவிகள் உண்டு.  அந்த அகச் செவிகள் அதன் உடலில் உள்ள ஒவ்வொரு செதிளோடும் நரம்புகள் மூலம் இணைக்கப் பட்டிருக்கும்.   ஒலிகள் தரையில் உண்டாக்கும் அதிர்வுகளைச் செதிள்களின் மூலம் உணர்ந்து ஒலிகளைக் கேட்டறிகிறது.

ஒளி காணல் :  பாம்பின் கண்களுக்கு இமைகள் கிடையாது.  அவை எப்போதுமே திறந்திருக்கும், தூங்கும் போதும் கூட.  தூங்கும் போது வெளிச்சம் இடையூறாக இருக்குமே? என்ன செய்ய?  அப்போது பாம்பு தன் கண்களில் உள்ள பாப்பாவை (Pupa) இடைவெளி இல்லாது இறுக்க மூடிக் கொள்ளும்.

விஷம் :  “பாம்பிற்குப் பல்லில் விஷம்.  தேளுக்குக் கொடுக்கில் விஷம்.   அந்த ஆளுக்ககு உடம்பு பூரா விஷம்.”  இந்தக் கூற்றுகள் எவ்வளவு தூரம் உண்மை?  பின்னது இரண்டும் நூற்றுக்கு நூறு உணமையாய் இருக்கலாம்.  முன்னது ஐம்பது சத வீதம் உண்மை.  பாம்புக்குப் பல்லில் விஷம் இல்லை.  அது விஷத்தினை வைத்தியர் ஊசி கொண்டு மருந்து ஏற்றுவது போல் பல்லின் வழியாக நம்முள் செலுத்துகிறது.  விஷம் இருப்பது அண்ணத்தின் மேலாக உள்ள பையில்.
பாம்பு-1-விஷப் பல்
பாம்பு தன் இரு விஷமேற்றும் பற்களை விமான ஓட்டி தரையை விட்டு மேலே விமானம் எழும்பிய உடன் சக்கரங்களை உள்ளிழுத்துக் கொள்வது போல உள்ளிழுத்துக் கொள்ளவோ, மடக்கிக் கொள்ளவோ முடியும்.  அது மட்டுமல்ல. விமான ஓட்டி உள்ளிழுத்த சக்கரங்களைப் பலகைகள் வந்து மூடிக் கொள்வது போல தசைகள் பக்க வாட்டில் இருந்து உள் நோக்கி நகர்ந்து அப் பற்களை மூடிக் கொள்ளும்.

பாம்பின் விஷம் பிறரைத் தாக்குவதற்காகவோ அதன் தற்காப்பிற்காகவோ அல்ல. அது தன் இரையினைக் கொல்வதற்காகவோ அல்லது மயக்கமுறச் செய்வதற்காகவோ அல்லது இரையினை எளிதாக ஜீரணிப்பதற்குத் தயாராக்கவோ தான்.

தோலுரித்தல் :  தோலுரித்தல் என்றதும் சிலர் மணி பர்ஸ், இடுப்புக் கச்சை இவை செய்வதற்காகத் தோலை உரிக்கிறார்களே அப்படி என்று எண்ணி விடாதீர்கள்.  பாச்சை, வெட்டுக்கிளி, இடையான், தேள் போன்ற சில பூச்சிகள் வளர்ச்சிக்குத் தடையாக மாறும் கெட்டி அடைந்த தோலின் புறச் செல்களிலிருந்து சட்டையைக் கழற்றி எறிவது போல வளியே எறிகின்றனவே அது பற்றிதான் சொல்கிறேன் இங்கு.  பாம்பு அவ்வப் போது தன் சட்டையைக் கழற்றிப் போடும்.

பாம்பு சட்டை உரிப்பது வளர்ச்சிக்காக அல்ல.   அதனைக் கடித்துசத்தினை உரிஞ்சும் பேன் போன்ற பூச்சிகளிடமிருந்தும், வேறு பல கிருமிகளிடமிருந்தும் விடுதலை பெறவும், கீரல்கள் மிகுந்த மற்றும் இறந்து போன வெளி செல்களை விட்டெறியவும் தான்.சட்டை உரிக்கும் நேரம் வந்தால் வெளிப் புறச் செல்களுக்கு உள்ளாக அண்மையில் இருக்கும் செல்கள் திரவமாக மாறி வழுக்கலை அளிக்கிறது.  சட்டையின் வால் பக்கத்தை சொறசொறப்பான குச்சிகளில் ஒட்டச் செய்து அதிலிருந்து தன் உடலை மெல்ல வெளியே இழுத்துக் கொள்கிறது.
 
நாக ரத்தினம் :  “வயது முதிர்ந்த பாம்புக்குக் கண் சரியாகத் தெரியாது.  அதன் தலையில் உள்ள விஷம் கெட்டி அடைந்து ரத்தினமாக மாறும்.  அதனை இரவில் பாம்பு கக்கிவிட்டு அந்த ரத்தினம் வீசும் ஒளியில் தன் வேலைகளைச் செய்யும்.”  இது உண்மையா, கட்டுக் கதையா?  பின்னது என்றே நான் சொல்வேன்.
 
கட்டுரையும் பாம்பைப் போலவே நீண்டு கொண்டு போவதால் இப்போதைக்கு நிறுத்திக் கொண்டு மீண்டும் தொடர்கிறேன்.
 

தொடரும்…                                  நடராஜன் கல்பட்டு
-
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
 
நடராஜன் கல்பட்டு

 

No comments:

Post a Comment