For Read Your Language click Translate

23 June 2014

கேரளாவை தோற்றுவிதத பரசுராமர் .....

புண்ணியம் தேடி பயணத்துல, இன்னிக்கு நாம பார்க்க போறது கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து, சுமார் 10 கி மீ தொலைவில் உள்ள பரசுராமர் க்ஷேத்ரம்.

பரசுராமர் சகல கலைகளையும் கற்றவர். அஸ்திரம் பிரயோகிப்பதில் இவருக்கு நிகர் யாருமில்லை. இவரது ஆயுதம் "பரசு' என்பதால் "பரசுராமர்' ஆனார்.அதை வைத்துதான் கேரளாவை தோற்றுவிததாகவும் மலைவாழ் தேசத்து மக்களை மூக்கை பிடித்து சம்சாரிகான் (பேசவைத்தது) வைத்து உருவாக்கிய மக்கள்தான் கேரளா மக்கள் ன்னு ஒரு நாட்டு கதை இன்றும் கேரளத்து மக்களிடையே உண்டுதிருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் பெருமாளின் உடல் பகுதியாகவும், திருவல்லம் பரசுராமர் கோயில் தலைப்பகுதியாகவும், திருவனந்தபுரம் அருகே உள்ள திருப்பாதபுரம் கோயில் பெருமாளின் கால் பகுதியாகவும் விளங்குவதால் ஒரே நாளில் இம் மூன்று தலங்களையும் தரிப்பது மிகவும் நல்லதுன்ற ஐதீகம் இன்றும் உள்ளது .  

மேல இருக்கும் படத்துல நாம பார்க்குறது திருக்கோவிலின் முகப்பு. வல்லம் என்றால் "தலை' ன்னு பொருள். முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மனாப சுவாமியின் தலைப்பகுதி இத்தலம் வரை நீண்டிருந்ததால் இத்தலம் "திருவல்லம்' எனப்பட்டது. திருவனந்தபுரம் பத்மநாபரை பிரதிஷ்டை செய்த வில்வமங்களம் சாமியாரின் வழிபாட்டால் பெருமாளின் உருவம் திருவனந்தபுரம் கோயில் மூலஸ்தானம் அளவிற்கு சுருங்கிவிட்டதாகவும் புராணங்கள்ல சொல்லபடுது. இந்த இடத்திற்கு திருவனந்தபுரத்திலிருந்து பஸ் வசதிகளும் ஆட்டோ வசதிகளும் நிறைய இருக்கு. புதுசா போறவங்க திருவனந்தபுரம் ரயில்வே நிலையத்தில் இருக்கும் ப்ரீ பெய்ட் ஆட்டோகளை உபயோகிப்பது நல்லது.
  
இக்கோவில் 12ம் நூற்றாண்டு அல்லது 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் ன்னு ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுது.  இந்த புராதன கோயில் சீறிபாயும் கரமனை ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கு. இந்த பரசுராமர் க்ஷேத்ரம் பக்கத்தில் ஒரு தீர்த்தகுளம் இருக்கு. இதில் ஆமை மற்றும் மீன்கள் லாம் இருக்கு .
           
 திருக்கோவிலின் முன்பு 9 பது பலிப்பீடங்கள் இருக்கு. தர்ப்பணம் முடிஞ்சதும் நம் முன்னோர்களுக்கு பலிகர்மம் இந்த பீடங்களில் தான் இடப்படும் .

இனி இந்த திருக்கோவிலின் வரலாற்றை பாப்போம். ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமர் தன் தாய் ஒரு வாலிபனை ஏறெடுத்து பார்த்துவிட்டாள் என்பதற்காக, தந்தையின் ஆணைப்படி தாயின் கழுத்தை துண்டித்தாராம்.  தன் தாய் கற்பு நெறி பிறழாதவள்ன்னு தெரிந்தும் தந்தை சொல் தட்டாமல் நிறைவேற்றிய தனயன், அதற்கு பிரதி உபகாரமாக தந்தையிடம் பெற்ற வரத்தின் காரணமா தாயை உயிர்ப்பித்தாராம் .

 தன்னுடைய  தந்தை ஜமதக்னி முனிவரை அரசன் ஒருவன் கொன்றான். என்பதற்காக, ஒட்டு மொத்த அரச வம்சங்களையும் வேரோடு அழிக்க சபதம் எடுத்தார். அதேசமயம்  கல்யாணம் பண்ணிய நிலையில் இருக்கும் அரசர்களை 1 வருடம் வரையில் கொல்வதில்லைன்ற சபதம் கொண்டவராம். இவருக்கு பயந்தே தசரதன் பல மனைவியரை கல்யாணம் பண்ணினான் ன்னு செவிவழி கிராமத்து கதைகளுண்டு.

இவ்வேளையில், விசுவாமித்திரரின் யாகங்களுக்கு உதவி செய்துவிட்டு மிதிலைக்குச் செல்லும் வழியில் பரசுராமருக்கும் இராமருக்கும் சின்ன யுத்தம் வர, இராமர் வெல்ல, பரசுராமர் அவரது சக்திகளை எல்லாம் இராமருக்கு வழங்கி  தவம் இயற்ற சென்றுவிடடாராம்.  அதுவரை சாதாரண இளவரசனான இராமன் அவதாரமாக மாறினார் ன்னு கேரளத்து கிராமத்து பக்கம் கதையாக கூறுவர்.
   
பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியைக் கொன்ற தோஷம் நீங்க பல தலங்கள் சென்று வழிபாடு செய்தார். ஒரு முறை அவர் சிவனின் கட்டளைப்படி இத்தலம் வந்து இங்குள்ள கரமனை ஆற்றில் நீராடினார். அப்போது அவருக்கு கிடைத்த லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து தவம் செய்து தோஷம் நீங்க பெற்றார். பின் தன் தாய்க்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்தார். 

பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோர் பரசுராமர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை பூஜை செய்துள்ளனர். பரசுராமர் தன் தாய்க்கு பிதுர் தர்ப்பணம் கொடுத்த தலமாதலால் இத்தலம் "தட்சிண கயை' ன்னும் அழைக்கப்படுது. ஆதிசங்கரர் தன் தாய் ஆரியாம்பாளுக்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்துள்ளார். அப்பொழுது பரசுராமர் அவருக்கு காட்சி கொடுத்து அருளினாராம்,

பரசுராமர் வழிபட்ட இந்த இடத்தில் அவரது பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பீடத்திற்கு தினமும் பூஜை செய்யப்படுது. இந்த பீடத்தை பரசுராமரின் சீடரும், சிரஞ்சீவிகளில் ஒருவருமான அஸ்வத்தாமன் வழிபட்டிருக்கிறார். பீடத்தின் அருகே பரசுராமர் கோடரியுடன் நிற்கும் சிலை உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். இங்குள்ள சிவப்பெருமானை பரசுராமரும், மகாவிஷ்ணுவின் அம்சமாக வேதவியாசரை விபாகரண முனிவரும், பிரம்மாவை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க பள்ளிக்குழந்தைகள் வேதவியாசருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர். தமிழகத்தில் திருக்கடையூரில் நடைபெறுவதை போல, நீண்ட நாள் வாழ்வதற்கு இங்கு ஆயுள் விருத்தி ஹோமங்கள் நடைபெறுகின்றன. நோயற்ற வாழ்க்கைக்காகவும், நிம்மதியான மனநிலை வேண்டியும், பக்தர்கள் இந்த பீடத்திற்கு பூஜைசெய்கிறார்கள். குழந்தைகள் நல்லொழுக்கத்துடன் வளர இங்கு வழிபாடு செய்கிறார்கள்.
முக்கிய சன்னிதியில் பரசுராமர் முகம் சந்தனத்தில் வரையப்பட்டிருக்கு. பரசுராமர் வடக்கு பார்த்து இருக்கிறார். பரமசிவன் கிழக்கு பார்த்து. பகவதி, கணபதி கோயில்கள் இருக்கின்றன.
முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக செய்விக்கப்படும் பலிதர்ப்பமன்என்னும் சடங்கை செய்வதற்காக பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகின்றனர். கார்க்கிடக வாவுஎனும் நாளின்போது கரமனா ஆற்றில் புனித நீராடியபின் இந்த சடங்கு செய்யப்படுது. மேலும் இறந்து போனவர்களின் திதி வரும் நேரத்தில் இங்க வந்து இந்த பலிபூஜை செய்யவும் நிறையப்பேர் வராங்க.

காலைல 5 மணிக்கெல்லாம் பூஜையை ஆரம்பிச்சுடுறாங்க. பொறுமையா மந்திரங்களை சொல்லி, நாம அதை திருப்பி சொல்லி என்னவெல்லாம் செய்யணுமோ அதெல்லாம் சொல்லிதராங்க. கடைசியா நாம பலிபூஜை முடிஞ்சதும் அவங்க தரக்கூடிய எள்ளு கலந்த உணவு உருண்டையை தலைக்கு மேலே சுமந்து கோயிலின் முன்புறம்  உள்ள ஒன்பது பலிபீடங்களில் உணவை உருட்டி சமர்பிக்கவேண்டும்  ஏராள காகங்களும், புறாக்களும் வந்து வந்து கொத்தித் தின்பதைக் கண்டு நம் முனோர்கள் வந்து உண்பதாகவே மனசுக்குள் ஒரு சந்தோசம்.  மிச்ச உணவை கொண்டுபோய்  வெளியே ஓடிக் கொண்டிருக்கும் காராமனை ஆற்றில் விட்டுவிட்டு கை, கால்களை கழுவி திரும்பி பார்க்காமல் நடந்து கோவிலுக்கு செல்லவேண்டும் இல்லை (முடிந்தால் அதிலேயே குளித்து விட்டும்) கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.
மேலும் இந்த ஆலயத்தின்  சுற்றுப் பிராகாரத்தில் திலஹோமம் நடக்கும் இடத்தைச் சுற்றிலும் வடக்கு மூலையில் வண்ணங்களில் ஏராளமான சோப்புப் பெட்டிகள் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் ஒரு தகடு இருக்கும்.அகால மரணமடைந்தவர்களுக்கு  இதன் அருகே ஓடும் கரமனையாற்றின் கரையில், 13 மாதங்கள் தில ஹோமம் செய்து 13வது மாதம் அந்த சோப்புப் பெட்டியை பரசுராமரின் பாதங்களில் வைத்து ஆற்றில் விட்டு விடுகின்றனர். இங்கு அமாவாசை நாட்களில் ஏராளமான மக்கள் பலி தர்ப்பணம் செய்ய கூடுகின்றனர். அமாவாசை நாளன்று நடுநிசியில் நடக்கும் ஹோமங்களில் மிளகாய், சுக்கு, வசம்பு கலந்த உணவு பலிபூஜைக்கு இடப்படுது.



அலுவலகம் காலை 4:30 க்கு திறந்திடுறாங்க பலி, திலஹோமம், அர்ச்சனை, ப்ரசாதம் ன்னு ஒவ்வொன்றுக்கும் தனித்தனி டோக்கன். பலி ன்னா ஆடு மாடு உயிர்வதை இல்லை பித்ரு தர்ப்பணம். நான்கிற்கும் சேர்த்து டோக்கன் வாங்க வேண்டும். டோக்கன் வாங்கும் போதே இறந்தவரின் இறந்த திதி  (நட்சத்திரம்) கேட்கிறார்கள். தெரியாவிட்டால் பகவானின் நட்சத்திரமான திருவோணம் நட்சத்திரம்  வைத்து தர்பணம் செய்கின்றனர்.  கேரள முறைப்படி வேஷ்டி கட்டிக்கொண்டும், சட்டையை கழட்டி கொண்டும்தான் பலிகர்ம பூஜை செய்யனும். இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்கு அவர்களின் பெயர் சொல்லி ஹோமத்தில் எள்ளு கலந்து தெளிக்கப்படுகிறது. இந்த திலஹோமம் விசஷேசமாக செய்யப்படுது பலிகர்மம்  காலை 6.30 முதல்  10.00 வரையும், திலஹோமம் 6.30 முதல் 10.30 வரையும் செய்யுறாங்க.  
ஆடி, தை,மற்றும்  மகாளய அமாவாசை நாட்களிலும், மாத அமாவாசை நாட்களிலும் பக்தர்கள் பிதுர் தர்ப்பணம் கொடுக்க பெருமளவில் இங்கு கூடுகின்றனர். பரசுராமர் ஜெயந்தியும் விசேஷமா  கொண்டாடுறாங்க .

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திருக்கோவில் நடை திறந்திருக்கும் மிகவும் பழமை வாய்ந்த கோவில்ன்றதால கேரள தொல்லியல் துறை இதை பராமரிக்கிறாங்க. கேரளா சட்டப்படி புராதான கோவிகளில் உள்பக்கம்மோ இல்ல மூலவரையோ போட்டோ எடுக்க அனுமதி கிடையாது. அதனால சில உள்பக்க படங்கள் தினமலர் பக்திமலர் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது நாங்களும் கோவிலுக்கு சென்று பூஜைகளையும் முடித்து சாமிக் கும்பிட்டுட்டு திருப்தியாக வெளியேறினோம்.

நம் முன்னோர்களுக்கு அவர்கள் இறந்தப்பின் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று புண்ணிய நதிகளுக்கு போய் தர்ப்பனம் கொடுப்பது. இப்படி கடமைக்கு கொடுப்பதை விட நம் வீட்டில் இருக்கும் நம் பெத்தவங்க, அவங்களை பெத்தவங்களை முதுமையில் ஒதுக்கி விடாம, வயிறார உணவும். அன்பான வார்த்தைகளும், அக்கறையான கவனிப்பும் கொடுப்பதே நம்மோட கடமை. நமக்கு பின் வரும் நம் தலைமுறையும் நல்லா இருக்குறதோட நமக்கு வயசானப் பின் நம்மை நல்லப்படியா கவனிச்சுக்கும்.

அடுத்த வெள்ளிக்கிழமை வேற ஒரு கோவிலுக்கு போய் புண்ணியம் தேடிக்கலாம். நன்றி! வணக்கம்!!

No comments:

Post a Comment