For Read Your Language click Translate

22 June 2014

தேவப்பிரசன்னம் என்றால் என்ன ?

தேவப்பிரசன்னம்

-இறைவனின் வயர்லெஸ்

ஆன்மீகவாதிகள் இறைவனின் செயல்நிலையை ஐந்தாக வகைப்படுத்தலாம் என்கிறார்கள். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என இந்த ஐந்து நிலைகளும் ஐந்து பிராண ரூபங்களாக வெளிப்படுகிறது.

ஐவகை இறைச்செயலை புரிந்து கொள்ள நாம் இயல்பு வாழ்க்கையின் ஓர் உதாரணத்தை காணலாம். குழந்தையின் விளையாட்டுக்கு தேவையாக ஒரு வீடியோ கேம் கருவியை தந்தை வாங்கி வருகிறார். இது படைத்தல். அந்த கருவி பலர் கை பட்டு கெட்டுவிடாமல் இருக்கவும் அது தேவையான பொழுது பயன்படுத்தவும் ஒரு பெட்டியில் போட்டு தொலைக்காட்சி அலமாரியில் வைக்கிறார். இது காத்தல். குழந்தை விடியோ கேம் விளையாட சொல்லி கொடுத்தும், குழந்தைக்கு தேவையான பொழுது அக்கருவியை கொடுப்பதும் அருளல்.

பள்ளி தேர்வு நேரத்தில் பாடம் படிக்காமல் குழந்தை விடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தால் அந்த விடியோ கேம் பெட்டியை குழந்தை கண்களுக்கு எளிதில் கிடைக்காத அளவில் வைத்துவிடுவார். இது மறைத்தல்.

அதிகம் பயன்படுத்தியதன் விளைவாக அந்த விடியோ கேம் பழுதானால் அதை வீசிவிட்டு மற்றொரு பொருளை வாங்குவார். இது அழித்தல் என வகைப்படுத்தலாம்.

நம் உடலை கொடுத்த தந்தையே ஐவகை தொழிலை செய்யும் பொழுது இந்த பிரபஞ்சத்தின் தந்தை ஐவகை தொழிலை எப்படி சிறப்பாக செய்வார் என யோசித்துப்பாருங்கள்.

இறையருளில் கருணையால் நமக்கு பல்வேறு கலைகளும் அறிவியலும் அருளப்பெற்றோம். அதைக்கொண்டு நம் வாழ்க்கையின் ஆதாரத்தை உயர்த்தவும் பல்வேறு ஆன்மீக நிலைக்கு மாற்றம் அடையவும் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதே இயற்கையின் நியதியாக இருக்கிறது.

அதற்கு மாறாக நம் சுயநலத்திற்கு பயன்படுத்தும் பொழுது இறையருளால் கிடைக்கப்பெற்ற ஆற்றல் நமக்கு மறைக்கப்படுகிறது. இக்கருத்துக்கு பல்வேறு உதாரணம் கூறலாம். ஆனாலும் தற்காலத்திற்கு பொருந்தும் உதாரணம் தேவ ப்ரசன்னம்..!

தேவ ப்ரசன்னம் என்றால் என்ன என கேட்டால் ஜனநாயகத்திற்கு விளக்கம் கூறுவது போல இறைவனால் இறைவனுக்காக இறைநிலையிலிருந்து மனிதனுடன் உறவாட தோற்றுவிக்கப்பட்டது தேவ ப்ரசனம் என கூறலாம்.

தேவ ப்ரசனம் என்ற இந்த வடமொழி சொல்லுக்கு தெய்வீக ஆருடம் என தமிழ் செய்யலாம்.

பிற ஆருட முறைகளில் ஜோதிடர் பலன் கூறினால் தெய்வீக ஆருடத்தில் தெய்வமே பலன் கூறும். அப்படி பட்ட தெய்வீக ஆருட முறையான தேவ ப்ரசன்னத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

முன்பு ஒரு காலத்தில் படைக்கப்பட்டு, இறைவனால் அருளப்பட்டு, ரிஷிகளால் காகப்பட்ட இந்த தெய்வீக முறை பலரின் கைகளில் மாட்டி மறைந்து கிடைக்கிறது. அதை அழியவிடக் கூடாது என்பதற்காகவே இந்த கட்டுரை..


தேவப்பிரசன்னம் - பகுதி 2
தேவப்பிரசன்னம் என்பதில் இரண்டு வார்த்தைகள் உண்டு. முதல் வார்த்தை தேவம் மற்றது ப்ரசன்னம். தேவம் என்றால் தெய்வீகம் என அர்த்தப்படுத்தலாம். தெய்வீகம் என்ற சொல்லை விளக்குவதை விட உணர்ந்தால் மட்டுமே புரியும். ப்ரசன்னம் என்ற வார்த்தையை விளக்குவது எளிது.

ப்ரசன்ன என்ற வடமொழி சொல்லுக்கு கேள்வி என அர்த்தம். விடை தெரிய முற்படும் கேள்விக்கு ப்ரசன்ன என மொழி பெயர்க்கலாம். வேதத்தில் உள்ள ஒரு உபநிஷத்தின் பெயர் ப்ரசன்ன உபநிஷத். கேள்விகளால் தூண்டப்பட்டு இறை உண்மை விளக்கப்படுவதால் உபநிஷத் இப்பெயர் பெற்றது.

ஒருவர் தன் வாழ்வில் குழப்பத்துடன் நம் முன் வரும் பொழுது “என்னப்பா உனக்கு பிரச்சனை” என பேச்சு வழக்கில் கேட்பார்கள் அல்லவா? அதுபோல வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை ஜோதிடர்களிடம் கூறும் பொழுது அக்கேள்வி கேட்ட நேரத்தில் இருக்கும் கிரகங்களை கொண்டு பலன் சொல்லும் ஜோதிட சூட்சமத்திற்கு பிரசன்னம் என பெயர்.

பிறந்த நேரம் கொண்டு ஜாதகம் கணித்து வாழ்க்கையின் அனைத்து பலன்கள் பார்ப்பது போல இல்லாமல், ஒரு கேள்வி அக்கேள்வி கேட்ட நேரத்தில் இருக்கும் கிரகத்தை வைத்து ஒரு ஜாதகம் பார்ப்பது என்பதே ப்ரசன்ன ஜோதிடம் என்பதாகும்.

ஒரு கேள்விக்கு ஒரு ஜாதகம் என்றேன் அல்லவா? அடுத்த கேள்வி கேட்கும் பொழுது முன்பு இருந்த ஜாதகத்தை விட்டு புதிய கேள்வி கேட்ட நேரத்தில் மீண்டும் ஜாதகம் கணிப்பார்கள். ஆக கேள்வி வர வர ஜாதகம் மாறும்..!

பிறந்த நேரத்தை கொடுத்தாலே ஜாதகம் கணித்து பதில் சொல்லலாமே ஏன் ஒவ்வொரு கேள்விக்கு ஜாதகம் போட வேண்டும் என உங்களுக்கு தோன்றலாம். வெளிப்படையாக கூறவேண்டுமானால் அனைத்து கேள்விக்கும் பிறப்பு ஜாதகத்தில் பலன் கூற முடியாது. ஆம் இது முற்றிலும் உண்மை. உதாரணம் கூறுகிறேன் கேளுங்கள்.

நான் வீடு வாங்குவேனா என கேட்டால் பிறப்பு ஜாதகத்தில் கூறிவிடலாம். ஆனால் நான் கும்பகோணத்தில் வாங்குவேனா இல்லை கோளப்பாக்கத்தில் வாங்குவேனா என கேட்டால் ப்ரசன்னம் தான் ஒரே வழி.

எனக்கு பதவி உயர்வு கிடைக்குமா என கேட்டால் பிறப்பு ஜாதகம் போதும், இதுவே எனக்கு பதவி உயர்வு உதவி மேலாளராகவா அல்லது கிளை மேலாளராகவா என கேட்டால் பிறப்பு ஜாதகம் வழி கூறாது. பிரசன்ன ரீதியாகவே பார்க்க வேண்டும்.

இதற்கெல்லாம் மேலே கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றிப்பெறும் என கேள்வி எழுந்தால் இரு அணியில் விளையாடும் 22 நபர்களின் ஜாதகத்தை கணித்தா பலன் கூற முடியும்? அவ்வாறு செய்தால் மேட்சே முடிந்துவிடும். இதெற்கெல்லாம் பயன்படுவது பிரசன்ன ஜோதிடமே ஆகும்.

இன்னும் எளிமையாக கூற வேண்டுமானால் பிரசன்ன ஜோதிடத்தில் கூற முடியாததே எதுவும் இல்லை, அனைத்துக்கும் ஜோதிட பலன் கூற முடியும்.

பிறப்பு ஜாதகத்தில் பிறந்த நேரம் தவறாக இருக்கலாம். நமக்கும் துல்லியமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் பிரசன்னம் என்பது நீங்கள் ஜோதிடரிடம் கேள்வி கேட்கும் நேரம் என்பதால் இந்த நேரத்தை துல்லியமாக கூற முடியும். அதனால் பலனும் துல்லியமாக வரும்.

மின்சாரம் எப்பொழுது வரும்? கையில் மறைத்து வைக்கப்பட்ட பொருள் என்ன? நாணயத்தை சுண்டினால் தலை விழுமா பூவா? இவை எல்லாம் பிரசன்னத்தில் முன்பே கூற முடியும். அதுவும் பொதுவாக இல்லை. மிக மிக துல்லியமாக, மைக்ரோ அளவில் கூற முடியும்.

பிரசன்ன ஜோதிடம் பல ஜோதிடர்களுக்கு தெரியாது. இதனால் ஜோதிடத்தில் முழுமை பெறாமல் இருக்கிறார்கள். கேரள ஜோதிடம் புகழ்பெற்று இருப்பதற்கு காரணம் அவர்களுக்கு பிரசன்ன ஜோதிடம் மட்டும் தான் தெரியும்...!

பிரசன்ன ஜோதிடத்தின் துல்லியம் வேறு எந்த ஜோதிட முறைகளிலும் கிடையாது. பராசரர், வராஹ மிஹிரர், காளி தாசர் இவர்கள் எல்லாம் பிரசன்ன ஜோதிடத்தில் திறன்மிகுந்தவர்களாக இருந்தவர்கள்.

இப்படிப்பட்ட மிக சக்தி வாய்ந்த பிரசன்ன ஜோதிடத்துடன் இறை சக்தி இணைந்தால் அதன் பெயர் தேவப்பிரசன்னம்...!

தேவப்பிரசன்னம் எப்படி பார்க்கப்படுகிறது?
தேவப்பிரசன்னம் பகுதி 3
தென்னிந்தியாவில் கேரள கட்டுமான முறைக்கும் தமிழக முறைக்கும் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்திருப்பீர்கள். கோவில்களின் கூறை தமிழகத்தில் கற்களால் கட்டப்பட்டால் கேரளாவில் ஓடு கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். பூஜை விதிகள் ஒன்றாக இருந்தாலும் ஆகமம் என்ற நிலை கேரளாவில் வேறு தமிழக கோவில்களில் வேறாக அமையும்.

இதற்கு காரணம் பரசுராமர் கேரளாவை உருவாக்கி அதன் பூஜா முறைகளை நிர்ணயம் செய்தார் என புராணங்கள் கூறுகிறது. அவ்வாறு நிர்ணயம் செய்யும் பொழுது இதற்கு முன் இருக்கும் செயல் முறைகளில் சில மாற்றங்கள் செய்தார். பிற்காலத்தில் பூஜா முறைகளில் சந்தேகம் வந்தாலோ அல்லது கோவிலின் இறை நிலை அமைப்பை மேம்படுத்துவதற்கு ஆலோசனை தேவைப்பட்டால் யாரிடம் கேட்பது?

இறைவனிடத்திலேயே கேட்டுக்கொண்டால் பிரச்சனை தீர்ந்தது அல்லவா? இறைவனுடன் ஐம்புலன் கொண்டு பேசுவது என்பது அனைவருக்கும் சாத்தியம் அல்ல. மேலும் ஒருவர் நான் இறைவனிடம் பேசிவிட்டேன் இப்படித்தான் செய்யச்சொன்னார் என பொய் கூறவும் வாய்ப்பு உண்டு.

இதனால் இறைவனுடன் பாமரனும் உரையாட பரசுராமரால் ஊக்குவிக்கப்பட்ட முறையே தேவப்பிரசன்னம்..!

கோயில் நடை முறைகளில் இறைவனின் ஆற்றல் அங்கே நிலை நிறுத்தப்படுகிறது. இறையாற்றல் எல்லா இடத்திலும் இருந்தாலும், வழிபாட்டு ஸ்தலங்களில் முழுமையாக குவிக்கப்பட்டு மக்கள் முழுமையாக உள்வாங்கும் தன்மையில் அமைக்கப்பட்டது.

இவ்வாறு மக்கள் உள்வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது அங்கே நிறுவப்பட்டுள்ள இறையாற்றல் முழுமையாக குவிக்கப்படாமல் இருந்தாலோ கோயில் இருந்து பிரயோஜனம் இல்லை அல்லவா? அச்சூழலில் தேவப்பிரசன்னம் பார்க்கப்பட்டு இறையாற்றல் நிலை நிறுத்த என்ன செய்ய வேண்டும் ? ஏதேனும் யாகங்கள் அல்லது மந்திர ஜபம் செய்ய வேண்டுமா என முடிவு செய்யப்படும்.

கேரளக் கோவில்களில் தெய்வீகத்தன்மை நிறைந்திருக்க இதுவும் ஒரு முக்கியக் காரணம் ஆகும்.

கோயில் திருவிழாவிற்கு முன் ஒவ்வொரு வருடமும் தேவப்பிரசன்னம் பார்க்கும் முறை வழக்கத்தில் உண்டு. இன்றும் பல கோவில்களில் பார்க்கப்படுகிறது. தேவப்பிரசன்னம் மூலம் ஜோதிடர்கள் பல்வேறு விஷயங்களை மக்களுக்கு இறையாற்றல் மூலமாக கணித்து சொல்லி இருக்கிறார்கள்.

தேவப்ரசன்னத்தின் தன்மையை உணர ஓர் உண்மை சம்பவத்தை கூறுகிறேன். தமிழக கேரளா எல்லையில் உள்ள ஒரு பிரபல கோவிலில் விசித்திரமான விஷயம் நடந்து கொண்டிருந்தது. அங்கே திருவிழாவிற்கு முன் கொடி ஏற்றம் நடைபெறும் சமயம் கொடி ஏற்றுபவர் சுருண்டு விழுந்து இறந்துவிடுவார்...!

இதனால் திருவிழா நடக்காமல் தடைபடும். அடுத்த சிலவருடம் கழித்து மீண்டும் முயற்சி செய்வார்கள். அவ்வாறே கொடி ஏற்றுபவர் இறந்துவிடுவார். ஒன்று அல்ல இரண்டு அல்ல நான்கு மரணம் பார்த்த பிறகு அந்த கோவிலுக்குள் செல்லவே அனைவரும் பயந்து ஒதுங்கினார்கள்.

பதினைந்து வருடங்களுக்கு பிறகு அந்த ஊர் மக்கள் மீண்டும் திருவிழா கொண்டாட முன் வந்தார்கள். அதற்கு முன் சிலரின் வழிகாட்டுதலில் தேவப்பிரசன்னம் பார்த்துவிடுவது நல்லது என முடிவு செய்தார்கள். தெய்வம் தங்கள் மேல் கோபமாக இருக்கிறது போல என நினைத்து அதற்கு பிராயச்சித்தம் என்ன என தெரிந்துகொள்ளவும் ஆர்வமாய் இருந்தார்கள்.

தேவப்பிரசன்னம் பார்க்கும் நாளும் வந்தது. தேவப்பிரசன்னம் பார்த்து விட்டு அந்த ஜோதிடர்கள் குழு தலைவர் சொன்னார் “ அடுத்த மாதம் திருவிழா வைக்கலாம். நானே கொடி ஏற்றுகிறேன்..!”

கிராம மக்கள் திகைத்தார்கள். உங்களை போல....
தேவப்பிரசன்னம் பகுதி 4
“அடுத்த மாதம் திருவிழா வைக்கலாம். நானே கொடி ஏற்றுகிறேன்..!” என அந்த ஜோதிடர் கூறியவுடன் ஊர் மக்கள் திகைத்தார்கள்.

நீங்கள் வெளியூரை சேர்ந்தவர் கொடி ஏற்றும் பொழுது ஏதேனும் விபரீதம் நடந்தால் எங்கள் ஊருக்கு அது அவப்பெயராக ஆகிவிடும். மேலும் சாஸ்திரம் கற்ற உங்களுக்கு விபரீதம் நடப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என ஊர் முக்கியஸ்தர்கள் கூறினார்கள்.

“நானாக இம்முடிவை எடுக்கவில்லை. ஜோதிட சாஸ்திரத்தை பயன்படுத்தியே நான் இந்த முடிவுக்கு வந்தேன். மேலும் இறைவனின் சன்னிதியில் நடக்கும் இறப்புக்கு ஒரு விடையை நாம் கண்டறிய வேண்டும். என்னை கொடியேற்ற அனுமதியுங்கள்” என ஜோதிடர் கூறினார்.

திருவிழா கொடியேற்றும் நாளும் வந்தது. கோவில் புதுபொலிவுடன் காட்சியளிக்கப்பட்டது. ஊர் மக்கள் பக்தியுடனும் ஒருவித பய உணர்வுடன் குழுமி இருந்தனர். கோவிலின் உள்ளே கொடி பூஜை செய்யப்பட்டது. செண்டை மேழம் முழுங்க, துந்துபிகளும் கொம்பும் ஒலிக்க கொடி கோவிலின் பலிபீடம் அருகே கொண்டு வரப்பட்டது.
கொடியேற்றும் தருணம் வந்தது. மேழம் உச்ச நிலையில் வாசிக்கப்பட்டது. கொடிமரத்தையும் கொடியையும் ஜோதிடர் விழுந்து வணங்கினார்.

வணங்கி எழுந்தவர் கொடியேற்றாமல் திடிரென செண்டை மேழம் வாசிக்கும் குழுவில் இருந்த ஒரு முதியவரின் இரு கைகளை பிடித்துக் கொண்டார். மங்கள ஒலியுடன் இருந்த கோவில் திடீரென நிசப்தமாகியது.

என்ன நடக்கிறது என மக்கள் புரியாமல் பார்க்க.. ஜோதிடர் அந்த முதியவரை பார்த்து கேட்டார், “ஏன் இப்படி செய்கிறீகள்? இறைவன் சன்னிதிக்கு முன் ஏன் இந்த விபரீதம்? உண்மையை இறைவன் முன்னால் கூறுங்கள்”

இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த முதியவர் பெருங்குரல் எடுத்து அழுதார். சில நிமிடங்களுக்கு பிறகு அந்த முதியவர் உண்மையை கூறத் துவங்கினார்.
“இக்கோவிலில் சிறுவயது முதல் நான் மேழம் வாசிக்கிறேன். என் பன்னிரெண்டு வயது முதல் செண்டை மேழம் கற்று வந்தேன். செண்டை தாளத்தில் ஒருவிதான வாசிப்பு முறையை என் குருவிடம் கற்றேன். . செண்டை வாசிக்கும் பொழுது எந்த நிகழ்ச்சிக்கு வாசிக்கிறோமோ அந்த நிகழ்ச்சியின் தலைவருக்கு (கர்த்தா) இரத்த நாளங்களில் ஒருவித தாளம் ஏற்பட்டு இறுக்கம் அடைந்து முடிவில் இருதயம் செயல் இழந்து இறந்து விடுவார். இசையின் மூலம் தற்காப்பு கலையை ரகசிய பயிற்சியாக கற்றுக்கொண்டேன். என் சிறிய வயதில் அதை சோதிக்க எண்ணி இக்கோவில் கொடியேற்றத்தில் பயன்படுத்தினேன். என் வாசிப்பால் ஒரு விளைவு ஏற்படுவதை கண்டு எனக்குள் ஒருவித பெருமிதம் அடைந்தேன்.

யாரும் இதை கண்டு பிடிக்க முடியாது என்ற எண்ணத்தில் மீண்டும் மீண்டும் இங்கே செய்து பார்த்தேன். என் வாசிப்பே பலரது மரணத்திற்கு காரணமாக இருந்தது. இனி இதுபோல செய்ய மாட்டேன், இனிவரும் காலத்தில் யாருக்கும் இம்முறையை கற்றுக்கொடுக்க மாட்டேன். இறைவனும் ஊர்மக்களும் என்னை மன்னிக்க வேண்டும். ” எனக் கூறு ஊர் மக்கள் முன்னிலையில் தரையில் விழுந்து வணங்கினார்.

அவரை தவிர்த்து பிறர் வாசிக்க, கொடியேற்றப்பட்டது. திருவிழா துவங்கியது. ஜோதிடரின் திறமையை அனைவரும் பாராட்டினார்கள். இது எப்படி சாத்தியம் என வியப்புடன் ஜோதிடரிடம் கேட்டார்கள்.

“தேவப்பிரசன்னம் வைக்கும் பொழுது சத்ருஸ்தானம் மற்றும் அபஸ்தானம் என்னும் இடத்தில் மாந்தியுடன் சனி என்ற கிரகம் அமர்ந்து கேடு பலனை அளித்து வந்தது. சனி அமர்ந்த ராசி காற்று ராசி இவைகளை முடிவு செய்து பார்க்கும் பொழுது முதிய வயதுடைய(சனி) மேழம்(காற்று-ஒலி) வாசிக்கும் ஒருவரால் அமங்கலம் ஏற்படுகிறது என்பதை கண்டுகொண்டேன். உதய லக்னத்திற்கு சனி நான்காம் இடத்தில் இருந்தது என்பதையும் குறித்துக் கொண்டேன்.

கொடியேற்றும் நாளில் பலிபீடத்தின் அருகே நின்று வாசித்தவர்களில் ஒரு முதியவர் நான்காவது நபராக நின்று வாசித்துக் கொண்டிருந்தார். அவர் இச்செயலுக்கு காரணம் என பிரசன்ன ரீதியாக முடிவு செய்து கண்டறிந்தேன்” என்றார்.

பதினைந்து வருடத்திற்கு பிறகு ஊர்மக்கள் மகிழ்ச்சியுடன் திருவிழாவை கொண்டாடினார்கள்.

தேவப்பிரசன்னம் என்பது ஒரே ஒரு ஜோதிடர் மட்டும் பார்க்கப்படும் ஜோதிடம் அல்ல. குறைந்தபட்சம் ஐந்து ஜோதிடர்களாவது இருப்பார்கள். மேலும் அந்த ஜோதிடர்கள் எல்லாம் மிகப்பெரிய ஜோதிடர்களாகவும் சாஸ்திரம் நன்கு கற்றவர்களாகவும் இருப்பார்கள். இக்குழு ஜோதிடர்கள் தவிர அவர்களுக்கு உதவியாளர்கள், அவ்வுதவியாளர்களுக்கு உதவியாளர்கள் என ஜோதிட பட்டாளமே இணைந்து ஒரு கோவிலுக்கு தேவப்பிரசன்னம் பார்க்கும்.

இக்குழுவுக்கு ஒருவரை தலைவராக தேர்ந்தெடுத்து அவர் முன்னிலையில் பிரசன்ன ஜாதகத்தில் கண்ட விஷயங்களை நான்கு நாட்கள் விவாதிப்பார்கள் பிறகே கருத்துக்களை வெளியிடுவார்கள்.

மேற்சொன்ன சம்பவத்தின் பொழுது நானும் ஜோதிடக்குழுவில் ஒரு நபராக இருக்கும் அனுபவம் வாய்க்கப்பெற்றேன். தேவப்பிரசன்னம் என்னும் சாஸ்திரத்தை கற்றும் அதை அனுபவ ரீதியாக உணர்ந்தும் கொண்டதாலேயே உங்களுடன் இக்கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முடிகிறது.

சரி...தேவப்பிரசன்னம் எப்படி பார்க்கப்படுகிறது? படிபடியாக விளக்குகிறேன்..

தேவப்பிரசன்னம் பகுதி 5
தேவப்பிரசன்னம் பார்க்கும் முறை மிகவும் வித்தியாசமானது. பல்வேறு வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் தழுவி பார்க்கப்படும் ஜோதிட முறையாகும். சாதாரண மனிதனுக்கே ஜோதிடம் பார்க்க ஜோதிடர் எத்தனையோ சூத்திரங்களை பயன்படுத்த வேண்டி இருக்கிறது அல்லவா? அப்படிப் பார்த்தால் கடவுளுக்கே ஜோதிடம் பார்க்க எவ்வளவு ஆற்றலுடன் பார்க்க வேண்டும் என யோசித்துப் பாருங்கள்.

ஜோதிடரிடம் நாம் ஆருடம் பார்க்க செல்லும் பொழுது நாம் வரும் நேரத்தை கொண்டு அவர் கிரகங்களை கணிப்பார். நாம் அவரின் இடம் விட்டு அகன்றதும் ஜோதிடர் நம்மை பற்றிய விஷயங்களை விட்டு அடுத்தவருக்கு ஜோதிடர் பார்ப்பார்.

ஆனால் தேவப்பிரசன்னம் பார்க்கும் ஜோதிடர்கள் ஜோதிடத்தை கோவில்களில் வைத்து தான் பார்க்க வேண்டும் என்பதி நியதி. எளிமையாக சொல்லுவதானால் மனிதன் ஜோதிடரை தேடி செல்ல வேண்டும், தேவப்பிரசன்னத்தில் ஜோதிடர் கடவுளை தேடிப்போக வேண்டும்...!

கோவிலை நோக்கி பிரசன்னம் பார்க்க வீட்டை விட்டு கிளம்பும் நேரம், அச்சமயம் நடக்கும் சம்பவங்கள் (நிமித்தம்) துவங்கி கோவிலில் பிரசன்னம் பார்த்துவிட்டு, வீடு வந்து சேரும் வரை ஜோதிடர் அனைத்தையும் குறிப்பு எடுத்துக்கொள்வார். அவர் வீடு முதல் வீடு வரை நடந்த நிகழ்வுகள் கோவிலில் ஏற்பட்ட ஆருடம் இவை அனைத்தையும் ஒன்றினைத்து அடுத்த நாள் ஆய்வு செய்து முடிவு செய்வார்கள்.

இதில் மிக ஆச்சரியமான விஷயம் என்னவெனில் தேவப்பிரசன்னம் குழுவாகத்தான் பார்ப்பார்கள் என்றேன் அல்லவா? அவ்வாறு குழுவில் இருக்கும் அனைத்து ஜோதிடர்களும் வீடு முதல் வீடு வரை நிகழ்வுகளை கவனிப்பார்கள். வெவ்வேறு ஊரில் இருந்து வந்து செல்லும் ஜோதிடர்களுக்கு, அடுத்த நாள் அனைவரும் கூடி விவாதிக்கும் பொழுது எல்லோருக்கும் நடந்த சம்பவம் மிகச்சரியாக ஒன்று போலவே இருக்கும். அனைவரும் பார்த்தது, கேட்டது, பேசியது என ஏதோ புரோக்கிராம் செய்தது போல இருக்கும்...!

நிமித்த அடிப்படையில் அனைவருக்கும் ஒன்றுபோலவே இருப்பதை கொண்டு இயற்கை அனைவருக்கும் பொதுவாக ஏதோ ஒரு கருத்தை கூற விரும்புகிறது என கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளுவார்கள்.

கோவிலுக்கு செல்லும் பொழுது நடக்கும் நிகழ்வுகள் இறந்தகாலத்தையும், கோவிலில் கிடைக்கும் பிரசன்னம் நிகழ்காலத்தையும், கோவில் முதல் வீடு வரை வரும் நேரம் நடக்கும் நிகழ்வுகள் எதிர்காலத்தையும் குறிக்கும் என்பது தேவப்பிரசன்னத்தின் அடிப்படை சூத்திரமாகும்.

உதாரணமாக கோவிலுக்கும் செல்லும் நேரத்தில் அசிங்கமான அருவெறுப்பான விஷயங்களை காண நேர்ந்தால் கோவிலில் ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது அவமானங்கள் நடந்து உள்ளது என்று குறித்துக்கொள்வார்கள். கோவிலில் கிடைக்கும் பிரசன்னத்தின் விடை முன்பு நடந்த செயலால் தற்சமயம் இறைநிலை பாதிக்கப்பட்டு உள்ளதா அல்லது எவ்வாறு இருக்கிறது என்பதை உணர முடியும். பின்பு வீட்டிற்கு வரும் சூழல் நடக்கும் சம்பவங்கள் இனிவரும் காலத்தில் இறை நிலை கோவிலில் எவ்வாறு மேம்படுத்த முடியும் அல்லது நிலைபடுத்த முடியும் என்பதை காட்டும்.

தேவப்பிரசன்னம் பார்க்கும் நாள் பிறகு இரு நாட்கள் எடுத்துக்கொண்டு ஜோதிட குழு விவாதம் செய்யும். பிறகு அவர்கள் செய்த ஆய்வை பொதுமக்கள் முன்னிலையில் மட்டுமே வெளியிட வேண்டும் என்பது நியதி. கோவில் நிர்வாகத்திடமோ அல்லது கோவில் சார்ந்த ஆட்களிடமோ பிரசன்ன பலன்களை தனியே கூறக்கூடாது. அவர்களையும் பொதுமக்களுடன் நிற்க சொல்லியே கூற வேண்டும் என்பது தேவப்பிரசன்னம் கூறும் நியதியாகும்.

ஜோதிடர்கள் குழு கூறும் பலன்களை பொதுமக்களுக்குள் அமர்ந்திருக்கும் ஜோதிடம் தெரிந்தவர்கள் குறுக்கு விசாரணை செய்வார்கள். அதற்கு ஜோதிட குழு தக்க பதில் கூற வேண்டும்.

நாங்கள் தேவப்பிரசன்னமே பார்க்கும் ஆற்றல் கொண்டவர்கள் என ஆணவம் இல்லாமல், பொதுமக்கள் கேட்கும் கேள்விக்கு மிகப்பணிவுடன் பதில் கூற வேண்டும்.

லக்னத்தில் இவ்வாறு கிரகம் இருந்ததற்கு இன்ன பலன் என நீங்கள் கூறுகிறீர்கள் ஏன் இப்பலன் இவ்வாறு இருக்கக்கூடாது என ஒருவர் கேள்வி எழுப்பினால், ஏன் அவ்வாறு செயல்படாது என மிகவும் தன்மையாக விளக்க வேண்டும்.

உனக்கு ஜோதிடம் எந்த அளவு தெரியும்? இதையெல்லாம் கேள்வி என்று கேட்கிறாயா என அவர்களை கேட்கும் அதிகாரம் ஜோதிடர்களுக்கு இல்லை..! ஏன் என்றால் தேவப்பிரசன்னம் என்ற பணி செய்ய வந்தவர்களே தவிர அவர்கள் இறைவன் கிடையாதே..!

ஒரு முறை தேவப்பிரசன்னம் பார்த்த ஜோதிட குழு ஒரு தவறு செய்துவிட்டது. அத்தவறு மிகவும் முட்டாள் தனமானது. ஆனால் மனிதர்கள் தங்கள் மூளையால் கண்டுபிடிக்க முடியாத சிக்கல் கொண்டது..! ஜோதிடக்குழு பொதுமக்களின் முன்னிலையில் பலன் விளக்கும் பொழுது அதை ஒருவர் கண்டறிந்து ஜோதிடர்களை சரியாக்கினார்.

மனிதனால் கண்டறிய முடியாததை ஒருவர் கூறுகிறார் என்றால் அவர் வேறு யாராக இருக்க முடியும்?

தேவப்பிரசன்னம் - பகுதி 6
ஜாதக சக்கரத்தில் பன்னிரெண்டு வீடுகள் இருப்பது நீங்கள் பார்த்திருக்கலாம். மனிதனுக்கு பன்னிரெண்டு வீடுகளில் ஏற்படும் பலன்களை ஜோதிடர் ஆய்வு செய்வார். லக்னம், தனம், தைரியம், சுகம் என பல்வேறு தன்மைகளில் ஜோதிடம் மனித வாழ்க்கையை பன்னிரெண்டு வகையான அடிப்படையில் பிரிக்கிறது.

மனிதவாழ்க்கையை போலவே தேவப்பிரசன்னத்தில் பன்னிரெண்டு வீடுகள் கோவிலின் தன்மையை இவ்வாறு குறிக்கும்

முதல் வீடு - கோவிலில் இருக்கும் இறைவனின் தன்மை
இரண்டாம் வீடு - கோவிலின் பொருளாதர நிலை
மூன்றாம் வீடு - பிரசாதம் செய்பவர் அல்லது மடப்பள்ளி
நான்காம் வீடு - கோவிலுக்கு இருக்கும் சொத்துக்கள் மற்றும் அலங்கார பொருட்கள்
ஐந்தாம் வீடு - இறை அருள் இருக்கும் தன்மை (சாநித்யம்)
ஆறாம் வீடு - கோவிலில் நடக்கும் தவறான செயல்கள்.
ஏழாம் வீடு - பக்தர்கள், கோவிலில் வழிபடுபவர்கள்
எட்டாம் வீடு - கோவிலில் நடக்கும் திடீர்செயல்கள் மற்றும் அசுத்தம்
ஒன்பதாம் வீடு - கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்
பத்தாம் வீடு - கோவில் பூஜாரி, மேல் சாந்தி
பதினோராம் வீடு - கோவிலில் செய்ய வேண்டிய முன்னேற்றங்கள்
பன்னிரெண்டாம் வீடு - கோவிலில் இருக்கும் பழமையான பொருட்கள் மற்றும் பாரம்பரிய தன்மை

இக்கருத்துக்களை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் அமர்ந்திருக்கும் கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப பலன் கூறுவார்கள்.

சரி மனிதனுக்கு பார்க்க ஜாதகம் இருக்கும். இறைவனுக்கு எப்படி பார்ப்பது? இறைவனுக்கு ஜாதகம் கிடையாதே? அவன் பிறப்பும் இறப்பும் அற்ற நிலையில் இருப்பவன் ஆயிற்றே என உங்களுக்கு தோன்றலாம். அதனால் தான் பிறப்பு ஜாதகம் பார்க்காமல் பிரசன்ன முறையில் கணிக்கப்படுகிறது. அதனால் இதற்கு தேவப்பிரசன்னம் என்கிறோம்.

தேவப்பிரசன்னம் செய்ய முதலில் யாகங்கள் செய்து, ஜாதக சக்கரத்தை கோவிலின் வடக்கு பகுதியில் வரைந்து கொள்வார்கள். பிறகு இறைவனை ஜாதக சக்கரத்தின் மையத்தில் எழுந்தருளச் செய்வார்கள். அச்சமயம் கோவில் கருவறையை பூட்டிவிடுவார்கள். இறை ஆற்றல் ஜாதக சக்கரத்தில் இருக்கும் அதனால் கருவறையை மூடிவிடும் சம்ப்பிரதாயம் உண்டு.

ஓம் என ஒரு பக்கம் எழுதப்பட்ட தங்கத்தால் ஆன ஒரு காசு, சில பூக்கள் மற்றும் அக்‌ஷதை இவற்றை ஒரு குழந்தையின் கையில் அளிப்பார்கள். கூட்டத்தில் உள்ள 11 வயதுக்கு உட்பட்ட குழந்தையாக தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் கையில் கொடுத்து 12 ராசி கட்டங்களில் ஏதேனும் ஒரு ராசிகட்டத்தில் வைக்க சொல்லுவார்கள். மூன்று முறை ராசி கட்டத்தை வலம் வந்து அந்த குழந்தை எந்த ராசியில் கையில் உள்ள காசை
வைக்கிறதோ அதுவே லக்னம் என கொள்ளப்படும்.

காசு இருக்கும் ராசி முதல் வீடாக கொண்டு பண்ணிரண்டு ராசிகளின் பலன்களை கிரகிப்பார்கள். இச்செயலை ஒரு பல ஜோதிடர்கள் கொண்ட குழு செய்வார்கள்.இவ்வாறு ஒரு கோவிலில் ஜோதிடர்கள் தேவப்பிரசன்னம் பார்க்கும் பொழுது எட்டாம் இடத்தில் ராகு என்ற கிரகம் இருந்து, அந்த கிரகத்தை பத்தாம் வீட்டில் உள்ள கிரகத்துடன் தொடர்பு கொண்டதால் கோவிலில் அசுத்தம் நடைபெற்றுள்ளது என முடிவு செய்தார்கள்.

ராகு என்ற கிரகம் அமர்ந்து அது பெண் ராசியாக இருந்ததால் விதவை பெண் ஒருவரால் இவ்வகை அசுத்தம் நடைபெற்றிருக்கும் என்று முடிவு செய்து அதை பொதுமக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினார்கள். மேலும் கோவில் நிர்வாகிகள் இச்செயலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என்றும் இக்கூட்டத்தில் இருக்கும் விதவைப்பெண்கள் யாரேனும் இவ்வாறு அசுத்தம் செய்திருந்தால் மனம் உவந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

திடீரென அக்கூட்டத்திலிருந்து வந்த ஒருவர், ஜோதிடக்குழுவை பார்த்து. அது எப்படி நீங்கள் விதவை பெண்ணால் அசுத்தம் என கூற முடியும்? என கேட்டார். பார்க்க ஒரு சாதாரண குடியானவன் இப்படி கேள்வி கேட்டதும் குழம்பினார்கள் ஜோதிடர்கள். உங்களுக்கு ஜோதிடம் தெரியுமா என கேட்டனர்.

அந்த குடியானவர் சொன்னார் ,

“தேவனை நீ பார்க்காமலேயே தேவப்பிரசன்னம் சொல்லும் பொழுது, நான் ஏன் ஜோதிடம் பற்றி படிக்காமலேயே கேள்வி கேட்க கூடாது?”
தேவப்பிரசன்னம் - 7
கோபம், மோகம், தாபம் மற்றும் பொறாமை போன்ற குணங்கள் நம் இயற்கை இயல்பு இல்லை. எப்பொழுது ஒருவரின் அஹங்காரத்தை நீங்கள் அவமதிக்கிறீர்களோ அப்பொழுது கோபம் என்பது அஹங்காரத்தின் பதிலாக இருக்கும். அஹங்காரத்திற்கு எதிர்ப்பார்ப்பு கூடும் பொழுது மோகம் ஏற்படும். அஹங்காரத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிடில் தாபம் ஏற்படும். அஹங்காரம் தனக்கு கிடைத்ததை பிற அஹங்காரத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பொறாமை ஏற்படும். பார்த்தீர்களா இந்த அஹங்காரம் எத்தகை விளைவுகளை ஏற்படுத்துகிறது? இயல்பில் ஆனந்தமான நமக்கு இந்த அஹங்காரத்தாலேயே குழப்பங்கள் கூடுகிறது.

தேவப்பிரசன்னம் பார்த்த ஜோதிடக்குழுவினர் ஆன்மீகத்தைவிட ஆணவம் அதிகமாக இருந்தது. தாங்கள் கணித்தவை தவறாகுமா என ஒரு மிதப்பு அவர்களிடம் இருந்தது. அந்த ஆணவக்கோட்டையின் அஸ்திவாரத்தை ஆட்டிப்பார்த்தார் அந்த பொதுநபர்.

“தேவனை நீ பார்க்காமலேயே தேவப்பிரசன்னம் சொல்லும் பொழுது, நான் ஏன் ஜோதிடம் பற்றி படிக்காமலேயே கேள்வி கேட்க கூடாது?” என கேள்வியை மட்டும் அவர் எழுப்பவில்லை.. ஜோதிடர்களின் ஆணவத்தையும் தட்டி எழுப்பிவிட்டார்.

தன் நிலையை மறந்து அந்த ஜோதிட குழு தலைவர், “அதிகப்பிரசங்கி தனத்திற்கு இது இடமல்ல. சாஸ்திரங்கள் பயின்ற எங்களுக்கு உங்களை போன்றவர்களிடம் விவாதம் செய்ய நேரம் இல்லை” என கூறி முகத்தை திருப்பிக்கொண்டார்.

“சாஸ்திரம் உங்களுக்குள் சென்றதும் உங்களையே மறந்துவிடும் நீங்கள்.. எங்களை நினைவு வைத்துக்கொள்ள முடியுமா?”என கூறிய அந்த நபர் பின்பு தொடர்ந்து பேசத் துவங்கினார்....

“பிரசன்னத்தில் 8ஆம் வீட்டில் ராகு அமர்ந்து 10ஆம் வீட்டுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. இதை எப்படி விதவைப்பெண் அசுத்தம் செய்தாள் என கணித்தீர்கள்.? 10ஆம் வீடு தலைமை பூஜாரியை (மேல்சாந்தி) குறிக்கும். அப்படியானால் அவர் 8ஆம் வீட்டில் உள்ள ராகுவுடன் தொடர்பு கொள்கிறார். ஆக ராகு என்ற விதவைக்கு களங்கம் மேல் சாந்தி தான் செய்திருக்க வேண்டும். நீங்கள் மாற்றி சொல்லுகிறீர்கள். சில நாட்களுக்கு முன் சூரிய உதய கால பூஜை முடிந்ததும் ஒரு விதவை பெண் மேல் சாந்தியிடம் அர்ச்சனை செய்ய வந்தார். காலையில் விதவையை சந்திப்பதா? என நினைத்து அவரை அவமதித்துவிட்டார் மேல்சாந்தி. இச்செயலே பிரசன்னத்தில் வெளிப்பட்டிருக்கிறது.இறைவன் முன் அனைவரும் சமம் அல்லவா? மேல் சாந்தியிடம் இதைப்பற்றி விசாரியுங்கள்” என ஒரே மூச்சில் முழங்கிவிட்டு அசுவாசமானார்.

அனைவரின் பார்வையும் மேல்சாந்தி மேல் திரும்பியது. உடல் நடுங்க நின்று கொண்டிருந்தவர் ஜோதிட குழுவினரின் முன் கைகூப்பி நின்றார். அவரின் தலை கவிழ்ப்பு குற்றத்தை ஒப்புக்கொண்டதை காட்டியது.

தங்களுக்கு தெரியாத விஷயத்தை அற்புதமாக சுட்டிகாட்டியவரை நோக்கி திரும்பினார் அங்கே வெற்றிடமே இருந்தது. அனைவரும் மெய் சிலிர்த்து போனார்கள்.

விதவைப் பெண்ணை அவமதித்த செயலுக்கு பிராயச்சித்தமாக அப்பெண்ணை கோவில் தலைவராக்கி தினமும் அவளுக்கே முதல் மரியாதை செய்தார்கள்.

ஜோதிடர்களும் தங்கள் தவறு செய்தால் தலையில் அடித்து சொல்லித்தர ஒருவர் இருக்கிறார் என மனம் மகிழ்ந்தார்கள்...

தேவப்பிரசன்னம் என்பது இறைவனுடன் உறவாடும் ஒரு செயல் என்பதால் தேவப்பிரசன்னம் பார்க்கும் ஒவ்வொரு ஷணமும் அதியம் நிறைந்தது. இக்கருத்தை அனுபவித்தாலே புரிந்துகொள்ள முடியும்.

சாமீ...இவ்வளவு அதிசயம்னு சொல்றீங்களே அப்ப சபரிமலையில நடந்த தேவப்பிரசன்னம்... திருவனந்தபுரத்தில நடந்த தேவப்பிரசன்னம் பத்தி சொல்லுங்க... அது எல்லாம் உண்மையா?

ஹீ..ஹி...ஹீ...

தேவ பிரசன்னம் - பகுதி 8
கடவுளுடன் நேரடியாக மனிதன் உரையாட தேவப்பிரசன்னம் ஓர் வழி என முன்பு கூறினேன். இறைவனே நேரடியாக கோவில் எத்தகைய சூழல் அமைக்க வேண்டும் என சொல்லுவது மிகவும் சிறப்பல்லவா? தமிழக கோவில்களில் ஆகம சாஸ்திரம் என்று கோவில் நிர்மாணம் செய்யும் சட்டம் உண்டு. இச்சாஸ்திரம் தற்சமய தமிழக கோவில்களில் 30 சதவீதம் கூட கடைபிடிப்பார்கள் என உறுதியாக சொல்ல முடியாது.

கேரள கோவில்களில் ஆகமம் வேலை செய்யாது. பரசுராமரின் வழி வந்தவர்கள் மந்திர, தந்திர பாதைகளில் செல்வதால் அவர்கள் ஜோதிட சாஸ்திரத்தை தேவப்பிரசன்னம் என்ற முறையில் பயன்படுத்துகிறார்கள். தேவப்பிரசன்னம் என்பதே ஒரு தாந்ரீக முறை தான்.

தாந்த்ரீக முறைகளில் எப்பொழுதும் ஒரு குறை இருக்கும். சராசரி மனிதன் உண்மையான தாந்த்ரீகரை கண்டாலும் போலியானவரை கண்டாலும் அவனுக்கு வித்தியாசம் தெரியாது. நம் ஆட்களுக்கு மோடி மஸ்தானும் தாந்த்ரீகன் தான், செய்வினை செய்பவனும் தாந்த்ரீகன் தான்- இவர்கள் இருவருமே தாந்த்ரீகர்கள் இல்லை என்பதே நமக்கு தெரியாது.

இதுபோலவே கோவிலில் பிரசன்னம் பார்ப்பவர்கள் எல்லோரையும் நாம் தேவப்பிரசன்னம் பார்ப்பவர்கள் என முடிவு செய்கிறோம்.

சபரி மலை மற்றும் பத்மநாப ஸ்வாமி கோவிலில் நடந்த பிரசன்னம் உண்மையா?

டிசம்பர் மாதம் சென்னையில் சங்கீத சீசன் நடைபெறும். அப்பொழுது பிரபலமாகாத சில பாடகர்கள் சபாக்களுக்கு தாங்களே காசு கொடுத்து அல்லது சிபாரிசு மூலம் கச்சேரி செய்வார்கள். இதனால் தங்களுக்கு புகழ் வெளிச்சம் கிட்டும் என்பது அவர்களின் எண்ணம். அப்படி செய்தாலும் திறமை இருப்பவனையே உலகம் பேசும். திறமையற்றவனை அத்தருணத்தில் பேசும் அப்புறம் உலகம் மறந்துவிடும்.

அதுபோலத்தான் சிலர் சிபாரிசின் பேரிலும், பணம் மூலமும் இக்கோவில்களில் பிரசன்னம் பார்த்தார்கள். அனைத்தும் வீணானது. கோவில் நிர்வாகத்தின் கோளாரால் வந்த வினை. தேவனுக்கு பிரசன்னம் பார்க்கச் சொன்னால் ஜெயமாலாவிற்கு பிரசன்னம் பார்க்கிறார்கள் நம் ஜோதிட மேதைகள்.ஒரு மாநில முதல்வருக்கு ஜோதிடம் பார்த்தவர் என்பதற்காக அவருக்கு தேவப்பிரசன்னம் பார்க்கும் அறிவு வந்துவிடுமா? கோவிலின் பெயரும், ஜோதிடரின் பெயரும் கெட்டது தான் மிச்சம். திருவனந்த புரத்திலும் கோவில்காரர்களின் முடிவே அங்கே தேவப்பிரசன்ன பலனாக கூறப்படுகிறது. நமக்கு தேவனா முக்கியம்? புதையல் தானே முக்கியம்...!

இவர்கள் செய்யும் தவறுகள் நீண்டு கொண்டே செல்லுகிறது... முடிவு இறைவனின் கையில்...

கேரளாவில் இன்றளவும் பல்வேறு இடங்களில் தேவப்பிரசன்னம் சிறப்பாக செயல்படுகிறது. பிரபலமான கோவில் என்றால் குருவாயூரை உதாரணமாக கூறலாம். அங்கே தேவப்பிரசன்னம் வைக்கப்பட்டால் அப்பலன்களை சொல்ல ஒரு திருமண மண்டபத்தை எடுத்து அதில் ஐநூறுக்கும் மேம்பட்ட ஜோதிடர்கள் கலந்து ஆலோசிப்பார்கள். நன்றாக ஜோதிடம் தெரிந்த ஆட்கள் அங்கே இருந்தாலே தலை வெடித்துவிடும். ஒவ்வொருவரும் சாஸ்திரத்தை கரும்பு சக்கை பிழிவதை போல பிழிந்து எடுப்பார்கள். இப்படி பட்ட நிகழ்வுகளை பார்த்து பழகி பங்கெடுத்தவர்களுக்கு தேவப்பிரசன்னம் என்ற பெயரில் போலியாக செய்பவர்களை கண்டால் என்ன தோன்றும்?

நம் சாஸ்திரங்களை இன்றும் நாம் இழந்துவிடவில்லை. வரும் காலத்தில் நம் சந்ததியினருக்கு வழங்க நாம் ஒரு சதவிகிதமேனும் முயல வேண்டும்.

ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்பில் தேவப்பிரசன்னம் மூலம் கோவிலின் ஆற்றலை மேம்படுத்தும் செயல் செய்துவருகிறோம். நீங்கள் சார்ந்த கோவில்களுக்கு ஏதேனும் தேவப்பிரசன்னம் மூலம் உதவி வேண்டுமானால் தொடர்புகொள்ளுங்கள். இறையாணையாக ஏற்று உதவுகிறோம்.

-பிரசன்னாகியது-

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அருமையான விளக்கம்....

    ReplyDelete