For Read Your Language click Translate

14 June 2014

குரு பெயர்ச்சிப் வழிபாடு


நவக்கிரகங்களில் மிக மிக உயர்ந்த சுபக்கிரகம் குரு;வியாழன்,பொன்னன்,பிரகஸ்பதி,அந்தணன் என்ற பல பெயர்கள் உண்டு;ஒருவரது பிறந்த ஜாதகத்தில் எட்டு கிரகங்கள்  பலம் இழந்திருந்து,குரு பகவான் மட்டும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தால் அவரது வாழ்க்கையில் எந்த ஒரு குறைவும் ஏற்படாது;ஒவ்வொரு நாளும் முன்னேற்றமே உண்டாகும்;அதே சமயம்,ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் ஆட்சி அல்லது உச்சம் பெற்று குருபகவான் மட்டும் வலுவிழந்திருந்தால் அவருக்கு வாழ்க்கை,வாழ்க்கையாக இராது.அவ்வளவு சுபக்கிரமாக குருபகவான் இருக்கிறார்.நவக்கிரகங்களில் சூரியனை விடவும் அதிகமான அளவு சுபத்தன்மையைத் தருபவர் குரு;



ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கும் போது பிறந்திருந்தால் அவர் தான் எப்போதும் கவலைப்படாதவராக இருப்பவர்;
ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் லக்னம் அல்லது லக்னாதிபதி அல்லது ராசியை குரு பார்க்கும் போது பிறந்திருந்தால் அவருக்கு ஆயுள் முழுவதும் குருவின் பாதுகாப்பும்,வழிகாட்டுதலும் உண்டு;இதனால்தான் குருபார்க்க கோடி குற்றம் விலகும் என்ற பழமொழி நம்மிடையே உருவானது;

ஜோதிடப்படி வருடக்கிரகங்கள் நான்கு;குரு,சனி,ராகு மற்றும் கேது;இவர்களில் குருவை மட்டுமே முழுச்சுபராக இருக்கிறார்;அதென்ன முழுச்சுபர்?


சனி நமது ராசிக்கு மறைவிடங்களான 3,6,12 ஆம் இடங்களைக் கடக்கும் போது அளவற்ற நன்மைகளைத் தருவார்;அதே சமயம் 1,2,4,7,8 ஆம் இடங்களைக் கடக்கும் போது நன்மைகள் நம்மை வந்து சேருவதைத் தடுக்கவும் செய்வார்;ராகு கேதுக்களும் இதே போலத்தான்;இவர்கள் மூவருமே நல்லவனுக்கு(நல்ல இடத்துக்கு வரும் போது கெட்டதையும்,கெட்ட இடத்துக்கு வரும்போது நல்லதையும்) நல்லவன்;கெட்டவனுக்கு கெட்டவன் என்ற விதத்தில் செயல்பட்டு வருகின்றனர்;


குரு அப்படி அல்ல;நல்ல இடங்கள் என்று சொல்லக்கூடிய 2,5,7,9,11 ஆம் இடங்களுக்கு வரும் போது பணப் பழக்கம் அதிகரிக்கும்;திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறும்;வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும்,சம்பள உயர்வும் தேடி வரும்;படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்;ஆராய்ச்சியாளர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளை கண்டறியும் தன்மை உண்டாகும்;நகைக்கடை வைத்திருப்பவர்களுக்கு வர்த்தகம் எதிர்பாராதவிதமாக அதிகரித்துக் கொண்டே செல்லும்;
மறைவுஸ்தானங்களான 3,6,8,12 ஆம் இடங்களை குரு கடக்கும் போது நல்லது செய்யமாட்டார்;அதே சமயம் தீமையும் தரமாட்டார்;


13.6.14 வெள்ளிக்கிழமையன்று குருபகவான் மிதுனராசியில் இருந்து கடகராசிக்குப் பெயர்ச்சியாகிறார்;இதன் மூலமாக குரு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உச்சமாகிறார்;குரு உச்சமாகும் போது உலகெங்கும் மக்களிடையே ஆன்மீகத்தேடல் அதிகரிக்கும்;இறைவழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கையும்,மந்திரஜபம் செய்பவர்களின் எண்ணிக்கையும் பலமடங்கு பெருகும்;


மேஷராசியினருக்கு வேலை மாற்றம் அல்லது தொழில் மாற்றம் அல்லது வீடு மாற்றம் ஏற்படும்;

ரிஷபராசியினருக்கு படிப்படியாக நற்பலன்கள் குறையத் துவங்கும்;

மிதுனம்,கடகம்,சிம்ம ராசியினருக்கு நீண்டகாலமாக இருந்து வந்த சுபகாரியங்கள் இந்த ஒருவருடத்திற்குள் நடைபெறும்;

கன்னிராசியினருக்கு ஏழரைச்சனியின் பாதிப்பு விலகத்துவங்கும்;

துலாம் ராசியினர் வேலை மாறும் நேரம் இது;
விருச்சிகராசியினர் சகலவிதமான நற்பலன்களையும் பெறுவார்கள்;

தனுசு ராசியினருக்கு நான்கு மாதங்களுக்குப் பிறகு மகத்தான நன்மைகள் தேடிவரும்;

மகரராசியினர் அனைத்து சுபத்தன்மைகளையும் பெறுவர்;

கும்பராசியினர் சேமிப்பை அதிகப்படுத்துவது அவசியம்;

மீனராசியினர் அஷ்டமச்சனியின் துயரத்திலிருந்து மீண்டுவிடுவர்;

இந்த குருப்பெயர்ச்சியன்று நாம் செய்ய வேண்டியது என்ன?

மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டு,கொண்டைக்கடலை மாலை வாங்கிக் கொண்டு,மஞ்சள் நிறப் பூக்கள் அல்லது மஞ்சள் நிறப் பூக்களால் தயாரிக்கப்பட்ட மாலையுடன் அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்துக்குச் செல்ல வேண்டும்;அங்கே இருக்கும் நவக்கிரக குருவுக்கு இவைகளை சமர்ப்பிக்க வேண்டும்;

தேவானாஞ்சம் ரிஷீணாஞ்சம்
குரு காஞ்சன ஸன்னிபம்
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம் 

என்ற குருவின் மூலமந்திரத்தை 27 முறை குருபகவானின் முன்பாக ஜபிக்க வேண்டும்;

அல்லது

நவக்கிரகங்கள் அனைவரையும் ஆசிர்வாதித்து அவர்களை மனிதர்களின் வாழ்க்கையை இயக்க வைத்த ஸ்ரீகாலபைரவப் பெருமானின் மந்திரத்தை 27 முறை ஜபிக்கலாம்;

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

என்ற இந்த மந்திரத்தை குருபகவானை பார்த்தவாறும்,நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களை நினைத்தவாறும் 27 முறை ஜபிக்க வேண்டும்;இதன் மூலமாக குருவின் ஆசிகள் இந்த வருடம் முழுவதும் நமக்குக் கிட்டும்;நமது வாழ்க்கையில் ஆன்மீக முன்னேற்றம் வேண்டுமானால் தகுந்த குரு நிச்சயமாக நமக்கு அமைய வேண்டும்;


தட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது;எனவே,நவக்கிரகங்களில் அமைந்திருக்கும் குருபகவானை வழிபட வேண்டும்;
சந்தர்ப்பம் அமைந்தால்,கும்பகோணத்தில் அமைந்திருக்கும் வியாழசோமேஸ்வரர் திருக்கோவிலுக்கு நாளை அல்லது நாளை முதல் 45 நாட்களுக்குள் ஒருமுறை சென்று மூலவரை வழிபட்டு வருவதன் மூலமாக குருவின் அருளைப் பெறலாம்;கும்பகோணத்தில் அமைந்திருக்கும் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவிலுக்கு அருகில் அமைந்திருக்கும் ஆலயமே வியாழசோமேஸ்வரர் திருக்கோவில் ஆகும்;குருபகவானின் சாபம் தீர்ந்த ஸ்தலம் இது.

ஓம்சிவசக்திஓம்

No comments:

Post a Comment