For Read Your Language click Translate

12 May 2014

கருட புராணம்-1-தெரிந்து கொள்ள வேண்டிய- 18 இந்திய புராணங்கள்-


புராணம் 
புராணம்
புராணமும், சரித்திரமும்
நம் தேசத்தில் History (சரித்திரம்) இல்லை என்று ஒரு குறை சொல்லப்படுகிறது. புராணம் சரித்திரந்தான். ஆனாலும் இக்காலப் படிப்பாளிகள் கிறிஸ்துவுக்குப் பிற்பாடு ஒரு இரண்டாயிரம் வருஷத்துக்குள் நடந்தது தவிர மற்ற எதையும் - புராணங்களில் ஏதோ கொஞ்சம் உண்மை இருக்கலாம் என்று தங்கள் ஆராய்ச்சியில் தெரிவதாகச் சொல்லிக் கொண்டு, தங்களுக்குப் பிடித்த ஆரிய திராவிட பிரிவினைக் கொள்கை மாதிரியான பொய் விஷயங்களுக்கு மட்டும் புராணங்களில் ஆதாரம் இருப்பதாகக் காட்டிவிட்டு, பாக்கி அதில் வருகிற அற்புதமான விஷயங்கள் (miracle s) , அதீந்திரியமான விஷயங்கள் (supernatural) எல்லாம் கட்டுக் கதை, புளுகு மூட்டை என்று தள்ளி விடுகிறார்கள்.
புலன்களுக்கு அகப்படுகிற விஷயங்களுக்கு அப்பாற்பட்டதாக எதுவும் யதார்த்தத்தில் நடந்திருக்க முடியாது என்கிற தீர்மானத்தில் இவர்கள் இருப்பதால், 'மிஸ்டரி' (மர்மமான அதிசயங்கள்) நிறைய வருகிற புராணங்களை 'ஹிஸ்டரி' இல்லை என்று ஒதுக்கி விடுகிறார்கள்.
இப்போது தாங்கள் எழுதி வைத்திருக்கிற சரித்திரத்தை எல்லோரும் படிக்க வேண்டும் என்று ஸ்கூலிலேயே பாடமாக வைத்துவிட்டுப் புராணத்தைக் கழித்துக் கட்டுவது குழந்தைகளுக்கு நல்லது செய்வதாகாது. புராணங்கள் குழந்தைகளுடைய உள்ளத்தை நல்ல நெறிகளில் சேர்ப்பது போல சரித்திரத்தில் எதுவும் இல்லை.
சரித்திரம் படிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. படிக்கத்தான் வேண்டும். புராணங்களும் சரித்திரம்தான். அதனால் அவற்றையும் படிக்க வேண்டும் என்கிறேன்.
ஏன் சரித்திரம் படிக்க வேண்டும் என்பதற்குச் சொல்கிற அநேக காரணங்களில் ஒன்று - " History repeats itself " என்பது. சரித்திரம் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி நடக்கிறது என்கிறார்கள். அதனால் பூர்வத்தில் எப்படி நடந்தது என்று தெரிந்து கொண்டால் அதிலிருந்து இனி எப்படி நடக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். பூர்வத்தில் நடந்ததிலிருந்து எதிர்காலத்துக்குப் படிப்பினைப் பெறலாம். இப்படியிப்படிச் சூழ்நிலை உருவாகிக் கொண்டு போனால் யுத்தம் ஏற்படும், ஜனங்களின் வாழ்வு கெட்டுப் போகும், ஒரு பெரிய நாகரிகமே விழுந்து விடும் என்பது சரித்திரத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. இதனால் அதே மாதிரியான சூழ்நிலைகள் இப்போது உருவானால் அவற்றை முதலிலேயே உஷாராக இருந்து தடுத்துவிட வசதியாக இருக்கும். இது சரித்திரத்தின் ஒரு பிரயோஜனம் என்கிறார்கள்.
கல்பத்துக்குக் கல்பம் ஒரே மாதிரியாக ஸம்பவங்கள் நடக்கின்றன;ஒவ்வொரு கல்பத்திலும் ராமாயணம், பாரதம், பாகவதம், தசாவதாரம் மற்றும் எல்லாப் புராணங்களும் நடக்கின்றன என்று நம் சாஸ்திரங்களில் சொல்லியிருப்பதைத்தான் History repeats itself என்று கொஞ்சம் மாறுதலான அபிப்ராயத்தோடு சொல்லுகிறார்கள்.
ஆனாலும் நடைமுறையில் ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார்த்தால் அதுதான் இல்லை!செங்கிஸ்கான், தைமூர், கஜினி, மாலிக்காஃபூர் போலப் பலபேர் அவ்வப்போது தோன்றி தேசங்களைச் சூறையாடி ஹதாஹதம் செய்திருக்கிறார்கள் என்று சரித்திரத்திலிருந்து தெரிகிறது. தெரிந்து கொண்டால் மட்டும் இப்படிப்பட்ட வெறிப் போக்குகளை நிறுத்த முடிந்திருக்கிறதா என்ன?இவர்கள் மாதிரியே ஒரு ஹிட்லரும் முஸோலினியும் வந்து மறுபடி ஹதாஹதம் செய்கிறார்கள். இன்னும் கிட்டத்தில் பிரத்தியக்ஷமாகவே பார்க்கிறோம் - ஒரு லஞ்சம், 'கரப்ஷன்'வேண்டியவர்களுக்குப் பட்சபாதம் காட்டுவது, வேலை கொடுப்பது என்றெல்லாம் ஒரு ராஜாங்கத்தார் பண்ணினால் அதற்கு ஜனங்களின் ஆதரவு போய்விடுகிறது என்று எலெக்ஷ்னில் தெரிகிறது. அப்புறம் வேறே சிலர் ராஜாங்கத்தை அமைக்கிறார்கள். ஆனால் படிப்பினை ஒன்றும் பெற்றதாகத் தெரியக் காணோம்!அதே தோஷங்களை இவர்களும் செய்ததாக ஏற்பட்டு, அடுத்த எலக்ஷ்னில் அதே கதி இவர்களுக்கும் உண்டாகிறது. ஒரு குறுகிய காலத்துக்குள்ளேயே இப்படி ஏற்படுகிறது. ஆகையால் repeats itself என்று தெரிந்து கொண்டு விடுவதால் மட்டும் அதிலிருந்து நல்ல பாடம் எதையும் படிக்கமுடியவில்லை என்று தெரிகிறது. 'ரிபீட்'ஆகாமல் ஹிஸ்டரியை நிறுத்தும்படிச் செய்வதற்கு அதில் எதுவும் இல்லை.
தர்மத்தை நாம் ஏற்கும்படியாகச் சரித்திரத்தோடு குழைந்து கொடுத்தால்தான் அது நம்மை நல்வழிப்படுத்தித் தப்பான ஸமாசாரங்கள் 'ரிபீட்'ஆகாமல் செய்ய உபாயமாகும். புராணம் இதைத்தான் செய்கிறது. சரித்திரத்தில் வெறுமே காலவாரியாக ராஜாக்களின் வரலாற்றைத்தான் தந்திருக்கிறது. இதிலே கொடுங்கோலர்கள் கெடுதல் அடைந்தார்களா, உத்தமமான ராஜாக்கள் உயரந்த கதியைப் பெற்றார்களா என்பதற்கு முக்யமில்லை. கர்ம நியதிப்படி ஈச்வரன் இவர்களுக்குத்தான் இப்படிப்பட்ட பாப புண்ய பலன்களைக் கொடுத்துத்தான் இருப்பார். ஆனால் அது இந்த ஜன்மாவிலேயே கொடுக்கப்பட வேண்டும் என்பதில்லை அல்லவா?பின் ஜன்மாக்களில் இந்தப் பலன்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இதை விசாரிப்பது ஹிஸ்டரியின் காரியமில்லை. விசாரித்து அறிகிற சக்தியும் சரித்திரக்காரர்களுக்குக் கிடையாது. ஒரு கஜினியோ, ஹிட்லரோ இந்த பூமியில் வாழ்ந்தவரை கொடி கட்டித்தான் பறந்தார்கள் என்றாலும் உயிர்போனபின் அவர்களுக்கு நரக வாஸம் கிடைத்தது;அல்லது ரொம்பவும் நீசமான மறு ஜன்மா ஏற்பட்டது என்றால் இதையும் புராணம் விசாரித்துச் சொல்லும். புராண கர்த்தாக்களுக்கு அந்த சக்தி உண்டு;இதைச் சொல்கிற லக்ஷ்யமும் உண்டு. ஹிஸ்டரி நிபுணர்களுக்கு இந்த இரண்டும் இல்லை. அதனால்தான் ஹிஸ்டரியில் பார்க்கிறவர்களில் அநேகரின் ஜீவிதத்திலிருந்து பாப புண்யங்களைப் பற்றி நாம் படிப்பினை பெற முடிவதில்லை.
புராணமும் சரித்திரந்தான் என்றாலும் அது பாப-புண்யங்களில் ஜனங்களுக்கு பாடம் கற்பித்து அவர்களை தர்மத்தில் செலுத்தும்படியான வரலாறுகளை மட்டும் 'ஸெலக்ட்'பண்ணிக் கொடுக்கிறது. தர்மசாலிகளாக இருந்ததால் அந்த ஜன்மாவிலேயே உயர்வை அடைந்தவர்கள் யாரோ, தர்மத்தை விட்டதால் அந்தப் பிறவியிலேயே கெடுதலை அடைந்தவர்கள் யாரோ, அப்படிப்பட்டவர்களின் கதைகளையே புராணங்கள் பெரும்பாலும் 'ஸெலக்ட்'பண்ணி நமக்குக் கொடுக்கின்றன. இல்லாவிட்டால் அடுத்த ஜன்மாக்களைச் சொல்லி அதில் பாத்திரங்கள் பாப-புண்ய பலன்களை அடைந்ததைச் சொல்லும். பாப-புண்ய பலன்களில் நம்மைச் சேர்க்காத புராணக் கதை எதுவுமே கிடையாது. ஆகையால், "பழைய சரித்திரங்களைப் படிப்பதனால் அந்தப் பழைய அநுபவங்கள் இனிமேல் நடக்க வேண்டியதற்கு வழிகாட்டியாக இருக்கும். நல்லவர்களாக இருந்து நல்ல காரியங்களைச் செய்து நன்மையை அடைந்தவர்களுடைய சரித்திரங்களை நாம் படித்தால் நாமும் அப்படியிருக்க ஒரு தூண்டுகோலாக இருக்கும். கெட்டவர்களாக இருந்து உலக க்ஷேமத்துக்குக் கேடு பண்ணிக்கொண்டு முடிவில் தாங்களே அதைவிடக் கஷ்டம் அடைந்தவர்களுடைய கதைகளைப் படிப்பதால் நாம் அந்த வழியில் போகாமல் லகானை இழுத்த மாதிரி இருக்கும்"என்பதாகச் சரித்திரப் படிப்புக்குப் பிரயோஜனம் சொல்வதானால், இந்தப் பிரயோஜனத்தை வாஸ்தவத்தில் தற்கால ஹிஸ்டரியால் அடைய முடியவில்லை. புராணத்தில்தான் அடைய முடிகிறது.
'நல்லது கெட்டவைகளைப் பற்றி நமக்கு ஒருவிதமான பாடமும் கற்பிக்காமல் வெறுமே காலவாரியாக பல ராஜாக்கள் ஆண்டதையும் சண்டை போட்டதையும் வளர்த்திச் சொல்லவேண்டியதில்லை. நாம் வாழ்க்கையில் எடுத்துத் கொள்ளும்படியான உபதேசம் இல்லாத சரித்திரம் நமக்கு வேண்டாம். ஆத்மலாபமான சரித்திரங்களையே சொல்வோம்'என்ற அபிப்ராயத்தோடு புராணங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
சந்திர வம்சம், சூரிய வம்சம் என்பது போலப் புராணங்களிலும் ராஜாக்களின் பரம்பரை முழுக்கச் சொல்லியிருக்கும். இவனுக்குப் பின் இவன் என்று பெரி லிஸ்ட் கொடுத்திருக்கும். ஆனால் அவர்களில் நாம் நல்வழிப்படப் பிரயோஜனப் படாதவர்களின் கதையை ஒரு வரி, இரண்டு வரியில் சொல்லி முடிந்திருக்கும்;அல்லது பேரை மட்டும் சொல்லி விட்டிருக்கும். நாம் படிப்பினை பெறும்படியானவர்களின் சரித்திரங்களையே விஸ்தாரமாகச் சொல்லியிருக்கும். உதாரணமாக த்ருவனின் (துருவனின்) அப்பாவான உத்தானபாதன், த்ருவனுக்கு அப்புறம் அரசாண்ட அவனுடைய பிள்ளை இவர்களைப் பற்றியும் பாகவத புராணத்தில் சொல்லியிருக்கிறது. ஆனால் ஏதோ இரண்டு வரி, நாலு வரிதான் இருக்கும். பக்தி, விடாமுயற்சி, மனவுறுதி முதலியவற்றுக்குப் பாடமாக உள்ள த்ருவ சரித்ரத்தை மட்டும் ஸவிஸ்தாரமாகச் சொல்லியிருக்கிறது.
புராணம் பொய்யென்று இங்கிலீஷ்காரர்கள் சொல்லி நம்முடைய தேசத்தின் ஹிஸ்டரியை எழுதினார்கள். அதிலே தங்களுக்குப் பிடித்த divide-and-rule (பிரித்து ஆளும்) கொள்கைகக்கு ஸாதகமான ரேஸ் தியரி முதலான அநேக விஷயங்களை ரொம்பவும் நடுநிலையிலிருந்து ஆராய்ச்சி பண்ணினது போலவே காட்டிச் சேர்த்துவிட்டார்கள். புராணம் பொய்யென்று இவர்கள் சொன்னார்கள் என்றால், இப்போது இவர்கள் எழுதிய சரித்திரத்திலும் பொய் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு உள்ளது உள்ளபடி இந்திய சரித்திரத்தை எழுதுவதற்கு (reconstruct செய்வதற்கு) முயற்சிகள் நடக்கின்றன. இப்படிச் செய்கிறவர்களுக்கும் அநேக கொள்கைகளில் வேண்டியது-வேண்டாததுகள் ( prejudice -கள்) இருக்கலாம். அதனால் என்னதான் நடுநிலையிலிருந்து எழுதுவதாகச் சொன்னாலும், எவ்வளவு தூரத்துக்கு முழுக்க நிஜமான சரித்திரம் உருவாகும் என்று சொல்வதற்கில்லை.
பதினெட்டுப் புராணங்களை எழுதிய வியாஸாசாரியாள், அநேக ஸ்தல புராணங்களை எழுதிய பெரியவர்கள், பக்தர்களின் சரித்ரங்களை எழுதிய சேக்கிழார் முதலியவர்கள்தான் வாஸ்தவத்தில் விருப்பு வெறுப்பில்லாமல் எழுதினவர்கள்.
ஸாம்ராஜ்யங்கள், சண்டை, படையெடுப்புக்கள், ராஜவம்சங்கள் இவைதான் சரித்திரம் என்று நினைப்பது ஸரியில்லை. எல்லா விஷயங்களுக்கும் சரித்திரம் உண்டு. அரசியல் சரித்திரத்தை மட்டும் ஹிஸ்டரியில் பிரதானமாக வைத்து விட்டார்கள். தர்ம விஷயங்களைப் பிரதானமாக வைத்து அதற்கு ராஜவம்சத்தை மட்டுமின்றி மற்ற புண்ய புருஷர்கள், ரிஷிகள், ஸாமானிய ஜனங்கள் முதலியோரின் கதைகளையும், மற்ற எல்லா விஷயங்களின் சரித்திரத்தையும் துணையாக சேர்த்துத் தருவனவாகப் புராணங்களில் இருக்கின்றன. புராணங்களைப் பார்த்தால் அந்தக் கால அரசியல் மட்டுமின்றி cultural life (கலாச்சார வாழ்வு) , அக்கால வித்தைகள், ஸயன்ஸ்கள் எல்லாவற்றையும் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது. அவற்றில் முக்யமாக சொல்லப்படுவதோ தர்மங்களும் ஆத்யாத்மிக க்ஷேமமாகும்.
 புராணங்கள் பொய்யா, உருவகமா ?
புராணத்தை நம்ப முடியாது என்று சொல்லி அதற்குக் காரணம், 'அதிலே இப்பொழுது நாம் பார்க்கிற யதார்த்த நிலவரங்களுக்கு வேறான விஷயங்கள் இருக்கின்றன'என்கிறார்கள். தேவர்கள் வந்தார்கள், போனார்கள், வரம் கொடுத்தார்கள் என்றால் அதெல்லாம் இந்தக் காலத்தில் நடக்காததால், புரளி என்று தோன்றுகிறது. பெண்ணைக் கல்லாகச் சபித்தார்கள், கல்லைப் பெண்ணாகும்படி வரம் கொடுத்தார்கள், சூரியன் உதிக்காமல் நிறுத்தி வைத்தார்கள் என்றெல்லாம் பார்த்தால் - இதெல்லாம் நம் சக்தியில் இல்லாத காரியங்களாக இருப்பதால் 'வெறும் புரட்டு'என்று நினைக்கத் தோன்றுகிறது.
இந்தக் காலத்தில் முடியவில்லை, இந்தக் காலத்தில் நடக்கவில்லை என்பதற்காக எந்தக் காலத்திலும் நடக்கவில்லை, நடக்கமுடியாது என்று எப்படிச் சொல்லலாம்?வேத மந்திர சக்தியும், உயர்ந்த தபஸும், யோகாநுஷ்டானமும் பூர்வத்தில் நிறைய இருந்தன என்பதற்கு எந்தப் பழைய புஸ்தகத்தைப் பார்த்தாலும் நிறைய ஆதாரம் இருக்கிறது. இவை இருந்த மட்டும் தேவசக்திகளெல்லாம் இந்த லோகத்திலனராலேயே ஸுலபமாக கிரஹிக்கும்படி இருந்திருக்கின்றன. வெளிச்சம் இருந்தால் கூடவே நிழலும் இருக்கும் என்கிற ரீதிப்படி தேவசக்திகளைப் போலவே அஸுர ராக்ஷஸ சக்திகளும் ஸ்தூலமாகத் தெரிகற மாதிரி லோகத்தில் இருந்திருக்கிறார்கள். இப்போதும் தேவாஸுர யுத்தம் முதலாநவை மநுஷ்யனின் கண்ணுக்குத் தெரியாமல் (நல்லது கெட்டதுகளின் மோதலாக) நடந்த கொண்டேதான் இருக்கிறது. அந்தக் காலத்தவர்களுக்கு இந்த நல்ல சக்திகளையும் கெட்ட சக்திகளையும் தபோ சக்தியால் கண்கொண்டு பார்க்க முடிந்தது. எல்லா விதமான light wave களும் (ஒளி, ஒலி அலைகளும்) மநுஷ்யக் கண்ணின் லென்ஸுக்கு அகப்பட்டு விடாது என்று விஞ்ஞானிகளே சொல்கிறார்கள். அதில் சில விஞ்ஞானிகள் இன்னும் ஒரு படி மேலே போய் occult என்கிற இயற்கைக்கு அதீதமான மர்ம சக்திகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து, 'தேவதைகள் இருக்கின்றன;நல்ல தேவதைகள், துர்த்தேவதைகள் எல்லாம் இருக்கின்றன'என்றுகூட எழுதி வைத்திருக்கின்றார்கள்.
இப்போதும் அநேக யோகிகள், ஸித்த புருஷர்கள் இருக்கிறார்கள். ஐஸில் கிடந்தாலும் நெருப்பில் கிடந்தாலும் அது அவர்களுடைய சரீரத்தை பாதிப்பதில்லை. மழையை வரப்பண்ணுகிறார்கள்;பெய்கிற மழையை நிறுத்தவும் செய்கிறார்கள். இப்படிப் பலர் அதீந்திரயமான சக்தியோடு இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நமக்குத்தான் எதிலும் நம்பிக்கையில்லை எல்லாவற்றிலும் ஸம்சயம் பூர்வ காலத்தில் இப்படிப்பட்ட விசேஷ சக்திகளை இன்றைவிட ஏராளமானவர்கள் பெற்றிருந்தபடியால்தான் புராணங்களைப் பார்த்தால் ஏகப்பட்ட 'மிராகிள்'களை சொல்வதாக இருக்கிறது.
மிராகிள் வந்தால் ஹிஸ்டரி இல்லை என்று ஒதுக்கி விடுகிறார்கள். கூன் பாண்டியனுக்குப் பஞ்சாக்ஷர பஸ்மாவின் மகிமையால் ஞான ஸம்பந்தர் வெப்பு நோயை நீக்கினார், கூனை நீக்கி 'நின்றசீர் நெடுமாறன்'ஆக்கினார் என்றால் அதை ஹிஸ்டரியாகச் சேர்ப்பதற்கில்லை என்கிறார்கள். ஆனாலும் இப்படியரு பல்லவ ராஜாவும், பாண்டிய ராஜாவும் நாற்பது ஐம்பது வருஷங்களுக்குள் ஜைனமதத்தை விட்டு வைதிகத்திற்கு மாறினான் என்றால் அதை ஹிஸ்டரியாக எடுத்துக் கொள்ள முடியாது என்கிறார்கள். ஆனாலும் இப்படியரு பல்லவ ராஜாவும், பாண்டிய ராஜாவும் நாற்பது ஐம்பது வருஷங்களுக்குள் ஜைனமதத்தை விட்டு சைவத்துக்கு வந்திருக்க வேண்டுமென்பது மட்டும் மற்ற circumstantial evidence (ஸந்தர்ப்ப ஸாக்ஷியம்) எல்லாவற்றையும் பார்த்தால் உறுதியாகத் தெரிகிறது. ஆறு ஏழாம் நூற்றாண்டுகளில், தமிழ்நாட்டில் சமண மதம் வெகுவாக நலிவடைந்து வைதிக மதம் (குறிப்பாக சைவம்) பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறது என்று சரித்திர நிபுணர்களே ஒப்புக்கொள்ளும்படித் தெரிகிறது. இப்படி ஒரு பெரிய மாறுதல் நடக்க வேண்டுமானால் அதற்குக் காரணமாக அப்பர் ஸ்வாமிகளின் கதையிலும் ஞானஸம்பந்தர் கதையிலும் வருகிற மாதிரியான அற்புதங்கள் நடந்திருக்கக்கூடும்தான் என்பதை எப்படி ஆக்ஷேபிக்கலாம்?இந்த விஷயங்களை அந்த ராஜாக்கள் கல்வெட்டிலோ செப்பேட்டிலோ எழுதி வைக்கவில்லை என்பதால் அவை நடக்கவில்லையென்று சொல்லி விடலாமா?
ராமாநுஜாசாரியார் கன்னட தேசத்தை ஆண்டு கொண்டிருந்த ஜைனனான பிட்டி தேவன் என்ற ஹொய்ஸள வம்ச ராஜாவுடைய பெண்ணுக்குப் பிடித்திருந்த பேயை ஒட்டினதாலேயே அவன் ஜைனத்தை விட்டு வைஷ்ணவனானான் என்று குரு பரம்பரைக் கதையிலிருந்து சொல்கிறார்கள். சரித்திரக்காரர்கள், 'பேய் ஒட்டுகிற ஸமாசாரத்தையெல்லாம் எடுத்துக் கொள்ள மாட்டோம்'என்கிறார்கள். ஆனாலும் ராமாநுஜர் ஜீவித்த பதினொன்றாம் நூற்றாண்டில் கன்னட ராஜ்யத்தில் ஜைனம் மங்கி வைஷ்ணவ வழிபாடு, கோவில் முதலியன அதிகமானதையும், பிட்டி தேவனே பிற்பாடு விஷ்ணுவர்த்தன தேவன் என்று பெயர் பெற்றதையும் சரித்திரத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இது குரு பரம்பரைக் கதையில் சொன்னதன் விளைவாகவே இருக்கலாம் என்பதை எப்படி ஆக்ஷேபிக்க முடியும்?
இங்கிலீஷ் படிப்புப் படித்து விட்டதால், ஸயன்ஸில் நிரூபிக்க முடியாததெல்லாம் புரளியென்று சொல்லிப் புராணங்களைத் தள்ளுவது கொஞ்சங்கூட சரியான மனப்பான்மையாகாது.
இப்போதுங்கூட அங்கங்கே பத்துப் பன்னிரண்டு அடி நீளமுள்ள மனித எலும்பக் கூடுகள், புராண வர்ணனைப்படியான - தற்போது இல்லாத - பெரிய பெரிய மிருகங்களின் எலும்புக் கூடுகள் அகப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இதைப் பார்த்தால் பனை மர, தென்னை மர உயரமுள்ள ராக்ஷஸர்கள், சிங்கம் மாதிரியான உடம்பும் யானை மாதிரியான தும்பிக்கையும் கொண்ட யாளி போன்ற மிருகங்கள் பூர்வத்தில் இருந்திருக்கக் கூடுமென்றே ஏற்படுகிறது. காலெலும்பு மாத்திரம் பதினாறு அடி நீளமுள்ள ஒரு மநுஷ்ய எலும்புக்கூடு, யானையைப் போல பத்து மடங்குகள் உள்ள ஒரு மிருகத்தின் எலும்புக்கூடு முதலானதுகளை ஐஸ்பெர்க்கில் ஆர்க்டிக் ரீஜனில் பனிக்கட்டிக்குள்ளிருந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இதைப் பெரிய archelogical find (புதைபொருள் கண்டுபிடிப்பு) என்று கூத்தாடினார்கள். ஆர்க்கியாலஜியோடு, ஜியாலஜி (பூ-இயல்) யையும் சேர்த்து, இவை இத்தனை லட்சம் வருஷத்திற்கு முன் இருந்தவை என்கிறார்கள். இதோடு 'மைதாலஜி' (புராண இயல்) யையும் சேர்த்தால் நம்முடைய பழைய கதைகள் நிஜந்தான் என்றாகிவிடும்.
ஒரு காலத்தில் பனை மர உயர ஆள், இப்போது ஆறடி உயர ஆசாமி, வேறொரு காலத்தில் அங்குஷ்டப் பிரமாண (கட்டை விரல் அளவேயான) ஆள் என்றிப்படி கால வித்யாஸத்தில் பல தினுஸாக ஆகிறது. ஜீவராசிகள், படைப்பினங்களும் மாறுகின்றன. இந்த வித்யாஸங்களையும் புராணங்கள் சொல்லுகின்றன.
"வானரர்கள் என்று குரங்கு மநுஷ்யர்களாம்!மிருகத்தின் உடம்பும் மநுஷ்ய முகமுமாம்!இரண்டு தலை, பத்துத் தலைக்காரர்களாம்!எல்லாம் வெறும் பொய்"என்று புராணங்களைப் பார்த்துச் சொல்லுகிறார்கள். அல்லது இப்படித் திட்டாதவர்களும். "இதெல்லாம் ஒவ்வொரு symbol (தத்வ ரூபகம்) . தத்துவங்களைத்தான் பாத்திரங்களைக் கொண்டு விளக்கியிருக்கிறது; allegorical representation "என்கிறார்கள்.
கதாத்வாரா (கதை மூலமாக) தத்வமும் போதிக்கப் படுவது வாஸ்தவம்தான். அதற்காகக் கதையைப் பொய்யென்று சொல்ல முடியாது. இப்போது கூட எப்போதேனும் நியூஸ் பேப்பரில் பார்க்கிறோம் - இரண்டு தலையும் நாலு கையுமாக ஒரு குழந்தைப் பிறந்தது; மிருகத்திலும் சேராமல் மநுஷ்ய இனத்திலும் சேராமல் நடுவாந்தரமாக ஒரு விசித்திரக் குழந்தை பிறந்தது - என்றிப்படி! freak என்று இதைச் சொல்கிறார்கள். தப்பவே முடியாத இயற்கையும் கொஞ்சம் தப்பிப் போவதைத்தான் freak என்கிறார்கள். இப்பொழுது freak ஆகச் சொல்லப்படுவதே பூர்வகாலங்களில் ஒரு உத்தேசத்தோடு இப்போதை விட அதிகமாகவும் ஸ்ருஷ்டிக்கப் பட்டிருக்கலாம். இக் காலத்தில் நமக்கிருப்பதைவிட அதிகமாக அவர்களுக்கு இயற்கைக்கு அதீதமான சக்திகள் இருந்ததால் இயற்கையிலும் இப்படிப்பட்ட அதிசயப் பிறப்புக்கள் அதிகம் நேர்ந்திருக்கலாம். அதனால் இப்போதுள்ள நமக்குத் தெரிவதுதான் ஸகலமும், இதற்கு வித்யாஸமாக எதுவும் இருந்திருக்க முடியாது'என்று நாம் ஆக்ஷேபிப்பதற்கே இல்லை.
நமக்குத் தெரியாதது, தெரிய முடியாதது எல்லாவற்றுக்கும் பொய்யென்று பெயர் வைத்து விடுவது நியாயமில்லை. புராணத்திலே நம்பமுடியாதது என்று நாம் தள்ளிவிடுகிற ஒன்றே அவ்வப்போது நம் காலத்தில் நடந்துவிடுகிறது. பூர்வ ஜன்மத்தைச் சொல்வது முதலான அதிசயங்கள் இப்போதும் நியூஸ் பேப்பர்களில் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அதுவும் ஸமீப காலமாக இம்மாதிரி அதிசயச் செய்திகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. ஒன்று சொல்கிறேன்.
புராணத்தில், 'காச்யபருக்கு கத்ரு என்று ஒரு பத்தினி இருந்தாள். அவளுக்குப் பாம்புகள் குழந்தையாகப் பிறந்தன என்று பார்த்தால் உடனே இதனெல்லாம் ஒரே அஸம்பாவிதம் என்று தள்ளிவிடுகிறோம். ஆனால் போன வருஷம் (1958) பேப்பரிலேயே (செய்தித்தாள்) வந்ததை ரொம்பப் பேர் பார்த்திருப்பீர்கள். ஒரு மார்வாடிப் பொண்ணுக்கு பாம்பு பிறந்தது என்று அந்த 'ந்யூஸ்'இருந்தது. அதைப் பார்த்த போது தான் எனக்கே இந்த மாதிரி இன்னொரு விஷயம் உறுதிப்பட்டது .
நான் ஸ்வாமிகளாக ஆகிறதற்கு முந்தி ஒரு குடும்பத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வீட்டில் பிறந்த பெண்களும் ஸரி, அந்த வீட்டுப் பிள்ளைகளுக்கு வாழ்க்கைப்படுகிற பெண்களும் ஸரி, தாழம்பூ வைத்துக் கொள்ளப்பட்டார்கள். பின்னாளில் நான் ஸ்வாமிகளான அப்புறம் அவர்களிடம் ஏனென்று கேட்டபோது அவர்கள் ஒரு கதை சொன்னார்கள். கதையென்றால் இட்டுக் கட்டினது இல்லை.
"பத்துப் பதினைந்து தலைமுறைகளுக்கு முன்னாடி எங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு பாம்பு குழந்தையாகப் பிறந்து விட்டது. இதை வெளியில் சொல்லிக் கொள்ள வெட்கம். ஆனாலும் வீட்டோடு வளர்த்து வந்தார்கள். பாம்புக்குப் பால் போட்டி (புகட்டி) குழந்தை மாதிரியே வளர்த்தார்கள். அதுவும் யாருக்கும் ஹிம்ஸை பண்ணாமல் தன்பாட்டுக்கு வீட்டோடு விளையாடிக் கொண்டிருந்ததாம். இந்த விசித்திர குழந்தையை எங்கேயும் எடுத்துக் கொண்டு போக முடியவில்லை, விட்டு விட்டும் போக முடியவில்லையென்பதால் அம்மாக்காரி ரொம்ப அவசியமானால் ஒழிய எங்கேயும் வெளியே போகவே மாட்டாள். 'கல்லானாலும் கணவன்'என்கிற மாதிரி 'பாம்பானாலும் குழந்தை'தானே?அந்த வாத்ஸல்யம்!எங்கேயும் போக மாட்டாளாம். ஆனால் ரொம்பவும் நெருங்கின பந்துக்களின் கல்யாணமொன்று வந்தபோது அவளால் போகாமல் இருக்க முடியவில்லை.
"அப்போது வீட்டில் ஒரு வயசான கிழவி இருந்தாள். (அவள் பாம்புக் குழந்தையின் பாட்டியின் பாட்டியா என்பது தெரியவில்லை. அந்தக் காலத்தில் தூர பந்துக்களில்கூட நாதியற்றவர்களை வைத்துப் பராமரிக்கிற நல்ல பழக்கம் இருந்து வந்தது. இப்போதுதான் தாயார் தகப்பனாரோடேயே சேர்ந்தில்லாமல் தனிக்குடித்தனம் போகவேண்டுமென்று நவீன நாகரீகத்தில் பறக்கிறார்கள். முன்னெல்லாம் அவிபக்த குடும்பம்தான் (joint family ) . அதிலே யாராவது ஒரு அத்தை பாட்டி, ஒன்று விட்ட சின்ன தாத்தா என்று வைத்துக் கொண்டு ரக்ஷிப்பார்கள். இந்த கதை நடந்த அகத்தில் ஒரு கிழவி இருந்தாள்) அவளுக்குக் கண் தெரியாது.
"அந்தக் கிழவியின் பாதுகாப்பில் பாம்புக் குழந்தையை விட்டுவிட்டு அதன் தாயார் தவிர்க்க முடியாத நிலைமையில் வெளியூருக்குப் போனாள்.
"பாம்புக்கு விசேஷமாக என்ன செய்ய வேண்டும்?குளிப்பாட்ட வேண்டுமா?தலை வார வேண்டுமா?சட்டை போட வேண்டுமா?இல்லாவிட்டால், தூக்கி வைத்துக் கொள்ள வேண்டுமா?இதெல்லாம் இல்லை. வேளைக்கு அதற்குப் பால் விட்டால் மட்டும் போதும். அதனால் அம்மாக்காரி அந்தக் கிழவியிடம், "காய்ச்சின பாலை, கை நிதானத்திலேயே கல்லுரலைத் தடவிப் பார்த்து அதன் குழியிலே விட்டு வைத்து விடுங்கள். நேரத்தில் குழந்தை (பாம்பு) வந்து அதைக் குடித்து விடும்"என்று சொல்லிவிட்டு ஊருக்குப் போனாள். அந்தப் பாம்பை இப்படிப் பழக்கியிருந்திருப்பாள் போலிருக்கிறது.
"கிழவி அப்படியே செய்தாள். பாம்பும் தாயார் சொன்னபடியே வந்து குடித்துவிட்டுப் போயிற்று. அப்புறம் ஒரு வேளை நாழி தப்பிப் போயிற்று. கிழவி அசந்து விட்டாளோ என்னவோ?கல்லுரலில் பார்த்த பாம்புக்குப் பாலில்லை. அது ரொம்ப ஸாது. கொஞ்ச நேரம் காத்துப் பார்த்தது. அப்புறம் அதுவும் அசந்துபோய் அந்தக் கல்லுரல் குழியிலேயே சுருட்டிக் கொண்டு படுத்துக் கொண்டு விட்டது.
கிழவி அதற்கப்புறந்தான், கொதிக்க கொதிக்கப் பாலைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு கல்லுரலுக்கு வந்தாள். அதிலே பாம்புக்குட்டி படுத்துக் கொண்டிருப்பது அவளுக்குத் தெரியவில்லை;வழக்கம்போலவே கொதிக்க கொதிக்க இருந்த பாலை அப்படியே ஒரு நிதானத்தில் குழிக்குள்ளே விட்டாள்.
பாம்பின் மேலேயேதான் விட்டுவிட்டாள். பாவம்! அந்தக் குட்டி பாம்பு அப்படியே செத்துப்போய் விட்டது.
அங்கே ஊருக்குப் போயிருந்த அம்மாக்காரிக்கு ஸொப்பனமாச்சு. ஸொப்பனத்திலே அந்தப் பாம்புக்குட்டி வந்து, 'நான் செத்துப் போய் விட்டேன். c போய் என்னை எடுத்து தாழங் காட்டிலே தஹனம் பண்ணிவிடு. இனிமேல் உங்கள் அகத்தில் பிறக்கிற பெண்களும், வாழ்க்கைப் படுகிற பெண்களும் தாழம்பூ வைத்துக் கொள்ள வேண்டாம்"என்று சொல்லிற்று. (தாழம்பதர்தான் பாம்புக்கு ரொம்ப ப்ரீதி)
"அதிலிருந்து எங்கள் குடும்பத்தில் யாரும் தாழம்பூ வைத்துக் கொள்வதில்லை"என்று அந்த அகத்துப் பெண்கள் சொன்னார்கள்.
இந்தக் கதையைப் பற்றி எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது, இப்படிக்கூட நடந்திருக்குமா என்று.
நான் ஸ்வாமிகளாகிவிட்ட பிற்பாடு, அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் என்னைப் பார்க்க வந்ததற்கு முக்யமாக ஒரு காரணம் இருந்தது. அது பாம்பு பூர்விகத்தை சொல்வது இல்லை. அவர்கள் குடும்பத்தில் ஒரு பழைய செப்பேடு இருந்தது. எனக்கு இதில் 'இன்டரஸ்ட்'உண்டு என்பதால் அதைக் கொண்டு வந்து காண்பித்தார்கள்.
அது கிருஷ்ண தேவராயருக்குப் பிறகு ஆட்சி பண்ணிய அச்சுத தேவராயர் காலத்து தாம்ர சாஸனம் (செப்பேடு) . அதில் எழுதியிருந்ததிலிருந்து, பிராமணன் ஒருத்தன் வேறே 108 பிராமணர்களுக்கு தானம் கொடுத்த விவரம் தெரிந்தது. ராஜாவுக்காகவே இந்த ஒரு பிராமணன் இப்படி 108 பேருக்கு தானம் பண்ணியிருக்கிறான்.
அது ஏன், எதற்காக என்று சொல்கிறேன். பிராமணன் ஸதாஸர்வகாலமும் வேத அத்தியயனமும், கர்மாநுஷ்டானமும் பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டுமென்பதால் அவன் உத்தியோகத்தில் போய் ஸம்பாதிக்கக் கூடாது. ஆனால் அவன் குடும்பம் நடக்கவேண்டுமே!அவன் பெரிய யக்ஞங்களும் பண்ண வேண்டுமே!இவற்றுக்காக அவன் தானம் வாங்கலாம் என்று சாஸ்திரம் அநுமதித்தது. ராஜாக்களும் மற்றப் பிரபுக்களும் இப்படியே அவர்களுக்குக் கொடுத்து ஆதரித்து வந்தார்கள். ஆனால் தானம் வாங்குகிற ரைட் இருக்கிறது என்பதற்காக, இந்தக் காலத்தில் சிலர் தப்பாக நினைப்பது போல, பிராமணர்கள் மற்றவர்களைச் சுரண்டவில்லை. ரொம்பவும் மானஸ்தர்களாக இருந்து கொண்டு அவசியமானால்தான் அதுவும் தங்களுக்கு வேண்டிய அளவுக்கே, தானத்தை அங்கீகரித்தார்கள். ஒரு ராஜாவின் பரம்பரை உத்தமமானதாக இருந்தால்தான், அவன் நல்ல க்ஷத்ரியனாக இருந்தால்தான் அவனுடைய மான்யத்தை ஏற்றுக்கொள்வார்கள். இவர்கள் பிடுங்கித் தின்பதால் ராஜாக்கள் கஷ்டப்படாமல், 'நாம் கொடுப்பதை வாங்கிக்கொள்ள மாட்டேன் என்கிறார்களே!ஸத்பாத்திரத்துக்கு தானம் செய்கிற புண்ணியம் நமக்குக் கிடைக்காமல் போகிறதே! என்றுதான் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். இம்மாதிரி ஸந்தர்ப்பங்களில் ராஜாக்களும் பிரபுக்களும் ஒரு யுக்தி பண்ணியிருக்கிறார்கள். அதாவது, தீன தசையில் உள்ள ஒரு பிராமணனை 'மசிய'வைத்து அவனுக்கு ஏகப் பட்டதாக தானம் செய்துவிடுவார்கள். ஆனால அது முழுவதும் அவன் ஒருத்தனை உத்தேசித்ததேயில்லை. அவன் வழியாக மற்ற பிராம்மணர்களுக்கும் தானம் பண்ணி விடவேண்டுமென்பதே உத்தேசம். அதாவது இந்த ஒரு பிராம்மணன் 'பேருக்கு'அவ்வளவு தானத்தையும் வாங்கிக் கொள்வதுபோல வாங்கிக் கொள்வதால் அவர்களுக்கு 'ப்ரதிக்ரஹ தோஷம்' ('ஏற்பது இகழ்ச்சி' என்ற குறை) ஏற்படாது. எனவே மற்ற பிராம்மணர்கள் இவன் செய்கிற தானத்தை ஏற்பார்கள். பிரபுவின் உத்தேசம் இப்படியாக நிறைவேறிவிடும்.
இப்படித் தந்திரம் பண்ணினது நடுவிலே வருகிற அந்த ஒரு பிராம்மணனுக்கு தோஷமாகாதா?பிரபு நல்ல எண்ணத்தில் எப்படியாவாது வேதவித்துக்களை ஆதரிக்க வேண்டுமென்று இப்படி யுக்தி செய்வதில் தப்பில்லைதான். ஆனால் இப்படி ஒரு தந்திரத்துக்கு உடன்பட்ட பிராமணனுக்கு பாபமில்லையா என்றால், இல்லை. எப்படியென்றால், பிரபு கொடுத்த தானம் சட்டப்படி இவனுடைய சொத்தாகத் தான் ஆகிறது. இவன் பேரிலேதான் அவன் தத்தம் செய்திருக்கிறான். அதனால் அப்புறம் இவன் அதற்கு உரிமை கொண்டாடாமல் அதிலே முக்கால்வாசிக்கு மேல் மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டுத் தான் ஸ்வல்ப பாகமே வைத்துக் கொள்வதால் இவனுக்கும் தோஷம் போய்விடுகிறது.
ராஜப் பிரதிக்ரஹமே தோஷமானது - அரசனிடமிருந்து வாங்குவதே தப்பு- என்றுதான் தியாகையர் மாதிரியானவர்கள், சரபோஜி போன்றவர்கள் "கொடுத்தே தீருவேன்" என்று வலுக்கட்டாயப் படுத்தினால்கூட அதை உதறித்தள்ளிவிட்டு, "GF சால ஸுகமா?" (பணமா சௌக்கியம் தருவது?) என்று சீறியிருக்கிறார்கள்.
நாட்டுக்கோட்டை செட்டிப்பிள்ளைகள் (நகரத்தார்) அநேக சத்திரங்களைக் கட்டினபோது, பிராம்மணர்கள் அவற்றில் போய் சாப்பாட்டுக்கு உட்காருவதற்குத் தயங்கிய போது, இதே போலத்தான் ஒரு பிராம்மணனைத் தேடிப் பிடித்து அவன் பேரில் சத்திரத்தின் கட்டளைகளை எழுதி, அவன் மற்றவர்களுக்குப் போடுகிற மாதிரிப் பண்ணியிருக்கிறார்கள்.
நான் மேலே சொன்ன செப்பேட்டில் இப்படித்தான் ஒரு பிராம்மணன், ராயரிடமிருந்து வடார்க்காட்டிலுள்ள மாம்பாக்கம் என்ற கிராமத்தை பூதானம் வாங்கிக் கொண்டு அதை 108 பிராம்மணர்களுக்கு விநியோகம் செய்திருக்கிறான். அந்த 108 பிராமணர்களுடைய பேரையும் சொல்லி, அவர்கள் இன்ன வேத சாஸ்திரம் படித்தவர்கள், அவர்களுக்கு இத்தனை நிலம் கொடுக்கப்படுகிறது என்ற விவரங்கள் அந்த ஸாஸனத்தில் எழுதியிருந்தது.
அப்படி நூற்றெட்டுப் பேரை உத்தேசித்து கிராம தானம் வாங்கிக் கொண்ட பிராமணர் பாம்புக் குழந்தைக் குடும்பத்தில் வந்தவர்தான். அவரிடமிருந்து தானம் பெற்ற மற்றவர்களின் வம்சம் எதுவும் இப்பொழுது தெரியவில்லை. இவர்கள் குடும்பத்தில் மட்டும் இந்தச் செப்பேடு தலைமுறை தலைமுறையாக வந்திருக்கிறது.
இதிலே குறிப்பிட்டு சொல்லவேண்டியது, செப்பேட்டில் சொல்லியிருக்கிற மூதாதையின் பெயர் 'நாகேச்வரன்'என்று இருப்பதுதான். இப்போது இந்தத் தலைமுறையில் இதை என்னிடம் கொண்டு வந்த குடும்பத் தலைவர் பெயரும் நாகேச்வரன். விசாரித்துப் பார்த்ததில் அவர்கள் குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் நாகேச்வரன் என்ற பெயரை வைத்துக் கொண்டு வருகிறார்களென்று தெரிந்தது.
உடனே ஊகிக்க முடிந்தது - பாம்புக் குழந்தையின் ஸம்பந்தத்தால்தான் இந்த நாகப் பெயர் ஏற்பட்டிருக்கிறதென்று. அதோடுகூட அச்சுத தேவராயர் காலத்திலேயே அவர்கள் சொன்ன கதைக்கு ஆதாரம் இருக்கும்படியாக இந்தப் பெயர் இருந்திருப்பதும் தெரிந்தது.
'இப்படியும் இருக்குமா?'என்று நான் முன்பு நினைத்ததற்கு இது பதில் சொல்கிறார்போல் இருந்தது. அப்புறம் போன வருஷம் ஒரு பெண்ணுக்குப் பாம்பு பிறந்த ந்யூஸைப் பார்த்தபின் இதைப் பற்றி ஸந்தேஹப்பட வேண்டாம் என்று மேலும் உறுதியாயிற்று.
உங்களுக்கு புராண நம்பிக்கைப் போதவில்லை என்று நான் கண்டிப்பது தப்புத்தான். எனக்கே ந்யூஸ் பேப்பரில் வருவது நிஜம் என்று தோன்றின மாதிரி, ஐதிஹ்யமாக ஒரு குடும்பத்தில் சொன்னதில் நம்பிக்கை போதாமல் ந்யூஸைக் கொண்டுதானே ஐதிஹ்யத்தை confirm செய்து கொள்ள வேண்டியிருந்தது?
இதுதான் இப்போது நாம் இருக்கிற ஸ்திதி:பேப்பரில் வந்து விட்டால் எத்தனை நம்பத் தகாததானாலும் பொய் என்று தோன்றவில்லை ஆனால் புராணம் என்றாலே கட்டுக் கதை என்று அலக்ஷ்யம். "அவர்களுக்கு வேலையில்லை. ஏடு இருந்தது, கதை கதையாகக் கட்டி வைத்து விட்டார்கள். இதில் சிலதில் கெட்டிக்காரத்தனமாவது இருக்கிறது. பாக்கியெல்லாம் அபத்தம்"என்று நினைக்கிறோம்.





Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is புராணமும், சரித்திரமும்
Previous



கற்பனையேயானாலும் கருத்துள்ளதே !
புராணங்களில் வெறும் கற்பனையும் எங்காவது இருக்கலாம்தான். பிற்காலத்தவர்கள் இடைச் செருகலாக (Interpolation என்பதாக) சிலதை நுழைத்து விட்டும் இருக்கலாம். ஆனால் எது வெறும் கற்பனை, எது இடைச் செருகல், எது மூல ரூபம் என்று யார் நிர்ணயிப்பது?அவரவரும் தங்களுக்கு இடைச் செருகலாகத் தோன்றுவதை நீக்கி விடுவது என்று ஆரம்பித்ததால் அத்தனை கதைகளும் போய் விடும். மூலக் கதையென்றே ஒன்று நிற்காது. அதனால் சில தப்புக்கள், கோளாறுகள் இருப்பதாகத் தோன்றினாலுங்கூட இன்றைக்கு நம் கைக்கு எந்த ரூபத்தில் புராணங்கள் வந்திருக்கின்றனவோ அதை அப்படியே வைத்து ரக்ஷிக்கத்தான் வேண்டும்.
அதிலே ஏதாவது கட்டுக்கதை இருந்தாலும் இருந்து விட்டு போகட்டும். அது நம் மனஸை பகவானிடம் கொண்டு போய் விட்டு சாந்தப்படுத்துகிறதோ இல்லாயோ? கடைக்கு ஒரு பண்டம் வாங்கப் போகிறோம். நல்ல சரக்காகக் கிடைக்கிறது. நம் உத்தேசம் பூர்த்தியாகிவிட்டது என்று ஸந்தோஷப்படுவதா, அல்லது கடையில் இன்ன குறை இருந்தது, கடைக்காரனிடம் இன்ன தோஷம் இருந்தது என்று சொல்லி அதிருப்தி படுவதா?பூகோள - ககோள (வான் இயல்) வர்ணனைகள், மன்வந்த்ரம் முதலான கால வர்ணனைகள் எங்கேயாவது தப்பிப் போனால்தான் போகட்டுமே!இதெல்லாம் தெரிந்து கொள்ளத்தான் ஜாகரஃபியும் அஸ்ட்ரானமியும் ஹிஸ்டரியும் இருக்கிறதே!ஜாகரஃபியிலும் ஹிஸ்டரியிலும் அஸ்ட்ரானமியிலும் கொடுக்க முடியாத பரமாத்ம தத்வத்தை, பக்தியை, தர்மத்தைச் சொல்கிற லக்ஷ்யத்தைப் புராணம் பூர்த்தி பண்ணுகிறதோ இல்லையோ?
'த்ரேதாயுகம் என்று அத்தனை லட்சம் வருஷம் முன்னாடி ராமர் இருந்திருக்க முடியாது. அப்போது ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிற நாகரிக வாழ்வு ஏற்பட்டே இராது'என்கிறது போலப் பல வாதங்கள் செய்கிறார்கள். இதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. இருந்தாலும் ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன்:ராமர் த்ரேதாயுகத்தில் இல்லாமலே இருந்திருக்கட்டும். இப்படியே அதற்கு முந்தி க்ருதயுகத்தில் நடந்ததாக சொல்லப்படும் கதைகள் அவ்வளவு பூர்வ காலத்தில் நடந்திருக்காமே இருக்கட்டும். எல்லாம் ஒரு ஏழாயிரம் எட்டாயிரம் வருஷத்துக்குள் நடந்தது என்றே வைத்துக் கொள்ளலாம். அதனால் ஸ்ரீ ராம சரித்திரமோ, மற்ற கதைகளோ மதிப்பிலே குறைந்து விடுமா?அவற்றால் நாம்
பெறுகிற படிப்பினை கெட்டுப் போய்விடுமா?
புராணத்தில் சொல்லியுள்ள கதைகளின் காலம் தப்பு என்பது போலவே, இந்த புராணங்கள் ஏற்பட்ட காலத்தைப் பற்றியே சொல்வதெல்லாமும் தப்பு என்கிறார்கள். ஐயாயிரம் வருஷத்துக்கு முந்திக் கலியுக ஆரம்பத்தில் வியாஸர் புராணங்களைக் கொடுத்தார் என்பது சாஸ்திரங்களில் சொல்லியுள்ள விஷயம். அவருக்கு முன்பே புராணம் உண்டு. சாந்தோக்ய உபநிஷத்தில் நாரதர் தாம் அத்தியயனம் பண்ணின வித்தைகளின் பேரைச் சொல்லும்போது அவைகளில் ஒன்றாகப் புராணத்தை குறிப்பிடுகிறார். அதனால் வேத- உபநிஷத காலத்திலேயே புராணம் இருந்ததாகத் தெரிகிறது. பிற்கால ஜனங்களின் குறைந்த சக்திக்கு ஏற்ற மாதிரி, ஏற்கெனவே இருந்த வேதங்களை வியாஸர் பல சாகைகளாகப் பிரித்துக் கொடுத்தது போலவே இந்தப் புராணங்களையும் தாமே விரிவாக எழுதிக் கொடுத்திருக்கிறார் போலிருக்கிறது.
ஆனால் இங்கிலீஷ் படிப்பாளிகள் புராணங்கள் அவ்வளவு பழையவை இல்லை என்கிறார்கள். இருந்து விட்டுப் போகட்டுமே! (சென்னை டவுனில் உள்ள) கந்த ஸ்வாமி கோயிலில் ஜே ஜே என்று கூட்டம் சேருகிறது, நல்ல ஸாந்நித்தியம் இருக்கிறது, அங்கே நல்ல பக்தி ஏற்படுகிறது, ஸந்நிதானம் நம் துக்கத்தைப் போக்கி அருள் சுரக்கிறது என்றால் அதுதான் கோவிலின் பிரயோஜனம். இதிலே திருப்திப் படாமல், 'இந்தக் கோவில் எப்போது கட்டியது?அருணகிரிநாதர் காலத்தில் இது இருந்ததா?அவர் திருப்புகழ் பாடியிருக்கிறாரா?' என்று கேட்டுக் கொண்டு போவதில் என்ன அர்த்தம்?இம்மாதிரியானதுதான் புராண காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளும்!நம் மன அழுக்கை, சித்த மலத்தைப் போக்குவதுதான் புராணங்களின் லட்சியம் என்பதை நினைவில் வைத்து, பயபக்தியோடு படித்தால் இப்போது எழுகிற அநேக ஆக்ஷேபங்களுக்கு இடமிராது.
ஆராய்ச்சி, கீராய்ச்சி, research என்று சொல்லிவிட்டால் உடனே நாம் நம்பிவிடுவது என்பதுதான் எல்லாவற்றையும் விடப் பெரிய ஸ¨பர்ஸ்டிஷனாக (மூட நம்பிக்கையாக) இருக்கிறது!இப்போதையை ஆராய்ச்சிகளிலும் நிறையப் பொத்தல்கள், குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. இது ஸரியாக இருந்து, புராணம் கற்பனையாக இருக்கிற இடத்திலுங்கூட, 'நல்லதைச் செய்தவன் வாழ்ந்தான்;தப்பைச் செய்தவன் கெட்டான்;இப்படிக் கெட்டவர்களையும் அநேக ஸந்தர்ப்பங்களில் பகவான் கை தூக்கிவிட்டிருக்கிறான்'என்பதைப் புராணம் நம் மனஸில் அழுத்தமாகப் பதிப்பிக்கிறதால் அதன் உத்தேசம் பூர்த்தியாயிற்று என்றுதான் அர்த்தம்.
நவீன மனப்பான்மைக்காரர்கள் மட்டுமின்றி சாஸ்திரஜ்ஞர்கள், சிஷ்டர்கள் கூடப் புராணத்தை இரண்டாம் பட்சமாக நினைத்து வருவதாக எதனாலோ ஏற்பட்டுவிட்டது. மற்ற சாஸ்திரங்களில் வாக்யார்த்தம், உபந்நியாஸம் பண்ணுகிறவர்களைவிடப் புராணப் பிரவசனம் செய்யும் பௌராணிகர்கள் தாழ்த்தி என்ற அபிப்ராயமும் இருக்கிறது. ஆனால் மஹாமஹோபாத்யாய பட்டம் பெற்ற மஹா பண்டிதர்களான யக்ஞஸ்வாமி சாஸ்திரிகள், காபே ராமசந்திராச்சார் முதலியவர்கள் புராணப் பிரவசனம் நிறைய பண்ணி வந்திருக்கிறார்கள். இப்போது ஸ்ரீவத்ஸ ஸோமதேவ சர்மா பதினெண் புராணங்களைக் கண்டுபிடித்துத் தமிழில் (சுருக்கியாவது) அச்சுப் போடுவதே காரியமாக இருக்கிறார்.புராணம் 

வியாஸர் தந்த செல்வம்
வேதத்தில் இருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பதற்காக, வேதங்களை வகுத்துக் கொடுத்த அதே வேதவியாஸர் பதினெட்டுப் புராணங்களை உபகரித்தார். பதினென் புராணங்களை அஷ்டாதச புராணம் என்பார்கள்.
                   
          கதை, சரித்திரம், பூகோளம், தத்வம், தர்மம், கலைகள் எல்லாவற்றையும் புத்திமான்களுக்கு மட்டுமில்லாமல் பாமர ஜனங்களுக்கும் ஸ்வாரஸ்யமாகத் தருவதற்கே அவர் புராணங்களை எழுதிப் பெரிய செல்வமாகக் கொடுத்திருக்கிறார். 
    
  வியாஸர் பாமர ஜனங்களையும் தர்மத்தில் கொண்டு சேர்க்கவே, பரமாத்மாவிடம் கொண்டுபோய் விடுவதற்கே ஸ்வாரஸ்யத்தை ஸாதனமாக வைத்துக் கொண்டார்.
 
நாலு லட்சம் கிரந்தங்களில் வியாஸர் இந்த 18 புராணங்களை எழுதியிருக்கிறார். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக் கொண்ட ச்லோகம்.


இந்த நாலு லட்சத்தில் கால்வாசியை, அதாவது ஒரு லட்சம் கிரந்தத்தை 'ஸ்காந்த புராண'மே எடுத்துக் கொண்டு விடுகிறது. உலகத்தின் மிகப் பெரிய புஸ்தகம் அதுவாகத்தான் இருக்கும். eF 17 புராணங்களுமாக மூன்று லட்சம் கிரந்தம். இது தவிர லட்சம் கிரந்தம் கொண்ட மஹாபாரதத்தையும் வியாஸர் உபகரித்திருக்கிறார். ('புராணம்'என்கிற பதினெட்டில் சேராமல் 'இதிஹாஸம்'என்று இருப்பவை பாரதமும், ராமாயணமும்.)


ஒவ்வொரு தேவதை மூர்த்தியைப் பற்றியும் ஒவ்வொரு புராணம் சொல்லும். சைவமானவை, வைஷ்ணவமானவை, சாக்தமானவை என்றிப்படிப் பல தேவதைகளைக் குறித்துப் புராணங்கள் இருக்கின்றன.


கருட புராணம் (காருடம்) ,
பிரம்ம புராணம் (பிராம்ம்) ,
பத்ம புராணம் (பாத்மம்) ,
விஷ்ணு புராணம் (வைஷ்ணவம்) ,
சிவ புராணம் (சைவம்) ,
பாகவதம்,
நாரத புராணம் (நாரதீயம்) ,
மார்க்கண்டேய புராணம்,
அக்னி புராணம் (ஆக்னேயம்) ,
பவிஷ்ய புராணம்,
பிரம்ம வைவர்த்த புராணம்,
லிங்க புராணம்,
வராஹ புராணம் (வாராஹம்) ,
ஸ்காந்த மஹா புராணம்,
வாமண புராணம்,
கூர்ம புராணம் (கௌர்மம்) ,
மத்ஸ்ய புராணம் (மாத்ஸ்யம்) ,


பிரம்மாண்ட புராணம் என்பவை பதினெட்டுப் புராணங்கள்.
இந்தப் பதினெட்டில் பத்து சிவபரமானது என்று சொல்கிறார்கள். இப்போது நமக்குப் பிரஸித்தமாகத் தெரிகிற அநேக விருத்தாந்தங்கள் இவற்றிலேதான் வருகின்றன. சரித்திரம், கதை, தத்துவம் எல்லாம் இவற்றிலே இருக்கின்றன.


விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் ஆசார்யாள் விஷ்ணு புராணத்திலிருந்து நிறைய மேற்கோள் காட்டுகிறார். வியாஸ மஹரிஷியின் பிதாவான பராசரர் பண்ணின புராணம் அது. ஸ்ரீ ராமாநுஜரின் ஸித்தாந்தத்தில் விஷ்ணு புராணம் ஒரு முக்யமான அதாரிடி (ஆதாரநூல்) .


ஸ்ரீ ராமநுஜருக்கு முந்தி விசிஷ்டாத்வைதத்தின் மூல புருஷர்களில் ஒருவராக இருந்தவர் ஆளவந்தார். அவரிடம் ராமாநுஜர் போய்ச் சேருவதற்குள்ளேயே அவருடைய உயிர் பிரிந்துவிட்டது. ராமாநுஜரிடம் முக்யமாக மூன்று காரியங்களை ஒப்புவிக்க வேண்டுமென்று ஆளவந்தார் நினைத்தார். அதனால் பிராணன் வெளியே போன பிறகும் அவருடைய சரீரத்தில் மூன்று விரல்கள் மடங்கி இருந்தனவாம். ஒவ்வொரு விரலும் இன்ன ஆக்ஞையத் தெரிவிக்கிறது என்று புரிந்து கொண்டு ராமாநுஜர் சொன்னவுடன், உயிரில்லாத அந்த உடம்பின் மடங்கின விரல்கள் ஒவ்வொன்றாக நிமிர்ந்தனவாம்!அந்த மூன்று ஆக்ஞைகளில் ஒன்று, பிரம்ம ஸ¨த்ரத்திற்கு விசிஷ்டாத்வைதப்படி பாஷ்யம் எழுதவேண்டும் என்பது. இரண்டாவது, திருவாய்மொழிக்கு வியாக்யானம் எழுதப் பண்ண வேண்டும் என்பது. மூன்றாவதாக வியாஸர், பராசரர் ஆகிய இருவரின் கீர்த்தியும் உலகில் இருக்கும்படியாகப் பண்ணுவது. விஷ்ணு புராண கர்த்தா என்பதால் இப்படிப் பராசரருக்கு ஏற்றம் கொடுக்கப்பட்டது. இதை மனஸில் வைத்துக் கொண்டுதான் ராமாநுஜர் தம்முடைய முக்கியமான சிஷ்யரான கூரத்தாழ்வாரின் இரண்டு பிள்ளைகளுக்கும் பராசர பட்டர், வேத வியாஸ பட்டர் என்று பெயர் வைத்தார். பராசரருக்கு ஏற்றம் கொடுக்கப்பட்டது. இதை மனஸில் வைத்துக் கொண்டுதான் ராமாநுஜர் தம்முடைய முக்கியமான சிஷ்யரான கூரத்தாழ்வாரின் இரண்டு பிள்ளைகளுக்கும் பராசர பட்டர் பிற்காலத்தில் வைஷ்ணவ ஆசாரியர்களில் முக்யமான ஒருவரானார்.




'விஷ்ணு புராணம்' பண்ணியவர் பராசரர் என்றாலும், பதினெட்டுப் புராணங்களையும் நாம் பார்க்கிற ரூபத்தில் ஸரிபண்ணி எழுதிக் கொடுத்தது வியாஸர்தான். வேதங்களை அவர்தான் வகுத்துக் கொடுத்தார். என்ற விஷயத்தை முன்பே சொல்லியிருக்கிறேன். வேதத்திலுள்ள விதிகளை எல்லோருக்கும் நன்றாக மனஸிலே ஆழமாகப் பதியச் செய்ததற்காக அவரே புராணங்களையும் அநுக்ரஹித்தார்.


இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. வேதத்தை அத்யயனம் பண்ணும் அதிகாரம் சிலருக்குத்தான் இருக்கிறது. மற்றவர்களுக்கு இல்லை. அதனால் அப்படிப்பட்ட பொது ஜனங்களுக்கு வேத தத்வார்த்தங்கள் தெரிய வேண்டும் என்றே புராணங்களை வியாஸர் எழுதினார் என்பதே அந்தக் காரணம்.


விஷ்ணு புராணத்தை வியாஸரின் தகப்பனார் மூல ருபத்தில் சொன்னார் என்றால், பாகவதத்தை வியாஸரின் புத்திரரான சுகாசாரியார் பரீக்ஷித்துக்கு உபதேசிக்கிறார்.


பதினெட்டுப் புராணங்களில் "பாகவதம்"என்று சொல்லப்படுவது, கிருஷ்ண பரமாத்மாவின் சரித்திரத்தை முக்யமாக வைத்து மற்ற அவதாரங்களின் கதைகளையும் சொல்கிற விஷ்ணு பாகவதாமா என்ற இரண்டு விதமான அபிப்ராயங்கள் உண்டு. நமக்கு இரண்டும் வேண்டும். 'விஷ்ணு பாகவதம்', 'தேவி பாகவதம்'இரண்டும் உத்தமமான கிரந்தங்களாக இருக்கின்றன. சைதன்யர், நிம்பார்க்கர், வல்லபாசாரியார் போன்றவர்களின் ஸித்தாந்தங்களில் விஷ்ணு பாகவதம் வேதத்துக்கு ஸமதையான அந்தஸ்துப் பெற்றிருக்கிறது. அதே சமயத்தில் அவர்களை ஆட்சேபிக்கிற அத்வைதிகளும் அதைத் தலைக்கு மேல் கொண்டாடுகிறார்கள்.


சிவபுராணம் வேறே, ஸ்காந்த புராணம் வேறே. ஸ்காந்தத்தில் முக்கால்வாசி சிவனைப் பற்றிய கதைகள், தத்வங்கள் தான். ஆனாலும் ஸ்கந்தனான முருகனைப் பற்றிய விருத்தாந்தம் இதிலே வருவதால் இதற்கு 'ஸ்காந்தம்'என்று பெயர் வந்தது. இதிலே வருவதால் இதற்கு 'ஸ்காந்தம்'என்று பெயர் வந்தது. இதிலே ஸுப்ரமண்யரின் விஷயமாக இருப்பதையே முக்யமாக வைத்துக் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார் தமிழிலே 'கந்த புராணம்'என்று எழுதியிருக்கிறார்.


மார்க்கண்டேய புராணத்தில் தான் 'துர்கா ஸப்த சதீ'என்கிற துர்க்காம்பாளின் விருத்தாந்தம் வருகிறது. ('தேவி மாஹாத்மியம்'என்பதும் அதுவே.) 'சண்டீ ஹோமம்'- சத, சண்டி, ஸஹஸ்ர சண்டி - என்று பண்ணுவெதல்லாம் இதில் இருக்கிற எழுநூறு மந்திரங்களைக் கொண்டுதான். இதிலே ஒவ்வொரு ச்லோகமும் ஒரு மந்திரமாக மதிக்கப் படுவதால் அதைச் சொல்லி ஹோமம் செய்யப்படுகிறது.


பவிஷ்யம் என்றால் எதிர்காலம் (future) என்று அர்த்தம். 'பவிஷ்ய புராண'த்தில் இப்போது நாம் பார்க்கிற கலியின் கிருத்ரிமம் உள்பட அநேக விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
மௌரியர்கள் போன்ற பழைய ராஜாக்களை மட்டுமின்றி, வெள்ளைக்காரர்கள் இங்கே வந்தது உள்படப் புராணத்தில் இருக்கிறெதன்றால், இக்காலத்தவர்கள் "இதெல்லாம் வியாஸர் கலியுக ஆரம்பித்தில் எழுதினதே இல்லை. ஸமீபத்தில்தான் யாரோ எழுதி அவர் பேரைப் போட்டு விட்டார்கள்"என்கிறார்கள். இடைச் செருகல் எங்கேயாவது கொஞ்சம் இருக்கச் செய்யலாம்தான். அதற்காக ஒரேடியாக "எல்லாம் புதுசுதான்"என்று தள்ளிவிட முடியாது. யோகசக்தி வாய்ந்தவர்கள் எந்தக் காலத்தையும் காண முடியும்;இருந்த இடத்திலே இருந்து கொண்டே எந்தத் தேசத்தில் நடப்பதையும் சொல்லி முடியும். இம்மாதிரியான சக்தி பெற்ற மஹாபுருஷர்களின் பெயரில் யார் வேண்டுமானாலும் கிரந்தம் பண்ணிப் பிரசாரப் படுத்துவது என்பது ஸுலபமான காரியமில்லை.
கருட புராணத்தில் பித்ருலோகம், பித்ரு காரியம் முதலியவற்றைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறது. அதனால் சிராத்த கர்மாவில் இந்தப் புராணத்தைப் படிக்கிற வழக்கம் இருக்கிறது.




பிரம்மாண்ட புராணத்தில்தான் "லலிதோபாக்யானம்" (லலிதாம்பிகையின் சரிதம்) , லலிதா ஸஹஸ்ரநாமம் முதலானவை வருகின்றன. பதினெட்டு புராணங்களையும் சொல்லி முடிக்கிறபோது ராஜராஜேச்வரி பட்டாபிஷேகம் வரும் இந்த புராணத்தோடுதான் பூர்த்தி பண்ணுவதாக ஸம்பிரதாயம் இருக்கிறது என்பதைப் பற்றி தேவீ உபாஸகர்கள் பெருமைப் பட்டுக் கொள்வார்கள்.
இப்போது ஒவ்வொரு ஸ்வாமிக்கும் நாம் சொல்லும் அஷ்டோத்திரம், ஸஹஸ்ரநாமம், கவசம் முதலானவைகள் பெரும்பாலும் புராணங்களில் வருகிறவைதான். விஷ்ணு ஸஹஸ்ரநாமம், சிவ ஸஹஸ்ரநாமம் இரண்டுமே மஹாபாரதத்தில் வருபவை.
அநேக ஸ்தோத்திரங்களும் இவற்றிலிருந்தே நமக்குக் கிடைக்கின்றன. "ஆதித்ய ஹ்ருதயம்"ஸ்ரீமத் ராமாயணத்தில் வருவது. "ப்ரதோஷ ஸ்தோத்ரம்"ஸ்காந்தத்தில் வருகிறது. இப்படி அநேகம்.

No comments:

Post a Comment