For Read Your Language click Translate

25 May 2014

டிஜிட்டல் நூலகம் -டாக்டர் அப்துல் கலாம்













Advertisement





மேதகு டாக்டர் அப்துல் கலாம் 1.10.2004 அன்று கொல்கத்தாவில் சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த இல்லத்தை ராமகிருஷ்ண மிஷனின் கலாச்சாரச் சின்ன நினைவகமாகத் திறந்து வைத்து நிகழ்த்திய உரை:

இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம் சுவாமிஜியின் முன்னோர்களின் வீட்டை, தனித்தன்மை சிதையாமல் புதுப்பித்துள்ளார்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்தருணத்தில் இங்கு குழுமியுள்ள சுவாமிகளுக்கு என் வணக்கம். மற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்.

விவேகானந்தரின் தீர்க்க தரிசனம்: நண்பர்களே, விவேகானந்தர் வாழ்ந்த இந்த வீட்டின் அழகிய கீழ்த்தளத்தில் இருந்தவாறு, அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர விரும்புகிறேன்.

1893-ஆம் வருடம் மும்பையிலிருந்து ஐரோப்பாவிற்கு ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. அதில் பயணம் செய்த புகழ்மிக்க முக்கிய மனிதர்களான விவேகானந்தரும் ஜாம்öஷ்டஜீ நஸர்வான்ஜீ டாடாவும் தங்களுக்குள் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

சுவாமிஜி, டாடாவிடம் அவரது பயணத்தின் நோக்கத்தை வினவினார். அதற்கு அவர், நமது நாட்டிற்கு இரும்பு உருக்குத் தொழிலைக் கொண்டு வரும் லட்சியத்துடன் அயல்நாடு செல்கிறேன் என்றார்.

அது ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட நேரம். டாடாவிடம் சுவாமிஜி, உங்களது உயர்ந்த நோக்கம் வெற்றி பெற நல்லாசிகள். ஆனால் நீங்கள் ஒன்றில் அதிக கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் உருக்கு செய்முறையுடன் அதன் தொழில்நுணுக்கத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் தவீர ஆராய்ச்சிக்கு ஓர் அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்றார்

ஆஹா! எவ்வளவு தீர்க்க தரிசனத்துடன் சுவாமிஜி அந்த வார்த்தைகளை அப்போது கூறினார்!

பிறகு பல நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. டாடாவால் உருக்குத் தொழில்நுட்பத்தை இங்கிலாந்திலிருந்து பெற முடியவில்லை. ஆனால் அட்லாண்டிக் கடல் தாண்டிச் சென்று அமெரிக்காவிடமிருந்து அவர் அதைப் பெற்றார்.

பிறகு அவர் ஜாம்öஷ்டபூரில் டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் கம்பெனி என்ற அமைப்பை நிறுவினார் அதன் மூலம் ஒரு பெரிய செயல்திட்டம் உருவாயிற்று. அதன் முதல் பகுதியாகத் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்öஷ்டபூரில் இரும்புத் தொழிற்சாலை ஒன்று நிறுவப்பட்டது.

இரண்டாவது பகுதியாக டாடா தமது சொத்தில் ஆறில் ஒரு பங்கை பெங்களூரில் இன்ஸ்டிட்யூட் ஆப் மெட்டிரீயல் ரிசர்ச் என்ற ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவ வழங்கினார்.

சில நாட்களுக்கு முன் நான் ஜாம்ஷெட்பூர் சென்றிருந்தேன். அங்கு டாடாவின் தீர்க்க தரிசனத்தின் பலன்களைக் கண்கூடாகப் பார்த்தேன். அங்கு டிஸ்கோ எனப்படும் டாடா உருக்குத் தொழிற்சாலை ஆண்டுக்கு 40 லட்சம் டன் உருக்கை உற்பத்தி செய்கிறது. பெங்களூரில் சிறிய அளவில் துவக்கப்பட்ட ஆராய்ச்சி சாலை இன்று இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஸயன்ஸ் என்ற பெயரில் மிகப் பெரிய கல்வி நிறுவனமாக இயங்கி வருகிறது.

சுவாமிஜியின் தீர்க்க தரிசனத்தையே இது பறைசாற்றுகிறது. வலுவான முன்னேறிய இந்தியாவை உருவாக்குவதே அவரது லட்சியம். அறிவியல் தொழில்நுட்பம், உற்பத்தித் தொழில் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து முன்னேற்றத்திற்குத் துணையாகச் செயல்பட வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

சுவாமிஜியின் ஜகதீஷ் சந்திரபோஸின் அறிவியல் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பதிவு செய்ய வைத்தார். இந்தியாவைத் தட்டி எழுப்ப அவரது அறைகூவல் ஆன்மிகத்திற்கு மட்டுமல்லாமல் பொருளாதார, சமுதாய முன்னேற்றத்திற்கும் ஆனது.

மதங்களிடையே ஆழ்ந்த ஒற்றுமை: நண்பர்களே, நான் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது ராஜ்கோட்டிலுள்ள பல நிறுவனங்களிலிருந்து எனக்கு அழைப்புகள் வந்தன. அப்போது ராஜ்கோட்டில் பிஷ்ப்பாக இருந்த ரெவரண்ட் பாதர் க்ரெகரி கரோ டெம்ப்ரல் என்பவர் கிரைஸ்ட் கல்லூரியைத் துவங்கி வைக்க அழைத்தார்.

அதே நாளில் சுவாமி தர்மபந்து நடத்திய சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் கலந்து கொண்ட விஷன் ஆப் லைப் நிகழ்ச்சியில் நான் உரையாற்றினேன். அதன் பிறகு போர்பந்தரில் ராமகிருஷ்ண மிஷன் ஏற்பாடு செய்திருந்த மாணவர் கூட்டத்திற்கு நான் செல்லவிருந்தேன். அப்போது ராஜ்கோட்டில் காந்திஜி படித்த ஆல்ப்ரட் பள்ளிக்கும் சென்றேன்.

அந்தச் சூழ்நிலையில் நடந்த இரண்டு சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கல்லூரித் திறப்பு விழாவிற்குமுன் ராஜ்கோட்டிலுள்ள பிஷப்பின் வீட்டிற்குச் சென்றேன். அவரது வீட்டிற்குள் நுழையும்போது ஒரு புனிதமான இடத்தில் நுழைவதைப் போல உணர்ந்தேன். அங்கிருந்த பிரார்த்தனைக்கூடத்தில் எல்லா மத உணர்வுகளும் மதிக்கப்பட்டு அவை ஒன்றிணைக்கப்பட்ட உணர்வு ஏற்பட்டது. அக்கூட்டத்தின் மகத்துவத்தை பிஷப் எனக்கு விளக்கிக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்த சுவாமி நாராயணன் கோயிலுக்கும் செல்ல எனக்கு அழைப்பு வந்தது. இதை நான் பிஷப்பிடம் தெரிவித்தபோது, தாமும் உடன் வருவதாகக் கூறினார்.

அக்கோவிலின் உள்ளே இருந்த அழகான கிருஷ்ணர் சிலையின் அருகில் நாங்கள் சென்றது ஒரு தனி அனுபவம். நெற்றியில் திலகமிட்டு எங்களை வரவேற்றனர். ரெவரண்ட் பாதர் க்ரெகரில அப்துல்கலாம், ஒய். எஸ் ராஜன் ஆகிய மூவரும் நெற்றியில் ஒரே மாதிரி ஜொலிக்கும் திலகத்துடன் அங்கு நின்றிருந்தது. மிகவும் மகத்துவம் உள்ளதாகப்பட்டது. இந்த நிகழ்ச்சி, நம் நாட்டில் உள்ள மத ஒருமைப்பாட்டின் மகத்தான சக்தி ஆன்மிக முன்னேற்றத்திற்குத் துணை நிற்பதை விளக்குவதாக இருந்தது. இப்படி ஒருங்கிணைந்த மத உணர்வுகளே அக்டோபர் 2003 இல் அறிவிக்கப்பட்ட சூரத் ஆன்மிக அறிக்கைக்கு காரணமாக அமைந்தன. அந்த அறிக்கையில் ராமகிருஷ்ண மிஷனும் பெரும் பங்கு வகித்தது.

பிரார்த்தனையின் சக்தி: அடுத்த நிகழ்ச்சி மிக அழகான ஒன்று, ராஜ்கோட், ராமகிருஷ்ண மிஷனின் சுவாமி என்னிடம் விமான நிலையம் செல்லும் வழியில் மிஷனின் கோவிலு<க்கு வர வேண்டினார். ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள், சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை லட்சயித்தைப் பற்றிய சொற்பொழிவு அங்கு நடந்து கொண்டிருந்தது.

பிறகு பிரார்த்தனை மணி ஒலித்தது. அறை முழுவதும் நிறைந்த லயமான இசையின் இனிய அலைகளில் மூழ்கியிருந்தது. அங்கிருந்த பக்தர்களுடன் நானும் பிரார்த்தித்தேன். அங்கு நிலவிய ஆன்மிகச் சூழலும் பிரார்த்தனையின் தீவிரமும் என்னை ஒரு மாறுபட்ட உயர் உலகிற்கு இட்டுச் சென்றன. என்னுடன் வந்திருந்த நண்பர்களும், அங்கிருந்த சுவாமியும் வியக்கும்படி அன்று நான் ஒரு தனிப்பட்ட ஆன்மீக அனுபவத்தை உணர்ந்தேன். எனக்கு நேரம் பற்றிய உணர்வோ, நினைவோ இல்லை. அது ஒருங்கிணைந்த ஆன்மிகச் சூழலின் விளைவாக இருக்கலாம். இன்று விவேகானந்தர் வாழ்ந்த இக்கட்டிடத்தில் இருக்கும்போது என் மனம் ராஜ்கோட்டில் அன்று நான் உணர்ந்த ஆன்மிகச் சூழலையே உணர்கிறது.

உள்ளங்ககையில் ஒரு பெரிய நூலகம்: இந்தக் கட்டிடத்தில் ஒரு நூலகம் நிறுவப்போவதாகக் கேள்விப்பட்டேன். இங்கு நிறுவப்போகும் நூலகத்திற்கும் ஆராய்ச்சி மையத்திற்கும் தற்போது இந்தியா முனைந்திருக்கும் டிஜிட்டல் நூலக முயற்சி எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் பற்றி நான் உங்களுக்குக் கூற விரும்புகிறேன்.

எம்சிஐடி எனும் மினிஸ்ட்ரி ஆப் கம்யூனிகேஷன் அண்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி ஐ.ஐ.சி எனும் இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஸயன்ஸ் மற்றும் அமெரிக்க கார்னகிமெலன் யுனிவர்ஸிட்டி ஆகிய மூன்றும் இணைந்து டிஜிட்டல் நூலகம் எனப்படும் ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளன.

இந்த இலவச இணைய தளத்தின் மூலம் இன்னும் ஓர் ஆண்டுக்குள் 10 லட்சம் நூல்களைக் கணினி மூலம் யாரும் படிக்க முடியும். இதுவரை 80,000 நூல்கள் டிஜிடைஸ் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 45,000 நூல்கள் 9 இந்திய மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இணை தளத்தில் கிடைக்கின்றன. இவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் நூல்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் இரு மடங்காகிறது.
இப்போது சுமார் 100 டாலருக்கு 300 கிகா பைட்கள் கொண்ட டிஸ்குகள் கிடைக்கின்றன. அந்த டிஸ்கில் சுமார் 30,000 நூல்களை வைத்துக் கொள்ளலாம்.

இன்னும் 10 வருடங்களில் அதே அளவுள்ள ஒரு டிஸ்கில் சுமார் 3 கோடி நூல்களைச் சேகரித்து வைக்கலாம். ஒரு பெரிய நூலகத்தில்கூட இவ்வளவு நூல்கள் இருக்குமா என்பது சந்தேகம். உள்ளங்கையில் ஒரு பெரிய நூலகம்!

இங்கு அமைய உள்ள நூலகத்தை டிஜிடைஸ் செய்து அதை விஸ்வபாரதி, கொல்கத்தாவிலுள்ள மற்ற பல்கலைக் கழகங்களுடனும் இணைத்தால் அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்றோரின் அரிய இயக்கியங்களையும் பிற மதக்கோட்பாடுகளையும் நம் கலாச்சாரத்தின் அருமை பெருமைகளையும் பற்றி மேலும் அறிந்து அவற்றைப் பரப்ப முடியும்.

இங்கு நிறவப்பட்டுள்ள கலாச்சார மையம். கிராம முன்னேற்றத்திற்காகவும் திட்டங்கள் வகுக்க உள்ளதாக அறிகிறேன். ஏழைகள், கிராமப்புற மக்கள் மற்றும் பின்தங்கிய நிலையிலு<ள்ள மக்களுக்கும் உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்ட (புருவிங் அர்பன் அமன்ட்டிஸ் இன் ரூரல் ஏரியாஸ்) என்ற முயற்சியைப் பற்றி இங்கு கூற விரும்புகிறேன்.

இத்திட்டத்தின் மூலம் கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்குப் பெயர்வது கணிசமாகக் குறையும். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் கிராமங்களின் சூழ்நிலைகளை நகர மக்களை ஈர்க்கும் வகையில் மாற்றுவதே. இதனால் நகரத்தார் கிராமங்களுக்குக் குடியேறச் செய்ய வேண்டும். இன்றைய சில பெருநகரங்களில் மக்கள் தொகை அதிகரிப்பால் அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்க்கை வசதி, சுகாதாரம் போன்றவை குறைந்து மாசுகள், வியாதிகள், குற்றங்கள் ஆகியவை பெருகியுள்ளன.

நம் நாட்டில் 70 கோடி மக்கள் வசிக்கும் 6 லட்சம் கிராமங்களில் உள்ள முன்னேற்ற மையங்களை இணைத்து அங்குள்ள எல்லாருக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அளிப்பது இன்றைய தலையாயக் கடமை.

இதன் மூலம் கிராம- நகரங்களுக்கு இடையே உள்ள இடைவெளி குறையும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். கிராமங்களில் சுபிட்சம் பெருகும். இன்று கிராமங்களுக்கு இன்றியமையாத தேவைகள். நீர், மின்சாரம், சாலைகள், சுகாதார வசதி, கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவையே. கிராமங்களில் முன்னேற்றத்திற்கு உதவும் இணைப்புகள்

1. கிராமங்களை இணைக்கும் சாலைகள், மற்ற போக்குவரத்து வசதிகள்
2. கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் கணினிகளும் கேபிள்களும்
3. கல்வித் திட்டங்களில் மூலம் விவசாயிகள், கிராமக் கைவினைஞர்கள் ஆகியோருக்கான தொழிற்கல்வி, தொழில் முனைவோர் திட்டங்கள், வங்கிகள், சிறுகடன் உதவிகள் மற்றும் விளைபொருள்களை விற்பதற்கு வகை செய்தல் இவற்றின் மூலம் வேலைவாய்ப்புகள், விநியோகம் ஆகியவை கூடுவதால் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்.

இக்கலாச்சார மையம் மேற்கூறிய உத்திகளால் கொல்கத்தாவில் அருகிலுள்ள கிராமங்களைத் தத்தெடுத்து அங்கு தொண்டு நிறுவனங்கள், தர்மச் சிந்தனையாளர்களுடன் இணைந்து புரா அமைப்புகளைத் துவக்கி, கிராமத்தினரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முயல வேண்டும். சுவாமிஜிக்கு அது நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.

நண்பர்களே, விவேகானந்தர் நமக்கு விடுத்த ஓர் அறைகூவல் என் நினைவிற்கு வருகிறது.

ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மை இயல்பைப் போதியுங்கள், உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும். பெருமை வரும், நன்மை வரும், தூய்மை வரும், எவையெல்லாம் மேலானதோ, அவை அத்தனையும் வரும்.

பிரக்ஞையுடன் செயலில் ஈடுபட விவேகானந்தர் விடுக்கும் இந்த வேண்டுகோள் நம் நேர்மையையும் உள்ளுணர்வையும் தட்டியெழுப்பும். நம் இதயத்தில் நேர்மையிருந்தால் ஒழுக்கத்தில் கண்ணியம் இருக்கும். ஒழுக்கத்தில் கண்ணியமிருந்தால் வீட்டில் அமைதியிருக்கும். வீட்டில் அமைதியிருந்தால் நாட்டில் ஒழுங்கு நிலவும். நாட்டில் ஒழுங்கு இருந்தால் உலகில் அமைதி நிலவும்.

ஆகையால் நாம் அனைவரும் அப்படிப்பட்ட கல்வியறிவு பெற்ற, அறிவு சார்ந்த குடிமகன்களாக வாழ முயல்வோம். அதுவே சுவாமிஜி நமக்களித்துள்ள பாரம்பரியம்.

அத்தகைய குடிமகன் அவரது எழுந்திருங்கள் விழித்துக் கொள்ளுங்கள், லட்சியத்தை அடையும்வரை ஓயாது உழையுங்கள் என்ற அறைகூவலுக்குச் செவிசாய்ப்பான்; தனது உடல்நலனையும் சேர்வுறாத மனதையும் சுவாமிஜி கூறியபடி உறுதியுடன் பாதுகாப்பான்.

நம் குறிக்கோள்-வலிமையான அமைதியான இந்தியாவை உருவாக்குவது மட்டுமல்ல. அந்த அமைதியை மற்ற உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதும் ஆகும்.

இன்று திறக்கப்படும் இக்காலாச்சார மையம் அத்தகைய எண்ணங்களுக்கும், அவற்றின் செயல்வடிவங்களுக்கும் ஒரு மையக் கருவூலமாக இருக்கட்டும். இம்மையைத் திறந்து வைப்பதில் எனக்கு மிக மகிழ்ச்சி. இங்கு வருபவர்கள் இங்குள்ளவற்றைக் கண்டு ஊக்கமடைவார்கள் என்பது உறுதி,

இது போன்ற ஆனந்தமும், ஊக்கமும் இங்கு வர முடியாதவர்களும், நேரில் வந்து இவற்றையெல்லாம் காண முடியாதவர்களும் பெற வேண்டும் என விரும்புகிறேன்.

இம்மைய நிர்வாகிகள் இங்குள்ள நூலகக்கருவூலத்தை டிஜிடைஸ் செய்து இங்கு காணப்படும் அனைத்துக் காட்சிகளையும், அத்துடன் நேர்முகமாகப் பதிவு செய்து அதை உலகம் முழுவதும் காணுமாறு செய்ய வேண்டும். ஏனெனில் பெரும் பொக்கிஷமாகப் பேணப்படும் உலகப் பெருந்தலைவர்களுள் சுவாமி விவேகானந்தரும் ஒருவர் ஆவார்.

வல்லரசு இந்தியாவின் மிகப் பெரிய சொத்து எழுச்சி பெற்ற இளைஞர்கள்தான்

மதுரையில் தமிழ்நாடு, ஸ்ரீ ராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் மாநாடு 2010 டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதன் அறிமுக விழா நிகழ்ச்சி, 2010 மே 20ஆம் நாள் மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு முன்னாள் இந்தியக் குடியரசு தலைவர், மேதகு டாக்டர் அப்துல் கலாம் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து சில பகுதிகளை இங்கு தந்திருக்கிறோம்.

அன்பு நண்பர்களே! உங்கள் அனைவருக்கும், இங்கு குழுமியிருக்கும் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள். என்னுடைய வணக்கம். இன்றைய தினம், தமிழ்நாடு, ஸ்ரீ ராமகிருஷ்ணர் விவேகானந்தர் பக்தர்கள் மாநாட்டின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உங்களையெல்லாம் சந்தித்து உரையாடுவதற்குக் கிடைத்த வாய்ப்பை நினைத்து, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அனைவருடைய அயராத சேவைகளைப் பற்றி நினைக்கும்போது எனக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. மேற்கு வங்கத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் 1836இல் பிறந்தார். அவர் ஆன்மிக ஞானஒளி பெற்று, அறிவுதாகம் கொண்ட இளைஞர்களை உருவாக்கினார்; அவர்களில் முதன்மைச் சீடராக சுவாமி விவேகானந்தரைத் தேர்ந்தெடுத்தார். சுவாமி விவேகானந்தர் நாடுதோறும் சென்று, இந்திய இளைஞர்களைச் சிறந்த முறையில் பக்குவப்படுத்தினார், பண்படுத்தினார்.

சுவாமி விவேகானந்தர்: அதன் காரணமாக அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில், இன்றைக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் ஈடுபட்டு வருகிறது. இதைப் பார்க்கும்போது, ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் பணி எவ்வளவு ஒரு மகத்தான பணி! என்று நினைத்துப் பார்க்கிறேன். சுவாமி விவேகானந்தர் கூறிய இரண்டு கருத்துக்கள் என் நினைவுக்கு வருகிறது. சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்:

என்னுடைய பெயருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். என்னுடைய கருத்துக்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று, சுவாமி விவேகானந்தர் சொல்கிறார். சுவாமி விவேகானந்தர் மற்றொரு கருத்தையும் கூறுகிறார்:
""All power is within you. You can do anything and everything.

Believe in that. Do not believe that you are weak; do not believe

that you are half-crazy lunatics, as most of us do nowadays.

Stand up and express the divinity within you."

அப்படியென்றால், உன்னிடம் இருக்கும் திறமையை நீ நினைத்துப் பார். எழுந்து நீ உன் ஞானத்தை வெளிப்படுத்து. உனக்குள் மறைந்திருக்கும் ஞானத்தின் அறிவுசக்தியின் மகத்துவத்தை நீ உணர்ந்த அடுத்த நிமிடம், உலகம் உன்னிடம் வசப்படும். என்ன ஓர் அருமையான கருத்து!

இளைஞர்கள்தான் இந்தியாவின் பெரிய சொத்து: மனஎழுச்சிகொண்ட இளைஞர்கள் மனதில் ஊக்கமும் உற்சாகமும் உடைய 54 கோடி இளைஞர்கள் இந்தியாவின் மிகப் பெரிய சொத்து. நாட்டின் சவால்களைச் சமாளிப்பதற்கு, நமது இளைய தலைமுறையினர் எழுச்சி பெற வேண்டும். அதற்கேற்ப கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவிகளின் ஆராயும் திறனையும், சிந்திக்கும் திறனையும் வளர்க்க வேண்டும். அவ்விதம் வளர்த்தால் அது மாணவர்களின் படைப்புத்திறனையும், ஆக்கபூர்வமான உற்பத்தித் திறனையும் வளர்க்கும். இந்தத் திறமை பெற்ற மாணவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவார்கள்.
ஆனால் நாட்டில் 90 சதவிகிதம் பேர், படிப்பின் பல்வேறு நிலைகளில் போதிய கல்வி கற்க இயலாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். அதனால் அவர்கள், மற்ற வேலைகளுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைகளுக்கு ஆளாகின்றனர். நாட்டில் இன்றைய சூழ்நிலையில் 1. பல்வேறு கவனச் சிதறல்கள், 2.வறுமை, 3.படிப்புக்கு ஏற்ற வேலையில்லாமை, 4.வேலைக்கு ஏற்ற படிப்பு, 5.சிறப்புப் பயிற்சிகள் பெற இயலாத சூழ்நிலை, 6.உலகமயமாக்கல் காரணமாக ஏற்படும் சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், 7.வேற்றுமை, 8.மாறி வரும் குடும்பச்சூழல், 9.மாற்று கலாச்சார மாற்றம் ஆகியவை நம் இளைஞர்களை வேகமாக மாற்றும் சூழ்நிலை இன்றைக்கு நாட்டில் நிலவுகிறது. இத்தனையும் தாண்டி நமது நாடு, நமது பாரம்பரியம், நமது நாட்டின் வளம், நமது நாட்டிற்கு ஏற்ற வளர்ச்சிமுறை, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வு, நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் உன்னத பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு இந்தக் கால முறைக்கு ஏற்புடையதுபோல் நம்மை நாம் அறிவுபூர்வமாக மாற்றி அமைக்க வேண்டும். அதே சமயத்தில் நாம் நமது முகவரியை இழக்காமல் நாம் நமது மக்களை அறிவார்ந்த சமுதாய மறுமலர்ச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறோம்.

இலட்சியம் பற்றிய ஒரு கவிதை: இந்தச் சமயத்தில் நான் ஒரு முறை இந்திய பாராளுமன்றத்தில் இயற்றிப் பாடிய ஒரு கவிதையின் வரிகள் என் நினைவுக்கு வருகிறது. அந்தக் கவிதையின் தலைப்பு இலட்சியம். அந்தக் கவிதையை இப்போது நான் சொல்கிறேன்:
நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன். எங்கிருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா! நான் தேடிக்கொண்டே இருக்கிறேன்.
எங்கிருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா! நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன். எங்கிருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா! இறைவா, இறைவா! நூறு கோடி இந்திய மக்கள் இலட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும், இன்ப அமைதியையும் உழைத்து அடைவதற்கு அருள் புரிவாயாக.

இந்தக் கவிதையின் கருத்து என்ன? நாம் வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டிருக்கிறோம், பணி செய்து கொண்டிருக்கிறோம். நாம் இவைகளைச் செய்யும்போது, நமக்கு வாழ்க்கையில் ஓர் இலட்சியம் வேண்டும். இதைப் பற்றி திருவள்ளுவர் கூறுகிறார்:

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து. (குறள் 596)

பொருள்: ஒருவர் தான் செய்யக் கருதும் எதையும் உயர்ந்ததாகவே நினைக்க வேண்டும். அதைச் செய்து முடிக்க முடியாவிட்டாலும், அந்த முயற்சி அந்தச் செயல் கைகூடியதற்கு ஒப்பாகவே மதிக்கப்படும். அதாவது, நமது எண்ணம் உயர்வாக இருந்தால், அரும் பெரும் இலட்சியங்கள் நம் மனதில் தோன்றும்; நமக்குப் பெரும் இலட்சியம் இருந்தால், அருமையான எண்ணங்கள் நம் உள்ளத்தில் தோன்றும். நமது எண்ணம் உயர்ந்தால், நாம் செய்யும் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும். அறிவுப் புதையல் எங்கு இருக்கிறது? அமைதிக் கடல் எங்கிருக்கிறது? என்ற தேடல் என்னுள்ளே எழுந்தது. அந்தத் தாகம் வற்றாமல் இன்றும் எனக்குள் இருந்துகொண்டிருக்கிறது. அதற்கு விடை தேடிக்கொண்டிருக்கிறேன். அந்தத் தேடலில் நான் காண்பது என்ன?

வள்ளுவர் காட்டும் வளமான நாடு: திருவள்ளுவரின் குறள் நமக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறது. அதாவது,

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. (குறள் 738)

பொருள்: நோய் இல்லாமல் இருத்தல், செல்வம், விளைபொருள் வளம், இன்ப வாழ்க்கை, நல்ல காவல் ஆகிய இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவார்கள். ஒரு நாடு நல்ல வளமான நாடாக இருக்க வேண்டும் என்றால் அந்த நாட்டில் நோயின்மை, செல்வச்செழிப்பு, நல்ல விளைச்சல், அமைதி, சுமூகமான சமுதாயச் சூழ்நிலை, வலிமையான பாதுகாப்பு ஆகியவை அந்த நாட்டில் நிலவ வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார். இப்படி என்ன அருமையாக ஒரு வளமான நாட்டைத் திருவள்ளுவர் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார், பாருங்கள்! நாம் எல்லோரும் முறையாக உழைத்துத்தான், நம் நாட்டை வளமான நாடாக மாற்ற வேண்டும்.
அமைதியைத் தேடி: சுமூகமான, மேடு பள்ளம் இல்லாத, அமைதியான, மகிழ்ச்சியான, ஓர் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது என்னுடைய தேடல். இந்தத் தேடலின் ஒரு பகுதியாக நான் தேடிக்கொண்டே இருக்கிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன்.

பௌத்த மடம் வழங்கிய செய்தி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் அருணாச்சலப் பிரதேசம். அங்கு நான் ஒரு முறை 2003ஆம் ஆண்டு, 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தவாங் என்ற இடத்திற்குச் சென்றேன். ஒரு நாள் முழுவதும் அங்கு இருந்து, புத்த பிட்சுகளைச் சந்தித்தேன். அங்கு கடுமையான குளிரும், வாழ்வதற்கு மிகவும் சிரமம் இருக்கக் கூடிய சூழநிலையும் இருந்தது. அப்படிப்பட்ட குளிர் மிகுந்த சூழ்நிலையில், அங்கு இருந்த அனைவரும் சிரித்த முகத்துடன் புன்னகை தவழ வீற்றிருப்பதைப் பார்த்தேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு எப்படி அமைதியும், சாந்தியும் நிலவுகிறது? என்ற கேள்வி என்னுள் எழுந்தது.
எனவே நான் அங்கிருக்கும் தலைமை புத்த பிட்சுவிடம், இங்கு எப்படி அமைதியும் சாந்தியும் நிலவுகிறது? இது எப்படி சாத்தியமாகும் என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், நீங்கள் நாட்டின் குடியரசுத் தலைவர், உங்களுக்குத் தெரியாதா? என்று வினவினார்.
நான் விடவில்லை, இல்லை, இல்லை! நீங்கள் எனக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டு வலியுறுத்தினேன்.
அதற்கு அவர் சொன்னார்: இந்த உலகத்தில் நமக்குப் பல்வேறு பிரச்னைகள், நம்பிக்கையின்மை, சுயநலம், சமூகப் பொருளாதார வேறுபாடு, கோபம், வெறுப்பு அதன் மூலமாக வன்முறை ஆகியவை நிலவுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பௌத்த மடம் என்ன செய்தியைப் பரப்புகிறது என்றால், நாம் ஒவ்வொருவரும் நான், எனது என்ற எண்ணத்தை நம் மனதிலிருந்து அகற்றினால் நம்மிடம் உள்ள தற்பெருமை மறையும்; தற்பெருமை மறைந்தால் மனிதர்களுக்கு இடையில் இருக்கும் வெறுப்பு அகலும்; வெறுப்பு நம் மனதைவிட்டு அகன்றால் வன்முறை எண்ணங்கள் நம்மைவிட்டு அகலும்; வன்முறை எண்ணங்கள் நம்மைவிட்டு மறைந்தால் அமைதி நம் மனதைத் தழுவும் என்று பதிலளித்தார்.

என்ன ஓர் அருமையான விளக்கம்! அவர் ஒரு உணுதச்tடிணிண கொடுத்துவிட்டார். ஆனால், நான், எனது என்ற எண்ணத்தை, நம் மனதிலிருந்து எப்படி அகற்ற முடியும்? இதை அகற்றுவது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம்! இதற்கு உரிய பக்குவமான நல்ல கல்வி முறையை எப்படி நாம் கொண்டு வருவது? என்பதுதான், இப்போது நம்மிடையே உள்ள கேள்வி நம் முன்னால் இருக்கும் சவால். அந்த சவாலை எப்படி சமாளிப்பது? அமைதியை எப்படி அடைவது என்ற என் கேள்விக்கு, விடை தேடும் என் பயணம் தொடர்ந்தது. இப்போதும் அந்தப் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

கிறிஸ்தவ பாதிரியார் வழங்கிய செய்தி: நான் பல்கேரிய நாட்டிற்குச் சென்றேன். அங்கு கிறிஸ்தவர்களுக்கு உரிய ஒரு சர்ச்சுக்குச் சென்றேன். அங்கு 90 வயதுடையவர்கள் இருந்தார்கள். தாவங்கில் எனக்குக் கிடைத்த செய்தியின் தொடர்ச்சியாக, அங்கு இருந்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் எனக்கு ஒரு வாக்கியம் அளித்தார். அந்த வாக்கியம், மன்னிப்பு! என்ன உன்னதமான வாக்கியத்தை பாதிரியார் எனக்குத் தந்தார்!. அங்கு, மன்னிப்பு என்பது, எப்படி மக்களின் வாழ்க்கையைப் பண்படுத்தும் பக்குவப்படுத்தும் என்பது பற்றிய, ஓர் அருமையான விளக்கம் பெற்றேன்.

விவேகானந்தர் பிறந்த இடத்தில்: அதன் தொடர்ச்சியாக நான், கொல்கத்தாவில் சுவாமி விவேகானந்தர் பிறந்த இடத்திற்குச் சென்றேன்.
எனக்குக் கிடைத்த அனுபவங்களை, அங்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சந்நியாசிகளுடன் நான் பகிர்ந்துகொண்டேன்.
அப்போது அங்கு எனக்குக் கிடைத்த பதில் என்னவென்றால், கொடை அதாவது, கொடுக்கும் குணம். கொடையுடன், புத்த பிட்சுவும், கிறிஸ்தவ பாதிரியும் கூறிய அத்தனை குணங்களும் சேர்ந்திருந்தால் அது நாட்டில் அமைதிக்கு வித்திடும் என்பதாகும்.
சூபி மகான்: இந்தத் தகவலோடு அஜ்மீர் ஸரீப் சென்றேன். அங்கு நான் வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் சென்றேன். அங்கு இருந்த சூபி மகானிடம், என்னுடைய அதே கேள்வியைக் கேட்டேன். அதற்கு அவர், ஆண்டவனின் படைப்பில் தேவதையும் உண்டு, சைத்தானும் உண்டு. நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களுக்கு வித்திடும். நல்ல செயல்கள் அன்பை வளர்க்கும். அன்பு அமைதிக்கு வித்திடும் என்றார்.

காந்திஜி வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி: நல்ல செயல்களைப் பற்றி நினைக்கும்போது, காந்திஜியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை, நான் இங்கு மாணவர்களிடமும் இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
காந்திஜியின் 9ஆவது வயதில், அவரது தாயார், காந்திஜிக்கு ஓர் அறிவுரையைத் தந்தார்.

அந்த அறிவுரை இதுதான்:
மகனே, நீ உன் வாழ்க்கையில், துன்பத்தில் துவளும் யாராவது ஒருவரின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கி அவரைத் துன்பத்திலிருந்து மீட்டெடுத்து முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றால் நீ மனிதனாகப் பிறந்ததன் பலன் உன்னை முற்றிலும் வந்தடையும். கடவுள் எப்போதும் உனக்கு அருள் செய்வார். இந்த அறிவுரை, இந்தப் பூமியில் பிறந்த எல்லா மக்களும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஓர் அறிவுரையாகும். இதிலிருந்து என்ன தெரிகிறது? இவ்விதம் சிறு வயதில் இளம் மனதில் விதைக்கும் விதை, மிகவும் நல்ல பலனைத் தருகிறது என்பதற்கு நம்மில் அனேக உதாரணங்கள் இருக்கின்றன. எனவேதான் நாம் நமது இளைஞர்களைச் சரியான முறையில் பக்குவப்படுத்தித் தயார் செய்தால்தான், நாம் நமது இலட்சியமான வளமான இந்தியாவை 2020க்குள் மாற்ற முடியும் இன்னும் 10 ஆண்டுகளில் நாம் மாற்ற முடியும்.

இளைஞர்களும் வளர்ந்த இந்தியாவும்: இந்தியா 2020இல் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதுதான், நம் நாட்டின் குறிக்கோள்.
வளமான நாடு என்றால், பொருளாதார வளம் மிக்க 100 கோடி மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே நமது நாட்டின் இலட்சியம்.
இளைஞர்களுக்கு வேலையில்லை என்ற நிலைமை மாறி நல்ல வேலை, நல்ல கல்வி, நல்ல பயிற்சி உடைய நல்ல இளைஞர்கள் இந்த நாட்டிற்குத் தேவை. இதற்குச் சந்தர்ப்பங்கள் இப்போது உருவாகிக்கொண்டிருக்கின்றன. இளைய சமுதாயம், எழுச்சிமிக்க எண்ணங்கள் கொண்ட இளைய சமுதாயம் நம் நாட்டின் ஓர் அரும்பெரும் செல்வமாகும். 2020இல் எப்படி இந்தியா ஒரு வளமான நாடாக மாற வேண்டும் என்ற என் எண்ணத்தை, நான் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தேன். அதை இப்போது உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உங்கள் சிந்தனைகள் ஒன்றுபட்டால் உங்கள் செயல்கள் ஒன்றுபட்டால், வளமான இந்தியா உருவாக வேண்டும் என்ற இலட்சியம் நிறைவேறும். அந்த இலட்சியம் என்ன? ஒளி படைத்த கண்ணினாய் வா, வா, வா!

1.கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் இருக்கும், சமூக பொருளாதார இடைவெளி குறைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
2. சுத்தமான தண்ணீரும், அனைவருக்கும் தேவையான எரிசக்தியும் எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
3.விவசாயம், தொழில்கள், சேவைத்துறைகள் ஆகியவை ஒருங்கிணைந்து, மக்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
4. சமூக, பொருளாதார வேறுபாடுகளை மீறி பண்பாடு நிறைந்த ஒரு தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
5.விஞ்ஞானிகளுக்கும், அறிவார்ந்த வல்லுநர்களுக்கும், தொழில் முதலீட்டார்களுக்கும் உகந்த நாடாக ஏற்ற ஓர் இடமாக இந்தியாவை நாம் மாற்ற வேண்டும்.
6. வேறுபாடு இல்லாமல், தரமான மருத்துவ வசதி அனைவருக்கும் கிடைக்கக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
7. ஒரு பொறுப்பான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சிமுறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
8.வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கல்லாமை களையப்பட்டு, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்தில் இருக்கும் யாரும், நாம் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டோம் என்ற எண்ணம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
9. ஓர் இனிமையான, வளமான, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, சுகாதாரமான, வளமிக்க வளர்ச்சி பாதையை நோக்கிப் பீடுநடை போடக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
10. உலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி வழிநடத்திச் செல்லக்கூடிய தலைவர்களைப் பெற்ற நாடாகவும் இந்தியாவை மாற்ற வேண்டும்.

சுவாமி விவேகானந்தரின் கனவு: இப்படிப்பட்ட இந்தியாவை நாம் படைக்க வேண்டுமானால் எழுச்சி மிக்க எண்ணங்கள் கொண்ட இளைஞர்கள் இன்றியமையாத தேவை. அப்படிப்பட்ட இளைஞர்களை உருவாக்குவதுதான் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் இலட்சியம்.
எழுச்சி மிக்க இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் சுவாமி விவேகானந்தரின் கனவு. சுவாமி விவேகானந்தர் விரும்பிய அப்படிப்பட்ட இளைஞர்களை நாம் உருவாக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள், தங்கள் எதிர்காலம் பற்றிய பயமே இல்லாமல் வாழ வேண்டும். என் முன்னால் பல காட்சிகள் தோன்றுகின்றன. ஒரு காட்சியில் 20 வயதிற்குள் இருக்கும் எல்லா இளைஞர்களையும் பார்க்கிறேன். அவர்களுடைய மலர்ந்த முகங்களைப் பார்க்கிறேன். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல கல்வியின் பயனாக அவர்கள் ஆசிரியர்களுக்கு நல்ல மாணவர்களாகவும், பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகளாகவும், நாட்டிற்கு நல்ல குடிமகன்களாகவும் திகழ வேண்டும். இளைய சமுதாயத்தை, எப்படி அறிவார்ந்த சமுதாயத்திற்கு அழைத்துச் செல்வது? என்பது மிகவும் பெரிய ஒரு பணி.
அறிவார்ந்த சமுதாயத்தின் ஆரம்பம் என்ன? அதை அடைய வேண்டும் என்றால், அதற்கு உரிய அறிவின் இலக்கணம் என்ன? என்று, இப்போது பார்ப்போம்.

அறிவின் இலக்கணம்:
அறிவின் இலக்கணம் என்ன தெரியுமா? அறிவின் இலக்கணம் என்று சொல்லப்படுவது எது? அதற்கு மூன்று தன்மைகள் அவசியம். அதற்கு உரிய ஒரு சமன்பாட்டை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
அறிவு = கற்பனைச் சக்தி+மனத்தூய்மை+ மனஉறுதி.
கற்பனைச் சக்தி: கற்பது கற்பனைச் சக்தியை வளர்க்கிறது, கற்பனைச் சக்தி சிந்திக்கும் திறமையைத் தூண்டுகிறது,
சிந்தனை அறிவை வளர்க்கிறது, அறிவு உன்னை மகானாக்குகிறது. கற்பனைச் சக்தி உருவாவதற்குக் குடும்பச் சூழ்நிலையும், பள்ளி சூழ்நிலையும்தான் மிகவும் முக்கிய காரணங்களாக அமையும். அந்தச் சூழ்நிலை உருவாவதற்கு என்ன வேண்டும்? ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மனத்தூய்மை இருக்க வேண்டும்.

மனத்தூய்மை: உங்களையெல்லாம் இங்கு பார்க்கும்போது, எனக்கு ஒரு தெய்விகப் பாடல் நினைவுக்கு வருகிறது. நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைத் திருப்பிச் சொல்வீர்களா? பசி நேரமா? மிகவும் பசியாக இருக்கிறதா? நான் சொல்வதை நீங்கள் சொல்வீர்களா?
(குழுமியிருந்த மக்கள், சொல்கிறோம் என்று கூறினார்கள்.) (அதைத் தொடர்ந்து டாக்டர் கலாம், பின்வரும் பாடலை ஒவ்வொரு வரியாகக் கூறினார். அவர் கூறியதை, மாநாட்டு பந்தலில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் திருப்பிக் கூறினார்கள்.)

எண்ணத்தில் தூய்மை இருந்தால்,
நடத்தையில் அழகு மிளிரும்.
நடத்தையில் அழகு மிளிர்ந்தால்,
குடும்பத்தில் சாந்தி நிலவும்.
குடும்பத்தில் சாந்தி இருந்தால்,
நாட்டில் சீர்முறை உயரும்.
நாட்டில் சீர்முறை உயர்ந்தால்,
உலகத்தில் அமைதி நிலவும்.

(இப்போது டாக்டர் கலாம் கூறுவதைக் குழுமியிருந்தவர்கள் திருப்பிச் சொல்லவில்லை. டாக்டர் கலாம் உரையைத் தொடர்கிறார்.)

எல்லாவற்றிற்கும் அடிப்படை மனத்தூய்மை என்பதை, இந்தச் சிறிய கவிதை உங்களுக்குத் தெளிவாக்கி இருக்கும் என்று நம்புகிறேன்.
மனத்தூய்மை எங்கிருந்து வரும்? இதை நாம் மூன்றே மூன்று பேர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் யார்? அவர்கள் 1.தாய், 2.தந்தை, 3.ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியவர்கள்தான். மனஉறுதி: (இப்போது மாநாட்டில் குழுமியிருந்தவர்கள், டாக்டர் கலாம் சொல்வதைத் திருப்பிச் சொல்கிறார்கள்.) புதிய எண்ணங்களை உருவாக்கும் மனஉறுதி இன்று என்னிடம் மலர்ந்திருக்கிறது. எனக்கு என்று ஒரு புதிய பாதையை உருவாக்கி, அதில் நான் பயணம் செய்வேன். முடியாது, முடியாது, முடியாது என்று எல்லோரும் சொல்வதை, என்னால் செய்ய முடியும் என்ற மனஉறுதி என்னிடம் உருவாகிவிட்டது. புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை என்னால் செய்ய முடியும் என்ற மனஉறுதி, என்னிடம் என்றென்றைக்கும் கொந்தளிக்கிறது. இந்த மனஉறுதிகள் அனைத்தும் இளைய சமுதாயத்தின் சிறப்புகளாகும், அஸ்திவாரமாகும். இந்த நாட்டின் இளைய சமுதாயத்தின் உறுப்பினரான நான், என் கடின உழைப்பாலும், மனஉறுதியாலும் தோல்வியைத் தோல்வியடையச் செய்து, வெற்றி பெற்று என் நாட்டை வளமான நாடாக்குவேன் என்று இளைஞர்கள் உறுதியாக நினைக்க வேண்டும். (இவ்விதம் அனைவரும் சொல்லி முடித்த பிறகு, டாக்டர் கலாம் தன் சொற்பொழிவைத் தொடர்கிறார்.)
இளைய பாரதத்தினாய் வா, வா, வா!
நண்பர்களே! உள்ளத்தில் உறுதி வேண்டும் என்று சொன்னேன்.
அந்த மனஉறுதி எப்படி வரும்? யார் மூலம் வரும்? நல்ல மனிதர்கள், நல்ல ஆசிரியர்கள், நல்ல புத்தகங்கள் ஆகியவை மனதை உறுதி பெற வைக்கும். இந்த மனஉறுதி நாம் எந்தக் காரியத்தையும் செய்யலாம், செய்ய முடியும், செய்து வெற்றி பெற முடியும் என்ற உறுதியையும், நம்பிக்கையையும் அளிக்கிறது. மனதில் உறுதி இருந்தால், வெற்றி அடைவீர்கள் நீங்கள் நிச்சயமாக வெற்றி அடைவீர்கள். அதாவது, 2020க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலட்சியத்தை நாம் அடைய வேண்டுமானால் அது இந்தியாவின் 54 கோடி இளைஞர்களின் பங்களிப்புடன்தான் சாத்தியமாகும். அனைத்து துறைகளிலும் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு, முதலில் அறிவார்ந்த இளைஞர்களை நாம் தயார் செய்ய வேண்டும். இளைஞர்களின் பொன்னான நேரம் நல்ல திறமையை, நல்ல அறிவை, நல்ல ஆற்றலைப் பெருக்கிக்கொள்ளும் விதத்தில் அமைய வேண்டும். எனவே இத்தகைய இளைஞர்களைச் செம்மைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் சீரிய முயற்சிகள் வெற்றியடையவதற்கு என் நல்வாழ்த்துக்கள்.

மேலும் புதுச்சேரி செய்திகள் :

No comments:

Post a Comment