For Read Your Language click Translate

26 May 2014

உள்ளிருக்கும் நரகம் - ஓஷோ


தியானத்திற்கு 112 முறைகள் இருக்கின்றன.அவை பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டவை.நவீன மனிதனுக்காக சில முறைகளை நான் உருவாக்கியிருக்கிறேன்.காரணம் பழைய முறை முற்றிலும் மாறுபட்ட ஒரு சமுதாயத்திற்காக,எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்டவை.
நிகழ்கால மனிதன் எளிமையாக இல்லை,மிக சிக்கலடைந்து இருக்கிறான்.பழைய முறைகள்,அடக்கப் படாத மக்களுக்கானவை.இந்த பத்தாயிரம் ஆண்டுகளில்,மதங்கள் மனிதனை ஒடுக்கிவிட்டன.காமத்தின் விஷயத்திலும்,மற்ற அம்சங்களிலும்,மனித குலத்தை,அதன் இயல்பிற்கு எதிராகவே திருப்பி விட்டு விட்டன.
அதனால்தான் வெளியேற்றும் முறைகளை உருவாக்கியிருக்கிறேன்.ஒடுக்கப்பட்டுள்ள அனைத்தையும்,உங்கள் வாழ்வில் கொட்டி கிடக்கும் எல்லா குப்பை கூளங்களையும்,வெளியேற்றி,உங்களை சுத்தப்படுத்தும் வழிமுறைகள் அவை.
ஒவ்வொரு நாளும்,அறுபது நிமிடம்,உலகை மறந்து விடுங்கள்.உலகம் உங்களை விட்டு சுத்தமாக மறைந்து போகட்டும்.நீங்களும் உலகை விட்டு மறைந்து போய் விடுங்கள்.ஆரம்பத்தில் மேகங்களே தென்படும்.கவலை படாதீர்கள்.அந்த மேகங்கள்,உமது அடக்கப்பட்ட உணர்வுகளால் உருவாக்கப்பட்டவை.
சினம்,வெறுப்பு,பேராசை போன்ற பலவிதமான கரும் சுழிகள் வழியாக நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள்.அவற்றை நீங்கள் ஒடுக்கியதால்,அவை அங்கே இருக்கின்றன.உங்கள் போலி மதங்கள்தாம் அவற்றை ஒடுக்க சொல்லி உபதேசித்தன.அதனால்,அவை காயங்கள் போல் அங்கே இருக்கின்றன.நீங்கள் அவற்றை ஒளித்து வைத்திருக்கீறீர்கள்.
அதனால்தான்,வெளியேற்றுதல் என்பதை நான் முதலாவதாக வலியுறுத்துகிறேன்.மாபெரும் வெளியேற்றத்தை நீங்கள் செய்யாவிட்டால்,பல மேகங்களை கடக்க வேண்டி வரும்.அது களைப்பை உண்டாக்கும்.நீங்கள் பொறுமை இழந்து விடுவீர்கள்.மறுபடியும் வெளி உலகின் பக்கமாக திரும்பி விடவும் நேரும். அங்கே ஒன்றுமே இல்லை.தாமரையும் இல்லை.அதன் நறுமணமும் இல்லை.வெறும் குப்பை கூளம் ஒரே நாற்றம் என்று நீங்கள் சொல்லிவிடுவீர்கள்.
கண்களை மூடினால்,உள் நோக்கிய பயணம் ஆரம்பமாகும் என்பது உங்களுக்கு தெரியும்.அங்கே என்ன தென்படும்?முன்னே சொல்லப்பட்ட புத்தர்களின் பூமியை நீங்கள் காண மாட்டீர்கள்.மாறாக,நரகம்,வேதனைகள்,ஒடுக்கப்பட்ட உணர்வுகளே உங்களுக்காக காத்திருக்கும்.
பல பிறவிகளின் சினம் ஒன்று திரண்டிருக்கும்.அங்கே ஒரே நெரிசல்.அதனால்,ஒருவர் வெளியில் இருக்கவே விரும்புகிறார்.திரைப்படத்திற்கு போக விரும்புகிறார்;கிளம்புக்கு போக விரும்புகிறார்.
ஆகவே,ஒருவர் உள்ளே பார்க்க ஆரம்பித்தவுடன் பெரிய குழப்பமே எதிர் கொள்கிறது.அங்கே மகத்தான ஆசீர்வதிப்பு இருப்பதாகவும்,சிறந்த நறுமணம் நிலவுவதாகவும்,அது நிரந்தரம் என்றும் புத்தர் சொல்லியிருக்கிறார்.
ஆனால்,உள்ளே போய் பார்த்தால்,நரகம்தான் இருக்கிறது.அங்கே புத்த பிரதேசம் இல்லை.மாறாக அடால்ப் இட்லரின் கொலை முகாம்களே காணப்படுகின்றன.இயல்பாகவே நீங்கள் இதெல்லாம் என்ன?எல்லாம் மடத்தனமாக அல்லவா காணப்படுகிறது..வெளியில் இருப்பதே நல்லது என்று நினைக்க தொடங்கி விடுவீர்கள்.ஏன் காயங்களோடு விளையாட வேண்டும்?அவை வலிக்கவும் செய்கின்றன.சீழ் வேறு பீறிட்டு வழிகிறது.ஒரே அசிங்கம்,நாற்றம் என்று தோன்றுகிறது.
வெளியேற்ற முறையே உதவ கூடியது.நீங்கள் வெளியேற்ற முற்பட்டால்,குழப்படியான தியானம் வழியாக சென்றால் உள்ளிருக்கும் மேகங்களை எல்லாம் விரட்டி விடலாம்.இருளை எல்லாம் வெளியே தள்ளி விடலாம்.அப்புறம் மன நிறைவு எளிதில் வாய்க்கும்.அதனால்தான்,நான் தாறுமாறான தியான முறையை ஆரம்பத்தில் கடைப்பிடிக்க சொல்கிறேன்.
முதலில்,பரபரப்பான தியானங்கள்.அப்புறம் அமைதியான தியானங்கள்.அந்த குப்பை கூளங்களை வெளியேற்றினால்தான் அமைதியான தியான முறையில் அடி எடுத்து வைக்க முடியும்.சினத்தை வெளியே தூக்கி எறிய வேண்டும்,பேராசையை தூக்கி எறிய வேண்டும்.இவையெல்லாம்,உள்ளே அடுக்கின் மேல் அடுக்காக படிந்திருக்கின்றன.ஒரு முறை எல்லாவற்றையும் வெளியே தூக்கி வீசி வீட்டால்,மெல்ல உள்ளே நழுவி விடலாம்.அப்போது,தடுப்பதற்கு அங்கே எதுவுமே இருக்காது.
சட்டென புத்த பூமியின் பேரொளி தோன்றி விடும்.உடனடியாக நீங்கள்,முற்றிலும் வேறுபட்ட உலகில் இருப்பீர்கள்

No comments:

Post a Comment