For Read Your Language click Translate

17 May 2014

நட்சத்திர ரகசியங்கள்

வான மண்டலத்தைப் பிரிக்கும் விசாகம்! – 1


Picture shows Libra (Tula Rasi) constellations
நட்சத்திர அதிசயங்கள்
வான மண்டலத்தை இரு பிரிவுகளாகப் பிரிக்கும் விசாகம் ஒரு அபூர்வமான அதிசய நட்சத்திரம்! எல்லை இல்லாத அதன் பெருமைகளில் சிலவற்றைப் பார்ப்போம்!

வான மண்டலத்தைப் பிரிக்கும் விசாகம்! – 1
ச.நாகராஜன்
விசாகம் என்றால் புதிய பிரிவு
 
மனித குலத்திற்கே முக்கியமான நட்சத்திரமாகத் திகழும் விசாக நட்சத்திரம் பல அதிசயங்களையும் அபூர்வ உண்மைகளையும் நம்மை அறியச் செய்து பரவசமூட்டும் நட்சத்திரம். 27 நட்சத்திரங்களில் 16வது நட்சத்திரமாக அமையும் இது துலா ராசியில் அமைந்துள்ளது.இந்த நட்சத்திரத்திற்கு ராதா என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஆகவே தான் இதைத் தொடர்ந்து அடுத்து வரும் நட்சத்திரத்தை ராதாவைத் தொடர்ந்து வருவது என்ற பொருளுடைய அனுராதா (அல்லது அனுஷம்) என்ற பெயரால் அழைக்கிறோம். விசாகம் என்ற சொல்லை வி+ சாகம் என்று இரண்டாகப் பிரித்துப் பொருளைக் கொள்ள வேண்டும். ‘வி’ என்றால் புதிய அல்லது வேறு என்று பொருள் ஆகும். ‘சாகம்’ என்றால் பிரிவு அல்லது கிளை என்று பொருள் ஆகும். ஆக விசாகம் என்றால் புதிய பிரிவு என்று பொருள்.

வானத்தை நம் முன்னோர்கள் இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்தனர். இதன்படி வான கோளத்தில் தென் கோளப் பகுதி வட கோளப் பகுதி  என இரண்டு கோளப் பகுதிகள் உள்ளன.வடக்கு மண்டலம் அல்லது கோளத்தைப் பிரிக்கும் நட்சத்திரமாக விசாகம் அமைகிறது. அதாவது புதிய பிரிவின் ஆரம்ப நட்சத்திரம் அது! இந்த ஆரம்பத்தைப் பிரிக்கும் ராசியாக துலா ராசி அமைகிறது.மேஷம், ரிஷபம், மிதுனம்,
கடகம்,சிம்மம், கன்னி ஆகிய ஆறு ராசிகளும் ஒரு பகுதியாக இருக்க துலாத்திலிருந்து அடுத்த மண்டலம் ஆரம்பிக்கிறது!


இன்னொரு முக்கியமான அறிவியல் விஷயம், துலாத்தில் சூரியன் இணையும் போது இரவும் பகலும் சம அளவு என்று ஆகிறது. இரவையும் பகலையும் சமமாகக் காட்டும் தராசு (பாலன்ஸ்) துலாம் தான். அத்துடன், கோடை காலத்தையும் குளிர் காலத்தையும் பிரித்து பருவத்தை சமமாக்கும் மாதம் வைகாசி. விசாக நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி அந்த மாதத்திற்கு வைகாசி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. விசாக நட்சத்திரம் வட்ட வடிவமாக தராசு போல உள்ள ஒரு நட்சத்திரம் என்பது இன்னொரு வியப்பூட்டும் சுவையான செய்தி!

ஆக வான மண்டலத்தை இரு பிரிவுகளாகப் பிரிப்பது விசாகம். இரவும் பகலையும் சமமாகப் பிரிப்பதும் விசாகம். கோடை காலம் குளிர்காலம் என பருவத்தை இரண்டாகப் பிரிப்பதும் விசாகம். இத்தனை விஷயங்களை சமன் செய்யும் இது இருக்கும் ராசி துலா ராசி என்பது பொருத்தம் தானே! நம் முன்னோர்களின் அறிவியல், ஆன்மீக, வானவியல், ஜோதிட அறிவை எண்ணி வியந்து வியந்து பிரமிக்கலாம்!

தென் மண்டலத்தை உருவாக்கிய விஸ்வாமித்திரர் 
பொய்யே உரைக்காத வால்மீகி முனிவர் ராமாயணத்தில் பால காண்டத்தில் 60ம் ஸர்க்கத்தில் விஸ்வாமித்திரர் திரிசங்குவிற்காகப்  படைத்த தென் மண்டலத்தைப் பற்றி மிக விரிவாக எடுத்துரைக்கிறார். வானில் சென்ற திரிசங்குவை இந்திரன் தடுக்க அவன் ‘த்ராஹி த்ராஹி’ (காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்) என்று விஸ்வாமித்திரரிடம் அபயம் கேட்டுக் கீழே விழ விஸ்வாமித்ரர் திஷ்ட திஷ்ட (இரு இரு) என்று சொல்லி அவனை நிறுத்தி ஒரு புதிய மண்டலத்தையே ச்ருஷ்டிக்கிறார்.

ச்ருஜன் தக்ஷ¢ண மார்கஸ்தான் சப்தரிஷீன் அபரான் புன: I                         நக்ஷத்ர வம்சபரம்பரம் அச்ருஜத் க்ரோத மூர்ச்சித: II (பால காண்டம் 60ம் ஸர்க்கம்,ஸ்லோகம் 20)
“பிராஜாபதியைப் போலவே விஸ்வாமித்ரர் தெற்கில் சப்தரிஷி மண்டலத்தை உருவாக்கினார். அதே போல தெற்கில் வடக்கில் இருப்பது போல நட்சத்திரங்களையும் உருவாக்கினார்.”

வானத்தில் தேவ பாகத்திலும் அசுர பாகத்திலும் உள்ள நட்சத்திரங்களை ஒப்பு நோக்கினால் நாம் வியப்பை அடைவோம். வடக்கே உள்ள (சௌம்ய) துருவ நட்சத்திரம் போல தெற்கே யம துருவம் உள்ளது. மயில் வடிவம் போல உள்ள சப்தரிஷி மண்டலம் வட பாகத்தில் இருக்கும் போது மயூர மண்டலம் என்ற சப்தரிஷி மண்டலம் தெற்கே உள்ளது. மான் தலை உள்ள ஓரியன் வடக்கில் உள்ள போது அதே மான் தலை போல உள்ள நட்சத்திரம் உடைய மகரம் தென் மண்டலத்தில் உள்ளது.ஆருத்ரா வடக்கில் இருப்பது போல விசாகம் தெற்கில் உள்ளது. வடக்கின் ரோஹிணி போல தெற்கில் ஜேஷ்டா (கேட்டை) உள்ளது. வடக்கில் உள்ளஅஸ்வினி இரட்டையர் போல இரட்டையரான விசித்ரதுவை தெற்கில் காணலாம்.

ஆக இப்படி மிக முக்கியமான பிரிவைச் சுட்டிக் காட்டும் ஒரு நட்சத்திரமாக விசாகம் திகழ்கிறது!

-விசாக நட்சத்திர அதிசயம் தொடரும்
 


நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – 2

நட்சத்திர அதிசயங்கள்
 சிவ புராணம் கூறும் ரோஹிணியின் கதையைப் பார்த்தோம்.மஹாபாரதம் கூறும் கதையின் விளக்கத்தைப் பார்ப்போம்!
நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – 2
ச.நாகராஜன்
 
மஹாபாரதக் கதையின் உட்பொருள்
மஹாபாரதம் “ரோஹிணி சில காலம் அனைவரின் பார்வையிலிருந்து மறைந்து மீண்டும் தன் பழைய இடத்தில் தோன்றினாள்” என்று கூறுவதன் பொருள் என்ன?
ப்ரஜாபதி ரோஹிணி நட்சத்திரத்தின் அதி தேவதை.அத்தோடு ரிஷிகள் செய்யும் யாகங்களுக்கும் அதிகாரி!தேவர்களின் நாளும் மனிதர்களின் நாளும் வேறு வேறு. தேவர்களின் இரவு நேரத்திற்கு அதிபதி ப்ரஜாபதி தான்.இரவு நேரத்தில் இருக்கின்ற ஒரே வெளிச்சம் சந்திரனின் வெளிச்சம். யாகத்திற்கு இந்த சந்திர ஒளி தேவையாக இருந்தது.ஆகவே தான் சந்திரனே ப்ரஜாபதி என்று கூறப்பட்டான்.
தைத்திரீய பிராமணம், “ப்ரஜாபதி சிந்தனையில் ஆழ்ந்தார்.அவர் தனது வயிறு காலி ஆவதை உணர்ந்தார். உடனடியாகத் தவத்தை மேற்கொண்டார்.எதையாவது படைக்க வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு ஏற்பட்டது.புதிய விராட்டை அதாவது அண்டத்தை சிருஷ்டித்தார்.தேவர்களையும் அசுரர்களையும் அழைத்து இந்தப் புதிய அமைப்பை ஏற்குமாறு வேண்டினார். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்” என்கிறது. அந்த விராட் தான் ரோஹிணி! ப்ரஜாபதியின் புதிய அமைப்பில் ரோஹிணிக்கு முதல் இடம் கிடைத்தது. அதாவது மேல் ஸ்தானம் கிடைத்தது.

இதை அறிவியல் ரீதியாகப் பார்ப்போம். வானத்தின் சுழற்சி கடிகார முள் இடமிருந்து வலமாகச் சுழலுவது போன்ற சுழற்சி!க்ளாக்வைஸ் சுழற்சி என்று சாதாரணமாக இதைக் கூறுகிறோம்.இடைவிடாது சுழலும் வானச் சுழற்சியில் மாறாத நட்சத்திரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தை அடையாளமாக வைத்துக் கொண்டே வானத்தின் திசையைக் கணிக்க வேண்டியதாக இருக்கிறது.ஆனால் இந்த துருவ நட்சத்திரம் கூட  சுழற்சியில் மிக மிகச் சிறிய அளவில் இடம் பெயர்கிறது.
துருவ நட்சத்திரத்தை முதலில் பார்த்த அதே இடத்தில் பார்க்க சரியாக 25710 ஆண்டுகள் ஆகிறது, (கணித சௌகரியத்திற்காக 26000 ஆண்டுகள் எனக் கொள்வோம்)செலஸ்டியல் ஈக்வேஷன் எனப்படும் வானத்து ரேகை ஒவ்வொரு நட்சத்திரத்தின் வழியாகவும் ஒவ்வொரு கால கட்டத்தில் போகும்.கி.மு 2700ல் இந்த வானத்து ரேகை ரோஹிணியின் வழியே சென்றது.இந்தக் கால கட்டத்தில் தான் நட்சத்திரங்களை ஒரு புதிய அமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.ஆகவே படைப்பு உந்துதல் உண்டான ப்ரஜாபதி ரோஹிணியை ‘பழைய இடத்திற்குச் செல்ல’ வைத்தார்.பல காலம் களை இழந்திருந்த ரோஹிணி வெட்கத்தால் சிவந்து புதிய பொலிவுடன் கவர்ச்சியுடன் போனாள்.மஹாபாரதம் கூறும் கதையின் உட்பொருள் வானியல் ரீதியாக இது தான்!

இப்படி வானவியல் கணிதம், வானச் சுழற்சி, புதிய அமைப்பை மனித குல நன்மைக்காக செய்ய வேண்டிய கட்டாயம் ஆகியவற்றை பாமரனுக்கு எப்படி உணர்த்துவது?அறிஞர்களும் கூடத் திணறும் அற்புத கணிதம் இது. ஆகவே தான் இதை எளிமைப் படுத்தி இதிஹாஸங்களும் புராணங்களும் சுவையான கதையாக அனைத்தையும் விவரித்தன! புராணக் கதைகளை ஒரு சிறந்த வானவியல் நிபுணர் மட்டுமே அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ள முடியும்.

முதல் தர ஒளியுடைய நட்சத்திரம்
அல்டிபெரான் எனப்படும் ரோஹிணி 65 ஒளி வருட தூரத்தில் உள்ளது.106 மாக்னியூட்டில் அமைந்துள்ள முதல் தர நட்சத்திரமாகும் இது! சகட அமைப்பில் இதைக் காணலாம் என அறிவியல் கூறுகிறது. ஆக விஞ்ஞானமும் புராணமும் ஒரே விஷயத்தை தங்கள் தங்கள் வழியில் விரிவாகக் கூறுவதைப் பார்க்க முடிகிறது!

சிவந்த மணி பெற்ற நீல ரத்னம்!
ரோஹிணி நட்சத்திரத்தின் பெருமை எல்லையற்றது.பல் வேறு மொழிகளில் ஏராளமானவர்கள் அதைப் புகழ்ந்து பாடல்களை எழுதியுள்ளனர்.ஒரே ஒரு பாடலை மட்டும் இங்கு பார்ப்போம். ரோஹிணி நட்சத்திரத்தை கண்ணன் தன் பிறப்புக்காகத் தேர்ந்தெடுத்ததை உலகம் நன்கு அறியும்.அதனால் ரோஹிணியின் பெருமை உச்சத்திற்குச் சென்று விட்டது. ரோஹிணியையும் சுவாதி நட்சத்திரத்தையும் பில்வமங்களர் க்ருஷ்ணகர்ணாம்ருதத்தில் ஒப்பிட்டு மகிழ்ந்து நம்மையும் மகிழ்விக்கிறார்.
க்ருஷ்ணகர்ணாம்ருதத்தில் இரண்டாவது ஆஸ்வாஸத்தில் 65வது பாடலாக அமைந்துள்ள இப்பாடலை ராமகிருஷ்ண மடம் அண்ணாவின் பதம் பிரித்துத் தந்துள்ள அர்த்தத்துடன் பார்ப்போம்:

ஸ்வாதீ ஸபத்னீ கிலதாரகாணாம் முக்தாபலானாம் ஜனனீதி ரோஷாத் I               ஸா ரோஹிணீ நீல-மஸூத ரத்னம் க்ருதாஸ்பதம்    கோபவதூ குசேஷ¤ II
தாரகாணாம் – நட்சத்திரங்களின்                                              ஸபத்னீ – சக்களத்தியாகிய                                                   ஸ்வாதீ – ஸ்வாதீ என்பவள்                                            முக்தாபலானாம் – முத்துக்களுக்கு                                               ஜனனீ கில இதி – தாயாகி விட்டாள் அல்லவா என்ற                           ரோஷாத் – கோபத்தால்                                                        ஸா ரோஹிணீ – நட்சத்திரங்களில் ஒருத்தியாகிய அந்த ரோஹிணீ                 கோபவதூ குசேஷ¤ – இடைப் பெண்களின் மார்பகங்களின் மத்தியில்                      க்ருத ஆஸ்பதம் – இடம் பெற்று விளங்கும்                                       நீலம் ரத்னம் – கிருஷ்ணனாகிற நீல ரத்னத்தை                                   அஸூத – பெற்றாள்

ஸ்வாதி நட்சத்திரம் தோன்றும் போது விழும் மழைத்துளிகளைத் தம்முள் ஏந்தி சிப்பிகள் முத்தை உருவாக்கும் என்பதைச் சுட்டிக் காட்டி ஸ்வாதிக்கு போட்டியாக நீல ரத்னத்தை ரோஹிணீ பெற்றுப் பெருமை அடைந்தாள் என்று கூறும் இந்தச் செய்யுள் மிகச் சுவையானது; ஆழ்ந்த பொருளைக் கொண்டது!
நீல ரத்னத்தைப் பெற்ற சிவந்த மணியான ரோஹிணியைப் போற்றி வணங்குவோம்!
************


நட்சத்திர அதிசயங்கள்- பகுதி 1


நட்சத்திர அதிசயங்கள்
வான மண்டலத்தில் இருபத்தியேழு நட்சத்திரங்களில் முதலிடத்தைப் பெறுவது அஸ்வினி! இதன் அதி தேவதை அஸ்வினி தேவர்கள்! எத்தனை ரஹஸ்யங்கள் இதற்குள் உள்ளன தெரியுமா? அஸ்வினி தேவர்கள், இழந்த கண் பார்வையை அருளி உபமன்யுவை மஹரிஷி ஆக்கிய அற்புத சரிதத்தை இந்த வாரம் பார்ப்போம்!
அஸ்வினி ரஹஸ்யம்! – 1
எழுதியவர்: ச.நாகராஜன்
அதி ரஹஸ்ய அஸ்வினி
இருபத்தியேழு நட்சத்திரங்களுள் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் அஸ்வினி நட்சத்திரத்தின் பெருமைகளும் மர்மங்களும் அதிசயங்களும் ரஹஸ்யங்களும் ஏராளம், ஏராளம்! மேஷ ராசியில் அமைந்துள்ள அஸ்வினி நட்சத்திரத்தின் அதி தேவதை அஸ்வினி தேவதைகள். மேலை நாட்டினரால் ஆல்பா,பீடா ஏரியஸ் என இது அழைக்கப்படுகிறது. பிறருக்கு உதவி செய்வதற்கென்றே ஒரு தேவதை இருக்குமானால் அது அஸ்வினி தான்! அஸ்வினி இரட்டையரைப் பற்றிய ஏராளமான கதைகள் ரிக் வேதத்தில் உள்ளது. இது மட்டுமல்லாமல் மஹாபாரதம் மற்றும் 18 புராணங்கள் நம் மனதைக் குளிர வைக்கும் பல ரகசியங்களை அஸ்வினி பற்றிக் கூறுகின்றன.
அயோதௌம்யரின் கட்டளை
அஸ்வினி பற்றிய முக்கியமான ஒரு சரிதத்தை இங்கு பார்ப்போம்.இந்தச் சம்பவம் நிகழ்ந்த காலம் த்வாபர யுகத்தின் இறுதிக் காலம். அயோதௌம்யர் என்ற மஹரிஷிக்கு உபமன்யு, ஆருணி,வேதர் என்ற மூன்று சிஷ்யர்கள் இருந்தனர்.தௌம்யருக்கு குருகுல வழக்கப்படி உபமன்யு உள்ளிட்டவர்கள் உரிய முறையில் சேவை செய்து கொண்டிருந்தனர். ஒரு நாள் தௌம்யர் உபமன்யுவை அழைத்து,” நீ என் பசுக்கூட்டத்தை ரக்ஷ¢த்துக் கொண்டு வா” எனக் கட்டளையிட்டார். அவ்வாறே உபமன்யு பசுக் கூட்டங்களை மேய்த்துக் கொண்டு போய் மாலையில் குருவிடம் வந்து சேர்ந்தார். குரு உபமன்யுவின் தேகம் வாடாமல் இருந்ததைக் கண்டு அவரை நோக்கி, “உபமன்யு, உன் தேகம் வாடாமல் பொலிவுடன் இருக்கிறதே, நீ என்ன ஆகாரம் உண்டாய்?” என்று கேட்டார்.உபமன்யு,” குருவே! நான் யாசகம் செய்து அதனால் ஆகாரம் உண்டேன்” என்றார், அதற்கு குரு, “யாசகத்தினால் உனக்குக் கிடைப்பதை என்னிடம் இனி கொண்டு வந்து கொடுத்து விடு. அதை எனக்குச் சேர்ப்பிக்காமல் நீ உண்பது முறையன்று” என்றார். உபமன்யு அந்தக் கட்டளையை சிரமேற் கொண்டார். மறுநாள் பிட்சையில் தமக்குக் கிடைத்த அனைத்தையும் குருவிடம் உபமன்யு சமர்ப்பித்தார். அதில் ஒரு கவளம் கூட உபமன்யுவுக்குத் தராமல் தௌம்யரே அனைத்தையும் எடுத்துக் கொண்டார். பிறகு மாடுகளை மேய்க்கச் சென்ற உபமன்யு மாலையில் வீடு வந்து சேர்ந்தார்.
அவர் உடல் வாடாமல் இருந்ததைக் கண்ட குரு, “உனக்கு நான் ஒரு கவளம் கூடக் கொடுக்கவில்லையே! என்றாலும் கூட நீ உடல் வாடாமல் வந்திருக்கிறாயே! எதை ஆகாரமாக உண்டாய்?” என்று கேட்டார்.அதற்கு உபமன்யு, “குருவே! முதலில் யாசகம் எடுத்ததைத் தங்களிடம் கொடுத்து விட்டேன். இன்னொரு முறை யாசகம் எடுத்து அதை நான் சாப்பிட்டேன்” என்றார்.தௌம்யர், “உபமன்யு, நீ செய்தது சரியல்ல. உன்னுடைய இந்த செய்கையினால் பி¨க்ஷ ஜீவனம் செய்யும் மற்றவர்களுக்கு நீ இடைஞ்சல் செய்கிறாய். இப்படி நீ ஜீவிப்பதால் நீ துராசை உள்ளவனென்பது நிச்சயமாகிறது” என்றார்.குரு கூறிய அனைத்தையும் மனதில் வாங்கிக் கொண்டு உபமன்யு மாடுகளை மேய்க்கச் சென்றார். அன்று மாலை வழக்கம் போல அவர் வந்ததும் அவரை நோக்கிய குரு “ என்ன உபமன்யு, நீ வாடாமல் கொழுத்துத் தான் இருக்கிறாய், என்ன உணவை உண்டாய்?” என்று கேட்டார். அதற்கு உபமன்யு,”ஐயனே, நான் இந்தப் பசுக்களின் பாலை அருந்தி ஜீவிக்கிறேன்” என்றார்.
உடனே தௌம்யர், “அடடா, என்னுடைய அனுமதியைப் பெறாமல் பாலை அருந்தலாமா? இனி அருந்தாதே!” என்றார். குருவின் வார்த்தைகளுக்குச் சரி என்று சொல்லி உபமன்யு திரும்பினார். மறு நாள் மாலை ஆயிற்று.உபமன்யு வந்தார். குரு அவர் சற்றும் சோர்வடையாமல் இருப்பதைக் கண்டு,”உபமன்யு, இன்று எதையாவது அருந்தினாயா, என்ன?பாலை அருந்தவில்லையே!” என்று கேட்டார். “ஐயனே! பாலை அருந்தவில்லை. ஆனால் பாலைக் கன்றுகள் குடித்தபின்னர் கீழே விழும் நுரைத் துளிகளை அருந்தினேன்” என்றார், உடனே தௌம்யர்,” இந்தக் கன்றுக்குட்டிகள் பாலை போதிய அளவு அருந்தாமல் விட்டு விடுகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. ஆகவே இனி நீ நுரைத் துளிகளையும் அருந்தாதே” என்று கட்டளையிட்டார். குருவின் கட்டளையை உபமன்யு சிரமேற் கொண்டார். நுரைத் துளிகளை இனி அருந்தமாட்டேன் என்று குருவிடம் உறுதி கூறினார். கன்றுகள் அருந்திய பின்னர் வந்த பாலின் நுரைத்துளிகளையும் அருந்தாமல் காட்டில் மாடுகளை மேய்த்தவாறு அலைந்த அவர் இறுதியில் பசி தாங்காமல் எருக்க இலைச் சாறை அருந்தினார்.காரம் நிறைந்த எருக்க இலைச் சாறின் விஷத்தினால் அவர் கண்கள் உடனே குருடாயின.
அஸ்வினி தேவர்களை நோக்கி துதி
கண் தெரியாததால் காலால் நடக்க முடியாமல் உபமன்யு ஊர்ந்து செல்லத் தொடங்கினார்.அப்போது வழியில் இருந்த ஆழமான கிணற்றுக் குழி ஒன்றில் விழுந்தார். மாலை நேரமாயிற்று. உபமன்யு வராததைக் கண்ட தௌம்யருக்குக் கவலை வந்தது. தனது இதர சீடர்களை அழைத்து உபமன்யு எங்கே என்றார். அவர்களுக்குப் பதில் தெரியவில்லை. ‘வாருங்கள், அவனைச் சென்று தேடுவோம்’ என்று கூறிய தௌம்யர் காட்டை நோக்கிச் சென்றார். ‘உபமன்யு, நீ எங்கே இருக்கிறாய்’ என்று கூவிய வாறே ஒவ்வொரு பகுதியாக அவர் தேட ஆரம்பித்தார். தன் குருவின் சப்தத்தைக் கேட்ட உபமன்யு, “ குருவே! நான் இதோ இந்தக் கிணற்றுக் குழியில் வீழ்ந்து கிடக்கிறேன்!” என்று பரிதாபமான குரலில் உரக்கக் கத்தினார்.”இதில் நீ எப்படி விழுந்தாய்?” என்று தௌம்யர் கேட்க உபமன்யு, தான் எருக்கஞ்சாறை அருந்தியதையும் கண்கள் குருடான விஷயத்தையும் கூறினார். உடனே தௌம்யர், “உபமன்யு! தேவர்களுக்கு வைத்தியர்களான அஸ்வினி தேவர்களை நீ ஸ்தோத்திரம் செய்! அவர்கள் உனக்கு கண்களை மீண்டும் அளிப்பார்கள்” என்று கூறி அருளினார். குருவால் கட்டளையிடப்பட்ட உபமன்யு மனமுருக அஸ்வினி தேவர்களைப் பிரார்த்திக்க ஆரம்பித்தார்.
ரிக் வேதத்தில் உள்ள மிக நீண்ட உபமன்யுவின் துதி மிக மிகச் சிறப்பானது. அதன் இறுதி வாக்கியங்களில் அவர், “ஓ! அஸ்வினி தேவர்களே!! நான் உங்களை வணங்குகிறேன். உங்களால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்த ஆகாயத்தையும் வணங்குகிறேன்.தேவர்களும் கூட தப்ப முடியாத எல்லாக் கர்மங்களுக்கும் பலன்களை நீங்களே விதிக்கின்றவர்களாய் இருக்கிறீர்கள்!ஆனால் உங்களின் செய்கைகளால் ஏற்படும் பலன்கள் உங்களைச் சார்வதில்லை. நீங்களே எல்லோருக்கும் பெற்றோர்களாயிருக்கின்றீர்கள். நீங்களே ஆணும் பெண்ணுமாக இருந்து பின்னால் ரத்தமாகவும் ஜீவாதாரமான திரவியமாயும் ஆகிற அன்னத்தைப் புசிக்கிறீர்கள். புதிதாய் பிறந்த குழந்தை தாயின் பாலை உண்ணுகிறது. உண்மையில் குழந்தை ரூபமாக இருப்பவர்கள் நீங்களே! ஹே! அஸ்வினி தேவர்களே! என்னுடைய ஜீவனை ரக்ஷ¢ப்பதற்கு ஆதாரமாக உள்ள கண் பார்வையை எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள்.” என்று கூறி அஸ்வினி தேவர்களை மனமுருக பிரார்த்தனை செய்தார்.
மீண்டும் கண்பார்வை கிடைத்தது
எல்லோருக்கும் உடனே உதவத் துடிக்கும் அஸ்வினி தேவர்கள் தன்னை அண்டி வணங்கிய உபமன்யுவின் துதியால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் உபமன்யுவின் முன் தோன்றி.”நாங்கள் திருப்தி அடைந்தோம். இதோ, இந்தத் தின்பண்டத்தை உடனே உட்கொள்” என்று கூறி அவர் உண்ண தின்பண்டம் ஒன்றைத் தந்தனர். உபமன்யு,”நீங்கள் கொடுப்பதை என் குருவுக்கு முதலில் கொடுக்காமல் நான் சாப்பிடத் துணியேன்” என்றார். உடனே அசுவனி தேவர்கள் பழைய சம்பவம் ஒன்றை உபமன்யுவிடம் கூற ஆரம்பித்தனர். “முன்னொரு காலத்தில் உன்னுடைய குருவானவர் எங்களைப் பிரார்த்தித்தார்.நாங்கள் அப்போது அவருக்கு இதே மாதிரி தின்பண்டம் ஒன்றை உண்ணுவதற்காகத் தந்தோம்.அதை அவர் தன் குருவுக்குக் கொடுக்காமலேயே சாப்பிட்டார். ஆகவே உன் குரு முன் செய்த பிரகாரமே நீயும் அவருக்குக் கொடுக்காமல் உடனே இதைச் சாப்பிடலாம்” என்று கூறினர்.
உபமன்யு, “ஓ! அஸ்வினி தேவர்களே! என்னை மன்னிப்பீர்களாக! இதை என் குருவுக்குக் கொடுக்காமல் நான் சாப்பிட மாட்டேன்” என்று உறுதியாகக் கூறினார். உடனே அஸ்வினி தேவர்கள், “ உன் குருவின் மீது உனக்கு இருக்கும் பக்தியை மெச்சினோம்.உன் குருவினுடைய பற்கள் காரிரிரும்பினால் ஆக்கப்பட்டுள்ளன. உன்னுடைய பற்கள் தங்கப் பற்களாகக் கடவது” என்று கூறி ஆசீர்வதித்தனர்.” இனி நீ உன் பார்வையை அடைவாய். உனக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும்” என்று கூறி அஸ்வினிதேவர்கள் மறைந்தனர்.
குருவிடம் உபமன்யு நடந்த அனைத்தையும் கூறி வணங்கினார்.தௌம்யர் மிகவும் சந்தோஷம் அடைந்தார். உபமன்யுவை நோக்கி அவர்,”நீ இனி அஸ்வினி தேவர்கள் கூறியபடியே சகல §க்ஷமத்தையும் அடைவாய்! எல்லா வேதங்களும் எல்லா தர்ம சாஸ்திரங்களும் உன்னிடத்தில் விளங்கும்” என்று கூறி ஆசீர்வதித்தார். அதன்படியே உபமன்யு வேத சாஸ்திரங்களில் தேர்ந்து பெரும் தவம் புரிந்து பெரிய மஹரிஷியாக ஆனார்.
அஸ்வினி தேவர்கள் அனைவருக்கும் உதவி செய்த ஏராளமான சம்பவங்களுக்கு உபமன்யுவின் கதை ஒரு சிறந்த சான்று. மேலும் அஸ்வினியைப் பற்றிப் பார்ப்போம்
-தொடரும்
thank you mr.london  swaminathan
*****************

அதிசய நட்சத்திரம் ஸ்வாதி!

ராம பக்தனான ஹனுமானை ஸ்வாதி நட்சத்திரத்துடன் ஒப்பிடுகிறார் மாமுனிவர் வால்மீகி. அதிசயமான ஸ்வாதி நட்சத்திரம் மர்மத்தைப் பார்ப்போம்!


நட்சத்திர அதிசயங்கள்!
அதிசய நட்சத்திரம் ஸ்வாதி!
ச.நாகராஜன்
 
அதிசயமே ஸ்வாதி
 
27 நட்சத்திரங்களுல் 15வதாக இடம் பெறும் ஸ்வாதி நட்சத்திரம் ஒரு அதிசய நட்சத்திரம். இது துலா ராசியில் உள்ளது. பெரிய பெரிய மகான்களுடனும் ஆசார்யர்களுடனும் தொடர்புடைய இந்த நட்சத்திரம் வால்மீகி முனிவரால் அதிசயமான விதத்தில் குறிப்பிடப்படுகிறது.

ஸ்வாதி போல முன்னேறுவேன்
 
சப்த ரிஷி  மண்டலத்தின் தென் கிழக்கில் ஒரு அபூர்வ நட்சத்திரத் தொகுதி உள்ளது.இதை பூடஸ் என்று மேலை நாட்டு வானியல் குறிப்பிடுகிறது. இந்த ஆல்பா பூடஸ் செக்கச் சிவந்து ஜொலிக்கும் ஒரு நட்சத்திரம். இதையே மேலை நாட்டின்ர் ஆர்க்ட்ரஸ் எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். இதையே நாம் ஸ்வாதி என அழைக்கிறோம்! குரங்கு போன்ற வடிவமுள்ளதாக இதை நம் முன்னோர் கண்டுள்ளனர்!

வானில் ஸ்வாதி நட்சத்திரம் முன்னேறுவதைப் போல நான் செல்வேன் என்று ஹனுமான் வால்மீகி ராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் 67ம் ஸர்க்கம் 20ம்  சுலோகத்தில் சொல்வது (பவிஷ்யதி ஹிமே: யதா ஸ்வாதே: பந்தா இவாம்பரே) பொருள் பொதிந்த வார்த்தை. வாயு புத்திரனான ஹனுமான் குரங்காக அவதரித்ததை அனைத்து தேச மக்களும் அறிந்திருக்கின்றனரோ என்று எண்ண வைக்கும் விதத்தில் ஆர்க்ட்ரஸ் நட்சத்திரத் தொகுதியை பண்டைய எகிப்து நாட்டினர் குரங்கு போன்றது என்றும் சீனர்கள் கன்னியா ராசி அருகில் உள்ள குரங்கு என்றும் குறிப்பிட்டுள்ளனர். வான மண்டலத்தைப் பல பிரிவுகளாகப் பிரிக்கும் நவீன கால கிரிமால்டி கேடலாக்கில் எகிப்து தேசத்தினர் குரங்கு எனக் குறிப்பிடுவதை 29 எண்ணுடைய நட்சத்திரமாகவும் சீனர்கள் குரங்கு வடிவம் என குறிப்பிடுவதை 142,143 எண்ணுடைய நட்சத்திரங்களாகவும் இந்த கேடலாக்கில் காணலாம்!

ஸ்வாதி பவனோ
 
இந்த ஸ்வாதி நட்சத்திரம் சாதாரணமாக அக்டோபர் 20ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி முடிய சூரியனுடன் இணைகிறது. அப்போது இந்தியாவில் பயங்கரமான சூறாவளியும் புயல் காற்றும் ஏற்படுவது வழக்கம். 1864ம் ஆண்டு நவம்பர் முதல் தேதியன்று மசூலிபட்னத்தில் ஏற்பட்ட கோரமான சூறாவளியால் கடல் கொந்தளித்து 30000 பேர் பரிதாபமாக நீரில் முழ்கி சில நிமிடங்களுக்குள்ளாகவே மாண்டனர். ஒரிஸாவில் அக்டோபர்-நவம்பரில் ஏற்படும் புயல் மற்றும் சூறாவளியை மக்கள் ஸ்வாதி பவனோ (ஸ்வாதிக் காற்று) என்றே குறிப்பிடுகின்றனர்.

ஸ்வாதிக்கும் வாயுவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது! ஸ்வாதியின் அதி தேவதை வாயு! வேதம் ஸ்வாதி நட்சத்ரம் வாயு தேவதா எனக் குறிப்பிடுகிறது. புராண இதிஹாஸங்களில் மருத் தேவதைகளே ஸ்வாதியாகக் குறிப்பிடப்படுகிறது. சாந்தி கல்பம் என்னும் நூல்  ஸ்வாதியை எப்பொழுதும் வடக்கு முகமாகவே நகர்வது என விவரிக்கிறது.

வான மாணிக்கம்
 
ஸ்வாதி என்றால் வாள் என்று பொருள்.  வாயு தேவன் கையில் வாள் சித்தரிக்கப்படுகிறது. ‘நிஷ்டா’ அல்லது ‘நிஷ்த்யம்’ என்னும் இருளை சுவாதியின் ஒளிக் கிரணங்கள் அகற்றி விடுமாம்! அதாவது தமஸ் என்னும் இருளை ஜோதி என்னும் ஒளி நீக்கி விடும். (தமஸோ மா ஜ்யோதிர் கமய – இருளிலிருந்து ஒளிக்கு எங்களை இட்டுச் செல் என்பது வேத பிரார்த்தனை)

அற்புதமாக வானில் பிரகாசிக்கும் ஸ்வாதி வான அதிசயம் தான்! கோரல் சிவப்பு, குங்குமச் சிவப்பு ஸ்கார்லெட் சிவப்பு என்றெல்லாம் வர்ணிக்கப்படும் மாணிக்கமே சுவாதி. ஆகவே தான் இது வான மாணிக்கம் என்று போற்றப்படுகிறது. அராபியர்கள் இதை ‘சுவர்க்கத்தின் காவலன்’ என வர்ணிக்கின்றனர்.பைபிளும் ஆர்க்ட்ரஸை வெகுவாகப் புகழ்கிறது.இதன் குறுக்களவு பேராசிரியர் மிகல்சனால்19 கோடி மைல்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாயு மூலமாகவே விஷ்ணுவை அடைய முடியும்!
 
திருவோண நட்சத்திரம் விஷ்ணு பதம் எனக் குறிப்பிடப் படுவதை முன்பே பார்த்தோம். அதன் அருகில் உள்ள மருத் தேவதைகளே ஸ்வாதியாக விளங்குகிறது. விஷ்ணுவின் பக்கத்தில் அவனது பக்தனான ஹனுமான் அமைந்திருப்பது பொருத்தம் தானே!
மாத்வ சம்பிரதாயத்தில் ஸ்வாதி நட்சத்திரத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு.ஹனுமனை சிறப்பாக வழிபடுவது மாத்வ சம்பிரதாயத்தில் இடம் பெறுகிறது, வாயு மூலமாகவே விஷ்ணுவை அடைய முடியும் என்று அது கூறுவது குறிப்பிடத் தகுந்தது.

ஹனுமத் ஜெயந்தி என ஹனுமான் அவதரித்த தினத்தை இந்த நட்சத்திரத்தின் சஞ்சாரத்தை வைத்தே நிர்ணயிக்கின்றனர்!
சுவர்க்கத்தின் நுழைவாயில் என்றும் பிரபஞ்சத்தின் தலைநகரமான விஷ்ணுலோக வாயில் என்றும் போற்றப்படும் ஸ்வாதியையும் ஹனுமானையும் தொழுது அனைத்து நலன்களோடு விஷ்ணுவின் அருளையும் பெறலாம்!
thank you mr.london  swaminathan

அதிசயமான அகத்திய நட்சத்திரம்!


Picture: Canopus known as Agastya Nakshatra is part of Carinae Constellation in Southern Sky.

நட்சத்திர அதிசயங்கள் 
அகஸ்திய நட்சத்திரம் பூமியை நெருங்கி வரும் போதெல்லாம் கடல் நீர் சற்று வற்றுகிறது என அறிவியல் கூறுகிறது. அது உதிக்கும் போது அகத்திப் பூ மலர்கிறது. எண்ணற்ற அதிசயங்களைக் கொண்ட அகஸ்திய நட்சத்திரத்தைப் பார்ப்போம்!
If you want more information about Agastya in English, Please read London Swaminathan’s article ‘IS BRAHMASTRA A NUCLEAR WEAPON?’
அதிசயமான அகத்திய நட்சத்திரம்!
ச.நாகராஜன்
கானோபஸ் எனப்படும் அகத்தியர் 
கானோபஸ் என மேலை நாட்டினரால் அழைக்கப்படும் அகத்திய நட்சத்திரம் அபூர்வ ஆற்றல்களைக் கொண்டு வானில் ஜொலிக்கும் ஒன்று. இது 700 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. கற்பனைக்கு அப்பாற்பட்ட தூரம் இது!இதன் மாக்னிட்யூட் 0.86,அகத்தியர் உள்ள ஆர்கோ நட்சத்திரத் தொகுதியில் மொத்தம் 21 நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் இந்தத் தொகுதி கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இருந்தாலும் கூட அகத்தியர் மட்டும் தனித்து சூரியனைப் போல 13600 மடங்கு பிரகாசத்துடன் ஜொலிக்கிறார்.எல்லையற்ற தூரத்தின் காரணமாக இவரது பிரகாசத்தை நம்மால் உணர முடியவில்லை!இவருக்கு அருகில் உள்ள டோராடஸ் நட்சத்திரமே இவரது மனைவியான லோபாமுத்ரை என்பர் அறிஞர்.
27 நட்சத்திரங்கள் என்ற வரிசையில் சேராவிட்டாலும் கூட தன் தவத்தின் வலிமையால் தனியொரு இடத்தைப் பிடித்தவர் அகத்தியர்!சூரியன் சிம்ம ராசியிலிருந்து மறையும் போது கும்ப ராசி உதயமாகிறது. கும்ப ராசி உதிக்கும் அதே சமயம் அகத்திய நட்சத்திரமும் உதிக்கும். இவருக்கு கும்ப முனி என்ற பெயர் பொருத்தம் தானே!

கடல் நீரைக் குடித்த கதை 
அகத்தியர் கடல் நீரைக் குடித்த கதையை இன்றைய அறிவியல் மிகவும் பொருத்தமாக விளக்குகிறது. இதைப் புரிந்து கொள்ள சிறிது அடிப்படை வானவியல் அறிவு வேண்டும். சூரியன் மேற்கே மறைந்தவுடன் ஒரு நட்சத்திரம் கிழக்கே உதிப்பதை Acronycal rising அல்லது தினசரி உதயம் என்கிறோம். சூரியனின் அருகில் ஒரு நட்சத்திரம் வரும் போது சூரியனின் ஒளியால் அந்த நட்சத்திரத்தின் பிரகாசம் மங்கி அது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுகிறது. சூரியனை விட்டுத் தொலைதூரம் சென்றவுடன் மீண்டும் பிரகாசம் பெற்று நம் கண்களுக்குத் தெரிகிறது. இப்படி ஒரு நட்சத்திரம் சூரியனின் அருகில் வந்ததால் ஒளி மங்கி நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து, பிறகு தள்ளிச் சென்றவுடன் ஒளி பெற்று மீண்டும் நம் கண்ணுக்கு முதலில் தெரியும் தினத்தை அல்லது அந்த நட்சத்திரத்தின் உதயத்தை Heliacal rising என்கிறோம்.இந்த முதல் உதயத்தை ஒட்டியே நம் முன்னோர்கள் அந்தந்த நட்சத்திரத்திற்கும் அதற்கான தெய்வங்களுக்கும் விழாவை ஏற்படுத்தினர்.ஒவ்வொரு நட்சத்திர உதயத்தையும் அப்போது ஏற்படுத்தப்பட்டு நடந்து வரும் விழாவையும் உற்று நோக்கினால் நமது முன்னோரின் கூரிய அறிவுத் திறனும் அவர்கள் வகுத்த நெறிமுறைகளின் அர்த்தமும் விழாவின் மகிமையும் எளிதில் புரியும்.
அகத்திய நட்சத்திரத்தின் வருடாந்திர உதயம் உஜ்ஜயினியில் புரட்டாசி மாதம் 23ம் தேதியன்று ஏற்படுகிறது (பண்டித ரகுநந்தனர் இதை புரட்டாசி 17ம் தேதி என்று குறிப்பிடுகிறார்) சூரியன் ரோஹிணியில் செல்லும் போது அகத்தியர் மறைகிறார். பின்னர்  சூரியன் ஹஸ்தத்திற்கு வரும் போது பிரகாசமாகி மீண்டும் நம் கண்களுக்குத் தெரிகிறார்,அதாவது சுமார் நான்கு மாத காலம் சூரிய ஒளியால் அகத்தியர் நம் கண்களிலிருந்து மறைந்து விடுகிறார்.அகத்தியர் தோன்றியவுடன் மழைக்காலமும் சரியாக முடிகிறது.ஆகவே தான் மழைக்காலம் முடிந்தவுடன் தோன்றும் அகத்தியர் மழை நீர் சேரும் கடலைக் குடித்து விட்டார் என்று கூறப்பட்டது. வங்காளத்தில் இன்றும் கூட ஆகஸ்ட் -செப்டம்பரில் அகத்தியருக்கு இந்தப் பருவ மாறுதலை ஒட்டி விழா நடைபெறுகிறது. அகத்தியரின் வருடாந்திர உதயம் பற்றி வானவியல் நிபுணர் ஜே.பெண்ட்லி விரிவாக எழுதியுள்ளார்!
நவீன அறிவியல் ஆராய்ச்சியின் படி அதிசயிக்கத் தக்க உண்மை இப்போது வெளிப்படுகிறது. எப்போதெல்லாம் அகத்தியர் பூமியை நெருங்கி வருகிறாரோ அப்போதெல்லாம் கடல் நீர் ஆவியாகி சிறிது வற்றி விடுகிறதாம்!

அகத்தியர் பூமியை சமன் செய்த புராணக் கதை 
இனி அகத்தியர் பூமியைச் சமன் செய்த கதைக்கு வருவோம்.உஜ்ஜயினி வழியாகவே பூமியின் முதல் தீர்க்க ரேகை செல்கிறது!. இந்த ரேகையை வைத்தே அனைத்துக் காலக் கணக்கீடுகளும் செய்யப்படுகின்றன. லாடிட்யூட் எனப்படும் அட்சய ரேகையின் படி அகத்தியர் இருக்கும் இடம் 80 டிகிரி தெற்கு.ஆகவே அட்சய ரேகையின் படி 10 டிகிரி வடக்கிற்கு மேல் இது தெரியாது.வடக்கே உள்ள உஜ்ஜயினி 24 டிகிரி தெற்கு என்ற நிலையில் உள்ள நகரம்.
வானவியல் நிபுணரான வராஹமிஹிரர் காலத்தில் மேஷப் புள்ளி அசுவனி நட்சத்திரத்தில் இருந்தது. அதற்கு 14400 ஆண்டுகளுக்கு முன்னர் சித்திரை நட்சத்திரத்தில் அது இருந்தது.சித்திரை நட்சத்திரத்தில் அகத்தியர் இருக்கும் போது அதன் தென் துருவ தூரம் 14 டிகிரி ஆகும்.அப்போது அது உஜ்ஜயினியில் தெரியவில்லை.ஏராளமான நட்சத்திரங்கள் உள்ள வடக்கு வானம் மட்டும் அப்போது தெரிந்தது. இதையே தேவர்கள் கூடிய திருக்கல்யாணக் கூட்டமாக புராணம் வர்ணிக்கிறது.கி.மு.7200ம் ஆண்டு வாக்கில் அகத்தியரின் தென் துருவ தூரம் 24 டிகிரி ஆனது.அப்போது அகத்திய நட்சத்திரம் உஜ்ஜயினியில் தெரிய ஆரம்பித்தது. இதையே அகத்தியர் தெற்கே வந்து சமநிலை ஏற்படுத்தினார் என புராணம் விவரிக்கிறது.
இந்த விளக்கத்துடன் இன்னொரு விளக்கத்தையும் வானவியலோடு புராணத்தை இணைத்து ஆய்வு செய்யும் அறிஞர்கள் நம் முன் வைக்கின்றனர்.ஒரு காலத்தில் வடக்கே துருவ நட்சத்திரமாக விளங்கிய அபிஜித் நட்சத்திரம் அந்த அந்தஸ்தை இழந்து தெற்கே அகஸ்தியர் அந்த அந்தஸ்தைப் பெற்றார். முதலில் வடக்கே இருந்த அபிஜித்தே அகஸ்தியர் என அழைக்கப்பட்டார். பிறகு இடைவிடாத வான சுழற்சி காரணமாக தெற்கே இருந்த நட்சத்திரம் துருவ நட்சத்திரமாக அந்தஸ்தைப் பெற்றவுடன் வடக்கே இருந்த அகத்தியர் தெற்கே வந்ததாகக் கூறப்பட்டது. பதவியில் இருப்பவருக்கே அந்தஸ்து என்ற ரீதியில் இந்த வானவியல் சுழற்சியைப் பார்த்தால் எளிதில் விவரம் புரியும்.ஆதியில் அபிஜித்தைச் சேர்த்து 28 நட்சத்திரங்களை நமது வேதம் உள்ளிட்ட நூல்கள் கூறுகின்றன. தன் அந்தஸ்தை அபிஜித் இழந்தவுடன் அது நீக்கப்பட்டு 27 நட்சத்திரங்கள் என்ற எண்ணிக்கை ஆகி விட்டது. அபிஜித் நமது மானுட வாழ்க்கையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்ற போது இந்த மாறுதல் ஏற்பட்டது!
‘அக’ என்றால் மலை என்று பொருள். ‘ஸ்தி’ என்றால் அமுக்குவது என்று பொருள். பூமி என்னும் மலையை இரு துருவங்களிலும் அமுக்கியவரே அகஸ்தியர் என்பதை புராணம் விரிவாக தன் பாணியில் பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு விளக்குகிறது. வானவியல் கணிதத்தை மேலே கூறிய படி டிகிரியை வைத்து தூரத்தைச் சொன்னால் இந்தக் கட்டுரையைப் படிக்கும் பலருக்கும் கூட பல முறை படித்தால் மட்டுமே இது புரியக் கூடும் என்ற நிலையில் அகத்தியரின் வரலாறு எளிமைப் படுத்தப்பட்டு சிறந்த கதையாக ஆனது சரி தானே!
அகத்தியர் நட்சத்திரம் உதிக்கும் போது அகத்திப் பூ மலர்வதால் அந்தச் செடிக்கு அகத்திக் கீரை என நம் முன்னோர் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். பதினெட்டு சித்தர்களில் முக்கியமானவரான அகத்தியர் நந்தி தேவருடன் ஒவ்வொரு மூலிகையையும் ஆராய்ந்து அதன் மருத்துவ குணங்களைத் தொகுத்து மனித குலம் நோயின்றி வாழ வழி வகை செய்துள்ளார்.
வானத்தை உற்று நோக்கி புராணங்களைத் தெளிவு படப் படித்து அறிவியலை அலசிப் பின்னர் கம்பனைப் படித்தால் நன்கு ரசிக்க முடியும்! கம்பன் ஆரண்ய காண்டத்தில் அகத்தியன் பற்றிக் கூறும் வாக்கியங்களான “தூய கடல் நீரை உண்டு அது துரந்தான்” என்பதை வானவியல் அறிவுடன் சேர்த்துப் படித்தால் அர்த்தம் புரிந்து மகிழலாம். அகத்தியனை இத்தோடு மட்டும் கம்பன் புகழவில்லை: தமிழ் தந்த முனிவரான அவரை “நிழல்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண் தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான்” எனவும் புகழ்கிறான்.
குள்ளமான அகத்தியரின் பெருமை மிகவும் உயர்ந்தது!
************************




ரேவதி நட்சத்திர ரஹஸ்யம்!



Pisces constellation that includes REVATHI star
நட்சத்திர அதிசயங்கள் 
இந்த கட்டுரை தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம்.27 நட்சத்திரங்களில் கடைசி நட்சத்திரமான ரேவதி அறிவியல் வியக்கும் நட்சத்திரங்களில் முதலிடத்தை வகிக்கிறது.அப்படி அதிகம் வியக்கும்படி அந்த நட்சத்திரத்தில் எதைத் தான் விஞ்ஞானிகள் கண்டார்கள்?இதோ பார்ப்போம்!
ரேவதி ரஹஸ்யம்!
ச.நாகராஜன்
ரைவதனின் பெண் ரேவதியின் கதை!
 
வேதம் கூறும் 27 நட்சத்திரங்களில் கடைசியாக இருப்பது ரேவதி. அதி அற்புதமான அறிவியல் ரகசியத்தை அறிவிக்கும் நட்சத்திரம் இது. புராணம் கூறும் ரேவதியின் கதையே ஆச்சரியமானது.  ரைவதன் என்ற மன்னனுக்குப் பிறந்த பெண்ணின் பெயர் தான் ரேவதி!அவன் வாழ்ந்த காலத்தில் மனிதர்கள் அனைவரும் இப்போது இருப்பதை விட இன்னும் அதிக உயரம் உடையவர்களாக இருந்தார்கள். தன் பெண் ரேவதிக்கு தகுந்த மாப்பிள்ளையைத் தேட ஆரம்பித்தான் மன்னன் ரைவதன்.அவளுக்கு ஏற்றபடி ஒருவரும் சரியாக அமையவில்லை.ரைவதன் கவலைப்பட ஆரம்பித்தான். நாளடைவில் கவலை பயமாக மாறியது. இவளுக்கு உரிய மணாளன் யார், அவனை எப்படிக் கண்டுபிடிப்பது? சிந்தித்தான். சிந்தனையின் முடிவில் ஒரு வழி தோன்றியது.

இவளைப் படைத்த பிரம்மனையே நேரில் சென்று கேட்டு விட்டால் என்ன? இவளுக்காக யாரைப் படைத்தீர்கள் என்று சுலபமாகக் கேட்டு விடலாமே! உடனே நேரே சத்யலோகத்துக்குத் தன் பெண்ணையும் அழைத்துக் கொண்டு சென்றான்.அவன் பிரம்ம லோகம் சென்ற சமயம் அங்கு ஒரு பெரிய வேள்வி நடந்து கொண்டிருந்தது. பிரம்மா அவனை வரவேற்று சைகையால் சற்று இருக்குமாறு சொன்னார்.ரைவதனும் காத்திருந்தான்.

வேள்வி முடிந்ததும் பிரம்மா ரைவதனிடம் வந்த விஷயம் என்ன என்று அன்புடன் கேட்டார். ரைவதன் தன் கவலையைச் சொன்னான். ரேவதிக்கு உரிய மணாளன் யார் எனத் தாங்கள் தான் எனக்குச் சொல்ல வேண்டும் என்று வேண்டினான்.பிரம்மா சிரித்தார்.
“ரைவதா! ஏமாந்து விட்டாயே! நீ இங்கே வந்த போது பூமியில் கிருத யுகம் நடந்து கொண்டிருந்தது. வேள்வி முடிந்து விட்ட இந்த சமயத்திலோ அங்கு கலி யுகம் நடந்து கொண்டிருக்கிறது!பூமியின் காலமும் இங்குள்ள கால நிர்ணயமும் வேறு! இனி இவளை பூமியில் உள்ள யாரும் மணம் புரிந்து கொள்ள முடியாது. அதோ, பூமியைப் பார். அங்கு அனைவரும் உயரம் குறைந்தவர்களாக இருப்பதைப் பார்,” என்றார். ரைவதன் கலங்கிப் போனான். அருள் புரிய பிரம்மனை வேண்டினான்.
பிரம்மாவும் அருள் கூர்ந்து அவனை நோக்கி, “ரைவதா, கவலைப்படாதே! பூமியில் பத்து அடி உயரம் உள்ள பலராமன் என்பவர் பிறப்பார். அவர் இவளைத் தன் கலப்பையால் உயரத்தைக் குறைத்து மணப்பார். இனி, கவலையை விடு” என்றார்.
பிரம்மா சொன்னபடியே பலராமனும் கலப்பையால் ரேவதியின் தலையில் ஒரு குட்டு குட்டி அவள் உயரத்தைக் குறைத்து அவளை மணம் புரிந்தார். இப்படி முடிகிறது. கதை. இதைப் பல புராணங்களிலும் படிக்க முடிகிறது.
இதில் விஞ்ஞானிகள் வியப்படைய என்ன இருக்கிறது/ அதில் தான் சுவாரசியமே இருக்கிறது! பூமிக்கும் விண்வெளியில் உள்ள லோகங்களுக்கும் உள்ள கால நிர்ணயம் வேறு என்று பிரம்மா சொல்வதை விஞ்ஞானிகள் இப்போது கண்டு பிடித்து வியக்கிறார்கள். ஹிந்து மத புராணங்களில் அப்போதே எப்படி இவ்வளவு தெளிவாக ஒரு அரிய உண்மையைக் கதை மூலமாகக் கூற முடிந்தது என்பதே அவர்களின் வியப்புக்குக் காரணம். பூமியிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் போது காலத்தில் மாறுபாடு ஏற்படுகிறது. இதற்கு டைம் டைலேஷன் (Time Dilation) என்று பெயர். பூமியிலிருந்து விண்வெளிக்குப் பயணப்பட்ட விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நெடுங்காலம் சுற்றித் திரிந்து விட்டு பூமிக்குத் திரும்பினால் அவர்கள் ஆயுளில் இளைஞர்களாக இருக்க பூமியில் உள்ளவர்களோ வயதானவர்களாக ஆகி இருப்பார்கள்.

மையர்ஸ் டேபிள் 
பூமியிலிருந்து ராக்கெட்டில் புறப்பட்ட விண்வெளி வீரர் பயணம் செய்யும் வருடமும் அப்போது பூமியில் நாம் கழிக்கும் வருடமும் கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.
———————————————————————————————————————அட்டவணை
விண்வெளி வீரர் பயணத்தில் கழிக்கும் ஆண்டு        பூமியில் நாம்
கழிக்கும் ஆண்டுகள்                                                                         ———————————————————————————————————————————
1                                      1
2                                      2.1
5                                      6.5
10                                    24
20                                  270
30                                3100
50                          4,20,000 (கலியுக வருடங்கள்)

———————————————————————————————————————
மேலே உள்ளது Meyers Handbook of Space என்ற விண்வெளி அறிவியல் கையேடு தரும் அற்புத அட்டவணையாகும். இதிலிருந்து நாம் ஊகிக்க முடிவது இது தான்: ரைவதன் 50 ஆண்டுகள் பயணத்திலும் பிரம்ம லோகத்தில் காத்திருப்பதிலும் கழித்திருந்தால் பூமியில் 4,20,000 ஆண்டுகள் கழிந்திருக்கும்! அதாவது ஒரு யுகம் கழிந்திருக்கும். கிருதயுகத்தில் பயணத்தை ஆரம்பித்த ரைவதன் பூமியில் கலியுகத்தை இதனால் தான் பார்க்க நேர்ந்தது.
பராசக்தியின் கரு 
ரேவதி 32 நட்சத்திரங்கள் கொண்ட தொகுதி. மீனைப் போலத் தோற்றமளிப்பது. வானவியில் இதை Zeta Piscum என்று குறிப்பிடுகிறது. ஜோதிட நூல்களோ ரேவதியை வெகுவாகப் புகழ்கின்றன. பராசக்தியின் கருவாகக் குறிப்பிடப்படும் இது ஆரம்பத்தையும் (ஜனனம்) முடிவையும் குறிப்பிடுகிறது. பயணத்திற்கு உகந்தது.தொலைந்து போன பொருளைத் தேட உகந்தது. ஆகவே தொலைந்த பொருள்கள் உடனே கிடைக்கும்.இசை, நடனம், நாடகம், இலக்கியம் ஆகிய அனைத்தும் இந்த நட்சத்திரக்காரர்களுக்குத் தண்ணீர் பட்ட பாடு. பெரும் அற்புத ரகசியங்களளை உள்ளடக்கிய இந்த நட்சத்திரத்தின் முதல் ரகசியம் விண்வெளி லோகங்களுக்கும் நமக்கும் உள்ள கால வேறுபாட்டைக் கூறுவது தான். ஆக 27 நட்சத்திரங்களில் கடைசியாக இடம் பெறும் இது அறிவியலில் உன்னத ரகசியத்தை வெளியிடுவதில் முதலாவதாகத் திகழ்கிறது.


thank you mr.london  swaminathan


***************

No comments:

Post a Comment