For Read Your Language click Translate

05 May 2014

நவகிரகஸ்தோத்திரங்கள்

         


அனைவருக்கும் வணக்கம். மீண்டும் ஒரு பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த இணையம், பதிவு, இடுகை என்று இல்லாவிட்டால் உங்களுடன் தொடர்பு (interaction) என்பது நடவாத ஒன்றாகியிருக்கும். அதாவது நான் பாடம் நடத்துவதும், அதை நீங்கள் படித்து பின்னூட்டம் இடுவதும், கேள்வி கேட்பதும், நான் பதில் சொல்வதும், ஒருவரையொருவர் தெரிந்து வைத்திருப்பதும் நடந்திருக்காது. பல சமயங்களில் நேரமின்மை காரணமாக பதில் சொல்ல முடியாமல் போயிருக்கிறது. அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். சில சமயங்களில் பதில் சொல்லாமல் இருப்பது ஏன்? என் நேரத்தை ஒருவரது கேள்விக்கு பதில் சொல்லி அந்த ஒருவருக்கு மட்டும் பயன் படுவதாக அல்லாமல், ஏதாவது ஒரு பாடத்திற்கு செலவிட்டு அது பலருக்கும் பயன் படுவதாக அமைய வேண்டும். அதற்காக தனிப் பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று அர்த்தமல்ல. ஆனால் பதில் தர தாமதமாகும். சரி, இன்றைய பாடத்திற்கு வருவோம். இனி ஒவ்வொரு ஞாயிறன்றும் பக்தி மலர், ஏதாவது ஒரு மந்திரத்தை உள்ளடக்கி வெளியாகும். அந்த வகையில் இன்று நவகிரக மந்திரங்கள் தூய தமிழில் கொடுத்திருக்கிறேன். அனைவரும் படித்து பயனடைய வேண்டுகிறேன். தமிழில் கொடுப்பதற்கு காரணம். இதில் உள்ள அர்த்தம் புரிந்து என்ன படிக்கிறோம் என்று தெரிந்து மனம் ஒன்றி படிக்கலாம். விளங்காத மந்திரங்களைப் படித்து அதனால் வரும் தவறான உச்சரிப்புக் குற்றம் இதில் வரவும் வாய்ப்பில்லை. சூரிய பகவான் சீலமாய் வாழச் சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி சூரியா போற்றி சுதந்திரா போற்றி வீரியா போற்றி வினைகள் களைவாய் சந்திர பகவான் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி திருவருள் தருவாய் சந்திரா போற்றி சத்குரு போற்றி சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி செவ்வாய் பகவான் சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறையிலாது அருள்வாய் குணமுடன் வாழ மங்களச் செவ்வாய் மலரடி போற்றி அங்காரகனே அவதிகள் நீக்கு புத பகவான் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி பதந்தந்து ஆள்வாய் பண்ணொலியானே உதவியே அருளும் உத்தமா போற்றி குரு பகவான் குணமிகு வியாழக் குரு பகவானே மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய் ப்ருகஸ்பதி வியாழப் பரகுரு நேசா க்ரகதோஷம் இன்றிக் கடாக்ஷித்தருள்வாய் சுக்கிர பகவான் சுக்கிரமூர்த்தி சுபமிகயீவாய் வக்கிரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி பகவான் சங்கடந் தீர்க்கும் சனி பகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சாகா நெறியில் இச்செகம் வாழ இன்னருள் தா தா ராகு பகவான் அரவெனும் ராகு ஐயனே போற்றி கரவாதருள்வாய் கஷ்டங்கள் நீக்கி ஆகவருள்புரி அனைத்திலும் வெற்றி ராகுக் கனியே ரம்மியா போற்றி கேது பகவான் கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய் வாதம், வம்பு வழக்குகள் இன்றி கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி இவை அனைத்துமே மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்கள். இதில் ஏதாவது கிரக கோச்சாரங்களாலோ அல்லது தசா புத்தி அந்தரங்களால் அவதிப் படுபவர்கள் அந்த கிரகத்திற்குரிய மந்திரங்களை தினமும் பாராயணம் செய்து பயனடையலாம். இல்லாவிட்டால் அனைத்து மந்திரங்களையும் காலை மாலை இரு வேளைகளிலும் படித்து சகல நலன்களையும் அடையப் பெறலாம். ஒரு சிறு குழந்தை பிறந்து தத்தி தவழ்ந்து பிறகுதான் நடக்க ஆரம்பித்து பிறகுதான் ஓட முடியும். அது போல்தான் மந்திரங்களும் தொடர்ந்து படிக்கப் படிக்க சிறிது சிறிதாக வளர்ந்து பலனைக் கொடுக்க ஆரம்பிக்கும். இன்று படித்து நாளையே பலன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அத்துடன் இதில் மனம் ஒன்றி நம்பிக்கையுடன் படித்தால்தான் முழு பலனையும் காண முடியும். என்னை நம்பாவிட்டால் பரவாயில்லை. இந்த மந்திரங்களை நம்புங்கள். நிச்சயம் பலனுண்டு என்று கூறி இத்துடன் விடை பெற்றுக் கொள்கிறேன். என்றும் அன்புடன்

No comments:

Post a Comment