For Read Your Language click Translate

08 May 2014

செழிப்பான வருமானம் தரும் செஞ்சந்தனம் !

செழிப்பான வருமானம் தரும் செஞ்சந்தனம் !






சுனாமி போன்ற கடல்சீற்றங்களைத் தடுக்கும் அலையாத்தி மரங்களைப் போல, அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்ட மரம் செஞ்சந்தன மரம். இந்த அணுயுகத்துக்கு ஏற்ற மரம் என்றுகூட செஞ்சந்தன மரத்தைச் சொல்லலாம். பல ...அணு உலைக்கூடங்களில் அணுக்கதிர்களைத் தடுக்கும் அரணாக இதைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

ஜப்பான் நாட்டில் எக்ஸ்ரே, லேசர்... போன்ற வீரிய கதிர்வீச்சு சிகிச்சைகளைச் செய்யும் மருத்துவர்கள், சிகிச்சையின்போது கதிர்வீச்சைத் தடுப்பதற்காக, சிறிதாக வெட்டப்பட்ட செஞ்சந்தன மரத்துண்டை தங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொள்கிறார்களாம். ஒலி அலைகளைத் தடுக்கும் திறன் கொண்ட இம்மரங்கள், வெப்பத்தையும் அதிக அளவில் கடத்தாது. இவ்வளவு சிறப்புகள் இம்மரங்களுக்கு இருப்பதால், இவற்றின் சந்தை வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த மரத்தை வணிகரீதியாக வளர்ப்பதைப் பற்றி பார்ப்போமா...

சரளை மற்றும் செம்மண் கலந்த மண் வகைகளில் இம்மரம் சிறப்பாக வளரும். படுகை நிலத்தில்கூட நன்றாக வளரும். ஆனால், நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டியது அவசியம். ஆழமான மண்கண்டம் உள்ள மானாவாரி செம்மண் நிலங்களிலும் வளர்க்கலாம்.

கட்டாயம் செய்யணும் கவாத்து!

12 அடி இடைவெளியில் குழி எடுத்து, வழக்கமாக மரக்கன்றுகளை நடவு செய்வதுப் போல இயற்கை உயிர் உரங்களைப் போட்டு நடவு செய்ய வேண்டும். மெதுவாகத்தான் இந்த செடிகள் வளரும். நன்கு வளர்ந்து வராத செடிகளை சில நாட்களிலேயே கண்டறிந்து அகற்றிவிட வேண்டும். மானாவாரி, இறவை என இரண்டு முறைகளிலும் இதைப் பயிரிடலாம். இறவையில் தண்ணீர் இருப்பதைப் பொறுத்து பாசனம் செய்து கொள்ளலாம். அவ்வப்போது செடிகளுக்கு சூரியஒளி நன்கு கிடைக்குமாறு கவாத்து செய்து வர வேண்டும். மழைக்காலத்துக்கு முன்பாக செடிகளைச் சுற்றிலும் மண்ணைக் கொத்திவிட வேண்டும். இம்மரங்களை பழத்தோட்டங்களில் காற்றுத் தடுப்புக்காகவும் நடவு செய்யலாம். பல இடங்களில் எலுமிச்சைத் தோட்டங்களில் செஞ்சந்தன மரங்களை காற்றுத் தடுப்பு அரணாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு மரம் ஒரு லட்ச ரூபாய்!

இந்த மரத்தின் வைரம் பாய்ந்த பகுதி கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். 20 ஆண்டுகள் ஆன ஒரு மரம், வளர்ச்சியை மற்றும் அதன் தரத்தைப் பொறுத்து அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை விலை போகும். ஒரு ஏக்கரில் 400 மரங்கள் நடவு செய்து... அதில் 100 மரங்கள் மட்டுமே நன்றாக விளைகின்றன என வைத்துக் கொள்வோம். ஒரு மரம் குறைந்தபட்சம் 1 லட்ச ரூபாய்க்கு விற்றாலே... ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். கடந்த 2010-ம் வருடம் நவம்பர் 25-ம் தேதி திருப்பத்தூர் அரசு சந்தனக்கிடங்கில் நடந்த ஏலத்தில் ஒரு டன் 'சி’ கிரேடு செஞ்சந்தன மரம், 6 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விலை போயிருக்கிறது.

அனுமதி தேவையில்லை!

சந்தன மரத்தைப் போல இம்மரங்களை வெட்டுவதற்கு தனி அனுமதி எல்லாம் வாங்கத் தேவையில்லை. மற்ற மரங்களைப் போலவே வெட்டி விற்று விடலாம். இந்தியாவில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில்தான் இந்த மரம் அதிகமாக வளர்க்கப்படுகிறது. ஜப்பான், தைவான், சீனா... போன்ற நாடுகளில் இதன் தேவை அதிகம் உள்ளதால், சந்தை எப்போதும் சரியாது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சந்தனத்துக்கு இணையான மதிப்புள்ளதால், இந்த மரங்களும் அதிக அளவில் வெட்டிக் கடத்தப்படுகின்றன என்பதும் கவனத்தில் இருக்கட்டும்.

டன் ஐந்து லட்சம்!


அறுவடைக்குத் தயாரான செஞ்சந்தன மரங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 'மரம்' தங்கசாமி அவர்களின் தோட்டத்தில் இருக்கின்றன. அதைப் பற்றி தங்கசாமியின் மகன் கண்ணன் சொல்வதையும் கேட்போமா..! ''எங்க அப்பா 20 வருஷத்துக்கு முன்ன வீட்டைச் சுத்தி இருந்த இடத்துல எல்லாம் சந்தனம், செஞ்சந்தனம், தேக்குனு பல வகையான மரங்களைக் கலந்து நடவு செஞ்சாரு. அதுல 100 செஞ்சந்தன மரங்க இருக்கு. மரங்க நல்லா வளந்து இருக்கு.

டன் அஞ்சு லட்சம், ஆறு லட்சம்னு கேட்டுக்கிட்டு இருக்காங்க. ஆனா, நாங்க இன்னும் விக்காம வெச்சிருக்கோம். அன்னிக்கு எங்க அப்பா விளையாட்டா வெச்ச மரம் இன்னிக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள மரங்களா மாறியிருக்கு!''

என்ன... செஞ்சந்தனத்தை நடவு செய்யக் கிளம்பிவிட்டீர்களா?

தொடர்புக்கு
கண்ணன், அலைபேசி: 98419-79451
முக நூலிலிருந்து ......

No comments:

Post a Comment