For Read Your Language click Translate

20 July 2014

வான சாஸ்திரக் குறிப்புகள்

அன்பர்களே,

 கோள்களின் நிலைகளுக்கும் மனித வாழ்வின் நிகழ்ச்சிகள், தன்மை போன்றவற்றுக்கும் இடையே இருக்கும் தொடர்பு ஏதோ மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் இடையே போட்ட முடிச்சுபோல் தோன்றியது. இந்த மோனாமூனாமூனா தொடர்பை இன்னும் விவரிக்கத்தான் வேண்டும் என்ற உந்துதல். (மோனா -மொட்டைத்தலை; மூனா- முழங்கால்; மூனா - முடிச்சு).
ஆகவே தொடர்ந்து எழுதினேன்.

< ஆகவே, இறப்பிலும் பிறப்பிலும் மனிதனைப் பாதிக்கும் நட்சத்திரங்களை ஆராயும்
வேலை மிக மிகப் பழங்காலத்திலேயே நம்மிடையே வளர்ச்சியடைந்து விட்டது. நம்
பழங்கால நூல்களில் காணப்படும் வான சாஸ்திரக் குறிப்புகள் கிறிஸ்துவுக்குமுன்
ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கால கட்டத்தைக் குறிக்கின்றன.
இவ்வாறு ஆராய்ந்தவர்கள் ரிஷிகள், வானசாஸ்திரிகள், கணியர்கள் போன்றவர்கள். வான
சாஸ்திரத்தின் அடிப்படையில் எழுந்ததே நம் ஜோதிடசாஸ்திரம்>.
"சரியாப் போச்சு. இப்படி எழுத எழுத இன்னும் மேலும் மேலும் சப்ஜெக்டுக்குள்ள
ஆழமாப் போகவேண்டியதா இருக்கே? ஏன்னாக்க மேல உள்ளதப் படிக்கிறவங்க, "அப்டீன்னா
இதெல்லாம் எப்ப ஏற்பட்டுச்சு? ஏன் இதுக்கெல்லாம் இவ்ளோ முக்கியத்துவம்
கொடுக்கணும்?"
என்றெல்லாம் கேட்கக்கூடிய நிலையை நானே ஏற்படுத்திவிட்டேன் அல்லவா?"

"அடியப் பிடிடா, பாரதப் பட்டா?" என்பார்கள். நான் அதை சற்று மாற்றிக்கொண்டு
எனக்கு நானே சொல்லிக்கொண்டேன், "அடியிலேர்ந்து பிடிடா, பாரதிப் பட்டா!".
சரி ஆரம்பிச்சுர வேண்டியதுதான் என்று இன்னும் எழுதலானேன்.....

< வேதங்கள் நான்கு. அந்த வேதங்களின் அங்கங்கள் ஆறு என்பார்கள். அதில் ஒன்று
ஜோதிடம். மற்ற ஐந்தும் என்ன என்பதை மலேசியாவிலுள்ள பேர் போட்ட
குருக்கள்மார்களிடம்
கேட்டுப்பாருங்கள். எந்தப் புத்தகத்தையும் ரெ·பர் பண்ணாமல் மொபைலில் யாரிடமும்
கேட்காமல் சொல்லிவிட்டார்கள் என்றால் என்னுடைய காதுக்குக் கீழ்வரை நீண்டு
விளங்கும் பளபளப்பான வெண்ணிறக் கிருதாவை அரை ஸெண்ட்டிமீட்டர்
குறைத்துக்கொள்கிறேன்.
வானிலுள்ள நட்சத்திரங்களும் கிரகங்களும் அவற்றினுடைய கிரணங்களாலும்
ஆகர்ஷணத்தாலும் மற்றும் தற்சமயம் நம்மால் புரிந்து கொள்ள இயலாத வேறு பல
வழிகளாலும் உலகத்தைப் பாதிப்பதை அக்கால ரிஷிகளும் வானசாஸ்திரிகளும் கண்டு
அறிந்திருந்தனர்.
வானத்திலே கண்ணுக்குத் தெரியாத பல பொருள்களைக் கூட அவர்கள் எப்படியோ
கண்டுள்ளனர். தொலைநோக்கி, ரேடியோ சாதனங்கள் முதலியவற்றைக் கொண்டு தற்சமயம்
நவீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துக் கொண்டிருப்பதை அவர்கள் ஏற்கனவே கண்டறிந்து
இருந்தனர். எப்படி எதைக் கொண்டு அதையெல்லாம் செய்தார்கள் என்பதும் புதிராகவே
இருக்கிறது>

அப்படி என்னத்தைத்தான் கண்டுபிடித்தார்களாம்? அதையும் விளக்கத்தானே வேண்டும்?
< ஒரு செகண்டில் இருநூற்றைம்பதில் ஒரு பகுதியை அவர்களால் கணிக்க
முடிந்திருக்கிறது. அப்படியானால் எவ்வளவு துல்லிதமான நேரம்காட்டியை அவர்கள்
பயன்படுத்தியிருக்க வேண்டும். அதே சமயம் பல கோடி ஆண்டுகளைக் கொண்ட மஹாயுகம்
கல்பம் போன்ற காலக் கணக்கையும் அவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.
ஓர் அங்குலத்தில் இருநூற்று இருபத்து மூன்று கோடியில் ஒரு பகுதியை அவர்கள்
'கோண்' என்னும் பெயர் கொண்டு அழைத்தார்கள்.
இவ்வளவு சிறிய அளவைக் கொண்டு எதை அளந்தார்கள்? எப்படி அளந்தார்கள்?
'கோண்' என்பது அணுவையும் விடச் சிறியது. "அணுவினைச் சத கூறிட்ட கோண்" என்று
கம்பன் கூறியிருக்கிறான்.

அதே சமயம் ஒன்றைப் போட்டு அதன் பின்னால் இருபத்தோரு பூஜ்யங்களை எழுதினால் வரும்
தொகையான 'பிரம்மகற்பம்' என்னும் பெரிய தொகையையும் கொண்டு அவர்கள்
எண்ணியிருக்கிறார்கள்.
பிரம்மகற்பம் என்பதை இப்போது கோடிக் கோடிக் கோடி என்றும் சொல்வார்கள்.
ஒன்றிலிருந்து ஆரம்பித்து, ஒன்றுக்குப் பின்னால் ஒரு சைபரைச் சேர்த்துப் பத்து,
இரண்டு சைபரைச் சேர்த்து நூறு, மூன்று சைபரைச் சேர்த்து ஆயிரம் என்று
அடுக்கிக்கொண்டே
போகிறோம் அல்லவா. அதே வரிசையில் ஒவ்வொரு சைபரைச் சேர்க்கும்போதும் தோன்றும்
எண்களுக்கும் பெயர்கள் கொடுத்திருந்தார்கள். இப்போது கோடியோடு அந்த வரிசை
நிற்கிறது. அதற்கும் மேலுள்ளவற்றை பத்துக்கோடி, நூறு கோடி, ஆயிரம் கோடி,
பத்தாயிரம் கோடி என்று அடுக்கிக்கொண்டே போகிறோம். இவற்றிற்கெல்லாம் Proper
names என்னும் பெயர்கள் இருந்தன. கோடிக்கு அப்புறம் அற்புதம், நிகற்புதம்,
கும்பம், கணம், கற்பம், நிகற்பம் என்று அதுபாட்டுக்குப்
போய்க்கொண்டேயிருக்கும். முடிவில்லாததை, எண்ணிகையில் அடங்காததை அனந்தம்
என்றார்கள். Infinite, Countless என்று சொல்கிறோமல்லவா?>

உதாரணத்துக்கு, தற்சமயம் Rs 30985 கோடி என்பதை முப்பதினாயிரத்துத்
தொள்ளாயிரத்து எண்பத்தைந்து கோடி ரூபாய் என்று சொல்கிறோம். எண் ஆவரணத்தில்
கண்டுள்ள பெயர்களை வைத்துச் சொல்வதானால் அதை மூன்று கணத்து ஒன்பது நிகற்புதத்து
எட்டு அற்புதத்து ஐந்து கோடி ரூபாய் ஆகும்.
எழுதியதைத் தொடர்கிறேன்.

< வானசாஸ்திரத்திலும் கூட உலகம், அண்டம், பேரண்டம், சராசரம், பிரம்மாண்டம்,
பிரபஞ்சம் என்று அந்தக் காலத்தில் பாபிலோனியர்கள் கிரேக்கர்கள் முதலியோர்கூட
பயன்படுத்தியிராத சொற்களை அவர்கள் வழங்கி வந்தார்கள்.
எதை வைத்து எதை எப்படி அளந்தார்கள்?
அளந்தபின் என்ன செய்தார்கள்?
எங்கு இருந்து கொண்டு இதையெல்லாம் செய்தார்கள்?
இதையெல்லாம் செய்ய அவர்களுக்கு அவகாசமும் வசதியும் தேவையும்
இருந்திருக்கிறது. ஆனால்
நாம் இப்போது எங்கு இருக்கிறோம்?>

இப்படி எழுதியபின்னர் கொஞ்சம் நிதானித்துப் பார்த்தால்.......

அன்புடன்

ஜெயபாரதி

No comments:

Post a Comment