For Read Your Language click Translate

11 July 2014

ராகு திசை



ராகு திசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும். ராகுவுக்கு சொந்த வீடு இல்லை என்ற காரணத்தால் ராகு நின்ற வீட்டதிபதியின் நிலையை கொண்டே ராகு அதன் பலனை தருவார். பொதுவாக ராகு பகவான் 3,6,10,11 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்று சுப கிரகங்களின் சேர்க்கையுனிருந்தால் நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் நல்ல மன தைரியம் உண்டாகும். ராகு நின்ற வீட்டதிபதியும் பலம் பெற்று அமைந்து விட்டால் அதிகம் சம்பாதிக்கும் யோகம்,  வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் உயர்ந்த நிலைக்கு செல்லக் கூடிய அமைப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவு ஆடை ஆபரண சேர்க்கைகள் யாவும் சிறப்பாக அமையும். புதுமையான கட்டிடங்கள் கட்டுவது, புதுமையான விஷயங்களில் ஆர்வம் காட்டுவது போன்றவற்றில் ஈடுபாடு கொடுக்கும்.

அதுவே ராகு பகவான் அசுபபலம் பெற்று ராகு நின்ற வீட்டதிபதியும் பலமிழந்திந்தால் ராகு திசை நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் சூழ்நிலை உடலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள கூடிய அமைப்பு கொடுக்கும் அதிக முன் கோபமும் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், தவறான பெண்களின் சேர்க்கைகள், பிள்ளைகளுக்கு தோஷம், அரசு வழியில் தண்டனை பெறக் கூடிய நிலை, அபராதம் கட்ட வேண்டிய நிலை போன்ற பலவிதமான துக்க பலன்கள் உண்டாகும். உடல் நிலையிலும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்ணும் உணவே விஷமாக  மாற கூடிய நிலை ஏற்படும்.
திருவாதிரை,சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்கள் ராகுவுக்குடையதாகும். ராகு திசை ஒருவருக்கு 3வது திசையாக வந்தால் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். குறிப்பாக ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற சந்திரனின் நட்சத்திரத்தில்  பிறந்தவர்களுக்கு 3வது திசையாக ராகு வரும். இக்காலங்களில் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

ராகு பகவான் பலமாக அமையப் பெற்று குழந்தை பருவத்தில் திசை  நடைபெற்றால் நல்ல உடல்  ஆரோக்கியம், சுறுசுறுப்பாக இருக்க கூடிய ஆற்றல் உண்டாகும். இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை நல்ல அறிவாற்றல், புக்தி கூர்மை, ஸ்பெகுலேஷன் மூலம் தன சேர்க்கை உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் எதிர்பாராத தனசேர்க்கை, புதிய வாய்ப்புகள் தேடி வரும் அமைப்பு, எதிர்பாராத உயர்வுகள் உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் வசதி வாய்ப்புகள், எதிர்பாராத தனசேர்க்கைகள் செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

அதுவே ராகு பகவான் பலமிழந்திருந்து திசையானது குழந்தை பருவத்தில் ந¬பெற்றால் ஆரோக்கிய பாதிப்பும், பெற்றோருக்கு பிரச்சனைகளும் ஏற்படும். இளமை பருவத்தில் ந¬பெற்றால் கல்வியில் தடை, தேவையற்ற நட்புகள், தீய பழக்க வழக்கங்கள், பெற்றோர்களிடம் அவப்பெயர் உண்டாகும். மத்திம வயதில் நடைபெற்றால் மணவாழ்வில் பிரச்சனை, எடுக்கும் முயற்சிகளில் தடை முரட்டுதனமான செயல்பாடுகளால் அவப்பெயர் ஏற்படும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், உண்ணும் உணவே விஷமாகக் கூடிய நிலை உண்டாகும்.

ராகு திசை ராகுபுக்தி 
    ராகு திசையில் ராகுபுக்தி 2வருடம் 8மாதம் 12நாட்கள் நடைபெறும்.

ராகு பலம் பெற்று அதன் சுயபுக்தி காலங்களில் மனதில் நல்ல உற்சாகமும், எடுக்கும் காரியங்கள்  யாவற்றிலும் வெற்றியும், அரசு வழியில் ஆதரவும், செய்யும் தொழில் உத்தியோகத்தில் உயர்வுகளும் உண்டாகும், வீடுமனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு ஏற்படும்.

ராகு பலமிழந்திருந்தால் பிறந்த ஊரை விட்டும் உற்றார் உறவினர்களை விட்டும். குடும்பத்தை விட்டும் அன்னியர் வீட்டில் வாழ வேண்டிய நிலை ஏற்படும். மனநிலையில் பாதிப்பு, தீராத நோயினால் அவதிப் படும் நிலை, வீண் வம்பு வழக்குகளில் சிக்கி கெட்ட பெயரை எடுக்கும் சூழ்நிலை, குடும்பத்தில் உள்ளவர்களை இழக்கு நிலை, பொருள் இழப்பு, பங்காளி வழியில் தொல்லை ஏற்படும்.

ராகுதசா குருபுக்தி
     
ராகுதிசையில் குரு புக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.  

குரு பகவான் பலம் பெற்று அமையப் பெற்றால் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பாராத வகையில் தன லாபம் கிட்டும் தான்ய விருத்தியும், சமுதாயத்தில் பெயர் புகழ்,செல்வம் செல்வாக்கு உயரக் கூடிய பாக்கியமும் உண்டாகும். சொந்த ஊரிலேயே வீடுமனை, வண்டி வாகன வசதிகளுடன் வாழக் கூடிய யோகம் அமையும். பிள்ளைகளால் பெருமையும், அரசு வழியில் உயர் பதவிகளும், பெரியவர்களின் ஆசியும் கிட்டும்

குருபகவான் பலமிழந்து அமையப் பெற்றால் நீச தொழில் செய்யும் நிலை, பண விஷயங்களில் கெட்ட பெயரை சம்பாதிக்க கூடிய நிலை, புத்திர பாக்கியம் உண்டாக தடை, புத்திரர்களால் அவமானம் நெருங்கியவர்களே துரோகம் செய்யும் நிலை வறுமை, தொழில் உத்தியோகத்தில் அவப்பெயர் குடும்பத்திலுள்ளவர்களுக்கு நோய்கள் உண்டாகும்.
   
ராகுதசா சனிபுக்தி

     ராகு திசையில் சனிபுக்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.  

சனிபகவான் பலம் பெற்றிருந்தால் சொன்ன சொல்லை காப்பாற்றும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை, சுகமான வாழ்க்கை, சுப நிகழ்ச்சிகள் கைகூடும் வாய்ப்பு, தன தான்ய அபிவிருத்தி, தொழில் வியாபார நிலையில் முன்னேற்றம், எதிலும் துணிந்து செயல் படும் ஆற்றல், ஆடை ஆபரண சேர்க்கை, அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

சனிபகவான் பலமிழந்து புக்தி நடைபெற்றால் எதிர்பாராத விபத்துக்களால் ஊனமாகும் நிலை, மனைவி பிள்ளைகளுக்கு உடல் நிலை பாதிப்பு, உற்றார் உறவினர்களிடம் பகை, சோர்வு எடுக்கும் காரியங்களில் தடை, தொழிலாளர்களால் பிரச்சனை, அரசு வழியில் தொல்லை, பூர்வீக சொத்துக்களை இழக்கும் நிலை, புத்திரதோஷம், வீண் வம்பு வழக்குகள், கடன் தொல்லையால் அவமானம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

ராகுதசா புதன் புக்தி
    ராகுதிசையில் புதன் புக்தியானது 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள் நடைபெறும். 

புதன் பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல வித்தைகளிலும் கல்வி நிலையிலும் உயர்வு ஏற்படும். உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் பெரிய மனிதர்களின் அன்பிற்கு பாத்திரமாக கூடிய வாய்ப்பு, ஆடை ஆபரண வண்டி வாகன சேர்க்கை, மனைவி பிள்ளைகளால் சிறப்பு புதுவீடு கட்டி குடி புகும் பாக்கியம் உண்டாகும்.

புதன் பலமிழந்திருந்தால் குலப்பெயர் கெடும்படி நடந்து கொள்ளும் நிலை, குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு, அரசு வழியில் பிரச்சனை, வண்டி வாகனங்களால் வீண்விரயம் பகைவர்களால் தொல்லை ஏற்படும்.

ராகுதிசை கேது புக்தி
     ராகுதிசையில் கேதுபுக்தியானது 1 வருடம் 18 நாள் நடைபெறும்.  

கேது பலம் பெற்று நின்ற வீட்டதிபதியும் நல்ல நிலையில் அமையப்பெற்றால் வண்டி வாகனம் ஆடை ஆபரண சேரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் செல்லக் கூடிய வாய்ப்பு உண்டாகும் என்றாலும் ராகு திசையில் கேது புக்தி என்பதால் பெரிய அளவில் நற்பலனை எதிர்பார்க்க முடியாது.  கணவன் மனைவியிடையே பிரச்சனை, இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, திருடர் மற்றும் பகைவர்களால் தொல்லை, நெருப்பால் கண்டம் எதிலும் சுறுசுறுப்பற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் நஷ்டம், விஷத்தால் கண்டம், விதவையுடன் தொடர்பு கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும்.

ராகுதசா சுக்கிர புக்தி
     ராகுதிசையில் சுக்கிரபுக்தி 3 வருடங்கள் நடைபெறும். 

சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகள், உத்தியோக நிலையில் உயர்வு, புகழ் பெருமை யாவும் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை வண்டி வாகன யோகம் திருமண சுபகாரியம் நடைபெறும் வாய்ப்பு, பெண் குழந்தை யோகம், கிட்டும் வீடுமனை அமையும். கலை துறையில் சாதனை புரிந்து வெற்றி பெற கூடிய ஆற்றல் உண்டாகும்.

சுக்கிரன் பலமிழந்திருந்தால் பெண்களால் அவமானம், மர்ம ஸ்தானங்களில் நோய், சர்க்கரை வியாதி, திருமணத் தடை, நினைத்த காரியங்களில் தோல்வி, பணநஷ்டம், வறுமை, வண்டி வாகனத்தால் வீண்விரயம், இல்லற வாழ்வில் இனிமை குறைவு உண்டாகும். எடுக்கும் காரியங்களில் முன்னேற முடியாத நிலை போன்றவை ஏற்படும்.

ராகுதிசையில் சூரிய புக்தி
ராகுதிசையில் சூரிய புக்தி 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.  

சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகளை வகுக்கும் அமைப்பு, ராணுவம் போலீஸ் துறைகளில் பல விருதுகளைப் பெறக்  கூடிய ஆற்றல், எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் நல்ல தைரியம் துணிவு எதிரிகளை ஒட ஒட விரட்ட கூடிய பலம், தந்தை, தந்தை வழி உறவுகளால் மேன்மை, செய்யும் தொழில் வியாபாரத்தில் மேன்மை போன்ற நற்பலன்கள் ஏற்படும்.

சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்கள் தலைவலி, இருதய கோளாறு, ஜீரம் கண்களில் பாதிப்பு, தந்தை,  தந்தை வழி உறவுகளிடையே பகைமை, தொழில் வியாபாரத்தில் நஷ்டம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, நஷ்டம் யாவும் உண்டாகும்.


ராகு திசையில் சந்திர புக்தி

ராகுதிசையில் சந்திர புக்தி 1 வருடம் 6 மாதம் நடைபெறும். 

சந்திரன் பலம் பெற்றிருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி, நல்ல மன உறுதி, அறிவாற்றல் திருமண பாக்கியம், பெண் குழந்தை  பிறக்கும் வாய்ப்பு, வண்டி வாகன யோகம், கணவன் மனைவி உறவில் திருப்தி, கடல் கடந்து அந்நிய நாட்டிற்கு சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு, பயணங்களால் அனுகூலம், ஜல தொடர்புடைய தொழிலில் ஏற்றம் தாய் வழியில் மேன்மை உண்டாகும். பொருளாதாரமும் உயரும்.

சந்திரன் பலமிழந்திருந்தால் தாய்க்கு கண்டம் தாய் வழி உறவுகளிடம் பகை, மனக்குழப்பம் எதிலும் தெளிவாக செயல்பட முடியாத அமைப்பு, எடுக்கும் காரியங்களில் தடை, பெண்கள் வழியில் விரோதம், ஜலதொடர்புடைய பாதிப்புகள், நீரினால் கண்டம் கடல் கடந்து செய்யும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன், காரியத்தடை போன்றவை உண்டாகும்.

ராகுதிசையில் செவ்வாய் புக்தி
     ராகுதிசையில் செவ்வாய் புக்தி 1 வருடம் 18 நாட்கள் நடைபெறும்.

செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி,  மனை,  வீடு, வண்டி வாகன யோகம் அமையும். தன தான்ய சேர்க்கைகள் அதிகரிக்கும். அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவிகள், நிர்வாக சம்மந்தமான உயர்வுகள் கிட்டும். நல்ல உடல் ஆரோக்கியம் எதிரிகளை வெல்லும் ஆற்றல், வம்பு வழக்குகளில் வெற்றி, நிர்வாக சம்மந்தமான உயர் பதவிகள் கிட்டும். உடன் பிறந்த சகோதரர்களால் அனுகூலம், செய்யும் தொழில் வியாபாரத்தில் உயர்வு உண்டாகும்.

செவ்வாய் பலமிழந்திருந்தால் உடல் நலத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தலைவலி ஜீரம் காயம் ஏற்படுதல், எதிர்பாராத விபத்துகளை சந்திக்கும் நிலை உண்டாகும். மனைவிக்கு கர்ப கோளாறு மாதவிடாய் பிரச்சனை, சகோதர்களிடையே பகை அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் வீண் விரயம்  பங்காளி வழியில் விரோதம், தொழில் உத்தியோத்தில் விண் பழிகளை சுமக்க கூடிய நிலை ஏற்படும்.


ராகுவிற்குரிய பரிகாரங்கள்;

ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை  பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் சரபேஸ்வரர், பைரவர்  வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது. மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, தேங்காய், உளுந்து போன்றவற்றை தானம் செய்வது பாம்பு புற்று பாலூற்றுவது, ராகுவுக்கு பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது. கோமேதக கல்லை அணிவது சிறப்பு.   
  

No comments:

Post a Comment