For Read Your Language click Translate

26 March 2017

பார்வையாளனாக இருங்கள்.....!!!


ஒரு அரச குமாரன் தீட்சை பெற்றான். முதல்நாள் அவன் பிச்சை யாசிக்கச் சென்றான்
புத்தர் கூறிய வீட்டின் வாயிலில் நின்று பிச்சை கேட்டான். பிச்சை கிடைத்தது. உண்டு, திரும்பி வந்தான்
புத்தரிடம் சென்று, "மன்னியுங்கள்.
என்னை மீண்டும் அங்கே அனுப்பாதீர்கள்." என்று வேண்டினான்.
புத்தர், "என்ன ஆயிற்று?" என்று கேட்டார்.
அவன் பதிலளித்தான்,
"அந்த இடத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது என் மனதில் எனக்குப் பிடித்தமான உணவு வகைகளின் எண்ணம் தோன்றியது.
அந்த இடத்தை அடைந்தபோது, வீட்டுத் தலைவி நான் எண்ணிய உணவு வகைகளையே பரிமாறினாள்.
நான் தற்செயலாக நேர்ந்தது என எண்ணினேன்.
ஆனால் உணவு உண்டபோது, தினமும் எனது வீட்டில் உணவுக்குப் பிறகு சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளும் பழக்கம் நினைவுக்கு வந்தது.
இன்று நம்மை யார் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு கூறப் போகிறார்கள் என்று எண்ணினேன்.
உடனேயே அந்தப் பெண், "சுவாமி! போஜனத்திற்குப் பின் சில நிமிடங்கள் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு செல்லுங்கள். கிருபை செய்யுங்கள் என் இல்லம் பவித்ரமாகிவிடும்!." என்று வேண்டினாள்.
எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. மீண்டும் , இதுவும் தற்செயல்தான். என் மனதில் தோன்றியது, இவளும் கூறினாள் என்று சமாதானம் செய்து கொண்டேன்.
ஓய்வு எடுக்க அமர்ந்தபோது, "இன்று எனது சொந்தக் கட்டிலும் இல்லை. படுக்கையும் இல்லை, இருக்க நிழலும் இல்லை". என்ற எண்ணம் தோன்றியது.
வேறு ஒருவரது கூரை நிழலில் வேறு ஒருவரது பாயில் படுத்திருக்கிறேன்." என்று எண்ணினேன்.
உடனே அந்தப் பெண், "பிட்சு, படுக்கை உங்களுடையதுமல்ல. என்னுடையதுமல்ல!" என்றாள்.
எனக்கு மிகவு‌ம் கலக்கமாகிவிட்டது. தற்செயலாக மீண்டும் மீண்டும் நேருவது சாத்தியமல்ல.
"நான் அவளிடம் கலவரத்துடன் கேட்டேன் :
"எனது எண்ணங்கள் உன்வரை எட்டுகின்றனவா? எனக்குள்ளே ஓடும் நினைவுப் பெருக்கு உனக்குத் தெரிகிறதா?"
அவள், "எப்பொழுதும் தியானம் செய்து செய்து எனது சிந்தனைகள் சூனியமாகி விட்டன.
இப்பொழுது மற்றவர்களது சிந்தனைகளும் காட்சியளிக்கின்றன!." என்றாள்.
நான் பயந்து நடுங்கி ஓடி வந்து விட்டேன்
இனி என்னைத் தயை செய்து அங்கே அனுப்பாதீர்கள்.
புத்தர் விடவில்லை. "ஏன்"? என்று கேட்டார்.
அவன் தயங்கியபடி, "எப்படிக் கூறுவேன்?" அந்த அழகிய யுவதியைக் கண்டு என் மனதில் விகாரங்களும் எழுந்தன. அவற்றையும் அவள் படித்திருப்பாள் அல்லவா?
நான் எந்த முகத்தைக் கொண்டு அங்கு செல்வேன்? எப்படி அந்த வாயிலில் சென்று பிச்சை கேட்பேன்? மீண்டும் என்னை அங்கே அனுப்பாதீர்கள்! " என்றான்.
புத்தர், "அங்கேயே செல்ல வேண்டும். இது உனது சாதனையின் ஒரு பகுதி.
இந்த முறையில் சிந்தனைகளைப் பற்றிய விழிப்பு உனக்குப் பிறந்து விடும்.
சிந்தனையின் பார்வையாளனாக நீ ஆகிவிட முடியும் ",
என்று வற்புறுத்தினார்.
வேறு வழியில்லை. மறுநாளும் செல்ல நேர்ந்தது.
ஆனால் மறுநாள் அதே மனிதன் அங்கே செல்லவில்லை. முதல் நாள் அவன் வழியிலேயே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.
மனதில் என்ன தோன்றுகிறது என்பதையே அறியவில்லை.
இன்று அவன் விழிப்புடனே சென்றான்.
ஏனெனில் இப்பொழுது பயம் இருந்தது. அவன் முழு நினைவுடன் சென்றான்.
அவளது வீட்டு வாயிலை அடைந்தபோது, சற்றுத் தாமதித்து, படிகளில் நின்று,
தன்னை முழுமையாக உணர்வடையச் செய்தான்.
உள்ளே அகக் கண்களை நன்கு திறந்து கொண்டான். "உள்ளே பார்! வேறு எதுவும் செய்ய வேண்டாம்.
நீ காணாத எந்தச் சிந்தனையும் இருக்கலாகாது.
நீ அறியாத எந்த எண்ணமும் தோன்றக்கூடாது என்பதை மட்டும் நினைவில் இருத்திக் கொள்", என்று கூறியிருந்தார், புத்தர், தனக்குள்ளே கவனித்தபடி அவன் படியேறினான். தனது சுவாசமே அவனுக்குத் தெரியலாயிற்று.
தனது கை கால்களின் அசைவுகளும் காட்சியளித்தன. உணவு உண்டான்.
ஒவ்வொரு கவளமும் எடுப்பது அவனுக்குள் காட்சியளித்தது. வேறு யாரோ உணவு அருந்துவதை அவன் பார்துதுக் கொண்டிருந்தான்.
உங்களது பார்வையாளனாக நீங்கள் மாறி விட்டால் உள்ளே இரு நிலைகள் ஏற்படுகின்றன.
ஒன்று செயல் புரிபவன்,
மற்றொன்று சாட்சியாக மட்டும் இருப்பவன்.
உங்களுக்குள் இருபகுதி ஆகிவிடும்.
ஒன்று கர்த்தா; மற்றொன்று த்ரஷ்டா.
அந்த முறை அவன் உணவு உண்டான்.
ஆனால் உணவு உட்கொண்டது ஒருவன்.
பார்த்தது மற்றொருவன்.
நம் நாட்டில் கூறப்படுவது, உலகம் முழுவதிலும் ஞானம் அடைந்தவர்கள் கூறுவது ,
"பார்த்துக் கொண்டிருப்பவனே நீங்கள்,
செய்து கொண்டிருப்பவன் நீங்களல்ல!'
என்பதே. அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
மிகுந்த அதிசயமும் ஆனந்தமும் அடைந்தான்.
புத்தரிடம் வந்து சேர்ந்தான். மிக்க மகிழ்ச்சியுடன், கூத்தாடிக் கொண்டு, "தன்யனானேன்". பெரும் பேறு கிடைத்தது.
இரு பெரும் அனுபவங்கள் கிடைத்தன.
ஒன்று நான் பூரண விழிப்புடன் இருந்தபோது, சிந்தனைகள் நின்று விட்டன.
விழிப்புடன் உள்ளே கவனித்தபோது எண்ணங்கள் நின்று விடுகின்றன என்பதை உணர்ந்தேன்.
மற்றொரு அனுபவம், சிந்தனைகள் நின்று விட்டபோது கர்த்தா வேறு, த்ரஷ்டா வேறு என்பதை உணர்ந்து கொண்டேன்!" என்றான்.
புத்தர், "இதுவே விதி".
இதைச் சாதனை செய்து விட்டவன், அனைத்தையும் சாதித்து விடுகிறான்!"
என்கிறார் ஓஷோ

No comments:

Post a Comment