For Read Your Language click Translate

20 November 2015

அற்புத பரிகார ஸ்தலங்கள்

தோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்




அடுத்த முறை, நீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், மிக முக்கியமான , கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களை தரிசித்து வாருங்கள். ரத்தினச் சுருக்கமாக , இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன்.

சில ஆலயங்களைப் பற்றி அந்த வரிகளை படிக்கும்போதே , உங்கள் உள்ளுணர்வு அந்த கோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லும். அந்த ஆலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள். உங்கள் பூர்வ ஜென்ம , கர்ம வினைகள் நிச்சயம் அகலும்.

எல்லா ஆலயங்களுக்கும் செல்ல முடியவில்லை என்றாலும், கலக்கம் வேண்டாம். அதே நேரத்தில் , உங்களால் மிகத் திருப்தியாக பூஜை , அபிசேகம், அலங்காரம் செய்ய முடியவில்லையே என்று கூட மனக்கலக்கம் வேண்டாம். ஐயா , ஒரு அர்ச்சனை கூட செய்ய வேண்டாம்.. ஒரே ஒரு விஷயம் மட்டும் தவறாமல் செய்யுங்கள்...

மூலவருக்கு முன்பாக, அவரைப் பார்த்தபடியோ , அல்லது உங்களால் முடிந்தவரை அருகிலோ - அல்லது மற்றவருக்கும் தொந்தரவு இல்லா வண்ணம் - ஒரு மணி நேரம் வரை வெறுமனே அமர்ந்து , மனத்தால் இறைவனிடம் உங்கள் குறைகளை தீர்க்க வேண்டி மன்றாடுங்கள். முடிந்தால் மனதுக்குள் - ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் ஜெபிக்கலாம், அல்லது காயத்ரி மந்திரம் ஜெபிக்கலாம். ஸ்ரீ ருத்ரம் ஜெபிக்கலாம்.

சில சமயங்களில் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை இருந்தால் , குறைந்த பட்சம் 12 நிமிடங்களாவது , அமர்ந்து வாருங்கள். இறைவனின் சிருஷ்டியில் எல்லா நாளும், நேரமும் புனிதமானதே. ஒரு சில மணித்துளிகள் மட்டும் , பலப்பல காரணங்களால் - மிக சக்திவாய்ந்த தருணங்கள் ஆகி விடுகின்றன.

இதில் இன்னொரு சூட்சுமம் உள்ளது. உங்களுக்கு நடக்கும் தசை / புக்தி என்னவென்று பாருங்கள். அதற்கேற்ப உகந்த நேரத்தில் - நீங்கள் அந்த தெய்வத்தின் முன் நிற்க, உங்களுக்கு ஏற்படும் தடைகள் அனைத்தும் , படிக்கற்கள் ஆகிவிடும்.
நல்ல விஷயங்களை , நீங்கள் அறிந்து உணந்த விஷயங்களை - உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்திலும், உங்கள் குழந்தைகளுக்கும் தக்க நேரத்தில் எடுத்து சொல்லுங்கள். 

மன நோய் அகற்றும் " திருவிடை மருதூர் "
சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் " மகாலிங்கமானார்". இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக் கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம்.



புற்றுநோய் தீர்க்கும் " திருந்துதேவன் குடி அருமருந்தம்மை " 
புற்று நோய்தீர்க்கும் தலம் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில்.
கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் " திருந்துதேவன்குடியின் " நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

கடன் தொல்லைகள் தீர்க்கும் " திருச்சேறை ருண விமோச்சனர் "

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில் அமைந்துள்ளது " திருச்சேறை உடையார் கோவில் ". இங்கு தனி சந்நதியில் " ருணவிமோச்சனராய் " அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்று " கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே " என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்

சங்கடங்கள் தீர்க்கும் திருபுவனம் " சூலினி, பிரத்தியங்கரா சமேத சரபேஸ்வரர் "
கடன் தொல்லைகளில் இருந்து விடுபட, வழக்குகளில் வெற்றியடைய, பில்லி, சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்து அருள்பாளிக்கும் " திருபுவனம் " சென்று வழிபடலாம். இவர் வழிபடுபவரின் அனைத்து சங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை 11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11 வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளை சிறந்தது.

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய "ஸ்ரீவாஞ்சியம்"
காசிக்கு இணையான தலம் இந்த ஸ்ரீவாஞ்சியம். காசியில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால், இத் தலத்திலோ புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே சிலையில் காட்சி தரும் இத் தலத்தில் உள்ள குப்த கங்கையில் நீராடி வாஞ்சிநாதரையும், மங்களநாயகியையும், மஹாலஷ்மியையும் வழிபட்டால், பிரிந்திருக்கும் தம்பதியர், பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர். கால சர்ப்ப தோஷம் நீக்கும், பாவங்கள் தீர்த்து முக்தி அருளும் இது சனி தோஷ பரிகாரத்திற்கு சிறந்த திருத்தலம்.

அட்சரப்பிரயாசம் ( எழுத்தறிவு ) பெற இன்னம்பூர் எழுத்தறிநாதர்

அகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களை கற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக்கான அட்சரப்பியாசம் நடைபெறுகிறது. குழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்து வந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்து பயிற்சி தருகின்றனர்.இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும் வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது.

தடைபட்ட திருமணம் நடக்க 

கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் " திருநல்லம் "முக்கண்ணன் " உமா மகேஸ்வரராய் " மேற்கு நோக்கி வீற்றிருக்க, " அங்கவள நாயகியாய் "அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த, திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் "என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம், திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில், கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது. 

தீரா நோய்கள் தீர்க்கும் "வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர் "

மயிலாடுதுறை - சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம் " வைத்தீஸ்வரன் கோவில் ". செவ்வாய் தோஷம் நீக்கும் " அங்காரகனுக்குரிய " திரு கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர், தையல் நாயகி சமேதராய் அருளும் திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமி தீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார். 18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் "தன்வந்திரி" இத் தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையை உட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயுகுண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக்கொள்ள நோய்கள் தீருகின்றன.

செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை" 

கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

சரஸ்வதி கடாட்சம் தரும் கூத்தனூர்

மாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும், கலைமகளின் பரிபூரண அருளை பெறவும் வழிபட வேண்டிய தலம் ஞானசரஸ்வதி காட்சி தரும் "கூத்தனூர்". நமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே. மயிலாடுதுறை - திருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.

நாக,புத்திர,மாங்கல்ய தோஷங்கள் நீங்க நாச்சியார் கோவில் கல் கருடன்

காரியங்கள், திருமணம் கைகூட திருநந்திபுர விண்ணகரம் நாதன் கோவில்

கடும் வியாதிகளின் இருந்து விடுபட கும்பகோணம் பாணபுரீஸ்வரர்

கடும் ஜூரம் விலகிட காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் "ஜூரகேஸ்வரர் "

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர கும்பகோணம் ஆதி வராகப் பெருமாள்

ராகு தோஷம், எம, மரண பயம் நீங்க திருநீலக்குடி எனும் தென்னலக்குடி

மாங்கல்ய பலம் பெற, நோய்கள் தீர திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்

குழந்தைகளின் நோய் தோஷங்கள் தீர சிவபுரம் எனப்படும் திருச்சிவபுரம்

விஷக் கடியில் இருந்து நிவாரணம் பெற அழகாபுத்தூர் சங்கு சக்கிர முருகன்
=============================================================

குரு பகவானின் பரிபூரண அருள் பெற உதவும் - அற்புதமான ஆலயம்

Best Blogger Tips



 குரு பலன் கிடைக்க அதிகம் பரிந்துரை செய்யும் ஸ்தலம். குரு பகவான் - நம் அனைவருக்கும், கல்வி , தனம், வாக்கு , புத்திர பாக்கியம் உள்பட பல முக்கிய விஷயங்களுக்கு காரண கர்த்தாவாக விளங்குகிறார். நவ கிரகங்களில் முழு சுபர் .

குருப் பெயர்ச்சியின் மூலம் ஒவ்வொரு ஆண்டும், நமைப் போன்ற மனிதர்களின் பொருளாதார வாழ்வில் - ஏற்ற , இறக்கத்தை ஏற்படுத்தி - உலக பொருளாதாரத்தையே , முழு கட்டுப்பாட்டில் வைப்பவர் குரு பகவான். சில வருடங்களுக்கு முன் , ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சி - குரு பகவான் , தன பலமிழந்து நீச வீட்டில் , மகரத்தில் இருந்த போது நிகழ்ந்ததே. சரியாக 12 வருடங்களுக்கு முன் , இதே நிலைமை தான். பல வங்கிகள் திவால் ஆனது.

நம் வாழ்வில் ஏற்படும் ஏற்ற , இறக்கங்களும் குரு பார்வையைப் பொறுத்தே வேறுபடுகிறது.
ஜாதகப் படி ஜனன காலத்திலோ , அல்லது நடக்கும் கோச்சாரத்திலோ - குரு பகவான் , பலம் இழந்து அல்லது பாதக ஸ்தானத்தில் இருந்தால் - உங்களால் இயன்றவரை அடிக்கடி இந்த ஆலயத்திற்கு சென்று , மனமார குருவருள் வேண்டி பிரார்த்தனை செய்து வாருங்கள். வாழ்வில் , நிச்சயம் நல்ல மாறுதல் கிடைக்கும்.

எவர் ஒருவர் ஜாதகத்தில் குரு நீசமாக இருக்கிறாரோ, அவர்கள் நிச்சயம் இந்த ஆலயம் வந்து குருவுக்கு பரிகாரம் செய்தல் நலம் பயக்கும்.

நீண்ட நாட்களாக , நல்ல வேலை / தொழில் அமையாமல் அல்லல் படும் அனைவருக்கும் - ஒரு நிரந்தர தீர்வு கொடுத்து , ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு விடி மோட்சம் கொடுத்துள்ள ஆலயம் இது.
புத்திர சோகம் உள்ளவர்களுக்கும், தீய வழியில் செல்லும் குழந்தைகளுக்கு - நல்ல வழியில் வழிகாட்டிச் சென்று , அவர்களை மேம்படுத்தவும் , நவ கிரகங்களின் தோஷத்தை நீக்கவும் - இந்த சந்திரகாந்த கல்லில் அபிசேகம் பெறும் வசிஷ்டேஸ்வரரை வணங்குதல் , உங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு ஆகும்.

இன்னும் ஒரு ஆச்சரியத்தக்க விஷயம் . எவர் ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் - ஏழாம் வீட்டில் தனியாக இருக்கிறாரோ, அவர்கள் திருமணம் ஒரு கேள்விக்குறியாகி விடுகிறது. திருமணம் நடந்தாலும், அது எப்படி , எவ்வளவு இடையூறுகளுக்கு இடையில் நடந்தது என்பது , அந்த ஜாதர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.

விட்ட குறை , தொட்ட குறை போல - அவர்கள் மண வாழ்வும், கொஞ்சம் நெருடலாகவே செல்லும். இவர்களும் ஒருமுறை இந்த ஆலயம் வந்து குரு பகவானுக்கு உரிய ப்ரீத்தி செய்வது அவசியம். அதன் பிறகு , உங்கள் வாழ்க்கை ஜாம் ஜாம் என்று செல்வது நிச்சயம்.

இனி , ஆலயம் பற்றிக் காண்போம்... :


தல அமைவிடமும், பெயர்க் காரணமும்

கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் திட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது திருதென்குடித்திட்டை எனும் திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருத்தலம் இது. திட்டை என்ற பெயர் ஏன்?. புராண காலத்தில் ஊழிப் பெரு வெள்ளத்தால் உலகின் அனைத்து பகுதிகளும் மூழ்கி விட்டது. மும்மூர்த்திகளும் இருள் உலகம் முழுவதையும் சூழ்ந்து விட்டதை கண்டு மனம் கலங்கினர். அச் சமயம், ஒரு பகுதி மட்டும் சற்று மேடாக, திட்டாக காணப்பட்டதை கண்டனர். விரைந்தனர் அப் பகுதிக்கு. அங்கு "ஹம்" என்ற ஒலியுடன் பல விதமான மந்திர ஒலிகளும் கேட்டனர். அப்பொழுது ஜோதி சொரூபமாய் சிவ பெருமான் தோன்றக் கண்டனர். அவரை போற்றி துதித்தனர். மும் மூர்த்திகளின் வேண்டுதலுக்கு இணங்க இத் தலத்திலேயே வீற்றிருந்து அருள் புரியலானார்.

இறைவனும், இறைவியும்
இறைவன் வசிஷ்டேஸ்வரர். தாமாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தி. தேரூர் நாதர், பசுபதி நாதர், ரதபுரீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், அனந்தீஸ்வரர் என்றெல்லாம் வணங்கப்படுகின்றார். யம தர்மன் சாப விமோஷனம் பெற்ற தலம் இது. சனீஸ்வரன் நவ கோள்களில் ஒன்றாக விளங்கும் அருள் பெற்றது இத் தல இறைவனை வேண்டியே. பரசுராமர், கார்த்த வீர்யார்ச்சுனன், முருகன், பைரவர் போன்றோர் வழிபட்ட திருக்கோவில் இது. இறைவி உலகநாயகி. சுகந்த குந்தளேஸ்வரி, மங்களேஸ்வரி என்றும் வழிபடப்படுகின்றாள். இத் தல அம்பிகையை வழிபட்டு சுகந்த குந்தலா எனும் பெண்ணொருத்தி இழந்த தன் கணவனை உயிருடன் மீட்டாள் என்கிறது தல புராணம். மங்களா எனும் வைசியப் பெண்ணொருவள் தன் விதவைக் கோலம் நீங்கி நீடூழி வாழ்ந்து மணித்வீபம் சென்றாள். சங்க பால மன்னன் என்பவன் தன் இறந்து போன மத்சலாவை உயிருடன் மீண்டும் பெற்று இழந்த தன் அரசையும் இத் தல இறைவனை வழிபட்டே பெற்றான்.

சிறப்பு மூர்த்தியாய் குரு பகவான்

அனைத்து சிவாலயங்களைப் போலவே இங்கும் தெட்சிணாமூர்த்தி தென் புறத்தில் அமர்ந்திருக்கின்றார். சுவாமிக்கும் அம்பாள் சந்நதிக்கும் இடையில் குரு பகவான் ராஜ குருவாக நின்ற கோலத்தில் தனி விமானத்துடன், தனி சந்நதி கொண்டு காட்சி தருகின்றார். பெரும்பாலான குரு தலங்களில் குருவின் அதிதேவதையான தெட்சிணாமுர்த்தியே குருவாக பாவித்து வணங்கப்படுகின்றார். ஆனால், இத் தலத்தில் மட்டுமே குரு பகவான நவக்கிரக அமைப்பில் உள்ளது போல் தனி சந்நதியில் காட்சி அருள்கின்றார். இவரே இத் திருத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாவார். இத் தலத்தில் குரு பகவானுக்கு உற்சவ மூர்த்தியும் உண்டு. திருவிழா நாட்களில் இறைவனுடன் இவரும் வீதி உலா செல்வார். இத் திருத்தலத்தை தவிர குரு பகவான் வீதி உலா செல்வதை வேறு எங்கும் காண இயலாது. இது இத் தலத்தின் மிகப் பெரும் சிறப்பு.

குரு பார்க்க கோடி நன்மை

குரு பகவான் சப்த ரிஷிகளில் நடுவரான ஆங்கிரஸ மகிரிஷியின் புதல்வரே. இவரே தேவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கின்றார். ஜோதிட ரீதியாக ஐந்தாவது இடத்தில் இருக்கும் குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். உயர் பதவி, கல்வி, செல்வம், குடும்பத்தில் மகிழ்ச்சி இவற்றை சந்தோஷமாக அருள்பவர். குரு பகவான் முழுச் சுபர். தோஷங்களை நீக்குவதில் வல்லவர். கேதுவின் தோஷத்தை ராகுவும், ராகு, கேது இருவரின் தோஷங்களை சனியும், ராகு கேது தோஷத்தை புதனும், புதன் உட்பட ஐவரின் தோஷத்தை சந்திரனும் போக்க வல்லவர்கள். ஆனால் குரு பகவானோ அனைத்து நவக்கிர தோஷங்களையும் போக்க வல்லவர். எனவேதான் " குரு பார்க்க கோடி நன்மை " என்பர்.

பஞ்ச லிங்க ஷேத்திரம்

இத் திருக்கோயிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மூலவர் சுயம்பு லிங்கமாக ஐந்தாவதாய் எழுந்தருளியுள்ளார். எனவே இத் தலம் பஞ்ச பூதங்களுக்கும் உகந்த ஸ்தலமாக விளங்குகின்றது. திருகாளத்தி, திரு அண்ணாமலை, திருவானைக்காவல், சிதம்பரம் மற்றும் காஞ்சிபுரம் என்ற பஞ்ச பூத தலங்களும் ஒருங்கிணைந்த தலமாக விளங்குகின்றது இத் திருதென்குடித்திட்டை திருக்கோவில்.

திருக்கோவிலின் அமைப்பும், சிறப்பும்

கிழக்கு நோக்கிய ராஜ கோபுரத்துடன் திகழ்கின்ற இத் திருத்தலம் முற்றிலும் கருங்கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்டுள்ளது. நிறைய கோவில்கள் இவ்வண்ணம் கருங்கற் கோவில்களாக விளங்குகின்றன. ஆனால், இத் திருத்தலத்தில் மட்டுமே கொடி, கலசங்களும் கூட கருங்கற்களை கொண்டு வடிவமைக்கப்படுள்ளன. இப் பேரழகினை காண கண் கோடி வேண்டும்.

சந்திர காந்தக் கல்லும், சூரிய காந்தக் கல்லும்

இத் திருக்கோவில் அக்கால கட்டிடக் கலைக்கு ஓர் சிறந்த உதாரணம். கோவிலின் மூலவர் விமானத்தில் சந்திர காந்தக் கல் மற்றும் சூரிய காந்தக் கல் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திர காந்தக் கல் சந்திரனிடமிருந்து குளுமையை வாங்கி 24 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு சொட்டு நீரை மூலவர் லிங்கத்தின் மீது தாமாகவே அபிஷேகம் செய்கின்றது. சிவ பெருமான் , சந்திரனது சாபத்தினை நீக்கி, தன் சிரசில் இருக்க இடம் கொடுத்ததால் சந்திரன் தன் நன்றிக் கடனாக அனு தினமும் இவ்வாறு அபிஷேகம் செய்வதாக ஐதீகம். இந்த அதிசயம் உலகில் வேறெங்குக் காண இயலாத ஒன்று.

தல விருட்சங்கள்

திருக்கோவிலின் முன் உள்ள சக்கர தீர்த்தம் எனும் திருக்குளம் தல தீர்த்தமாகும். இது மஹா விஷ்ணுவின் சக்ராயுதத்தால் உண்டாக்கப்பட்டது. விநாயகர் அருளுடன் சகல சித்திகளையும் அளிக்க வல்லது. இங்கு தேவர்களும், தேவ மாதாக்களும் மரம், செடி, கொடிகளாக மாறி தல விருட்சமாக அருள்கின்றனர். இங்கு மற்ற கோவில்களை போலன்றி தல விருட்சங்கள் பல, ருத்ரன் ஆல மரமாகவும், ருத்ராணி ஸமி மரமாகவும், விஷ்ணு அரச மரமாகவும், லஷ்மி வில்வ மரமாகவும், மற்றைய தேவர் அனைவரும் செடி, கொடிகளாகவும் திருத்தல விருட்சங்களாகவும் அருளுகின்றனர்.

சனி தோஷம் உள்ளவர்கள், அர்த்தாஷ்டம சனி, ஏழரைச் சனி மற்றும் அஷ்டமச் சனி தோஷம் உள்ளவர்கள் ,இத் தல பசு தீர்த்தத்தில் நீராடி, பசுபதீஸ்வரரை வேண்டி, நவக்கிரகங்களை வலம் வந்து, சனி பகவானுக்கு அர்ச்சனை செய்தால் தோஷங்கள் நிவர்த்தியாகின்றன. 



 பல பல ஆயிரம் வருடங்களாக , சில நம்பிக்கை - பரம்பரை பரம்பரையாக நமக்கு சொல்லப் பட்டு வந்து இருக்கிறது. அந்த நம்பிக்கையில் இன்னும் போகிறோம். புராணங்கள் வெறும் கதைகள் என்று நினைத்தால் அது கதை தான். ஆனால், அவை உண்மை என்று நினைத்தால்..... (அட.. சூப்பரா இருக்குமே ? 


சொர்க்கம் , நரகம் என்று இருப்பது உண்மை என்று நம்மில் சிலர் சொல்லிக் கொண்டாலும், மனதளவில் நம்புவதே இல்லை. நம்பினால் , நாம் தவறு செய்யத் துணிய மாட்டோமே...


தேவர்கள் சொர்க்கத்தில் இருக்கின்றனர். தேவர்களும் தொழும் மும்மூர்த்திகள் இருக்கின்றனர். ரிஷிகள், சித்தர்கள் அவர்களை எல்லாம் , தரிசித்து இருப்பதாக புராணங்கள், செவி வழிச் செய்திகள் , காலம் காலமாக நமக்கு போதிக்கப் பட்டு வரும் நம்பிக்கைகள் கூறுகின்றன... 


அவை எல்லாம் , உண்மையாக இருக்குமா? என்கிற கேள்வி , இந்த விஞ்ஞான உலகில் வருவது இயல்பு தான்.  நாம் தான் இதை எல்லாம் நம்புவதே இல்லையே... 


அடி மனதில், ஆழ் மனதில் நமக்கு இந்த எண்ணம் தான் வருகிறது. எதையும் நாம் அனுபவித்து உணர்ந்து கொண்டால் ஒழிய, நம் மனது நம்புவதே இல்லை.


சிகரெட் பிடிப்பதால் புற்று நோய் வரும். குடித்தால் - லிவர் , கிட்னி போயிடும் என்று படித்து படித்து கூறினாலும், அதை நாம் அவ்வளவு எளிதில் விட்டு விடுவதில்லை. (நம்புவதில்லையோ?)


எவ்வளவு பிரார்த்தனை பண்ணினாலும் நமக்கு கடவுள் கண் திறப்பது இல்லை என்று ஒரே ஒரு முறை தோன்றினாலும், உடனே கடவுளை நம்புவதை நிறுத்தி விடுகிறோம்..... இது நியாயமா? 


நம் தமிழ் மொழி எவ்வளவு புராதனமானது என்று , இதுவரை உறுதியாக கூற முடியவில்லை. எத்தனை மகான்கள், புண்ணிய புருஷர்கள், சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் எத்தனையோ பேர் இறைவனை தரிசித்து, அந்த ஆவணங்கள் நமக்கு கிடைத்தும், இன்னும் இறைவன் இருக்கிறானா என்கிற ஊசல் ஆட்டத்தில் தான் நமது மனது இருக்கிறது.


பாம்பன் சுவாமிகளோ, ராமலிங்க அடிகளாரோ , ராமகிருஷ்ண பரமஹம்சரோ - முருக தரிசனம் பெற்றதோ, காளி தரிசனம் பெற்றதையோ பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.


புராணங்கள் வெறும் கட்டுக் கதைகள் அல்ல. நம் முன்னோர்களில் யாரோ ஒருவருக்கு, அந்த கால கட்டத்தில் பலருக்கு இறைவன் சிவனாகவோ, விஷ்ணுவாகவோ , முருகனாகவோ, விநாயகராகவோ - பல ரூபங்களில் காட்சி அளித்து இருக்க கூடும். அந்த நம்பிக்கை வாழையடி வாழையாக அந்த சந்ததிகளுக்கு தொடர்ந்து இருக்க கூடும்.


எத்தனையோ வருடங்களாக , கோடிக் கணக்கில் மகான்களின் மந்திர அதிர்வுகளை உள்ளடக்கிய - ஆலயங்கள் நம் தமிழ் நாட்டிலும் , இந்தியாவிலும் எவ்வளவோ இருக்கின்றன. ஒவ்வொரு ஆலயமும், ஒவ்வொரு சூட்சுமத்தை உள்ளடக்கி , பலன்களை உள்ளடக்கியது. நமக்கு ஆனால், இன்னும் 50 :50 நம்பிக்கையும், ஒரு வித க்யூரியாசிட்டியும் தான் இருக்கிறது.நான் சொல்வது தீவிர நம்பிக்கை உள்ளவர்களாக காட்டிக் கொள்பவர்களுக்கே.


நம்மில் உள்ள ஒரே குறை என்ன தெரியுமா? பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முந்தைய புராதனமும், பெருமையும் இருப்பதால் - மிகுந்த மெத்தனமும், அஜாக்கிரதையுமாக இருந்து விடுகிறோம்.... 


சரி, வெளி நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் எப்படி? அவர்களுக்கு ஜோதிடம், ஜாதகம் - கடவுள் நம்பிக்கை எதுவும் இருப்பதாக தெரியவில்லையே...


அங்கும் பல வருடங்களுக்கு முன்பு , பல கலாச்சாரங்களுக்கு முன்பு - நம் வழிபாடு முறை போன்றே இருந்து இருக்க கூடும்... ஜப்பானிலும், இந்தோனேசியா விலும், இந்தோ சீனா பகுதிகளிலும் பல ஆயிரக்கணக்கான புராதன சிலைகள் நம் இந்து மத கடவுள்களின் உருவத்தை ஒத்து இருப்பதை நாம் கேள்விப் படுகிறோம்.


நமது மதம் பெரியதா, உலக முழுவதும் பரவி இருந்த ஒன்றா என்பது இங்கு கேள்வி இல்லை. நமக்கு தேவை இல்லாத விஷயம். ஏதோ ஒரு காரணத்தால், நான் எத்தியோப்பியாவில் பிறந்து இருந்தால், இஸ்லாமையோ அல்லது வேறு எதோ ஒரு மதத்தையோ தழுவி இருந்து இருப்பேன். இந்து மதம் என்ற ஒன்று இருப்பது கூட தெரிந்து இருக்காது. 


உலகத்தில் பிறந்த எந்த ஒரு ஜீவனும், அவர்கள் வெளி நாட்டவராக இருந்தாலும், அவர்களும் கிரக பலன்களால் ஆட்படுவர் என்பது ஜோதிட விதி. யார் , யாருக்கு என்ன தலை எழுத்து என்பது பிறக்கும்போதே விதிக்கப் பட்டு விட்ட ஒன்று தான். நமது உடலில் உள்ள நவ சக்கரங்களின் மூலம் நவ கிரகங்களும் நம்மை இயக்கி - நம் பூர்வ புண்ணிய பலன்களை கிடைக்க செய்கின்றன என்பது ஜோதிட சாஸ்திரம். 


அது அப்போதே அளக்கப்பட்டு விட்டது என்று இருக்கும்போது , வழிபாடும், பரிகாரமும் - இயற்கைக்கு முரணா என்று நினைக்கவும் தோன்றுகிறது. வழிபாடும் , பரிகாரங்களும் - நமக்கு பாதகமான நேரங்களில் தீய பலன்களால் நமக்கு பாதிப்பு குறைவாக ஏற்படவும், நல்ல நேரங்களில் நமக்கு கிடைக்க விருக்கும் நற்பலன்களை உரிய நேரத்தில் கிடைக்க செய்யவும் தான். நான் ஏற்கனவே பல கட்டுரைகளில் கூறியபடி - ஜாதகம் மூன்றில் ஒரு பங்கு, நம் சுய எண்ணம் செயல்கள் ஒரு பங்கு , வாழும் வீடு, சூழல் - ஒரு பங்கு - இவை மூன்றும் தான் ஒருவரின் வாழ்க்கையின் வெற்றி , தோல்வியை தீர்மானிக்கின்றன.


நம் பூர்வ புண்ணிய கர்மாக்கள் நம் பிறப்பை தீர்மானித்தாலும், நாம் இப்போது செய்யும் நற்செயல்கள் - நமக்கும், நம் சந்ததிக்கும் நல் வழி காட்டும். 
அயல் நாடுகளில் பிறப்பவர்களுக்கும் இது பொருந்தும். ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். கஷ்டப்பட்டு உழைச்சு , IIT , IIM னு நல்ல படிப்பு படிச்சு - கை நிறைய சம்பளம் வாங்கி , இல்லை நல்ல பிசினஸ் பண்ணி - நல்ல நிலைக்கு , சொத்து , தோட்டம் தொறவுனு - நீங்கபண்ற எல்லாமே - கிரகங்களாவது , கட்டமாவது.... உங்க சுய முயற்ச்சின்னு வைச்சுப்போமே, ஒரு பேச்சுக்கு... 

அந்த மாதிரி ஒரு நல்ல படிப்பு, வசதி , நற்பண்பு உள்ள ஒருவருக்கு - ஒரு குழந்தை பிறக்குதுன்னு வைச்சுப்போம்..... இவர் அடிச்ச குட்டிக் கரணம் எதுவும் இல்லாம straight ஆ - அதுக்கு எல்லா வசதியும் கிடைக்குதா, அது பூர்வ ஜென்ம புண்ணியம்... 

நம்மளை விடுங்க, நம்ம புள்ளைகளுக்கு - பூர்வ ஜென்ம புண்ணியம் நிறைய இருக்கணுமா? வேண்டாமா? நாமளும் நம்ம திறமைய வளர்க்கணும் இல்லையா? நல்ல செயல்கள் செய்ய, நல்ல சம்பாதிக்கணும் இல்லையா?  பசங்களுக்கு பெஸ்ட் எஜுகேசன் , வசதிகள் செஞ்சு கொடுக்கணும் இல்லையா? முயற்சி செய்வோம்... நம்ம கர்ம வினை இடம் கொடுத்தா, நம்ம புள்ளைய ஒழுங்கா வளர்த்தா... அவனுக்கே புள்ளையா , நாம கூட திரும்ப பொறக்கலாம்... நாமே திரும்ப , நம்ம வசதிகளை அனுபவிக்கலாம்... நம்மை குழந்தைகளாக வளர்த்த , நம் பெற்றோர்களைநாம் குறைந்த பட்சம் மதிக்கவாவது செய்வோம்... எந்த அளவுக்கு நம்மை அவர்கள் கவனித்து இருக்க கூடும்...



ஒரு குழந்தையாய் நம் கடமையை , குடும்பத் தலைவனாய் நம் கடமையையும் செய்தால் போதும்... குடும்பம் என்கிற அமைப்பு கட்டுக் கோப்பாக இருக்கும்...

சரி, வெளிநாட்டுக் காரங்க - நம்ம அளவுக்கு கடவுள் என்னும் நம்பிக்கை இல்லாதவங்க, எல்லாரும் நன்றாகத் தானே இருக்கிறார்கள்...?

இது எனக்கு கொஞ்சம் நெருடலாகத் தான் இருக்கிறது. 
நம்மில் பக்குவமடைந்த யாரையேனும் கேட்டுப் பாருங்கள். அவருக்கு எது முக்கியம்? மனசாட்சியுள்ள எவரும் சொல்வது, என் குழந்தைகள்... என் குடும்பம்... அவங்க நலனுக்கு அப்புறம் என் நலம். அதன் பிறகு சமூகம்.


மேலை நாடுகளில் அப்படியா? குடும்பம் என்கிற அமைப்பு சீர் குலைந்து இருக்கிறது.

நன்றாக இருப்பது என்றால்.... நினைத்த நேரத்தில் குடி, புகை, கறி, மீன்.... நினைத்த பெண்களோடு சுற்றுவது,நோ பாமிலி பாண்டிங் , கை நிறைய கிரெடிட் கார்ட் .... இது தான் அவர்கள் வாழ்க்கை. அவர்கள் அனைவரும் நம் தேசத்தின் குடும்ப அமைப்பை பார்த்து பொறாமைப் படுகிறார்கள். ஒரு சாதாரண குடும்பம் (என நம் பார்வையில் உள்ள) சேமிக்கும் திறனை பார்த்து வியந்து நிற்கிறார்கள். நமது கோவில்களையும், யோகா தியான முறைகளையும் பார்த்து , நாம் இங்கு பிறக்க வில்லையே என ஏங்குகிறார்கள். 


மிக கேவலமான சுகாதார வசதிகள் இருந்தும், நம் உடம்புக்கு ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தியைப் பார்த்து மிரள்கிறார்கள்.
சுத்தம், சுகாதாரம் இரண்டு விஷயங்களில் தான் நாம் பின் தங்கி இருக்கிறோம். 

ஆனால் , நாம் அவர்களை பார்த்து அவர்கள் நன்றாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம். மியாமி பீச்ல பொண்ணுங்க எல்லாம் துணியே இல்லாம இருக்கிறதை, ஆட்டம் போடுறதை, பார்க்கிறதுக்கு நல்லாத் தான் இருக்கும். நம்ம தங்கச்சி, வீட்டுக்கார அம்மணி அந்த மாதிரி ஆட்டம் போட்டு , மத்தவங்க பார்த்தா - தாங்க முடியும்னு நினைக்கிறீங்க..?

அவர்கள் பெண்களுடன் சல்லாபிப்பது நமக்கு உள்ளூர அவர்கள் மேல் பொறாமைப் பட வைக்கிறது. சரி, நாமளும் பண்ணுவோம்... நாம நல்ல இருக்கிறதா ஆகிடுமா? வெளியில் ஆட்டம் போடுவதாக இருந்தாலும் நமக்கு வீட்டுல மனைவி, அம்மா, குழந்தைகளும் இருக்கணும்.. நாம அதிகாரம் பண்ணனும் இல்லை. அவங்க பாசம் நமக்கு வேணும் இல்லை? ஐயா.. சரி... ஆம்பளைக்கு ஒரு நியாயம், பொம்பளைக்கு ஒரு நியாயமானு வீட்டுக்கார அம்மணியும் நினைச்சுட்டா.. நினைக்கவே சகிக்கலை இல்லையா... இது தான் அங்கே நடக்குது... சர்வ சாதாரணமா .... மூணு , நாலு டிவோர்ஸ் . 


Honey, See there.... How Sweet....!
My children and your children are playing with our children....


அர்த்தம் புரியுதா... " ஏ கண்ணு அங்கே பாரேன் .. உன் புள்ளைகளும், என் புள்ளைகளும் நம்ம புள்ளைகளோட விளையாடுராக...ஒரே மஜாவா கீது இல்லே? " அவரோட இப்போதைய மனைவி கூட பேசுறாரு..


உருகி உருகி அன்பு பொழிஞ்சு குடும்பம் நடத்திப் புட்டு - பிரிஞ்சுடுவோம்னு சொன்னா , நல்லாவா இருக்கு? கொஞ்சம் கொஞ்சமா நமக்கும் இந்த தொற்று வியாதி வந்து தொலைச்சு இருக்கு. 

கடைசியா இளநீர், பதநீர், பனை நுங்கு எப்ப சாப்பிட்டு இருப்போம்? குடும்பத்தோட ஒரு ரெண்டு நாள் ஒரு பிக்னிக் - கடற்கரை, கன்னியாகுமரி , குற்றாலம் எப்போ போயிருப்போம்.. யோசிச்சுப் பாருங்க..! ஆனா, ஒரு நாள் கையில காசு கம்மி, சரக்கு அடிக்கலைன்னா... ரொம்பவே பீல் பண்ண ஆரம்பிக்கும் மனசு...! மறுநாள் எப்படியாவது காசு ரெடி பண்ணி, ஒரு கட்டிங் உள்ளே போனாத்தான் நிம்மதி அடையும்... 


ஆனா, "இந்த மாசம் சீட்டுக்கு காசு கட்டவே என்ன பாடு பட்டோம்னு தெரியும்ல ... இந்த லீவுக்கு நாம எங்கேயும் போகப் போறது இல்லை.. சும்மா கிடங்கடா" ன்னு பசங்களுக்கு , ஊட்டு அம்மணிக்கு ஈசியா சமாதானம் சொல்ல மனசு உடனே தயாராகுது.. ...

சரி, நான் வுட்டா பேசிக்கிட்டேத் தான் போவேன்... மேட்டருக்கு வாரேன்..
உலகத்துல உள்ள எல்லாரையும் விட, நிம்மதியா - உயிர் பயம் இல்லாம , தலை தலைமுறையா , சோத்தோட பாசத்தையும் தின்னு வளர்ற நம்மளை விட --- வேற எல்லாப் பயலுகளும் ஏழைகள் தான்...பாவம் தான்...!

அடுத்து....


குரு, கோவிலுக்கு போனா சாமியை ஏன் சுத்திக் கும்பிடுறோம்னு என் நண்பர் கேட்டார். அப்போ எனக்கு உடனே தோணுனது இது தான். 


நீ இங்கே வாயேன், இப்படியே நில்லுன்னு , அவரை ஒரு சுத்து சுத்தினேன்.. அவனுக்கு சிரிப்பு அடக்க முடியலை.. என்னடா? எப்படி பீல் பண்றேன்னு கேட்டேன்.. இப்போ தெரியுதா.. நான் உன்னை சுத்துறப்போ , நீ வேற எல்லாத்தையும் விட்டுட்டு , எந்த நினைப்பும் இல்லாம , என்னை மட்டும் தானே பார்த்தே... அந்த மாதிரி, அந்த இறைவனோட கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சி, அவரை வலம் வருவது. அவர் நம்மளை பார்த்தாப் போதுமே, அடுத்து நாம பேசுறது எல்லாம் அவருக்கு கேட்கும். நமக்கும் சீக்கிரம் நல்லது நடக்கும்... இல்லையா? 


நாம் இருக்கும் இடத்தில் இருந்து இறைவனை கும்பிடலாம், தவறில்லை. கோவிலுக்கு போகணுமா அவசியம்? அண்ணாமலை கிரிவலம் , குல தெய்வம் - ஆகியவை பற்றி நான் ஏற்கனவே நிறைய எழுதி இருக்கிறேன். பழைய கட்டுரைகளை ரெபர் செய்து கொண்டால் தன்யனாவேன். கட்டுரையும் ஏற்கனவே நீண்டுக் கிட்டே போகுது.. திரும்பவும் பிளேடு போடணுமா? 


கதிர்களை ஈர்த்து , கும்பம் வழியாக கருவறை சேர்த்து , நீங்கள் மூலவரை வணங்கும்போது உங்கள் நாடி சக்கரங்களின் சுழற்சியை சரி செய்ய ஆலயங்கள் நம் முன்னோர்கள் அளித்த பெரிய வரப் பிரசாதம்.. 


உங்க வீட்டுக்கு பால்காரர் பால் கொண்டு வர்றாருன்னு வைச்சுப்போம். அவர் வர்ற நேரத்தில தான் வருவாரு. எனக்கு உடனே வேணும் கொஞ்சம் அவசரம் ... ஐயா, வீட்டுல திடீர்னு கொஞ்சம் விருந்தாளிக வந்துட்டாக, பால் காரர் கம்மியாத் தான் தருவாரு, வழக்கம்போல தான் எடுத்து வருவாரு... என்ன பண்றோம்..? உடனே ஓடுறோம்ல பால் பூத்துக்கு... இல்லை பால் பண்ணைக்கு... 


அந்த மாதிரி , நமக்கு சில விஷயங்கள் சீக்கிரம் வேணும்னா, நாம கோவில்களுக்கு போய் தான் ஆகணும்.. உங்களோட மன பாரம் இறங்க , மன நிம்மதி கிடைக்க ஆலயங்கள் , நமக்கு கிடைத்து இருக்கும் அருட் கொடைகள்..


சரி, இன்னைக்கு இவ்வளோ போதும்... நிச்சயமா குட்டையை குழப்பி விட்டு இருப்பேன் என நம்புகிறேன். தெளிவான விளக்கங்கள் இல்லை எனினும் , உங்களை கொஞ்சம் சிந்திக்க வைத்து இருக்கும்.. நான் சொன்னா கேட்கவா போறீக.. நீங்களே யோசிச்சு உங்க மனசு என்ன சொல்லுதுன்னு கேட்டு பாருங்க... அது சொல்றதை , நீங்க நிச்சயம் நம்புவீங்க...! அப்புறம் கீழே ஒரு குட்டிக் கட்டுரை, படிச்சுப் பாருங்க... 
அவசியம் மறக்காமல் , உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் இடுங்கள்.... 
போதும் முடிச்சுக்கலாம்... என்னது ... இன்னொரு கேள்வி இருக்கா? அட ஆமா இல்லை... ரொம்ப உஷாரா இருக்கிறீங்க....


நீ கடவுளை பார்த்து இருக்கிறாயா? அந்த கேள்வி தானே....!


'அன்பே சிவம்' கமல் மாதிரி சொல்லப் போறது இல்லை.. ரொம்ப கிரிஸ்டல் கிளியரா சொல்றேன் ...... YES . ஆனா, இது உங்களுக்கு தேவை இல்லாத ஒன்று.. நீங்களே தரிசிக்கும் வரை , நீங்கள் நம்ப வேண்டிய அவசியம் இல்லை... ஆனாலும், உண்மையான தேடல் ஒரு நாள் உங்களை பக்குவப் படுத்தும்... 



அதனால் தான் அப்பழுக்கற்ற நம்பிக்கையில் சொல்கிறேன்... உங்கள் அனைவரின் துக்கங்களும் கரைய, லட்சியங்கள் நிறைவேற , இறைவனையும் உங்களுடன் வைத்துக் கொண்டு போராடுங்கள்... அவனைப் பற்றிக் கொள்ளுங்கள்... 
thank you :மணக்கால் அய்யம்பேட்டை

No comments:

Post a Comment