For Read Your Language click Translate

10 June 2014

ஹர்ஷத் மேத்தா - பாகம் : 3

ஹர்ஷத் மேத்தா - பாகம் : 3
- சசிகுமார்


இவ்வாறு பெரும் பணம் நம் மூலம் கைமாறும் பொழுது "அந்தப் பணத்தை நம் கணக்குக்கு கொண்டு செல்லலாமா ?" என்ற எண்ணம் எல்லோருக்கும் தோன்றுவது இயல்பு. சிலருக்கு தோன்றியவுடன் மறைந்து விடும். நியாயம் இல்லை என்றோ, அவ்வாறு செய்வதற்கான வழி வகை தெரியாமலோ, இல்லை பயத்திலோ இதைப் பெரும்பாலானோர் செய்வதில்லை. ஆனால் இதனை எப்படி செயல்படுத்த முடியும் என்று சிலர் யோசிக்கத் தொடங்கி விடுவார்கள். அவர்கள் தான் கிரிமினல்கள். ஹர்ஷத் மேத்தாவும் அதைத் தான் செய்தான்.

இவ்வாறு கைமாறும் பணத்தை தன் வங்கிக் கணக்குக்கு கொண்டு சென்று விட்டால் என்ன என்று தோன்றியவுடன் ஒரு வழி அவனுக்குத் தென்பட்டது. Account Payee காசோலைகள் குறிப்பிட்ட கணக்குகளில் மட்டுமே வரவு செய்யப்படும் என்பது நமக்கு தெரியும். என் பெயருக்கு வரும் காசோலையை உங்கள் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகளில் நிச்சயமாக வரவு செய்ய முடியாது. ஆனால் இதில் சில விதிவிலக்குகள் உண்டு.

ஒரு வங்கியின் பெயரில் Account Payee முறையில் வரும் காசோலைகள், குறிப்பிட்ட வங்கிக் கணக்குகள் தவிர Current Account என்று சொல்லப்படுகிற ஒரு பெரிய நிறுவனத்தின் (Privileged/Corporate Customer) வங்கிக் கணக்குகளாக இருந்தால் அந்தக் கணக்கில் வரவு செய்து கொள்ள முடியும்.

ஏன் இந்த முறை பின்பற்றப்பட்டது. இதுவும் ஒரு விதிமீறல் தான். ஆனால் வழக்கில் இருக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விதிமுறை. நீங்கள் ஒரு நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு சுமார் 100 கோடி பணம் முதலீடு செய்ய உடனடியாகத் தேவைப் படுகிறது. ஒரு வங்கியிடமிருந்து (A வங்கி) கடன் பெறுகிறீர்கள். உங்களுடைய வங்கிக் கணக்கு வேறோரு வங்கியில் இருக்கிறது (B வங்கி). A வங்கியில் இருந்து, உங்கள் பெயருக்கு கடன் பெற்று B வங்கியில் உள்ள உங்கள் வங்கிக் கணக்குக்கு வரவு செய்ய வேண்டுமெனில் உங்களுக்கு குறைந்தது 2 நாட்கள் தேவைப்படும். முதலீடு, கடன் என்று வரும் பொழுது ஒவ்வொரு நாளும் உங்களுக்கு முக்கியம். இவ்வாறு இரண்டு நாட்கள் உங்களுக்கு வர வேண்டிய பணம் காலதாமதாகும் பொழுது, அதனால் ஏற்படும் வட்டி இழப்பு மட்டும் பல லட்சங்கள்.

இதைத் தவிர்க்க சில முறைகளை வங்கிகள், தங்களிடம் கணக்கு வைத்திருக்கும் பெரிய நிறுவனங்களுக்கு செய்து கொடுக்கின்றன. இது எல்லா வங்கிகளும் தங்கள் Privileged Customer க்கு செய்து தரும் ஒரு வசதி. அதாவது நீங்கள் A வங்கியிடமிருந்து கடன் பெறும் பொழுது, உங்கள் பெயருக்கு கடன் பெறாமால், நீங்கள் கணக்கு வைத்திருக்கும் B வங்கியின் பெயரில் காசோலைகளைப் பெறுகிறீர்கள். ஏன் ?

ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் செல்லும் பொழுது, ரிசர்வ் வங்கியில் இரு வங்கிகளுக்குமே கணக்கு இருப்பதால் அதனைக் கொண்டு ஒரே நாளில் பணத்தைப் பெற்று விட முடியும். அதனால் B வங்கியின் பெயரில் பணத்தைப் பெற்று நீங்கள் தரும் காசோலை, உங்கள் வங்கிக் கணக்குக்கு உடனடியாக வரவு செய்யப்படும். இதன் மூலம் தேவையில்லாமல் ஏற்படும் காலதாமதம், வட்டி இழப்பு போன்றவை தவிர்க்கப்படும்.

பத்திரங்களும், காசோலைகளும் தரகர்கள் மூலமாகக் கைமாறும் பொழுது வங்கியின் பெயரில் வரும் காசோலையை தங்கள் கணக்குக்கு தரகர்கள் வரவு செய்து கொள்ளத் தொடங்கினர். அதாவது ஒரு வங்கியிடமிருந்து மற்றொரு வங்கிக்கு, பத்திரங்களைக் கொண்டு கடனாக வரும் தொகையை தங்கள் கணக்குக்கு மாற்றிக் கொண்டு விட்டார்கள். இது கூட தவறில்லை தான். ஏனெனில் இவ்வாறு Repo மூலமாகச் செய்யப்படும் கடன் மிகவும் பாதுகாப்பான ஒரு கடன் முறை. தரகர்கள் வங்கிக் கணக்குக்கு அந்தப் பணம் சென்றாலும் அங்கீகரிக்கப்பட்ட தரகர்கள் எனும் பொழுது ஒரு நம்பகத்தன்மை இருந்தது.

பத்திரங்களைக் கொண்டு கடன் பெறும் முறையில் தரகர்கள் தங்கள் வங்கிக் கணக்குக்கு பணத்தைக் கொண்டு வந்து பின் வங்கிகளுக்கு தங்களின் கமிஷன் தொகையைக் கழித்துக் கொண்டு கடன் கொடுத்து கொண்டிருந்தனர். இவ்வாறு கடன் பெறும் முறையில் தரகர்கள் தயவு வங்கிகளுக்கு தேவைபட்டதால், இந்த நடைமுறை, அத்துமீறலாக இருந்தாலும் செவ்வனே நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.

இந்த ஓட்டையைத் தான் ஹர்ஷத் மேத்தா மற்றும் ஹித்தன் தலால் போன்றோர் பயன்படுத்திக் கொண்டனர்.

பத்திரங்களைக் கொண்டு கடன் பெறும் முறையில், பத்திரங்களே இல்லாமல் கடன் பெற்று விடும் முறையை . ஹர்ஷ்த் மேத்தா யோசிக்கத் தொடங்கினான். பத்திரங்களே இல்லாமல் எப்படி கடன் பெற முடியும் ? இவ்வாறு நடக்கும் பொழுது வங்கிகளைக் கண்காணித்து கொண்டிருக்கும் ரிசர்வ் வங்கி என்ன செய்து கொண்டிருந்தது ? ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு எப்படிச் சிதறிப் போனது ?

பெரும் திமிங்கலங்கள் நீச்சலடித்த பங்கு ஊழலில், பாதிக்கப்பட்ட அப்பாவி வங்கி ஊழியர்களின் கதி என்ன ?

No comments:

Post a Comment