For Read Your Language click Translate

10 June 2014

ஹர்ஷத் மேத்தா - பாகம் : 2

ஹர்ஷத் மேத்தா - பாகம் : 2
- சசிகுமார்


பங்குச் சந்தையைப் பற்றி உங்களுக்குத் தெரியும். பணச் சந்தையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?

பணச் சந்தை (Money Market) எனப்படுவது வங்கிகளும், நிதி நிறுவனங்களும் (Financial Institutions) கடன் வாங்க/கொடுக்க ஏற்படுத்தப்பட்ட சந்தை. இது குறைந்த காலத் தேவைகளுக்காக பணத்தை பரிமாறும் ஒரு இடம் என்று சொல்லலாம். அதிகபட்சமாக ஒரு வருடம், குறைந்தபட்சமாக ஒரு நாள் கூட கடன் வாங்கலாம்/கொடுக்கலாம். தங்களிடமிருக்கும் மிகுதியானப் பணத்தை வங்கிகள் இந்தச் சந்தையில் கடன் கொடுத்து வட்டி மூலமாக லாபம் அடையும். பணச் சந்தையில் கடன் பெறுவதற்கும்/கொடுப்பதற்க்கும் பல வழிகள் இருக்கின்றது. Call Money, Term Money, T-bills, Repo என்று பல வெவ்வேறு முறைகளில் வர்த்தகம் நடைபெறும் (இதற்கெல்லாம் தமிழில் என்ன பெயர் என்று தெரியவில்லை. அதனால் ஆங்கிலத்திலேயே தொடருவோம்).

இதில் Repo அல்லது Ready Forward Contracts என்ற கடன் பெறும் முறையை மட்டும் கவனிப்போம். ஏனெனில் நம்முடைய வில்லன் ஹர்ஷத் மேத்தாவின் புண்ணியத்தால் இதிலிருந்தப் பல ஓட்டைகள் வெளியுலகிற்கு தெரியவந்தது.

வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்களிடம் உள்ள அரசுக் கடன்பத்திரங்களை பணச் சந்தையில் விற்று, தங்களின் குறுகிய காலத் தேவைக்காகப் பணத்தை பெற்றுக் கொள்வார்கள். பத்திரங்களை விற்கும் பொழுதே, அதனை மறுபடியும் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கும் ஓப்பந்தம் செய்து கொள்ளப்படும்.

அதாவது, பத்திரங்களை விற்பவர், அதனை மறுபடியும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்பப்பெற்றுக் கொள்வதற்கும் சேர்த்தே ஒப்பந்தம் செய்வார். தற்பொழுது விற்கும் விலையையும், திரும்பப்பெற்றுக் கொள்ளும் விலையையும் முதலிலேயே தீர்மானித்து அதற்கேற்ப தான் ஒப்பந்தம் செய்யப்படும். இந்த இடைப்பட்ட காலத்தில், பறிமாறப்படும் பணத்திற்கு, ரெப்போ விகிதம் (Repo rate) என்று சொல்லப்படும் வட்டி வசூலிக்கப்படும். பத்திரங்களை விற்கும் பொழுதே, அதை திரும்பப் பெற்று கொள்வதற்கும் சேர்த்து ஒப்பந்தம் செய்யப்படுவதால் இதனை Repurchase Agreement (Repo) என்று சொல்வார்கள்.

வங்கிகள், தங்களின் குறைந்தகாலத் தேவைக்கு மட்டுமல்லாமல், ரிசர்வ் வங்கியின் சில கட்டுப்பாடுகளையும் பின்பற்றத் தான் இந்த ரெப்போ வர்த்தகம் மூலம் பணச் சந்தையில் வர்த்தகம் செய்கின்றன.

சரி..வங்கிகள் எப்படி செயல்படுகின்றன. வைப்பு நிதி மற்றும் சேமிப்புக் கணக்குகள் மூலமாக பணம் திரட்டுதல். திரட்டியப் பணத்தைக் கொண்டு கடன் வழங்குதல்.

ஆனால் தங்களிடம் இருக்கும் அனைத்துப் பணத்தையும் வங்கிகள் கடன் கொடுப்பதை ரிசர்வ் வங்கி அனுமதிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட சதவீத பணத்தைக் கையிருப்பாக ஒவ்வொரு வங்கியும் தங்களிடமோ அல்லது ரிசர்வ் வங்கியில் உள்ள தங்கள் கணக்கிலோ கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதனை Cash Reserve Ratio (CRR) என்று சொல்வார்கள். இவ்வாறு கையிருப்பாக வைத்திருப்பதால் பயனாளர்களின் சேமிப்பு பாதுகாக்கப்படுவதோடு மட்டுமில்லாமல், அவர்களுக்கு உடனடி தேவையிருக்கும் பொழுது எளிதில் பணம் கிடைக்கும் (இதனால் தான் வங்கி வைப்பு நிதியில் நாம் எப்பொழுது கேட்டாலும் உடனே பணம் திரும்பக் கிடைக்கிறது).

இதைப் போலவே பணமாக இல்லாமல் தங்கமாகவோ, அரசு கடன் பாத்திரங்களாகவே மற்றொரு குறிப்பிட்ட சதவீதம் வங்கிகளின் கையிருப்பில் இருக்க வேண்டும். இதனை Statutory Liquidity Ratio (SLR) என்று சொல்வார்கள். பொதுவாக வங்கிகளுக்கு இருக்கும் பணத்தேவை, கடன் போன்றவற்றில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை இவ்வாறு கையிருப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதி.

வங்கிகள், தங்களிடம் கையிருப்பில் இருக்கும் SLR விகிதம் குறையும் பொழுது அதனைச் சரி செய்ய புதிதாக கடன்பத்திரங்கள் வாங்குவதை விட ரெப்போ மூலம் குறுகியக் காலத்திற்கு கடன்பத்திரங்களை வாங்கிக் கொள்ளும். இவ்வாறு பத்திரங்களை வாங்குபவர்களையும், விற்பவர்களையும் ஒன்றுச் சேர்ப்பது தான்
தரகர்களின் வேலை. ஒப்பந்தம் வங்கிகளுக்கிடையே செய்யப்படும். பத்திரங்களையும் பணத்தையும் வங்கிகள் தான் பறிமாறிக் கொள்ள வேண்டும். இது தான் நடைமுறை. ஆனால் இங்கே தான் சில விதிமீறல்கள் நடைபெறத் தொடங்கின.

பத்திரங்களை விற்பவர்கள், பத்திரங்களை நேரடியாக வாங்குபவர்களிடம் கொடுக்காமல் தரகர்களிடம் கொடுக்கத் தொடங்கினார்கள். அதைப் போலவே பணத்திற்கான காசோலை நேரடியாக பத்திரங்களை விற்றவர்களிடம் செல்லாமல் தரகர்கள் வழியாக செல்லத் தொடங்கியது.

இவ்வாறு பத்திரங்களும் காசோலைகளும் தரகர்கள் மூலமாகவே வங்கிகளுக்கு செல்லத் தொடங்கியது. இதில் ஒன்றும் தவறு இல்லை. தரகர்களைக் கொண்டு தான் வர்த்தகத்தை நடத்த முடியும். வங்கிகளுக்கும் இந்த முறையில் வசதி இருந்தது. வங்கிகளின் தேவையை தரகர்களால் எளிதாகப் பூர்த்திச் செய்யமுடிந்தது. இந்தியாவில் எங்குமே காணப்படும் சாதாரணமான விதிமீறல்.

ஆனால் ஹர்ஷ்த் மேத்தாவின் கிரிமினல் மூளை இதிலிருந்த ஓட்டைகள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது.

அப்பொழுது, இருந்த நரசிம்மராவ் அரசு, நிதியமைச்சர் மன்மோகன் சிங் தலைமையில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை ஆரம்பித்திருந்த நேரம். இனி தனியார் நிறுவனங்களுக்கும், இந்தியப் பொருளாதாரத்திற்கும் வசந்தகாலம் தான் என்ற எண்ணத்தில் பங்குச் சந்தை உயரத் தொடங்கியது. இந்தக் காளைச் சந்தையில் முதலீடு செய்வதற்கு நிறையப் பணம் தேவைப்பட்டது.

சந்தை உயருவதாலும், லாபம் நிறையக் கிடைக்கும் என்ற எண்ணத்திலும் தரகர்களும், முதலீட்டு நிறுவனங்களும் பணச் சந்தையில் கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்து கொண்டிருந்தனர். பணச் சந்தையில் புரளும் கோடிக்கணக்கானப் பணத்தை பங்குச் சந்தைக்கு கொண்டு வந்து விட்டால், பல மடங்கு லாபம் பார்க்கலாம்.

கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஹர்ஷத் மேத்தாவிற்கு இதிலிருந்த ஓட்டைகளும் வாய்ப்புகளும் புரிபடத் தொடங்கியது.

No comments:

Post a Comment