ஒரு காலத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்றார்கள். இப்போது தண்ணீர் நிறைய குடிப்பதால் அதிகமாக வேலை செய்து சிறுநீரகம் பாதிக்கும் என்று சொல்கின்றனர்.
பிறந்த குழந்தைக்கு ஒரு நாளில் 200 மில்லி சிறுநீர் வெளியேறினாலே போதும். வளர்ந்த மனிதனுக்கு ஒன்றரை லிட்டர் முதல் 2 லிட்டர் சிறுநீர் வெளியேறினால் சரியான அளவு என்று அர்த்தம். சிலர் ஏழு, எட்டு மணி நேரம் கூட தண்ணீர் குடிக்காமல் இருப்பர்.
இதனால் வெளியேற வேண்டிய கழிவு சரியாக வெளியேறாமல், "யூரினரி இன்பெக்ஷன்' வந்து எரிச்சல் ஏற்படும். வேறு சிலர் காலையில் எழுந்ததும் சொம்பு சொம்பாக தண்ணீர் குடிப்பர். அதுவும் போதாதென்று எந்த நேரம் பார்த்தாலும், லிட்டர் கணக்கில் தண்ணீரை உள்ளே தள்ளுவர்.
எவ்வளவு சிறுநீர் வந்தாலும் சுலபமாக வெளியேற்றும் இதயம் மற்றும் சிறுநீரகம் வாய்த்தவர்கள் இப்படி நிறைய தண்ணீர் குடிக்கலாம். ஆனால், இதயம் பழுதானவர்களும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களும் கண்டிப்பாக இப்படி தண்ணீர் குடிக்கக் கூடாது. இந்த கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் நிறைய "பம்ப்' செய்ய வேண்டியது வரும். வியர்க்காத வேலை எந்த நோய், நொடியும் இல்லாதவர்களுக்கு ஒரு நாளில் இரண்டு லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்துக்கு அதிக வேலை கொடுப்பது தான். இது நமது உடம்புக்கு தேவை இல்லாததும் கூட.
இப்படி எக்கச்சக்கமாக தண்ணீர் குடிப்பதை மனநோய் என்று கூறுகின்றனர். இதற்கு தண்ணீரை நிறைய குடித்தால் உடம்பு சுத்தமாகி விடும். ஒல்லியாகி விடலாம் என்ற இவர்களது மூட நம்பிக்கையே காரணம். அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பவர்கள் பற்றித்தான் இப்படி சொல்லப்படுகிறது. மற்றபடி காலையில் எழுந்து அளவாய் தண்ணீர் குடிப்பது உடம்புக்கு மிகவும் ஆரோக்கியமானது.
நாம் குடிக்கும் நீரின் அளவை விட கூடுதலாக சிறுநீர் வெளியேறினால் நமது உடலில் உள்ள நீர்ச்சத்தும் சிறுநீரோடு சேர்ந்து வெளியேறுவதாக அர்த்தம். இது உடலை உருக்கிவிடும். எப்படிப்பட்ட திடகாத்திரமான மனிதரும் ஒல்லியாக மாறிவிடுவர். இதனால் சிறுநீர் அதிகமாக வெளியேறினால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
No comments:
Post a Comment