For Read Your Language click Translate

17 May 2014

அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரர்


அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரர் – (1) by ச.நாகராஜன்
 
Picture: Sun Dial at Ujjain Observatory
This is part of S Nagarajan’s Series on Ancient Astrologers of India. Please read his earlier posts on Astronomers, Astrologers,Stars and Astrology.
 
காலம் பிறக்கும் நகரமான உஜ்ஜயினியின் ரகசியம்
 
புகழோங்கிய பண்டைய பாரதத்தில் அபூர்வ நகரமாக விளங்கியது உஜ்ஜயினி. இந்த நகரைப் பற்றிய ஏராளமான அதிசயக்கத்தக்க உண்மைகள் உள்ளன. காலம் பிறப்பது இங்கே தான் என்பது முதல் ரகசியம். சூரிய பாதையில் தீர்க்கரேகை செல்லும் ஒரு முக்கிய கேந்திரமாகத் திகழ்கிறது உஜ்ஜயினி. இந்த முக்கிய கேந்திரத்தின் முக்கிய புள்ளியைக் கண்டு பிடித்த நம் முன்னோர்  சரியாக அந்தப் புள்ளியில் மகா காலேஸ்வரரின்  லிங்கத்தை ஸ்தாபித்தனர். ஸ்ரீ லங்காவிலிருந்து புராணம் விவரிக்கும் மேருவிற்கு செல்லும் தீர்க்க ரேகை உஜ்ஜயினியை ஊடுருவிச் செல்கிறது.ஹிந்து வானவியல் நிபுணர்களின் க்ரீன்விச் உஜ்ஜயினி நகரம் தான்! கலைகள் அனைத்தையும் கற்பிக்கும் கலை பூமியாகத் திகழ்ந்த இந்த நகரத்தில் தான் உஜ்ஜயினி மஹாகாளியின் அருள் பெற்ற விக்கிரமாதித்தன் அரசோச்சி வந்தான்.இங்கே உள்ள வானவியல் கட்டிடங்கள், மஹாகாலேஸ்வரர் ஆலயம், நவகிரஹ ஆலயம் முதலிய இடங்களை விளக்கத் தனி நூல் தான் எழுதப்படவேண்டும்!
ஏழு மோட்சபுரிகளுள் ஒன்று
 
‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரீ த்வாராவதீசைவ சப்தைதா: மோக்ஷதாயிகா’ என்ற சுலோக கூற்றின் படி அவந்தி ஏழு மோட்சம் தரும் இடங்களில் ஒன்று என்பது அடுத்த ரகசியம். 12 ஜோதிர்லிங்கங்களில் முக்கியமான லிங்கம் அவந்தியிலேயே அமைந்துள்ளது. இதன் தலை நகரமான உஜ்ஜயினி கிறிஸ்து பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பேயே அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த புண்ணிய பூமி!  இந்த அபூர்வ பூமியின் வரலாறில் புதைந்துள்ள இன்னொரு ரகசியம் தான் அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரரின் வரலாறு!உஜ்ஜயினியில் தான் வராஹமிஹிரர் வளர்ந்தார்;வாழ்ந்தார்; அந்த நகருக்கு ஒரு புதிய அந்தஸ்தையும் தன் ஜோதிட ஆற்றலினால் தந்தார்!

Picture: Ancient Ujjain Observatory
வராஹமிஹிரர் என்ற பெயர் வரக் காரணம்
     வராஹமிஹிரர் என்ற பெயர் அவருக்கு வந்ததற்கு காரணமே ஒரு சுவாரஸ்யமான ஜோதிட நிகழ்வு தான்! உஜ்ஜயினியில் ஆதித்ய தாஸர் என்ற அந்தணருக்கு மகனாகப் பிறந்தவர் வராஹமிஹிரர். சூரியனை நன்கு வழிபட்டு வந்த தந்தையிடமிருந்து ஜோதிடத்தை நன்கு கற்றுணர்ந்தார் அவர்.
விக்கிரமாதித்தன் அரசவையில் நவரத்தினங்களாக பெரும் அறிஞர்கள் ஜொலித்தனர். அந்த நவரத்தினங்களுள் ஒருவர் வராஹமிஹிரர். ஒரு சமயம் மன்னனுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அரசன் வராஹமிஹிரரை அழைத்து ராஜகுமாரனின் ஜாதகத்தைக் கணித்துப் பலன்களைக் கூறுமாறு வேண்டினான்.மிக கவனமாக ஜாதகத்தைக் கணித்து அந்த ஜாதகத்திற்குரிய பலனை வராஹமிஹிரர் சிந்தித்து உணர்ந்தார்.மன்னனை நோக்கிய அவர், “அரசே! இந்த ராஜகுமாரனுக்கு  அற்ப ஆயுளே உள்ளது. இவனது பதினெட்டாம் ஆண்டில் இவனுக்கு ஒரு பன்றியால் மரணம் ஏற்படும். அதை யாராலும் தடுக்க முடியாது” என்று வருத்தத்துடன் கூறி அவன் இறக்கவிருக்கும் நாள் மற்றும் மாலை நேரத்தில் எந்த மணியில் அது சம்பவிக்கும் என்பதையும் குறிப்பிட்டுக் கூறினார்.


அரசன் திடுக்கிட்டான். தனது அருமை மந்திரி பட்டியை அழைத்து ஆலோசித்தான். பட்டியின் ஆலோசனையின் பேரில் ராஜகுமாரனுக்காக 80 அடி மதில் சுவர் உள்ள ஒரு பிரத்யேகமான அரண்மனை கட்டப்பட்டது. அதைச் சுற்றி ஆயிரக்கணக்கான வீரர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். பன்றி என்ற மிருகமே தொலை தூரத்திற்கும் இல்லாதபடி பன்றிகள் அழிக்கப்பட்டன. ராஜகுமாரனுக்கு அனைத்துப் பயிற்சிகளும் அரண்மனைக்குள்ளேயே அளிக்கப்பட்டதால் அவனுக்கு வெளியில் செல்ல வாய்ப்பே இல்லை ஆண்டுகள் உருண்டோடின. மன்னன் ராஜகுமாரனின் பதினெட்டாம் ஆண்டில் வராஹமிஹிரர் குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட நாளில் அவரை அழைத்தான். “கடந்த ஆண்டுகளில் நான் செய்த காவல் திட்டத்தைக் கவனித்திருப்பீர்கள். இப்போது சொல்லுங்கள். என் பையனுக்கு ஒன்றும் நேராது அல்லவா?” வராஹமிஹிரர் வருத்தத்துடன். “அரசே! விதியை யாராலும் வெல்ல முடியாது. இன்று மாலை ராஜகுமாரனுக்கு பன்றியின் மூலம் மரணம் நிச்சயம் “ என்று கூறினார்.

மன்னன் உடனே தன் மெய்காவலர்களை அழைத்து ஒவ்வொரு மணி நேரமும் ராஜகுமாரனின் நிலை பற்றி எனக்கு அறிவியுங்கள்” என்று ஆணையிட்டான். மாலையும் கடந்தது. கடைசியாக மன்னனுக்கு வந்த செய்தியின் படி அவன் தனது அறையில் மற்ற சகாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். மன்னன் வராஹமிஹிரரை அழைத்து. “உங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்” என்றான். வராஹமிஹிரரோ துக்கத்துடன் ராஜகுமாரன் இறந்து சிறிது நேரம் ஆகி விட்டது. வாருங்கள். அவன் அரண்மனைக்குப் போகலாம்” என மன்னனை துரிதப் படுத்தினார். கலங்கிய மன்னன் அரண்மனைக்கு விரைந்தான். அங்கே ராஜகுமாரனின் அறையில் அவனைக் காணோம்.

அனைவரும் பரபரப்புடன் தேடினர். கடைசியில் அரண்மனையின் ஏழாவது  மாடியில் ரத்த வெள்ளத்தில் ராஜ குமாரன் இறந்து கிடந்ததைப் பார்த்து மன்னன் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். நடந்தது இது தான்: நெடுநேரம் தன் அறையில் இருந்த ராஜகுமாரன் விதி ஆணையிட்ட அந்த சமயத்தில் மேல்மாடிக்குச் சென்றிருக்கிறான். அரண்மனை கோபுரத்தின் உச்சியில் ராஜ இலச்சினையான பன்றி இலச்சினை  கொடிக்கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்தது. அங்கு  அது வரை கண்டிராத பலத்த காற்று வீசவே அது  ஆடி ராஜகுமாரன் மீது விழவே அதனால் வெட்டுண்டு ராஜகுமாரன் மரணமடைந்தான்.

எண்பது வயது வாழ்ந்த ஜோதிட மேதை
வராஹத்தின் மூலம் அதாவது பன்றியின் மூலம் மரணம் வருவதைச் சொன்ன இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் வராஹமிஹிரர் என அழைக்கப்படலானார்! அவர் வாழ்ந்த 80 ஆண்டுகளும் உலகினரால் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார்.

வராஹமிஹிரர் ஜோதிடக் கலையை தனது கூரிய அறிவின் மூலமாக ஒரு உன்னதமான ஸ்தானத்தில் ஏற்றி வைத்தார்.அவர் இயற்றிய பல நூல்கள் இன்றும் ஆச்சரியத்தை விளைவிக்கும் அபூர்வ நூல்களாக இலங்குகின்றன. நவீன விஞ்ஞானிகளே மலைக்கும் அவரது கணித அறிவும், வானியல் அறிவும் பிரமிக்க வைப்பவை! இத்தோடு ஜோதிட அறிவையும் . உலகியல் அறிவையும் மனித குலம் மீது அவருக்குள்ள பரந்துபட்ட மனிதாபிமானத்தையும்  அவரது நூல்கள் மூலம் காண முடியும்.

-வராஹமிஹிரர் வரலாறு தொடரும்
 


அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரர்-(2)

 
By ச.நாகராஜன்

நவரத்தினங்களில் ஒருவர்
வராஹமிஹிரர் விக்கிரமாதித்தனின் அரசவையில் முக்கிய இடம் பெற்றிருந்ததை வரலாறு உறுதிப்படுத்துகிறது. விக்கிரமாதித்தனின் காலம் பொற்காலம் எனக் கூறப்படுவதற்கான முக்கியமான காரணம் அவன் அரசவையை அனைத்துக் கலைகளிலும் வல்லவர்களான மகாகவி காளிதாஸர்,தன்வந்தரி,க்ஷபனாக்,அமரசிம்மர்,சங்கு,வேதாளபட்டர்,
கட் கர்பர்,வராஹமிஹிரர்,வரருசி ஆகிய நவரத்தினங்கள் அலங்கரித்தது தான்!

வராஹமிஹிரர் நூல்கள்
வராஹமிஹிரர் எழுதியுள்ள பல நூல்களில் ப்ருஹத் ஜாதகம், ப்ருஹத் சம்ஹிதா, யோக யாத்ரா, பஞ்ச சித்தாந்திகா, ப்ரஸ்ன வல்லபா, லகு ஜாதகா ஆகியவை மிக முக்கியமானவை. இவரது நூல்கள் இவர் ஒரு ரிஷி மட்டுமல்ல. ஒரு சிறந்த விஞ்ஞானியும் கூட என்பதை நிரூபிக்கின்றன. ப்ருஹத் ஜாதகம் மற்றும் ப்ருஹத் சம்ஹிதாவில் பூகோளம், நட்சத்திரத் தொகுதிகள், தாவரவியல், மிருகவியல், வானவியல் உள்ளிட்ட பல்துறை விஞ்ஞானம் பற்றிய வியக்கத்தகும் உண்மைகளை விளக்குகிறார். வ்ருக்ஷ ஆயுர்வேதா என்ற சிகிச்சை முறை மூலம் தாவரங்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களையும் அதைத் தீர்க்கும் விதம் பற்றியும் கூட அவர் விரிவாக விளக்குகிறார்.

.தனது தீவிர ஆராய்ச்சி மற்றும் தீர்க்கதிருஷ்டியின் மூலம் இவர் கண்டுபிடித்த உண்மைகள் பல! பஞ்ச சித்தாந்திகா என்ற அபூர்வமான நூல் சூர்ய,ரோமக,பௌலீஸ, வசிஷ்ட. பைதாமஹ சித்தாந்தங்களை எடுத்துரைக்கிறது. ஐந்து சித்தாந்தங்களின் சுருக்கத் தொகுப்பாக இருப்பதால் பஞ்ச சித்தாந்திகா என்ற பெயரை இந்த நூல் பெற்றது.ஹிந்துக்களின் வானவியல் அறிவை விளக்கும் இது பிரமிக்க வைக்கும் ஒன்று என்று அறிஞர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்!சந்திரனும் இதர கிரகங்களும் சுய ஒளியால் பிரகாசிக்கவில்லை; சூரியனின் ஒளியாலேயே பிரகாசிக்கின்றன என்ற உண்மையை முதன்முதலில் உலகுக்கு அறிவித்தவர் இவரே!

சில கணித சூத்திரங்களையும் இவரே உலகுக்கு முதலில் அறிவித்துள்ளார்.திரிகோணமிதியின் இன்றைய கண்டுபிடிப்புகளை (sin2 x + cos2 x = 1 உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகள்) அன்றே இவர் ரத்தினச்சுருக்கமாக சூத்திர வடிவில் கூறி விட்டார்..மாஜிக் ஸ்குயர் எனப்படும் மந்திர சதுரங்களை (pandiagonal magic square of order four -டு தி ஆர்டர் ஆ•ப் •போர் – அதாவது வர்க்கத்தின் நான்கு மடங்கு என்ற அளவில்) இவர் விரிவாக விளக்கி இருப்பது நவீன கணித மேதைகளை வியப்புற வைக்கிறது.

நியூட்டன் பின்னால் கண்டுபிடித்த புவி ஈர்ப்பு விசை பற்றிக் கூட வராஹமிஹிரர் நன்கு விளக்கி இருப்பது பிரமிக்க வைக்கும் விஷயமாகும். புவி ஈர்ப்பு விசையை அவர் குரு த்வ ஆகர்ஷண் என்று குறிப்பிடுகிறார்.  அதாவது குருவினால் ஈர்க்கப்படுதல் என்பது இதன் பொருள். சூரியனை நடு நாயகமாகக் கொண்டு  சூரியனின் ஆகர்ஷணத்தால் இதர கிரகங்கள் பரஸ்பரம் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு இருப்பதை அவர் கண்டறிந்து அதை குருத்வாகர்ஷன் என்று பெயரிட்டார்!

ஆர்யபட்டரின் சீடர்
இவருக்கு முன்னால் தோன்றிய ஆர்யபட்டர் வானவியலிலும் கணிதத்திலும் தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மேதையாகத் திகழ்ந்தார்.கி.பி,476ல் பிறந்த இவர் 550 முடிய  வாழ்ந்ததாகவும் இவரின் சீடரே வராஹமிஹிரர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.ஆர்யபட்டரிடம் வானவியல்,கணிதம் ஆகியவற்றை நன்கு பயின்ற வராஹமிஹிரர், அவரது புலமையை வெகுவாக வியந்து பாராட்டியதோடு அவரது சூத்திரங்களை தனது கணிதத் திறமையால் இன்னும் துல்லியமாக ஆக்கினார்!
வானவியலை ககோள சாஸ்திரம் என நமது பழைய நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த ககோள சாஸ்திரம் நாலந்தா பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப்பட்டு வந்தது. ககோள சாஸ்திரத்தில் நிபுணராகத் திகழ்ந்த ஆர்யபட்டர் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.ஆர்யபட்டர் எழுதிய அற்புதமான நூல் ஆர்யபட்டீயம்! இந்த நூலுக்குப் பல மேதைகள் விரிவாக விளக்கவுரைகள் எழுதி உள்ளனர்.

ஆர்யபட்டரின் கண்டுபிடிப்புகள்
பூமியின் சுற்றளவை 39968.0582 கிலோமீட்டர் என்ற அளவுக்கு இவர் துல்லியமாகக் கணித்துள்ளார். நவீன சாதனங்களுடன் விஞ்ஞானிகள் பூமியின் சுற்றளவை 40075.0167 கிலோமீட்டர்கள் என இப்போது கணித்துள்ளனர்! ’பை’ எனப்படும் கணிதக் குறியீட்டின் அளவையும் .கிரஹணங்களைப் பற்றியும் வியக்கத்தக்க விதத்தில் துல்லியமாக அவர் குறிப்பிடுகிறார். ‘காலக்ரியா’ என்ற அவரது அற்புதமான நூல் அனைத்து விவரங்களையும் விளக்குகிறது. இந்த நூலை அவர் தனது 23ம் வயதிலேயே எழுதி உலகத்தையே பிரமிக்க வைத்தார்!

மேலை நாடுகளுக்கு ஆர்யபட்டரே வழிகாட்டி
ஆர்யபட்டரின் அனைத்து நூல்களும் 13ம் நூற்றாண்டில் லத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப்படவே மேலை நாடுகளில் ஹிந்து முறையிலான வேத ஜோதிடமும் அதன் அடிப்படையான வானவியல் கணிதமும் பரவலாயிற்று, அதுவரை முக்கோணங்களின் பரப்பளவை எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரியாமல் திகைத்திருந்த அவர்கள் ஆர்யபட்டரின் சூத்திரங்களால் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு பிரமித்தனர்!

வராஹமிஹிரரின் புதல்வர்
ஆர்யபட்டரும் வராஹமிஹிரரும் வானவியலையும் ஜோதிடத்தையும் ஒரு புதிய பரிமாணத்திற்கு ஏற்றி வைத்த போது வராஹமிஹிரரின் புதல்வரும் தன் பங்கிற்கு ஜோதிடக் கலை வித்தகராக ஆனார்.
வராஹமிஹிரரின் புதல்வரான ஹோராசரர் ப்ரஸ்ன சாஸ்திரம் பற்றி ஷட்பஞ்சசிகா என்ற நூல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். வராஹமிஹிரரின் நூல்களுக்கு விளக்கவுரையாக அவரது நூல்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.
இப்படி உஜ்ஜயினி வாழ் ஜோதிடமேதைகள் வேத ஜோதிடத்திற்கு விஞ்ஞான முறையில் ஒரு வலுவான அஸ்திவாரத்தை அமைத்ததோடு அதை உலகெங்கும் பரப்பினர்!
-வராஹமிஹிரர் வரலாறு முற்றும்
 

No comments:

Post a Comment