For Read Your Language click Translate

06 May 2014

மறைக்கப்படும் உண்மைகள்..! பாகம் 29.



கடந்த பாகத்தில் விடுபட்டுப் போன நீர்க்கரடி (Tardigrade) பற்றி மீண்டும் சில வார்த்தைகளுடன் இந்த பாகத்தை ஆரம்பிக்கலாம்.

நீர்க்கரடி, வேற்றுக்கிரக உயிரினமா, இல்லையா என்று கேட்டால், அதற்குப் பதில் தெரியவில்...லையென்றே சொல்ல வேண்டும். ஆனால், அந்த உயிரினத்தின் வாழ்வாதார நிலைமைகளில் சில, பூமியில் உள்ள ஒரு உயிரினங்களின் வாழும் முறைக்கு ஒத்ததாக இல்லாமல் இருக்கிறது. பூமியில் பலவிதமான சூழல்களில் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. கடல்நீர், நன்னீர், நிலம், சேற்றுப்பகுதி, காடு, மலை, பனிப்பிரதேசம், பாலைவனம்,வெப்பவலயம் எனப் பலவிதமான சூழல்கள் பூமியில் உண்டு. பூமியில் உயிரினம் தோன்றியதிலிருந்து, பூமியில் உள்ள தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப படிப்படியாக அவை பரிணாம வளர்ச்சியடைந்து, மனிதன் என்னும் அறிவியல் உயிரினம் வரை வந்திருக்கின்றன. பரிணாம வளர்ச்சி (இலங்கையில் பரிணாம வளர்ச்சியைக் கூர்ப்பு என்று சொல்வார்கள் அதாவது ஆங்கிலத்தில் Evolution) என்பது பற்றி ஒரு தெளிவான கோட்பாடு அறிவியலில் உள்ளது. இந்தப் பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் தந்தையாக சார்லஸ் டார்வின் (Charles Darwin) என்பவர் வர்ணிக்கப்படுகிறார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர், 20 வருட ஆராய்ச்சியின் மூலம் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை (Evolution Theory) வெளியிட்டார்.

>>> http://goo.gl/AIPWPy

டார்வின் பல கோட்பாடுகளை வெளியிட்டிருக்கிறார். அவற்றில் சிலவற்றைத் தற்காலத்தில் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், பரிணாம வளர்ச்சிக் கொள்கை முழுமையாக அறிவியலில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தப் பரிணாம வளர்ச்சிக் கொள்கைதான் மத நம்பிக்கைகளுக்கும், அறிவியலுக்கும் நேரடியான ஒரு யுத்தத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். கி.பி.1600 களில் வாழ்ந்த இத்தாலிய அறிஞரான கலிலியோ கலிலி (Galileo Galilei) என்பவரால், பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற அறிவியல் உண்மை சொல்லப்பட்டபோது, மத பீடங்களால் வன்மையாக அவர் கண்டிக்கப்பட்டார். அதுவரை பூமியை மையமாக வைத்துத்தான் சூரியனும், சந்திரனும், பிறகோள்களும் சுற்றிவருகின்றன என்று மதநூல்களில் சொல்லப்பட்டதாக உயர்மட்ட மத அமைப்புகள் எடுத்துக் கொண்டு,கலிலியோ சொன்னதை மறுத்தது. அவர் சொன்னது தவறென்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவேண்டும் என அவரை வற்புறுத்தியது. அதன்படியே அவரும் ஒத்துக்கொள்ள வேண்டியும் வந்தது. அதன்பின், நாகரீகம் வளர்ந்த பிற்காலமான 1800 களில் மீண்டும் டார்வினால் மத நம்பிக்கைகளுக்கு எதிரான பரிணாம வளர்ச்சிக் கொள்கை வெளியிடப்பட்டது.

மனிதனைக் கடவுள் ஆணாகவும், பெண்ணாகவும் நேரடியாகப் படைத்தார் என்று மத நூல்கள் சொல்லியபோது, "இல்லை, ஒவ்வொரு உயிரினமும் இன்னுமொரு உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியினால் உருவாகியது.அதுமட்டுமில்லாமல், இந்த வரிசையில் குரங்கிலிருந்து படிப்படியான பரிணாம வளர்ச்சி மூலம் மனிதன் தோன்றினான்" என்று டார்வின் கூறினார். இந்தக் கோட்பாடு அந்த நேரத்து மநநம்பிக்கையை அப்படியே புரட்டிப் போடும்படி இருந்தது. பல ஆண்டுகால ஆராய்ச்சிகளின் அடிப்படையை வைத்து அவர் சமர்ப்பித்த கோட்பாடு அறிவியலால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், இன்றுவரை இந்தக் கொள்கையை ஏற்க முடியாது என்று பல மத நம்பிக்கையாளர்கள் சொல்லியபடியேதான் இருக்கிறார்கள்.இதற்கு மத நம்பிக்கையாளர்கள் முன்வைக்கும் முக்கிய வாதம் ஒன்றும் உள்ளது.'குரங்கிலிருந்து மனிதன் உருவாகியிருந்தால், இப்பொழுது குரங்குகள் எப்படி இருக்க முடியும்? அவைதான் மனிதனாக மாறிவிட்டனவே!' என்பதுதான் அந்த வாதம்.கேட்கும்போது சரியானதாகத் தோன்றினாலும், இதற்கும் டார்வின் தனது கோட்பாட்டின் மூலம் பதில் சொல்லியே இருந்தார்.

டார்வின் சொன்ன அந்தப் பதில் நீர்க்கரடியின் தன்மைக்கும் பொருந்தும் என்பதால்தான், டார்வின் பற்றிக்கூட நான் இங்கு இவ்வளவு விவரமாகக் கூறவேண்டியிருந்தது. அதாவது, குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருந்தால், குரங்கு எப்படி இருக்க முடியும் என்பதற்கு டார்வின் சொன்ன விளக்கம் இதுதான். 'ஒரு காட்டில் குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவை அனைத்தும் வாழ்வதற்கும்,உண்பதற்கும் தேவையான அளவு பழங்கள் அந்தக் காட்டில் இருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் அந்தக் குரங்குகள் நன்றாக இனத்தைப் பெருக்குகின்றன. இப்போது காட்டில் உள்ள பழங்கள் அனைத்துக் குரங்குகளுக்கும் போதாத அளவுக்கு குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்த நேரத்தில் பலசாலியான குரங்குகள்,பலமில்லாத குரங்குகளை உணவைப் பெற முடியாமல் அடித்துத் துரத்துகின்றன.இதனால் பலமில்லாத குரங்குகளுக்கு உணவு கிடைப்பது சிரமமாகின்றது.

எனவே அந்தக் குரங்குகள் அந்தக் காட்டை விட்டு வெளியேறி வேறு இடத்துக்குச் செல்கின்றன.வேறு இடங்களுக்குச் சென்ற குரங்குகளுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது. அங்கு பழங்கள் மரத்தில் ஏறிப் பறிக்கவே தேவையில்லாமல், நிலத்திலிருந்தே பெற்றுக் கொள்ளும்படி இருக்கின்றன. அதனால் அந்தக் குரங்குகள் அந்தச் சூழ்நிலைக்கேற்ப மாறத் தொடங்குகின்றன. நிலத்தில் நின்றபடியே பழத்தைப் பறித்து உண்டதால்,அவற்றுக்கு வால் என்பது பாவனைக்குத் தேவையில்லாமல் போகத் தொடங்கியது.இதனால் வால் படிப்படியாகச் சுருங்கத் தொடங்குகிறது. வாலில்லாத புது இனக் குரங்கு தோன்ற ஆரம்பிக்கிறது. அதே நேரத்தில் பழைய காட்டில் பழைய குரங்குகள் இன்னும் குரங்குகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

உணவுப் பிரச்சினை மீண்டும் இந்தப் புதுக் காட்டிலும் தோன்றுகிறது. அங்கும் முன்னர் நடந்தது போல பலமில்லாத குரங்குகள் வேறு இடத்துக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை தோன்றுகிறது. இப்படிப் படிப்படியாகக் குரங்குகள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றடைந்ததால் இறுதியாக மனித இனம் தோன்றுகிறது. அதேநேரம் பல்வேறு வகையான குரங்கினங்களும் காணப்படுகின்றன. மனித இனத்தைச் சரியாகக் கவனித்தால், ஆரம்பக் குரங்கினங்களை விடப் பலவீனமான ஒரு இனமாகக் காணப்படுவது தெரிய வரும்.மனித இனம், குரங்கின் ஒரு கிளை மூலம் உருவாக, குரங்குகளிலும் பல இனங்கள் உருவாகியிருப்பது தெரியவரும்.

>>> http://goo.gl/FHu81T

இது போலத்தான் உலகில் உருவாகும், உருமாறும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் பூமியில் அது எங்கு வாழ்ந்து வந்ததோ, அந்த அடிப்படையிலேயே குணங்களும்,உருவங்களும் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கும். இதையே டார்வினின் கோட்பாடு சொல்கிறது. ஆனால், நான் கூறிய நீர்க்கரடியின் சில குணங்களும், வாழும் தன்மைகளும் பூமியில் எந்த இடத்திலும் இல்லாத ஒரு சூழ்நிலைக்கு ஏற்ப உருவாகியிருக்கிறது. பூச்சியத்துக்கு கீழே -272 பாகை சதம பாகை குளிர் என்பது,பூமியில் எந்த இடத்திலும் இல்லாதது. அதிக வெப்ப நிலையைப் பொறுத்தவரை, பூமியில் பல இடங்கள் இருக்கின்றன.

ஆனால் இந்த அளவுக்குக் குளிரான சூழ்நிலை உள்ள இடங்கள் பூமியில் எங்கும் இல்லை. அத்துடன், விண்வெளியின் மிகை அமுக்கத்திலும், கதிர்வீச்சுகளிலும் வாழும் உயிரினமாக நீர்க்கரடி இருப்பதும்,பரிணாமக் கொள்கைப்படி சாத்தியமில்லாத ஒன்று. நீர்க்கரடிக்கு இந்தத் தன்மை ஏன்,எப்படி உருவாகியது? இது ஒரு அசாதாரணமான ஒரு நிலை. இந்த நிலையை, இந்த உயிரினம் எப்படி அடைந்தது? இப்படிச் சிந்திக்கும் போதுதான், இந்த நீர்க்கரடி ஏன் ஒரு ஏலியன் சார்ந்த உயிரினமாக இருக்கக் கூடாது என விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.விஞ்ஞானிகள் இப்படிச் சந்தேகிப்பதற்கு, எழுந்தமானமாக காரணம் இருக்கவில்லை.அதற்கென அவர்களுக்கு ஒரு திடமான காரணம் இருந்தது. அந்தக் காரணம் என்ன என்று சொல்வதற்கு முன்னர் வேறு ஒரு சம்பவத்தைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன்.

>>> http://goo.gl/IgeJBk

கடந்த வாரம் செவ்வாயில் இருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படும் எரிகல்லில்,உயிரினப் படிவம் இருந்ததாகச் சொல்லியிருந்தேன். அது போன்று வேறு சம்பவமும் நடந்துதான் இருக்கிறது. நாஸா விஞ்ஞானியான ரிச்சார்ட் ஹூவர் (Dr.Richard Hoover)என்பவர், அலஸ்கா பகுதிகளில் ஆராய்ச்சி செய்தபோது, விண்ணிலிருந்து வந்து விழுந்த எரிகல் ஒன்றைக் கண்டுபிடித்தார். அந்தக் கல்லிலும் அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. புழுவினது வடிவத்தில், பூமியில் வாழும் பாக்டீரியாக்கள் போன்ற உயிரினத்தின் படிமத்தை அந்தக் கல்லில் அவர் கண்டுபிடித்தார். இதுCyanobacteria என்று அழைக்கப்படுகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு, 'உயிரினம் பூமி தாண்டி வேறு இடங்களிலும் இருக்கிறது என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கிறது'என்று பலர் கருதத் தொடங்கினார்கள். இதன்படி, பூமியில் இப்போது உள்ள உயிரினங்களின் ஆதாரமே வேற்றுக் கிரகங்களிலிருந்துதான் வந்திருக்கும் என்ற புதிய கோட்பாடும் விஞ்ஞானிகள் மத்தியில் பிரபலமாகிவருகிறது. இதுபற்றி விரிவாக எழுதப்பட்ட புத்தகங்கள் பல உண்டு. முடிந்தால் வாங்கிப் படித்துப் பாருங்கள்.

>>> http://goo.gl/MotztZ

உயிரினங்கள் ஏலியன்கள் சார்ந்தவை என்று விஞ்ஞானிகள் சந்தேகப்படுவதற்கு இன்னுமொரு திடமான காரணமும் உண்டு. இப்போது நான் சொல்லப் போகும் காரணம் கொஞ்சம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த ஒன்றாக இருக்கும். வழமை போல, இதை மறுத்தும் ஆதரித்தும் பல கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.ஆனாலும், மறுத்துச் சொல்பவர்களின் குரல்கள் மிகுந்த பலகீனமாகத்தான் ஒலிக்கின்றது. இந்தச் சம்பவம் பற்றி விக்கிப்பீடியா கூடத் தவறான தகவலைத் தந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

நான் முன்னர் சொன்னது போல, இது ஒரு ஹாலிவுட் படத்தின் கதையைப் போலவும் உங்களுக்குத் தோன்றலாம். உண்மை, பொய் என்பதை வாசிக்கும் உங்கள் கைகளிலேயே நான் விட்டுவிடுகிறேன். ஆனால் இந்தத் தகவலைச் சொல்ல வேண்டிய அவசியம் மட்டும் எனக்கு உண்டு. இவ்வளவு தூரத்துக்கு நான் ஏன் பீடிகை போட வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள்விசயம் தெரிந்ததும் அதற்கான காரணம் உங்களுக்கே புரியும்.

தொடரும்...

எழுதியவர்.. பதிவர் ராஜ்சிவா அவர்கள்.

No comments:

Post a Comment